தனது அன்னையின் கிண்டலில் அவரை முறைந்தவள், “என்ன அம்மா..” என்று கேட்க
“ஒண்ணுமில்ல மதி..பழச நினைச்சேன் புரையேறிட்டு..” என்பதை மட்டும் சொன்னார்..
இடுப்பில் இருந்த ரிஷிவந்த் நழுவி செழியன் மற்றும் தர்மருக்கு இடையில் அமர்ந்துகொண்டு அவர்களிடம் கதை பேச, பிள்ளைகளுக்கு பால் ஆற்றிக் கொண்டு வந்த ரேகா, மதியின் கையிலிருக்கும் குச்சியை வாங்கி கீழே போட்டாள்…
வீட்டில் இருக்கும் அனைவருமே ஆருண்யாவின் கட்சி தான்..ஆருண்யா பல சமயங்களில் மதியை பிரதிபலித்தாலும் ஆதிக்கின் முக அமைப்பு அப்படியே அவளுக்கு…
பின்னோடு வந்த ஆதிக், மதியின் கையில் குழந்தைகளின் பையைத் திணித்தவன் அங்கிருந்த ஒற்றை சோபாவில் அமர்ந்து கொள்ள, பிள்ளைகளின் பையை அவர்களது அறையில் வைத்தவள்,
“இன்னைக்கு எதுக்கு ஸ்கூல் போனீங்க..?” என்றாள் மகளை முறைத்துக் கொண்டே
அன்னையின் முறைப்பை அறியாத ஆருண்யா, தந்தையிடம் கண்களால், “சொல்லாதே..” எனச் செய்கை செய்ய,
“சும்மா அங்க டொனேட் பண்ணுற பில்டிங் விஷயமா பேசப் போனேன்..” என்பதை மட்டும் சொல்லியவன் காபியை அருந்தத் துவங்கினான்..
அவனை முறைத்தவள், தங்களது அறைக்குச் சென்றுவிட, மெதுவாய் காபியை அருந்தியவன், குழந்தைகள் விளையாடத் தொடங்கியதும் தனது அறைக்குச் சென்றான்…
கட்டிலில் அமர்ந்திருந்த மதி துணியை மடித்துக் கொண்டிருக்க, தனது கப்போர்டில் இருந்து வேறு உடையை எடுத்தவன் பாத்ரூமிற்குள் நுழைய போக, வழிமறித்து அவனைத் தடுத்தவள்…
“வரவர..ஏன் ஆதிக் என்னைக் கண்டுக்க மாட்டுக்க…” என்றவளைக் கேள்வியாய் பார்த்தவன்,
‘இதுயென்ன புது கதையா இருக்கு..?’ விழிகளால் அவன் கேட்கும் கேள்வி புரிந்தவள்
“உண்மை தான்..உன் பொண்ணு வந்ததுல இருந்து..என்னை உனக்கு கண்ணு தெரியவே மாட்டக்கு...நீ வீட்டுக்கு சீக்கிரமா வரணும்னா உன் பொண்ணு ஏதாச்சும் தப்பு செய்யனும் போல…” என்றவள் குறைப்பட்டுக் கொள்ள
“ஹே அது தான் நீ ஆசைப்பட்ட மாதிரி இன்னைக்கு நைட் நாம எல்லோரும் கேரளா போறோமே..அப்புறமும் உன்னைக் கண்டுக்கலன்னு சொன்னா எப்படி..” என்றவனின் கால் மேல் ஏறி கழுத்தைக் கட்டி நிற்பவளின் இடை வருடியவன்…
“நோ மதி..” அவள் கேட்க வருவதைப் புரிந்து முன்னாடியே பதில் சொல்லும் கணவனைவிட்டு விலகி, “ஆதிக், ப்ளீஸ்..ஒரே ஒரு பையன் மட்டும்…முதல் தடவை ட்வின்ஸ் ஆசைப்பட்டேன் அது தான் நடக்கல...இப்போ ப்ளீஸ்…” எனக் கெஞ்சும் மதியின் விழியை ஊடுருவியவன்
“நீ பெத்த ஒரு புள்ளைக்கே வாரத்துல ஒரு நாள் போய் காத்து கிடக்குறேன் இது பத்தாதுன்னு இன்னும் ஒரு பையன் வேறையா...நாடு தாங்குதோ இல்லையோ மதி...இந்த வீடும் தாங்காது நானும் தாங்கமாட்டேன்…” எனச் சலிப்பாய் அவன் சொன்னாலும் ஒரு மாதமாய் அவனுக்கும் கூட இன்னொரு குழந்தைப் பற்றியே எண்ணம் இருக்கத் தான் செய்தது..
அவனது பதிலில், “ஹி ஹி...என்னை மாதிரியே ஆரு அறிவாளியா இருக்கான்னு உனக்குப் பொறாமை..” என்றதும்..
“வாயக் கிளறாத டி..” என்றவன் இன்றைய சம்பவத்தை மதியிடம் சொல்லிக் கொண்டிருக்க, அதே சமயம் ரிஷியும் அங்கிருந்த அனைவருக்கும் சொல்லிக் கொண்டிருந்தான்..
குடும்பமே தன்னைப் பற்றித் தான் புகழ்ந்து கொண்டிருப்பதை அறியாத ஆருண்யாவோ, வாசலில் ஏறிக் கொண்டிருக்கும் தனது ராஜப்பாவின் மேலே தொத்தி இடுப்பில் ஏறி உட்கார்ந்து அவனிடம் இன்றைக்குத் தான் செய்த சாகசங்களை ஒப்பித்தாள்..
அவளிடம் கதைக் கேட்டுக் கொண்டே உள்ளே வந்தவன், குட்டி இருக்கையில் அவளை அமர வைத்து, ரிஷியின் கன்னைத்தை கிள்ளி, “நீங்க ரெண்டு பேரும் விளையாடுங்க..அப்பா குளிச்சிட்டு வாரேன்…” என்றவன் கண்களால் ரேகாவை உள்ளே வருமாறு அழைத்துவிட்டு சென்றான்..
அவன் சென்ற சில நிமிடங்களில் யாரும் அறியாமல் அறைக்குள் வந்த ரேகாவின் சுடிதார் துப்பட்டாவை பிடித்து இழுத்தவன், இறுக்கமாய் கட்டியணைத்துக் கொள்ள, அவனது அணைப்புக்கு உடன்ப்பட்டவளின் காதில், “வது..ரொம்ப நாளா கேட்குறேன்...என்ன தான் டி முடிவு பண்ணிருக்க..?” எனக் கேட்க
“நமக்கு ஒரு பையன் போதுங்க..” என்றவளின் கன்னம் கிள்ளி கெஞ்சியவன்
“ஹேய் அப்படி சொல்லாதடி உனக்கு என்னை மாதிரி ஒரு பொண்ணு வேணும்னு ஆசையில்லையா..?” என்றான்..
“யப்பா...உங்கள மாதிரி ஒரு ப்ராடெக்ட் வேணாம் சாமி...அதுவும் என்னைச் சுத்த விடுறதுக்கா..?” அவளின் பதிலில்
“ஏன் டி நான் உன்னை நல்லா பார்த்துக்கலையா..?” எனக் கேள்வி தொடுத்தான்..
“அப்படி சொல்ல முடியாது..ஆனா உங்க அம்மாவும் விகாஷ் அண்ணாவும் இந்தக் கல்யாணத்தை நடத்தி வைக்கலன்னா ஆதி அத்தான் என்னைப் பத்தி உங்க கிட்ட பேசலன்னா நமக்கு கல்யாணமும் ஆகிருக்காது ரிஷியும் பொறந்திருக்க மாட்டான்..எனக்கு அதுல ஒரு சின்ன வருத்தம் எப்பவுமே உண்டு..” என்றவளின் கரம் பிடித்து நெஞ்சில் வைத்தவன்,
“நம்ம பையனுக்கு ஏழு வயசு ஆகுது..இன்னும் உனக்கு கோபம் போகலையா டி..என்னோட சூழ்நிலை உனக்குப் புரியல வது...பெத்தவங்க என்னை வேணாம்னு கைவிட்ட நேரத்துல அப்பா அம்மா அண்ணன்னு ஒரு நல்ல குடும்பத்தை கொடுத்தவங்களுக்கு ஏதாச்சும் தலைகுனிவு வந்திடுமோன்னு எனக்கு பயம்...அதான் உன்னை பிடிச்சாலும் பிடிக்கலைன்னு சொன்னேன்..சரின்னு நானா என்னோட பயத்தைவிட்டு வெளில வந்து உன்னைக் கல்யாணம் பண்ணிக்க கேக்கும் போது நீ வேணாம்னு சொன்னதும் உன்மேல ஒரு கோபம்…உனக்கு எத்தனை தடவை எக்ஸ்ப்ளைன் பண்ணி உன் காலுல விழுந்தாலும் நீ இன்னும் அதுலையே நிக்குற..”விரக்தியாய் மொழிபவனை முறைத்தவள்…
“அதுலையே நின்னிருந்தா எப்படி ரிஷிவந்த் வந்திருப்பான்..?” அவளின் கேள்விக்கு வாய்விட்டு நகைத்தவன்
“அது அய்யாவோட சாமர்த்தியம் டி..” எனச் சட்டைக் காலரை தூக்கிவிடும் தன் காதல் கணவனின் இதழை முதன் முதலாய் தன் இதழ் கொண்டு வருடினாள் வதனரேகா..
கிளம்பும் வரையிலும் தன் முகம் பார்த்து கண்களால் தூதுவிடும் மதியை முறைத்தவன், தங்களது மகள் தன்னுடம் இருப்பது தான் தனக்கு சேப்டி என்பது போல அவளை கைகளிலே வைத்துக் கொள்ள, அவனது தந்திரம் அறிந்தவள்,
“ஆரு, பாட்டி உனக்கு சாக்கி வாங்கி வச்சிருக்காங்களாம் டா..” என ட்ராவல்ஸ் வேனில் தங்கள் இருவருக்கும் இடையில் அமர்ந்திருக்கும் ஆருண்யாவிற்கு ஆசை காட்டி அனுப்ப பார்க்க,
“எனக்கு சாக்கி வேணாம்..” என்றவள் ஆதிக்கின் கழுத்தைக் கட்டி அவனது மொபைலில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தாள்..
மனைவியின் முகத்தில் வந்துப் போன பாவத்தில் வாயை மூடிச் சிரித்தவன், ஆரு, “வேணி பாட்டி கிட்ட கேம்ஸ் இருக்கு போய் விளையாடு..” என்றான்
ஆதிக் சொன்னதும், அவனைவிட்டு வேகமாய் இறங்கி மதியைத் தாண்டி முன்னிருக்கைக்குச் சென்றுவிட்டாள்..
தான் சொல்லிக் கேட்கவில்லை ஆதிக் சொன்னதும் கேட்கிறாளே என்ற கோபத்தில், “போ டி போ...நாளைக்கு வந்து அம்மா சாக்கி கொடு அது கொடு இது கொடுன்னு கேளு அப்போ வச்சிக்கிறேன் உன்னை..” என்ற அன்னையின் குரலுக்குத் திரும்பி,
“நீ கொடுக்கலனா போ..எனக்கு ரேகாம்மா கொடுப்பாங்க..” என்றவள் வேணியின் மடியில் ஏறி திரும்பி அமர்ந்து கொண்டாள்…
சிறிது நேரத்தில் ரேகா, ராஜின் மகவும் அவர்கள் சீட்டை விட்டு செழியன் சீட்டுக்குச் சென்றுவிட, அதில் ரேகாவை திரும்பி கள்ளப் பார்வை பார்த்துச் சிரித்தாள் மதியழகி..
மதியழகியின் சிரிப்பில் வெட்கம் கொண்ட ரேகா, மொபைலில் எதையோ நோண்டிக் கொண்டிருந்த ராஜிடம் ஒன்ற, சீட்டின் இடைவேளையில் ரேகாவை பார்த்துக் கொண்டிருக்கும் மதியின் காதில் தனது மீசை முடி உரசிட, “ஐ வான்னா கிஸ் யூ டி மை பொண்டாட்டி..” எனச் சொன்னான் ஆதிக் வர்மன்,
அவனது செய்கையில் கிளர்ந்தவள், சரியெனத் தலையசைத்து அவனது மார்போடு ஒன்றினாள்…
சின்னவர்கள் வேனில் அரங்கேற்றும் காதல் நாடகத்தில் வெட்கம் கொண்ட வெண்மதியும் ஆதிரனைத் தன் மாப்புக்குள் பொத்தி வைத்துக் கொண்டு இருளை போர்வையாக்கியது…
காதலில் விட்டுக் கொடுத்தலைவிட பல கசப்புகளை விட்டுவிடுவதே மேல் எனச் சொல்லி நானும் மதி, ஆதிக்குடன் விடைபெறுகிறேன்…