ஊருக்கு ஒதுக்குப் பறத்துல இருக்கற டாஸ்மாக் பார்.. அதிகம் வெளிச்சமில்லாத அந்த இருட்டு மூலை டேபிள்ல சக்தி ! குடியகம்னு அவன் கிண்டலாச் சொல்ற டாஸ்மாக் பார்ல கூட புத்தகமும் கையுமா உக்காநதிருப்பவன் இன்னிக்கு வெறுங் கையா எங்கியோ வெறிச்சுப் பாத்துக்கிட்டு இருந்தான்..
சாதாரண நாள்லயே யாரு கூடவும் பேசாதவன் இன்னிக்கு மனசு பூரா அவ இருந்ததால புத்தகத்தையும் மறந்து யோசனைல இருந்தான்....
மதியமானா இங்க வந்துடுவான்.. அப்புறம் மிச்ச நாளு பூராவுமே போதை காட்டும் பாதை தான்..
மான்யா.. மனு.. தங்கம்..
காஞ்னா.ன்னு தன் வாயாலயே எத்தன பேரு வச்சுக் கூப்பிட்டான்?
ஒரு மாதிரி கோவமும் வெறுப்பும் கலந்த உணர்வு.. டம்ளர்ல இருந்தத வேகமா எடுத்து குடிச்சுட்டு சிகரெட்டப் பத்த வச்சு யோசிச்சான்..
ஏன் மனு.. உனக்கு இப்படியொரு எண்ணம் உண்டாகற மாதிரி எப்பவாவது உங்கிட்ட நடந்திருக்கனா? எத வச்சு என்ன லவ் பண்றே?என்னால உன் வாழ்க்கை பாழாகுமே தவிர என்னிக்குமே மேல வராதே?
டேபிள் மேல இருந்த செல் போன வெறுப்பா பாத்தான்.. அதுல தான் அந்த வாய்ஸ் கால் ரெக்கார்டர் இருக்கு.. அவ பிரண்ட் நிர்மலா அவனுக்கு அனுப்புனது.. அவள இவனுக்கு நல்லாத் தெரியும்.. பல தடவ இவன் இருக்கும் போது மான்யா வீட்டுக்கு வந்திருக்கா.. போன வாரம் வந்திருந்த போது வலிய வந்து வாட்ஸ் அப்,செல் நம்பரக் கேட்டு வாங்கிட்டுப் போனா.. அதுக்குப் பின்னால இவ்வளவு பெரிய பூகம்பம் இருக்கும்னு அப்ப சக்தி ஆயிரத்துல ஒரு பங்கு கூட கற்பனை பண்ணிப் பாக்கலை..
ரெண்டு நாளைக்கு முன்ன இவன் வீட்ல இருந்த போது அந்த அலை பேசி அழைப்பு.. எடுத்து பாத்தான்.. புது நம்பர்.. யாரிதுன்னு யோசிச்சுக்கிட்டே அட்டெண்ட் பண்ணினான்..
“ஹலோ….”
“நான் நிர்மலா தேவி பேசறேன்”
‘’நிர்மலா…?? ஸாரி.. நீங்க தப்பான நெம்பருக்கு கால் பண்ணி இருக்கீங்க.. அந்தப் பேர்ல யாரையும் எனக்குத் தெரியாது……”
அவசரமாய் இடை வெட்டியது எதிர் குரல்..
“மிஸ்டர் சக்தி.. தயவு செஞ்சு கட் பண்ணிடாதீங்க.. நான் மான்யோவோட பிரண்ட் நிர்மலா.. சென்னை ! போன வாரம் கூட அங்க வந்திருந்திப்ப உங்க கிட்ட நம்பர் வாங்கினனே? அந்த நிர்மலா.. வாங்கிட்டு உங்களுக்கு மிஸ்டு கால் விட்டு ஷேவ் பண்ணிககச் சொன்னேன்”
“ஓ.. ஸாரி.. நான் அதப் பண்ணல.. தேவை இல்லைங்கறதால…”
படாரென்று கன்னத்தில் அறை வாங்கியது போல் சில நொடிகள் எதிர் பக்கம் மௌனம்.. பின் தொடர்ந்து பேசினாள்..
‘’கரெக்ட்.. சென்ட் பர்சன்ட் கரெக்ட்..நான் தேவையில்ல தான்.. அப்ப என் வேலை உங்க கிட்ட ஈஸியா முடிஞ்சுடும்னு நெனைக்கறேன்… நான் இப்ப என் வாட்ஸ் அப்புக்கு வந்த வாய்ஸ் கால் ரெக்கார்டர் ஒண்ண உங்களுக்கு அனுப்பி வெக்கறேன்.. தயவு செஞ்சு பொறுமையா கேட்டு நல்ல முடிவா எடுங்க..அதாவது அவளுக்குச் சாதகமான நல்ல முடிவா… நியாயமா அவ இத உங்களுக்கு அனுப்பி இருக்கணும்.. அட்ரஸ் மாத்தி எனக்கு அனுப்பிச்சுட்டான்னு நெனைக்கறேன்..
என்னக் கேட்டா உங்களுதுமே ராங்க் அட்ரஸ் தான்னு சொல்லுவேன்.. நான் ஓப்பனாச் சொல்றத நீங்க தப்பா எடுத்துக்கிட்டாலும் சரி.. மிஸ்டர் சக்தி! இப்பவும் சொல்றேன்.. பொறுமையா யோசிச்சு நல்ல முடிவா எடுங்க.. ஆனா, அவளோட எதிர் காலத்துக்கு டேமேஜ் வராத
அவளுக்கு.சாதகமான முடிவ எடுப்பீங்கன்னு நம்பறேன்.. ரெண்டு நாளு கழிச்சுக் கூப்பிடறேன்.. உங்களோட அந்த சாதகமான முடிவுக்காக.. கவனிங்க.. அவளோட பியூச்சருக்கு ஷேப்டியான முடிவுக்காக.. வச்சுடறேன்.. தேங்க்யு மிஸ்டர் சக்தி..”
அடுத்த நொடி கட் பண்ணிட்டா.. இவனுக்கா கோவம்னா கோவம்.. என்ன எழவுடா இது தலையும் புரியாம வாலும் புரியாம.. அவ !..அவ…!! அவ !!! அடக் கருமாந்திரமே.. எவ அவ? எவளுக்குச் சாதகமா நான் முடிவெடுக்கணும்..என்ன ‘ம’னாவுக்கு எடுக்கணும்? அப்படி அவங்க வாழ்க்கையப் பாதிக்கற அளவுக்கு தெருக்கமா பழகற பொண்ணுங்க எதுவும் நம்ம லிஸ்ட்லயே இல்லையே?
அவன் யோசனையக் கலைக்கற மாதிரி வாட்ஸ் அப் மெசெஜ் டோன்.. அவசரமா ஓப்பன் பண்ணிப் பாத்தான்.. அவளே தான்.. நிர்மலா ! ஒரு வாய்ஸ் கால் ரெக்கார்டர அனுப்பயிருக்க இவன் உடனே இயர் போன மாட்டி அத ஆன் பண்ணிக் கேட்டான்…
“ஹாய் நிரு.. காலைல நீ ’என்னடி .. எப்பப் பாத்தாலும் சக்தி புராணமே பாடிக்கிட்டிருக்கே.. விட்டா டெண்டுல்கர் மாதிரி ‘சக்தி ஈஸ் சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி’ன்னு சொல்லுவியோ என்னவோ? பீ பிராங்க் மான்யா.. அந்தாள லவ் பண்ற ஐடியா இருந்தா அதும் மேல அஞ்சு லிட்டர் ஆசிட்ட ஊத்தி அழிச்சுடு.. அவன் உனக்கானவனில்லை.. குடி காரன்.. அத விடு.. பொம்பள விசயத்துல சுத்த மோசம்.. சரி! அதையும் விடு.. சொல்லிக்கற மாதிரி ஒரு நல்ல குணமாவது அவங் கிட்ட இருக்கா?'ன்னு கேட்டதும் டக்குனு கட் பண்ணிட்டேன்..
ஏன்னா,பக்கத்துல அம்மா இருந்தாங்க.. அவங்க முன்னால பேச முடியாதுங்கறதால மட்டுமில்லடி.. அது அஞ்சு நிமிசத்துல சொல்லி முடிக்கற விசயமில்லேன்னு தான் கட் பண்ணினேன்.
இபபச் சொல்றேன் கேளு...யெஸ்! சக்திய நான் லவ் பண்றேன்.. இந்த உலகத்துல உள்ள எந்த ஒரு உறவையும் விட அவன் மேல காதலா இருக்கேன.. எங் காதல நீ..என் குடும்பம்.. இந்த சமூகம் ஏத்துக்காதது மட்டுமில்ல.. என் சக்தியே ஏத்துக்க மாட்டான்..
எல்லாக் காதலனும் லவ்வச் சொன்னா கட்டிப் புடிச்சு முத்தங் குடுத்தா என் சக்தி ஒரே அறைல கொன்னுடுவான்.. முரடன்... முன் கோபி..குடி காரன்.. கல்யாணமே வேண்டாம்னு இருக்கறவனும் கூட!
ஆனால்,இதெல்லாம் பாத்து வர்றதா காதல்?எத்தன தடுத்தும் வருதேடி?
அவன மனசுல வச்சுட்டு இன்னொருத்தனக் கல்யாணம் பண்ணி அவங் கூட படுக்க என்னால முடியாது.. ஏன்னா...எம் மனசு பூரா என் சக்தி..அப்ப அவனுக்குத் துரோகம் பண்றேன்.. கட்டிக்கிட்டவனுக்குத் துரோகம் பண்றேன்...கடைசியா எனக்கே துரோகம் பண்ணிக்கறேன்..
ஒரு துரோகத்தையே வெறுக்கற நான் ஒரே டைம்ல என்னால மூணு பேருக்குத் துரோகம் பண்ண முடியாது..அவன் எப்பேர்ப் பட்ட ஆளு தெரியுமா?............................................. . ………… ……… ……......”
அதுக்கு மேல மனு சொன்னது எதுவுமே அவன் காதுல ஏறலை… மொத தடவை கேட்ட போது இந்த வரிக்கப்புறம் அப்படியே ஐம்புலன்களும் ஒடுங்கி உறைஞ்சுட்டான்.. ஒன்றரை மணி நேரம் ஓடினதுல கடைசியா இந்த சில வரிகள் அவனையுமறியாமல் அவன் மனசத் தொடட்டது..
“பிருந்தாவனத்துல இருந்து கண்ணன் துவாரகைக்கு புறப்பட்டுப் போறான். எல்லாக் கோபியரும் அழுது புலம்பி விழுந்து கண்ணனை 'போகாதே கண்ணா.. எங்கள தவிக்க விட்டுப் போகாதேன்னு தடுக்கிறாங்க.. ஆனால்,ராதை மட்டும் ஒரு சொன்றை மரத்தின் மேல் சாய்ந்த படி சொல்கிறாள்..
ஓ கோபியரே... கண்ணனைத் தடுக்காதீர்கள்..அவன் போகட்டும்.. நமக்கு கண்ணனே உலகம்.. ஆனால், அவனுக்கோ உலகமே அவனுடையது.... உலகை உய்விக்க கண்ணண் போகட்டும் ! ஒரு நாள், இந்தப் பிருந்தாவனம் அழியலாம்.. துவாரகை அழியலாம்... நானும் அழியலாம்..ஏன்? கண்ணனே அழியலாம்.. ஆனால் , நாம் அவன் மேல் கொண்ட பிரேமை மட்டும் அழியாது.. அது அகிலமனைத்தும் அவனின் குழலின் நாதமாய் காலமெல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கும்... ஏனெனில், நமக்குச் சாவுண்டு.. நம் பிரேமைக்கு என்றுமே மரணமில்லை
இங்கு அவன் கண்ணன்... நான் ராதை..என் பிரேமை ஒலித்து உலகையே சாந்தப் படுத்துமே தவிர அவன் காதை அடையாது.. எல்லா பிரேமைகளும் சம்பந்தப் பட்டவனின் காதை அடைவதில்லை.."
(தொடரும்..