மாமனைப் போலில்லை என்று தாயின் வாயிலாக வந்ததைத் தாங்கிக் கொள்ள இயலாதவனாக, “ம்மா சாரிம்மா... அப்படி எல்லாம் இல்லம்மா. சம்ரிதி இடத்துல இன்னொரு பொண்ணை பெயரளவில கூட வந்துடக் கூடாதுங்குற பதட்டத்துல அப்படி நடந்துகிட்டேன்மா. ப்ளீஸ்மா மன்னிச்சிடுங்கம்மா” என்று கரகரத்தக் குரலில் கெஞ்சத் தொடங்கினான் மித்ரன்.
“நீங்க தானேம்மா எங்களுக்கு எல்லாமே. மதிக்கலைன்னு எல்லாம் சொல்லாதீங்கம்மா. இந்த ஒரு தடவை மன்னிச்சிடுங்கம்மா. ப்ளீஸ்மா” என்று பார்த்திபனும் கெஞ்சலில் இறங்க,
இதுவரை நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த குட்டி ஆரவ்வும் “சாயீ அப்பம்மா... சாயீ அப்பம்மா...” என்று கூறிக் கொண்டே சுஜாதாவின் கழுத்தை கட்டிக் கொண்டு அழுகைக்குத் தயாராகவும்,
“அடி என் சீனிக் காளை... எதுக்கு அப்பம்மாக்கிட்ட சாரி கேட்குறீங்க. நீங்க தான் குட்பாய் ஆச்சே. உங்களுக்காக உங்க சித்தியையும் சித்தப்பனையும் மன்னிச்சு விட்டுடறேன். சரியா. அழாதடி தங்கம்” என்று பேரனுக்காக தன்னை சகஜமாக்கிக் கொண்டார் சுஜாதா.
“என் செல்ல அம்மா” என்று பார்த்திபன் அவரைக் கழுத்தோடுக் கட்டிக் கொள்ள மித்ரன் அவர் வயிற்றைக் கட்டிக் கொண்டு மடியில் முகம் புதைத்துக் கொண்டான்.
“இந்த ரெண்டு தடிப்பயலுக கிட்ட இருந்தும் என்னைக் காப்பாத்துடி நேஹா.” வழமைக்கு மாறியிருந்தார் சுஜாதா.
“போங்கத்தை நீங்களாச்சு உங்க பாசக்கார மகனுங்களாச்சு. எனக்குப் பசி வயித்தைக் கிள்ளுது. நான் சாப்பிடப் போறேன்” கொஞ்சமும் மனமிரங்கவில்லை நேஹா.
“அதுவும் இன்னைக்கு அவங்க வீட்ல டிபனுக்கு அசோகா ரெடி பண்ணியிருப்பாங்க போல. வாசனை அப்படியே ஆளையே தூக்குச்சு. சாப்பிட நமக்குக் கொடுத்து வைச்சுதா? ஹ்ம்ம்... ரெண்டு பேரும் எந்திரிச்சுப் போய் எனக்கு சுடச்சுட அசோகா வாங்கிட்டு வாங்கடா. அப்பதான் நான் சமாதானம் ஆவேன்” சுஜாதா கெத்தாக சொல்ல,
“தாய்க்குலமே நீங்க சமாதானமாகி அரை மணி நேரமாச்சு” மகன்கள் இருவரும் கோரஸ் பாடினார்கள்.
“மணி பத்தாகப் போகுதும்மா. காலையில முதல் வேலையா உங்களுக்கு நான் அல்வா கொடுக்கிறேன். அதாவது அசோகா அல்வா வாங்கித் தரேன்னு சொன்னேன்” கிண்டலாகக் கூறினான் பார்த்திபன்.
“அடடா எங்கண்ணன் பாட்டுக்குக் கோவமா கிளம்பிப் போயிட்டாங்க. அவங்க சாப்பிட்டாங்களா இல்லையான்னு யாராவது கவலைப்படுறீங்களா? சரி நான் அவங்களுக்கு போஃன் பண்ணிக் கேட்டுட்டு, நமக்கு எல்லாருக்கும் டிபன் ரெடி பண்றேன்.” செல்லமாக அங்கலாய்த்துக் கொண்டே சமையலறையை நோக்கிச் சென்றார் லெக்ஷ்மி.
சம்ரிதியைத் தவிர அனைவருமே இயல்பாகி இருந்தார்கள். அவள் மட்டும் இன்னும் கலங்கிய முகத்துடனே அமர்ந்திருந்தாள். அவ்வப்பொழுது மித்ரனின் பார்வை அவளைத் தழுவிக் கொண்டுதான் இருந்தது. அவளின் கலக்கம் இன்னுமின்னும் இவனுக்குப் கோபத்தை விதைத்துக் கொண்டிருந்தது.
ஒருவாறாக அனைவரும் உணவருந்தி முடிக்க, “கல்யாணம்தான் திடீர்னு நடந்துடுச்சு. மத்ததெல்லாம் நாள் கிழமை பார்த்து தான் செய்யணும்” என்று கூறி சம்ரிதியைத் தன்னுடன் படுக்க வைத்துக் கொள்வதாகக் கூறிவிட்டார் சுஜாதா.
“மித்ரா நீ இப்ப என்ன பண்றதா முடிவெடுத்திருக்க? எப்ப சிங்கப்பூர் கிளம்பணும்? போறப்ப சம்ரிதியையும் கூட்டிட்டுப் போறியா?” தாயாக மித்ரனைக் கேள்வி கேட்கவும் தவறவில்லை.
“நாளைக்கு மறு நாள் டிக்கெட் போட்டிருக்கேன்ம்மா. இப்ப சம்ரிதியைக் கூட்டிட்டுப் போக முடியாது. கல்யாணத்தை ரிஜிஸ்டர் பண்ணனும். அப்பதான் விசா பிராசஸ் பண்ண முடியும்” என்றான் மித்ரன்.
“நாளான்னைக்கு டிக்கெட்டா... அதெல்லாம் சரி வராது. நீ ஒரு வாரம் இங்க தானே இரு. முதல்ல நீங்க ரெண்டு பேரும் உங்களுக்குள்ள இருக்குற பிரச்சனையைப் பேசித் தீர்த்துக்கோங்க. குலதெய்வம் கோவிலுக்கு வேற போயிட்டு வரணும். அதுக்கப்புறம் நீ முதல்ல போயிட்டு அப்புறம் விசா ஏற்பாடு பண்ணிட்டு சம்ரிதியைக் கூட்டிட்டுப் போ” என்றார் சுஜாதா.
பதிலேதும் கூறாமல் மௌனமாகத் தலையாட்டினான் மித்ரன்.
விஸ்வநாதன் எதற்கும் வர மறுத்துவிட சுஜாதாவும் லெக்ஷ்மியுமே இவர்களைக் கோவிலுக்கு அழைத்து செல்வது போன்ற வேலைகளை செய்து முடித்தார்கள். பார்த்திபனும் நேஹாவும் சென்னைக்குத் திரும்பிவிட சுஜாதா, லெக்ஷ்மி, மித்ரன் மற்றும் சம்ரிதி மட்டுமே வீட்டில் இருந்தனர். மூன்று நாட்கள் போயிருந்தது. மித்ரனின் மறுப்பையும் மீறி அன்று அவர்கள் இருவருக்கும் முதலிரவுக்கு ஏற்பாடு செய்திருந்தார் சுஜாதா.
அறைக்குள் நுழைந்த சம்ரிதி பார்த்தது அங்கிருந்த செயரில் கால்களை நீட்டி ஒரு கையால் கண்களை மூடி அமர்ந்திருந்த மித்ரனைத்தான். என்ன செய்வது என்றறியாமல் அவள் கதவருகிலேயே தேங்கி நிற்க,
“உட்காரு” என்றான் மித்ரன் படுக்கையைக் காண்பித்து.
அவள் அமர்ந்ததும், “உனக்கு இந்தக் கல்யாணம் புடிச்சிருக்கா இல்லையான்னு எனக்குத் தெரியலை. இத்தனை நாளும் நீயும் என்னை விரும்புறதா தான் முட்டாள் மாதிரி நினைச்சுக்கிட்டு இருந்தேன். அப்படியில்லடா மடையான்னு தெளிவா என் மண்டையில அடிச்சுப் புரிய வைச்சுட்ட.
தாலி கட்டினதுக்காக நீ என்கூட கஷ்டப்பட்டு வாழ வேண்டாம். உனக்கு இன்னும் ஒரு வருஷம் படிப்பிருக்கு. இந்த ஒரு வருஷத்துல நீ யோசிச்சு ஒரு முடிவெடு. படிப்பு முடிஞ்சதும் நான் சிங்கப்பூருக்கு டிக்கெட் போடுறேன். நீ என்னை மனப்பூர்வமா எத்துக்கறதா இருந்தா வா. இல்லைன்னா வர வேண்டாம்.
அதுக்கப்புறம் உன் வாழ்க்கையில நான் எப்போதும் குறுக்க வர மாட்டேன். கட்டாயக் கல்யாணம் பண்ணிட்டேனோன்னு எனக்கு உறுத்தலா இருக்கு. அதனால இப்ப முடிவெடுக்குற பொறுப்பை உன் கிட்டயே விடுறேன். நீயே டிசைட் பண்ணு நான் வேணுமா வேண்டாமான்னு. அதுவரைக்கும் நமக்குள்ள இதெல்லாம் எதுவும் வேண்டாம்” படுக்கையைக் காண்பித்து இறுகிய முகத்துடன் பேசி முடித்தான் மித்ரன்.
அவன் கூறிய கட்டாயக் கல்யாணம் என்ற வார்த்தையில் பதறியவள், “அப்படியெல்லாம் இல்லை மாமா” என்று சொல்லி மேற்கொண்டு ஏதோ சொல்ல வர,
அவள் சொல்லிய மாமா என்ற வார்த்தை, ‘மத்த மூணு மாமா மாதிரி தான் மித்ரன் மாமாவும்’ என்ற வாக்கியத்தை மித்ரனுக்கு நினைவுப்படுத்தியது. அவள் கூந்தலை இறுகப் பற்றி அவளை எழுப்பியவன், வன்மையாக அவள் இதழ்களை சிறை செய்திருந்தான்.
முதல் முத்தம். மனதுக்குள் செய்த கற்பனைகளெல்லாம் நிஜமாய் உருமாறி கண் முன் நிற்கையில் ஆசை கொண்ட மனது மயங்கித்தான் போனது இருவருக்கும். வன்மையாக ஆரம்பித்த முத்தம் மென்மையாக மாறிக் கொண்டிருந்தது. அவள் கூந்தலைப் பற்றியிருந்த கை மெல்ல அவள் கழுத்தை வருடிக் கொடுக்கத் தொடங்கியிருந்தது.
சம்ரிதியுமே முதலில் அதிர்ந்தாலும் அவளுக்கும் அதே நிலை தான். அவளுடைய கவலைகளனைத்தும் அந்த ஒற்றை முத்தத்தில் தீர்வது போலிருந்தது. முடிவேயில்லாமல் நீண்டு கொண்டே இருக்கக் கூடாதா என்று மனம் ஏங்கியது. தாமாக அவளின் கைகளிரண்டும் மித்ரனின் முதுகை வளைத்துக் கொண்டது.
‘என்ன சொல்லிட்டு இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருக்க மித்ரா’ என்று மித்ரனின் மனசாட்சி கேள்வி எழுப்ப சடாரென்று அவளை விட்டு விலகினான். அவளுக்கு முதுகைக் காட்டியபடி திரும்பி நின்றவன்,
“சாரி... நான் இங்க இருக்குற இன்னும் ரெண்டு நாளும் நீ என்கிட்ட பேசாம இருக்கிறது நாம ரெண்டு பேருக்குமே நல்லது” என்று சொல்லிவிட்டு அறைக்குள் இருந்த மற்றொருக் கதவைத் திறந்து கொண்டு வெளியில் சென்றுவிட்டான் மித்ரன். சொல்லியபடி இரண்டு நாளில் சிங்கப்பூருக்குக் கிளம்பியவன் மறுபடி சம்ரிதியைப் பார்த்தது ஒரு வருடம் கழித்து அவள் சிங்கப்பூருக்கு விமானமேறிய அன்றுதான்.