சிறிது தூரம் சென்று திரும்பிப் பார்த்த சம்ரிதி, 'சீக்கிரம் வந்துடுங்க' என்று வாயசைத்துவிட்டுச் செல்ல அவளைப் பரிதாபமாக பார்த்து வைத்தான் மித்ரன். 'ஐயோ கொல்றாளே, இன்னைக்கு வீட்டுக்கு வந்து உன்னை கவனிச்சுக்குறேன் சமி பேபி' என்று மனதோடு கறுவிக் கொண்டவன் முகத்தில் ஒரு மந்தகாசப் புன்னகை வந்து அமர்ந்து கொண்டது.
அரங்கை விட்டு வெளியே வந்ததும், "நான் டாக்ஸி எடுத்துக்குறேன் லீ ஜிங். நீ கிளம்பு" என்று கூறிய சம்ரிதியை விநோதமாகப் பார்த்தாள் லீ ஜிங்.
"எதுக்கு உன் புருஷன் என்னைத் திட்டுறதுக்கா?" என்று கூறி சிறிது நேரம் இடைவெளிவிட்டவள் "ஓய் என்னம்மா நடக்குது இங்க? காலையிலேருந்து உங்க ரெண்டு பேர் முகமும் வேற ஓவர் பிரைட்டா இருக்கு. என்ன விஷயம்? எதாவது குட் நியூசா?" என்று குழந்தை ஏந்துவதைப் போல் கையாட்டிக் கேட்டாள் லீ ஜிங்.
"அதெல்லாம் ஒன்னுமில்ல. எனக்குப் போற வழியில் கொஞ்சம் பர்சேஸ் பண்ண வேண்டியிருக்கு லீ ஜிங். அதான் தனியா போயிக்கிறேன்னு சொன்னேன். பட் குட் நியூஸ் அடுத்த மாசமே சொல்லிடுவேன்" என்று அவளைப் பார்த்துக் கண்ணடித்துக் குறும்புப் புன்னகையுடன் கூறினாள் சம்ரிதி.
"ஆண்டவா இன்னைக்கு எங்க மித்ரனை நீதான்பா காப்பாத்தணும்" என்று லீ ஜிங் போலியாக வானத்தைப் பார்த்துக் கோரிக்கை வைக்க, அதன் பின் தோழிகள் இருவரும் சிரிப்பும் கும்மாளமுமாக ஒன்றாகவே வீட்டை நோக்கிக் கிளம்பினார்கள்.
வழியில் லிட்டில் இந்தியா சென்று அங்கு அன்று விற்பனைக்கென்று வைத்திருந்த மொத்த ரோஜாக்களையும் மல்லிகையையும் வாங்கிக் கொண்டாள் சம்ரிதி. பக்கத்தில் இருந்த மாரியம்மன் கோவிலுக்குச் சென்று 'இன்று தொடங்கப் போகும் தங்கள் வாழ்க்கை ஆயுளுக்கும் இதே காதலுடன் தொடர வேண்டும்' என்று அவசர வேண்டுதல் வைக்கவும் மறக்கவில்லை.
சம்ரிதியை அவர்களுடைய வீட்டில் இறக்கிவிட்டு "நாளைக்கு போஃன் பண்ணுவேன் ஒழுங்கா நான் கேட்குற எல்லா கேள்விக்கும் பதில் சொல்லணும். ஓ.கே?" என்று சொல்லி சம்ரிதியை சீண்டி பின் "ஐ அம் சோ ஹாப்பி பாஃர் யூ டியர்" என்று கூறிக் கட்டியணைத்துவிட்டுச் சென்றாள் லீ ஜிங்.
வீட்டுக்குள் நுழைந்தவளைப் பரபரப்பும் வெட்கமும் சூழ்ந்து கொள்ள மித்ரனுக்குப் பிடித்த வகையில் மக் ப்ரௌனி, ஒயிட் சாஸ் பாஸ்தா, சூப் என்று விரைவாக சமைத்து முடித்து டைனிங் டேபிளில் செட் செய்து வைத்தாள் சுற்றிலும் மெழுகுவர்த்திகளோடு.
ரோஜா பூக்களை உதிர்த்து வாசலில் தொடங்கி படுக்கையறை வரை ரோஜா இதழ்களால் பாதையமைத்து வைத்து, வெள்ளை நிறப் படுக்கை விரிப்பின் நடுவில் இதய வடிவில் ரோஜா இதழ்களைப் பரப்பி வைத்தாள்.
'கொஞ்சம் ஓவரா போற மாதிரி இல்ல' என்று கேள்வி கேட்ட மனசாட்சியின் தலையில் குட்டி, 'என் அத்தானுக்காக நான் செய்றேன்' என்று சொல்லி அடக்கி வைத்தாள்.
இதையெல்லாம் முடிக்கவே மூன்று மணிநேரம் கழிந்திருந்தது. மித்ரன் எந்நேரமும் வந்துவிடலாம் என்று தோன்றியதால் அவன் வருவதற்குள் குளித்துவிடலாம் என்றெண்ணி சம்ரிதி குளியல் தொட்டிக்குள் இறங்கவும் மித்ரன் வந்து சேரவும் சரியாக இருந்தது.
கதவைத் தட்டிப் பார்த்தவன் பதிலில்லை என்றவுடன் தன்னிடம் இருந்த சாவி கொண்டு வீட்டைத் திறக்க அசந்துதான் போனான் மித்ரன். மொத்த வீடும் மெல்லிய மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மூழ்கிக் கிடக்க பாதம் தரையில் படாதவாறு ரோஜாப்பூப் பாதைத் தாங்கியது.
ஆவலும் ஆசையும் விழிகளில் போட்டிப் போட சம்ரிதியைத் தேடிப் படுக்கையறைக்குச் சென்றவனுக்கு அங்கும் அவளைக் காணாமல் ஏமாற்றமே மிஞ்சியது.
குளியலறையிலிருந்து வந்த சத்தம் தன்னவளின் இருப்பை உணர்த்த துள்ளலுடன் குளியலறையை நோக்கிச் சென்றான்.
லாக்காகி இருக்குமோ என்ற சந்தேகத்துடனே குமிழியைத் திருகிப் பார்க்க, அதிர்ஷ்டக் காற்று மித்ரன் பக்கமே வீசியது. கதவு திறக்கும் சத்தத்தில் அதிர்ந்து போனவளாய் திரும்பிப் பார்க்க அங்கு மந்தகாசப் புன்னகையுடன் நின்றிருந்தான் மித்ரன்.
அவசரமாகத் தன்னை முழுவதுமாக சோப்பு நுரைக்குள் மறைத்துக் கொண்டவள் அவஸ்தையாக அவனைப் பார்த்து,
"அத்தான்..." என்று கூறி பரிதவிப்பாக ஏறிட்டாள்.
மெல்லிய விசில் சத்தத்தோடுப் புருவத்தை ஏற்றி இறக்கினான் மித்ரன். மெல்ல அவளை நோக்கி நடக்கத் தொடங்க,
"அத்தான் வேண்டாம் கிட்ட வராதீங்க. உங்களை யாரு இவ்வளவு சீக்கிரம் வரச் சொன்னது? என் சஸ்பென்செல்லாம் கெட்டுப் போச்சு. எல்லாம் உங்களாலதான்" என்று பதட்டத்தில் சம்ரிதி உளறத் தொடங்க,
"சேச்சே என்னோட சமி பேபி சர்ப்ரைசை நான் கலைப்பேனா? இப்ப முதல்ல அத்தானோட சர்ப்ரைஸ். அப்புறம் உன்னோடது. இன்னைக்குப் பூரா இந்த வேலைதான்" என்று அவளை நோக்கிக் குறும்பாகக் கண்ணடித்துக் குளியல் தொட்டிக்குள் இறங்க முற்பட, "ஐயோ அத்தான் டிரஸ்" என்று அலறியிருந்தாள் சம்ரிதி.
"கரெக்ட் செய்யப் போற வேலைக்கு டிரஸ் தேவையில்லை இல்ல" என்று கூறி அவள் இதழில் அவசர முத்தம் பதித்து வெளியேறி, என்ன செய்வது என்று சம்ரிதி யோசித்து முடிப்பதற்குள் இடுப்பில் கட்டிய துண்டோடு நீருக்குள் இறங்கியிருந்தான் மித்ரன்.
அதன் பிறகு மித்ரனின் கண்கள் பேசிய காதல் பாஷையிலும், கைகளும் இதழ்களும் பெண்ணவளின் உடலில் நடத்தியக் காதல் ஆராய்ச்சியிலும் மயங்கி அவர்களைச் சூழ்ந்திருந்த சோப்பு நுரையும் வெட்கமடைந்து முகத்தைத் திருப்பிக் கொண்டது.
'ரோஜாப்பூ கோவிச்சுக்கும்' என்றொரு முறை பிறகு 'மல்லிகைப் பூவை யூஸ் பண்ணவே இல்லையே' என்று மாற்றி மாற்றி பூவின் பெயரைச் சொல்லியே பூவையை முழுவதுமாகத் தனதாக்கிக் கொண்டான் மித்ரன் மீண்டும் மீண்டுமாக.
மறுநாள் காலைப் பொழுது ரம்மியமாக விடிய தன்னை இறுக்கி அணைத்தவாறு உறங்குபவளை ஆசைத் தீரப் பார்த்திருந்தான் மித்ரன். கன்னங்களும் உதடுகளும் லேசாகக் கன்றிச் சிவந்திருக்க ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் சம்ரிதி.
அவள் தலை முடியை ஒதுக்கிவிட்டு நெற்றியில் முத்தமிட்டு "சமிம்மா எந்திரிடா" என்று அவள் காது மடலில் உதடு உரசக் கூறினான் மித்ரன்.
"ஹ்ம்ம்... இப்பதானே தூங்கவே ஆரம்பிச்சோம் அதுக்குள்ள எழுப்புறீங்களே அத்தான்" கண்களைத் திறவாமலே சிணுங்கலாக வெளிவந்தது சம்ரிதியின் குரல்.
ரொம்பவும் படுத்திவிட்டோமோ என்று பதறிப் போன மித்ரன் வேகமாக அவள் மேனியை ஆராய முற்பட, அதற்குத் தடையாகப் போர்வையை இறுக்கப் பற்றியிருந்தாள் பெண். "சமிம்மா ரொம்ப கஷ்டமா இருந்துச்சா? எங்கேயாவது வலிக்குதா?" பரிதவிப்பாக மித்ரன் வினவ பதிலாக மௌனமே கிடைத்தது.
தவிப்புடன் மித்ரன் பார்க்க சம்ரிதியோ குறும்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். திரும்பவும் "வலிக்குதா" என்று கேட்க இல்லையென்று தலையசைத்தவள் அவன் "இல்லையா" என்று கேட்கும் போது ஆம் எனும் விதமாகத் தலையசைத்து அவனைக் குழப்பிக் கொண்டிருந்தாள்.
மித்ரன் இவள் குறும்பை உணர்ந்து கொள்ளும் முன் சிட்டாகப் பறந்து குளியலைறைக்குள் நுழைந்து கொண்டாள் இம்முறை மறக்காமல் கதவை லாக் செய்துவிட்டு.
குளித்து முடித்து அழகாகப் புடவை கட்டி சமைத்துக் கொண்டிருந்தவளைப் பின்னிருந்து ஆசையுடன் அணைத்துக் கொண்டான் மித்ரன்.
"அத்தான்... தள்ளிப் போங்க. எனக்கு வேலை இருக்கு."
"நீ உன் வேலையைப் பாரு. நான் என் வேலையைப் பார்க்கிறேன்" என்று கூறியவாறே அவள் கூந்தலுக்குள் வாசம் பிடிக்கத் தொடங்கினான் மித்ரன்.
அவன் புறமாகத் திரும்பி நின்றவள், "என் செல்ல அத்தான்ல்ல, நாம முதல்ல கோவிலுக்குப் போய் கடவுளுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லிட்டு வருவோமாம். அதுக்கப்புறம் நீங்க உங்க வேலையைப் பார்ப்பீங்களாம். சரியா" என்று அவன் கன்னம் தாங்கி வினவ, "ஹ்ம்ம்" என்று சந்தேகமாகப் பார்த்தான் மித்ரன்.
அவனுக்குப் பதிலாக "ஹ்ம்ம்" என்று உறுதியாகத் தலையசைத்தவளிடம், "இத்தனை நாளா இந்தக் காதலையும் குறும்பையும் எங்கே ஒளிச்சு வைச்சிருந்தேன்னு வந்து கண்டுபிடிக்கிறேன்" என்று அவள் நெற்றி முட்டிச் சிரித்துவிட்டு,
"அதுக்கு முன்னாடி உன்கிட்ட கொஞ்சம் பேசணும்டா. வேலையை முடிச்சிட்டு வர்றியா?" என்று மித்ரன் கேட்க ஆமோதிப்பாகத் தலையசைத்தாள் சம்ரிதி.
சொன்னபடி பிரேக்பாஃஸ்ட் தயாரித்து முடித்துவிட்டு, "அத்தான் சாப்பிட்டுக்கிட்டே பேசலாமா?" என்று கேட்டபடி வந்து நின்றாள் சம்ரிதி. அவள் கரம் பிடித்துத் தன்னருகே அமர்த்திக் கொண்டவன், தன்னருகில் இருந்த லேப்டாப் பேகில் இருந்து சம்ரிதி கொடுத்தப் பத்திரத்தை வெளியில் எடுத்து அவளிடம் நீட்டினான் மித்ரன்.
அதைப் பார்த்ததும் சம்ரிதியின் முகம் மாறத் தொடங்க கைகள் வெளிப்படையாகவே நடுங்கத் தொடங்கியது. ஆதரவாக மித்ரனின் கரத்தை ஒரு கையால் இறுக்கப் பற்றிக் கொண்டு மற்றொருக் கையால் நடுங்கியவாறே அந்தப் பத்திரத்தை வாங்கினாள் சம்ரிதி. அவள் நிலையறிந்து ஆதரவாக அவளை அணைத்தவாறேப் பேசத் தொடங்கினான் மித்ரன்.
"சமிம்மா நீ... உனக்கு..." என்று முதலில் வெகுவாகத் தயங்கியவன், "உனக்கு அப்பா அம்மா யாருன்னு தெரிஞ்சுக்கணும் இல்ல அவங்களைப் பார்க்கணும் அந்த மாதிரி எதாவது ஆசை இருக்கா டா?" மென்று முழுங்கி ஒரு வழியாகக் கேட்டேவிட்டான் மித்ரன்.
அவன் மேலிருந்து கோபமாகத் தன் கையை உருவிக் கொண்டவள், "உளறாதீங்க அத்தான். நான் எதுக்கு அவங்களைத் தேடணும்? இந்த ஜென்மத்துல என் அப்பா அம்மான்னா அது இவங்க மட்டும்தான்" என்று அங்கு வைக்கப்பட்டிருந்த ராஜனின் புகைப்படத்தைச் சுட்டிக் காட்டிக் கூறினாள் சம்ரிதி.
"எனக்கு இருக்குறதெல்லாம் இவங்களுக்கு மட்டுமே சொந்தமா நான் பிறக்காமப் போயிட்டேனே அப்படிங்குற தவிப்புதானேயொழிய நீங்க சொல்ற மாதிரி எந்த மண்ணாங்கட்டியும் இல்ல. அப்படி யாரையாவதுக் கண்டுபுடிச்சுப் போய் பார்த்துட்டு வந்து அவங்களைப் பத்திதான் பேசப் போறீங்கன்னா நாம பேசவே வேண்டாம்" என்று கூறிக் காதுகளை இறுக மூடிக் கொண்டுத் திரும்பி நின்று கொண்டாள் சம்ரிதி.
அவளுடைய வாய் வழி வந்த உள்ளார்ந்த வார்த்தைகளில் அகமகிழ்ந்து போனவன், "அப்படின்னா உன் கையாலேயே இந்தப் பத்திரத்தைக் கிழிச்சுப் போட்றுடா" என்று கூறி அந்தப் பத்திரத்தை அவள் புறமாக நீட்டியிருந்தான் மித்ரன்.