அத்தியாயம் – 1௦
விடியற்காலை பொழுதில் வானம் செவ்வானமாக மாறிக்கொண்டிருந்தது.. குளிர்ந்த காற்று அவளின் முகத்தில் வந்து மோதி அவளின் கூந்தலைக் கலைத்துச் சென்றது..
அவளின் முகத்தை இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தான் நிரஞ்சன்.. தன்னை யாரோ பார்ப்பது போல உணர்ந்த நித்திலா மெல்ல விழிதிறந்து பார்க்க, “குட் மார்னிங்..” என்றான் நிரஞ்சன்.
அவள் முகத்தில் புன்னகை அரும்பிட, “நான் இப்போ இங்கிருந்து கிளம்ப போறேன்..” என்றவன் சொல்ல, “நீ மட்டும் இப்போ எங்கே போற.. திருச்சி வந்துவிட்டதா..?” என்று கேட்டாள் நித்திலா..
“அதெல்லாம் வந்து சொல்றேன்.. ஹோட்டல் ரூம் எல்லாம் போட்டாச்சு..” என்றவன் ரூம் கீயை அவளிடம் கொடுக்க ஜன்னலின் வழியாக வெளியே பார்த்தாள் நித்திலா.. பஸ் ஒரு பெரிய ஹோட்டல் முன்னே நின்றிருந்தது..
அவள் திரும்பி அவனின் முகத்தைக் கேள்வியாக பார்க்க, “நான் ஒரு வேலையாக வெளியே போறேன்.. நான் வரும் வரையில் நீ இவங்களை எல்லாம் பார்த்துக்கோ நித்தி..” என்றவன் எழுந்து பஸின் படிக்கட்டு வரையில் சென்றவன் நின்று அவளின் முகம் பார்த்தான்..
“நிதி நான் போயிட்டு வர்றேன்..” என்றவன் சொல்ல, சரியென தலையசைத்தாள் நித்திலா.. அவன் சென்ற சிலநொடியில் எல்லோரும் கண்விழித்துவிட, “வாங்க நம்ம ஹோட்டல் ரூமிற்கு போகலாம்..” என்றவள் எல்லோரையும் அழைத்துச் சென்றாள்..
எப்பொழுதும் போலவே ஆண்களுக்கு தனியறை பெண்களுக்கு தனியறை என்று புக் பண்ணியிருந்தான் நிரஞ்சன்.. எல்லோரும் விடியும் வரையில் தூங்கி எழுந்து குளித்துவிட்டு மலைக்கோட்டையை சுற்றிப் பார்க்க கிளம்பிக் கொண்டிருந்தனர்..
எல்லோரும் மலைக்கோட்டைக்கு செல்லும் நேரத்தில் வந்து சேர்ந்த நிரஞ்சனை பார்த்த சசிதரன், “என்ன நிரஞ்சந எங்கே போயிருந்தீங்க..” என்று கேட்க, “அதெல்லாம் அப்புறம் சொல்றேன்..” என்றவன் கையில் இருந்த பார்சலை ஒரு ஓரமாக வைத்துவிட்டு குளிக்க சென்றான்..
அவனின் செயல்கள் சசிக்கு விநோதமாக தெரிந்தாலும் அவர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவன் குளித்துவிட்டு வந்து மலைக்கோட்டையை சுற்றிப்பார்க்க கிளம்ப, நித்திலாவின் பார்வை நிரஞ்சனைத தேடியது..
அப்பொழுது அவன் எதிரே வருவதைக் கவனித்தவளின் முகத்தில் நிம்மதி பரவுவதை உணர்ந்த நிரஞ்சனின் மனமும் நிறைந்தது.. சுமிம்மா எப்பொழுதும் போலவே படு சுட்டித்தனமாக பர்மா பஜார் உள்ளே நுழைந்தார்..
அவர் அதிலிருக்கும் கடைக்குள் எல்லாம் நுழைந்து பொருளை விலை பேசி வாங்குவதைக் கவனித்த அனிதா, “சுமிம்மா எதுக்கு இதெல்லாம் வாங்கறீங்க..” என்று கேட்டாள்..
“அதெல்லாம் சொல்றேன் வாங்க போய் முதலில் துணி எடுப்போம்..” என்றவர் அவர்களை எல்லாம் அழைத்துக்கொண்டு துணிக்கடையின் உள்ளே நுழைந்தனர்..
எல்லோரையும் துணி செலக்ட் செய்ய சொன்னதும் சங்கரி ஓடிவந்து, “சுமிம்மா எனக்கு நீங்க எடுத்துக்கொடுங்க..” என்று அவரின் கையைப்பிடித்து இழுத்தாள்
“ஏன் செல்லம்..” என்றவர் அவளிடம் காரணம் கேட்க, “நாளைக்கு என்னோட ரிசல்ட் சுமிம்மா.. வீட்டில் எல்லோரும் என்னைத் தேடுவாங்க..” என்றவளின் முகம் கசங்கிட, “என்னோட செல்லத்துக்கு நான் வந்து எடுத்து தருகிறேன்..” என்றவர் எல்லோருக்கும் துணி எடுத்து பில் போட கொடுத்தார்..
அதன்பிறகு உச்சி பிள்ளையாரைப் பார்க்க மலை ஏறிய சுமிம்மாவின் வேகத்தைக் கண்ட வித்யா, “என்ன சுமிம்மா இவ்வளவு வேகமாக போறாங்க.. என்னால மலை ஏறவே முடியல..” என்றவள் நின்று மூச்சிரைத்தாள்..
“நீங்க ஆசைப்பட்ட விஷயம் அக்கா..” என்ற கார்த்திகா அவளை கிண்டல் செய்ய, “நான் இனிமேல் ஆசையே படமாட்டேன்..” என்றவள் மெல்ல படியேறினாள்.. ஆண்கள் ஓவ்வொரு விஷயம் பேசியபடியே படியேறிச் சென்றனர்..
அவர்களிடம் இருந்து பின்தங்கி நின்ற நிரஞ்சனைப் பார்த்த நித்தி, “ஏன் இங்கே நிற்கிறீங்க..” என்று கேட்டவண்ணம் படிக்கட்டில் இருந்து இறங்கி வந்தவளின் கேள்விக்கு பதில் சொல்லாத நிரஞ்சன் அவளின் முன்னே ஒரு பார்சலை நீட்டினான் நிரஞ்சன்..
“என்னது இது..” என்றவள் கேள்வியுடன் அவளின் கையிலிருந்த பார்சலை வாங்கிப் பிரித்து பார்த்த நித்தியின் முகத்தில் அளவில்லா மகிழ்ச்சி.. அவளின் முகம் சந்தோஷத்தில் மலர்வதை ரசித்தவன், “உனக்கு பிடிச்சிருக்கா..”என்று கேட்டான்..
“ரொம்ப..” என்றவளின் விழியிரண்டும் கலங்கிட, “ஏய் அழுக்காதே..” அவளை நிரஞ்சன் அதட்டினான்.. அந்த பார்சலில் தலையாட்டி பொம்மை இருந்தது.. அதை பார்த்துதான் நித்தியின் முகத்தில் அத்தனை சந்தோஷம்..!
“எனக்காக போய் வாங்கிட்டு வந்தியா..” என்றவளின் முகம் புன்னகை அரும்பிட தலையை சரித்தவள், “தேங்க்ஸ்..” என்றவள் தன்னுடைய பேக்கைத் திறந்து எதையோ தேடி எடுத்த்தாள்..
“நீ கை நீட்டு..” என்றவளின் முன்னே அவன் கையை நீட்ட அவனின் கையில் மோதிரத்தைக் கொடுத்தவள், “நீயே வெச்சுக்கோ.. என்னோட அப்பா எனக்காக கடைசியாக கொடுத்தது..” என்றவனின் கையில் கொடுத்துவிட்டு சென்றாள்..
உலகத்தில் இல்லாத ஒருவர் விட்டுச் சென்ற பொருளை இவ்வளவு பத்திரமாக வைத்திருந்த நித்திலா அவனின் கையில் மோதிரத்தை கொடுத்துவிட்டு சென்ற வேகத்திலேயே அவளின் காதலின் ஆழத்தை உணர்ந்து கொண்டான் நிரஞ்சன்..
தனக்கு முன்னே சென்ற சசியின் அருகில் சென்ற வித்யா, “சசி..” என்று அழைக்க, “என்ன என்று கேளுங்க..” என்ற இருவரும் முன்னே படியேறிச் சென்றனர்.. அனிதாவும், கார்த்திகாவும் பேசியபடியே வந்தனர்..
“என்ன வித்யா..” என்றவன் இயல்பாக கேட்க, “ம்ம் இப்பொழுது கூச்ச சுபாவம் போயிருச்சா..?” என்றவள் குறும்புப் புன்னகையுடன் கேட்ட வித்தியின் முகத்தை நிமிர்ந்து பார்த்தான் சசிதரன்..
அவளின் விழிகளை நேருக்கு நேர் பார்த்தவன், “வித்தி எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு.. நான் ஊருக்கு போனதும் அப்பாவிடம் பேசிட்டு உங்க வீட்டு வந்து உன்னை முறையாக பெண் கேட்கிறேன்..” என்றவன் தடுமாற்றம் இல்லாமல் பேச வாயடைத்துப்போய் நின்றாள் வித்யா..
அவள் சிலையென நின்றிருக்க, “ஒரு ஆண் தன்னை ஆணாக உணரனும்.. உன்னோட தைரியம் என்னை எனக்கே அடையாளம் காட்டியிருக்கு.. உன்னைவிட எனக்கு தகுந்த ஜோடி வேற யாரும் இல்ல..” என்றவன் அவளின் கையைப் பிடித்தான்..
அந்த தொடுதலில் உயிர்பெற்ற வித்யா, “சசி..” என்றவளின் குரல் வெளிவரவில்லை.. வெறும் காற்று மட்டுமே வர தன்னுடைய செல்லை எடுத்து யாருக்கோ போன் செய்தவன், “இந்த பேசு..” என்றான்.. அவள் மறுபேச்சு இல்லாமல் போனை வாங்கி, “ஹலோ..” என்றாள்..
“கண்ணு நான் பாட்டி பேசறேன்டா.. நீ ரொம்ப நல்ல பொண்ணு என்று சசி சொன்னான்.. நீ எங்க வீட்டுக்கே வந்திரும்மா.. நான் உன்னைப் பத்திரமாக பார்த்து கொள்கிறேன்..” என்றவரின் குரல்கேட்டு வித்யாவின் விழிகள் கலங்கியது..
அதன்பிறகு அவரிடம் பேசிவிட்டு போனை வைத்த வித்யா, “என்னோட ஆசை..” என்றவள் வாய்திறக்க, “எங்க பாட்டி உன்னை நல்ல பார்த்துப்பாங்க வித்யா.. நீ தினமும் அவங்க மடியில் படுத்து கதை கேட்கலாம்..” என்றவன் புன்னகைத்தான்..
“அதுக்காக உங்களை நான் கல்யாணம் பண்ணணுமா..” என்றவள் கேட்க, “கட்டாயம் இல்ல.. என்னோட விருப்பத்தை சொல்லிட்டேன் முடிவு உன் கையில்” என்றவன் சொல்லி முடிக்கும் முன்னே, “எனக்கு உன்னை பிடிச்சிருக்கு..” என்ற வித்யா வேகமாக மலை ஏறிவிட்டாள்..
சசிதரன் புன்னகையுடன் அவளை பின் தொடர்ந்து செல்ல இரு மனங்கள் இங்கே தங்களின் காதலை வெளிபடுத்தியது.. சுமிம்மா மற்றும் சங்கரி இருவரும் அவர்கள் மலையேறி வருவதற்குள் சாமி கும்பிட்டுவிட்டு கீழிறங்கி வந்தனர்..
மற்றவர்கள் சென்று சாமி கும்பிட்டுவிட்டு கீழிறங்கி வரும் பொழுது நிரஞ்சன் – நித்திலா, சசிதரன் – வித்யா, மகேஷ் - அனிதா மூன்று ஜோடிகளின் மனமும் நிறைந்து இருந்தது
அவர்கள் எல்லோரும் சாப்பிட ஹோட்டலின் உள்ளே நுழைந்து எல்லோரும் ஒரே டேபிளில் அமர்ந்தனர்.. அப்பொழுது வெளியே ஜூஸ் கடையைப் பார்த்தவள் வேகமாக கடைக்குள் புகுந்தாள்..
அவள் தனியே செல்வதைக் கவனித்த சுமிம்மா, “கார்த்திகா வெளியே நின்றுவிட்டால் போல.. நீ போய் அவளைக் கூட்டிட்டு வா..” என்றவர் கௌசிக்கை அனுப்பி வைத்தார்..
அவள் ஜூஸை ரசித்து ருசித்து குடிப்பதைக் கவனித்தவன், “சீக்கிரம் வா கார்த்திகா..” என்றழைக்க, “இரு கௌசிக்..” என்றவள் மெதுவாக ஜூஸைகே குடிக்க அவனின் கோபம் அதிகரித்தது..
“என்ன இன்னும் குடிக்காமல் என்ன பண்ற..” என்றவன் எரிந்துவிழ புன்னகைத்த கார்த்திகா, “வயிறு பசித்தால் இப்படித்தான் அடுத்தவங்க மேல எரிந்துவிழ தோன்றும்..” என்றவள் மற்றுமொரு பாதம் பாலை வாங்கி அவனின் கையில் திணித்தாள்..
அவனோ அவளை முறைக்க, “எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்..” என்றவள் தன்னுடைய பணியைத் தொடர அவனும் பாதம் பாலைக் குடித்தான்.. கொஞ்சநேரம் முன்னே இருந்த கோபம் எல்லாம் சென்ற இடம் தெரியாமல் சென்று மறைந்தது..
அவன் அமைதியாக நிற்பதைக் கவனித்த கார்த்திகா, “சிம்பிள் லாஜிக்.. இதுக்கு வீட்டைவிட்டு வெளியே வந்திருக்கிற.. என்னைக்கும் நம்ம கடுப்பாக கூடாது..” என்றவள் முன்னே சென்றாள்..
“பசியறிந்து சாப்பாடு போட தாயில்ல கார்த்திகா.. நீதான் என்னோட முகம் பார்த்து என் பசியறிந்து எல்லாம் செய்யற.. நீ எனக்கு மனைவியாக வரணும் என்று ஆசைபடுகிறேன்.. என்னோட ஆசை நிறைவேறுமா..?” என்று கேட்டான்..
அவனின் பேச்சில் நின்று அவனின் முகம் பார்த்தவள், “நடக்கும் நடக்கும் நான் கூட சொல்கிறேன்..” என்றவள் வேகமாக ஹோட்டலின் உள்ளே நுழைந்துவிட்டாள்.. அவள் சொன்ன விசயத்தின் அர்த்தம் புரியாது நின்ற கௌசிக் புரிந்த பிறகோ சந்தோஷத்தில் திளைத்தான்..
எல்லோரும் சென்று சாப்பிட அமர, “இன்னைக்கு என்னோட டிரீட்..” என்ற சுமிம்மா, “எல்லோரும் உங்களுக்கு விருப்பமானதை ஆடர் பண்ணுங்க..” என்றார்.. எல்லோரும் தங்களுக்கு விருப்பமானவற்றை ஆடார் செய்துவிட்டு காத்திருந்தனர்..
அப்பொழுது நித்திலாவிற்கு வயிற்றை பிரட்டிவிட, “அம்மா காலையில் குடித்த காபி சேராமல் வயிற்றை பிரட்டுதும்மா..” என்றவள் சொல்ல, “வாமிட் வர மாதிரி இருந்தால் சீக்கிரம் எழுந்து போ நித்தி..” என்றவரின் போன் அடித்தது..
அவரும் போனை எடுத்து பேசிவிட்டு ஒரு தெளிவான முடிவுடன் அதை மற்றவர்களிடம் பகிர்ந்த சுமிம்மாவின் மனதில் பாரம் ஏறியது..
அவள் வேகமாக எழுந்து சென்றவள் அங்கிருந்த வாஸ்பேசனில் வாமிட்டேடுக்க கையைக் கழுவிவிட்டு திரும்பிய நிரஞ்சன், “ஐயோ என்னாச்சு..” என்று அவளின் அருகில் வந்தான்..
“காலையில் குடித்த காபி சேரல..” என்றவள் மீண்டும் வாந்தியேடுக்க, “வா முதலில் ஹாஸ்பிட்டல் போய் செக் பண்ணலாம்..” என்றவன் குறும்புடன் கண்சிமிட்ட அவளோ புரியாத பார்வை பார்த்தாள்..
“டேய் நீ என்ன சொல்லிட்டு இருக்கிற..” என்றவள் அவனிடம் விளக்கம் கேட்க, “இது அந்த வாந்திதானே..” என்றவன் வேண்டுமென்ற அவளைக் கிண்டல் செய்ய அவனை முறைத்தாள் நித்திலா..
“என்னடா மனசில் நினைச்சிட்டு இருக்கிற..” என்றவள் இடையில் கையூன்றி அவனை மிரட்ட, “எனக்கு பொண்ணு என்றால் ரொம்ப பிடிக்கும் அதனால் முதலில் பொண்ணுதான் என்று நினைக்கிறேன்.,.” என்றவன் ரசனையுடன் பதில் கொடுத்தான்..
“ஆனாலும் கருப்பா உனக்கு ரொம்ப கொழுப்பு அதிகம்டா..” என்றவள் அவனிடம் இயல்பாக பேச அவளின் முகத்தைப் பார்த்தவன், “சும்மா சொன்னேன்.. திருமணம் ஆகும் வரை என்னோட விரல்நுனி கூட உன்மேல் படாது நிதி..” என்றவன் முன்னே சென்றான். அவனின் பேச்சில் இருந்த உண்மையை உணர்ந்த நிதி அவனைப் பின் தொடர்ந்தாள்..
சுமிம்மாவின் மனதில் என்ன இருக்கிறது..?? அவரின் திட்டம் என்ன..? அவர் அடுத்து என்ன செய்ய போகிறார்..???