நடந்தது என்ன? பாணியில் ரகுநந்தனிடம் அன்றைய நிகழ்வுகளைப் பகிர்ந்தவள், அவன் முகம் பார்த்திருந்தாள்.
முந்தைய தினம் வரை எந்த முடிவுக்கும் வராதிருந்த வதனி, அன்றைய தினம் வந்து கூறிய சம்மதம், அவன் மட்டும் அறியாதது அல்ல, அங்கிருந்த யாரும் அறியாதது என்பதை அறிந்தவன், அப்பத்தாவின் சாதூர்யத்தை எண்ணி ஆச்சரியப்பட்டுப் போனான்.
அன்று தோன்றாத பல எண்ணங்களும், நினைவுகளும் வதனியின் பகிர்வால் தோன்றுவதை எண்ணியபடி அமர்ந்திருந்தான்.
பூமி அதன் சுழற்சி வேகத்தில் ஓடி வந்ததால், சூரியன் மறைந்திருக்க, தற்காலிக ஒளி மறைந்து, பிரபஞ்சத்தின் நிரந்தர இருள் இரவைப் பிரசவித்திருந்தது.
இரவு உணவிற்குபின், லேப்பில் வேலை செய்திருந்தவன் அதை ஷட்டவுன் செய்து விட்டு, ஹாலில் அமர்ந்து சிறிது நேரம் டிவி பார்த்திருந்தான்.
அதற்குள், இரவு வேலைகளை முடித்துக் கொண்டு... குளித்து விட்டு, ரெட் ஃப்ளோரல் டைப் பிங்க் நிற காட்டன் மேக்ஸியில் ஹாலுக்கு வந்த வதனி ஹாலில் இருந்த அவள் சார்ஜரை எடுக்க வர,
“ஏஞ்சலுக்கு தூக்கம் வந்துருச்சா?”
“இல்ல..... தூக்கம் வரல...... ஆனா படுக்கப் போறேன்....”, என்றபடி ஹாலில் இருந்த அவளின் சார்ஜரை எடுத்தபடி அறைக்குள் செல்ல,
டிவி, ஹாலில் உள்ள லைட் எல்லாம் அணைத்துவிட்டு..... அவளின் பின்னே அறைக்குச் சென்றவன்..... அவளது பேகில் சார்ஜரை வைத்துக் கொண்டிருந்தவளின் பின்னிருந்தபடி அவளை அணைத்தான்.
சார்ஜரை உரிய இடத்தில் அவள் வைக்கும் வரை அணைத்தவாறு காத்திருந்தவன், அவளின் கழுத்தில் இதழ் பதித்தான். பெண்ணவள், எதிர்பாரா தன்னவனின் தாக்குதலால் உடல் சிலிர்த்தாள்.
“ஏஞ்சல், இந்த அத்தானைக் கண்டுக்கவே மாட்டிங்கற....”
“கண்டுக்கலயா....? பொய்ய பொருந்தச் சொல்லணும்”
“நான் ஏன் பொய் சொல்ல போறேன்....? உண்மையத்தான் சொன்னேன்”
“சரி சொல்லுங்க..... என்ன கண்டுக்க மாட்டீங்கறேன்?”
“அன்பா ஒரு அணைப்பு, ஆசையா ஒரு பார்வை, மோகமா ஒரு முத்தம்....ம்ஹூம்.... எதுவும் இல்ல.... பாலைவனம் மாதிரி வறண்டு போயிருக்கேன் டீ”
“இது தான் உங்க டிக்சனரில கண்டுக்கறதா?”
“ஆமா”
“அதெல்லாம் என்னால முடியாது.....”
“ஏன் முடியாது?... என்ன பிடிக்கலயா..... உனக்கு?”
“பிடிக்காம யாரும் கல்யாணம் பண்ணிக்குவாங்களா?....
“எப்ப இருந்துடி என்ன உனக்கு பிடிக்கும்”
“ம்....”, யோசிப்பது போல பாவனை செய்தவள், “உங்கள பாத்துக்க சொல்லி என்னை விட்டுட்டு கல்யாணத்துக்கு போனாங்கல்ல அம்மா, அப்ப இருந்து ....
கீர்த்தி அக்கா, இன்னும் நிறய பேரு உங்க பின்னாடி திரிஞ்சும், நீங்க கண்டுக்கலயா அதான் கொஞ்சம் பிடிச்சிருந்தது”, என சிரித்தபடி பேசியவளைத் தூக்கிச் சென்று படுக்கையில் விட்டவன், அவளை அவனுக்குள் இருக்குமாறு அணைத்தவாறு படுக்க,
இந்திய ரயில் நிலையங்களில் புகைவண்டி கடக்கும் போது நடைதளத்தில் உண்டாகும் அதிர்வு, அவளின் மனதில்.
“அப்ப ஏண்டி எங்கிட்ட பேசவே மாட்ட”
“ஆரம்பத்துல.... சிடுசிடுன்னு பேசறதால உங்கள பாத்தவுடனே ரூமுக்குள்ள போயிருவேன்....., பயமெல்லாம் போனதுக்கப்புறம் உங்கள ஃபிளாட்லயே காணோம்..
அம்மாட்ட கேட்டேன்.... நீங்க ஃபாரின் போயிட்டதா சொன்னாங்க, அப்றம் எங்கிட்டு வந்து உங்ககூட பேச....”
“அதான் என் மொபைல் நம்பர் தந்தேனடி”
“கூச்சமா இருந்தது அதான்.....பேசல.....”
“எங்கிட்ட எதுக்கு கூச்சம்?”
“தெரியல, ஆனா உங்ககிட்ட மட்டும் தான் அப்டி இருக்கு இன்னும்.... எதுக்குனு கேட்டா என்ன சொல்ல நான்?
அப்பறம் உங்களுக்கு கல்யாணம்னு அம்மா சொன்னாங்க... அப்போ நீங்க யாரையும் மனசுல யோசிக்காததால தான் அவங்கள மேரேஜ் பண்ணுறீங்கனு நினச்சுகிட்டேன்...”
“அப்பத்தா ஃபோர்ஸ் பண்ணாங்க.... சரி பாருங்கனு சொல்லிட்டு ஃபாரின் போயிட்டேன், ஆனா அதுக்குள்ள எத்தன ஜாதகங்கிற?”
“ம்ம்.... நீங்க நம்ம கல்யாணத்துக்கப்புறமா பேசுவீங்கனு நினச்சேன், அப்புறம் அந்த அக்காவை மறக்க முடியாம பேச மாட்டீங்கறீங்களோன்னு, நானும் பேசல”
“படிக்கற பொண்ண டைவர்ட் பண்ண வேணாம்னும் யோசிச்சேன் முதல்ல... படிப்பு முடிஞ்சு ஆறு மாசமா எந்த ரியாக்சனும் உங்கிட்ட இல்ல.
உன்னால இன்னும் என்னை ஏத்துக்க முடியாம கஷ்டப்படுறியோன்னு டிஸ்டர்ப் பண்ணல....
அந்த பொண்ண போட்டோல ஒரு தடவ பாத்திருக்கேன், அவ்வளவு தான்”
“அம்மா, கல்யாணத்துக்கப்புறம் அடிக்கடி சொல்லுவாங்க.... தம்பிகிட்ட பேசுனு.... நான் ரொம்ப நாளா தயங்கிட்டே இருந்தேன்..... இந்த தடவ தான் டெக்ஸ்ட் பண்ணிட்டேன்”
என்றவாறு பழங்கதை பேசியபடி இருவரும் உறக்கத்தை தழுவியிருந்தனர்.
அதிகாலையில் எழுந்த ரகு, அருகில் உறங்கும் வதனியைக் கண்டான்.
எழுப்ப மனமின்றி, குளித்து, வேண்டிய அனைத்தையும் அவனுடைய BMW வில் எடுத்து வைத்துவிட்டு வந்த பிறகு மனைவியை எழுப்பினான்.
“ஏஞ்சல்..... எந்திரிக்கிறியா?”
“ம்...ம்ம்ம்....”, என்றவள் எழுவதாகத் தெரியவில்லை.
“எங்கத்தை போன் பண்றாங்க டீ”, என சத்தமாகக் கூற
“யாரு இந்த நேரத்துல போன் பண்றது? என கண்ணைத் திறந்து கேட்டாள்.
அவன் சிரிப்பு கண்ணில் பட, தான் எழ அவன் அவ்வாறு சொல்லியிருக்கிறான் என எண்ணியவளாய், ஃபுல் கம்ஸ் ஃபோர்மல் நேவி புளூ காட்டன் ஃபிட் ஷர்ட், ரெகுலர் ஃபிட் லைட்புளூ டெனிம் ஜீன்ஸ்ஸில் கிளம்பி நின்றிருந்தவனை பார்த்தவாறு படுக்கையில் இருந்து எழுந்தாள்.
அவளின் பார்வையைக் கண்டவன்,
“காலைலயே அப்டி பார்க்காதடி”
“கண்டுக்கவே மாட்டீங்கறனு நைட் முழுக்க எங்கிட்ட புலம்பிட்டு, இப்பொ இப்டி சொன்னா...... என்ன அர்த்தம்?”
“ம்..... இன்னும் நல்லா பாருன்னு அர்த்தமாம்”
“நேரமாகுது.... நீங்க ஹாலுக்கு போங்க... நான் கிளம்பி வாரேன்”
“நீ பிரஸ் பண்ணி, ஃபேஸ் வாஷ் மட்டும் பண்ணிட்டு வரியா?”
“நீங்க மட்டும் குளிச்சுட்டீங்க...., நானும் குளிச்சிட்டு தான் வருவேன்”
“நீ வண்டில தூங்கதான போற”
“ம்... குளிச்சா தூங்கக் கூடாதுன்னா இருக்கு” , என்றவள் குளியலறைக்குள் செல்ல,
சிரித்தபடி, அவள் கிளம்புவதற்குள் வீட்டின் ஜன்னல், கதவுகளைச் சரி பார்த்து பூட்டினான்.
பதினைந்து நிமிடத்தில், மெரூன் மற்றும் பெய்ஜ் எம்பிராய்டரி காட்டன் ஜாக்குவாடு குர்தியில் கிளம்பி வந்தவளைக் கண்டவன், அவள் இதழில் சிறு கதை எழுதிய பின், அவளை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.