மகிழ்ச்சிNice
மகிழ்ச்சிNice
தனது மகளின் ஆக்டிவா சத்தம் கேட்டு, விரைவாக காபியை தயாரித்தவர் மகள் வீட்டிற்குள் நுழையும் போது அவளை எதிர்கொண்டு காபியை கையில் கொடுத்தவாறு,
“என்னடாம்மா..... இன்னிக்கு கொஞ்சம் லேட்டா....?”
“ட்ராஃபிக்..... வழக்கம் போலம்மா...”
“உங்களுக்கு பொழுது எப்டி போச்சு...”
“வீட்டு வேல செய்ய ஆரம்பிச்சா..... நேரம் போறதே... தெரியாது”
“மதியம் .... சாப்டீங்களா...?”
“ம்.... மூணு மணிக்கு”
“இன்னிக்கு சீக்கிரமா சாப்டீங்க போல...” என சிரித்தபடி, குடித்து முடித்த காபி டம்ளரை சிங்கில் போட்டவள், அவளின் அறைக்குள் சென்று சிறு குளியல் போட்டு அம்மாவிடம் வந்தாள்.
“என்னம்மா.... செய்றீங்க..?”
“கிரைண்டர் போட போறேன்..”
“சரி... நான் போடுறேன்.... கொஞ்ச நேரம்... அப்டி உக்காருங்க..”
“நீ இப்பதான ஆபீஸ்ல இருந்து வந்த..... இரு... அம்மா பாத்துக்கறேன்”
“நான் ரைஸ் போடுறேன்.... அது வரை இருங்க...” என்றபடி அதற்கான பணிகளை மேற்கொண்டாள்.
மகளிடம் பேசியவாறு, கமலா உலர்ந்த துணிகளை மடித்தார்.
காதம்பரி அலுவலகத்தில் மட்டுமல்லாது வீட்டிலும் தனது தாய்க்கு உதவியாக எல்லா வேலைகளையும் செய்து கொடுப்பாள். அலுவலகத்தில் பணி செய்து விட்டு வரும் மகளிடம், எந்த பணியையும் கொடுக்காத நிலையிலும், அவளாக முன்வந்து தாயிற்கு உதவி செய்வாள்.
“அம்மா...என் காலேஜ் மேட் ப்ரவீணாவுக்கு டெல்லில ஜாப் கிடச்சிருக்கு.... அதுக்கு ட்ரீட் கமிங் சண்டே தராளாம்...போயிட்டு வரவாம்மா..?”
“சரிம்மா.....”
“உங்க அப்பத்தா இன்னிக்கு போன் பண்ணாங்க....”
“எதுக்குமா?” பேத்தியின் ஜாதக விசயமாக கேட்கவே அவர் பேசியது... ஆனால் அதை விடுத்து...
“கோவில் விசேசத்துக்கு இந்த வருசமாவது வர சொன்னாங்க”
“எப்பவாம்மா...?”
“அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை....., உனக்கு உங்க கம்பெனில லீவு கெடைக்குமா?”
“எத்தனை நாளுக்குமா?”
“செவ்வாய் கிழமை நைட் கிளம்புனா.... அங்கிட்டு நாளு நாளாவது இருக்கணும்.... இல்லனா... உங்க அப்பத்தா.... அதுக்கு எதாவது சொல்லுவாங்க”
“ஜாப்ல ஜாயிண்ட் பண்ணதில்ல இருந்து இது வரை நான் லீவே போடல... அதனால...லீவுனு நான் போயி கேட்டா கண்டிப்பா கெடைக்கும்மா... அப்பாவுக்கு லீவு இருக்காணு கேளுங்க.... இருந்தா எங்க ஆபீஸ்ல லீவு சொல்றேன்மா..”
“உங்க அப்பாக்கு எப்பவும் எதாவது சாக்கு சொல்லுவாறு..... இந்த முறை சொல்லி பாப்போம்..... கிடச்சா போயிட்டு வருவோம்”
"நாம ரெண்டு பேரும் என்னோட லெவந்த் லீவுல ஊருக்கு போனதும்மா...”, என்றவாறு அரைத்த அரிசி மாவை அள்ளிவிட்டு உழுந்தை போட்ட மகளிடம்,
“சரி நீ போயி ரெஸ்ட் எடு.... அம்மா பாத்துக்குறேன்”
“அவ்வளவு தான்மா...அப்பா வர மாதிரி வண்டி சத்தம் கேட்குது... நீங்க அப்பாவை கவனிங்கம்மா....”
“அவரு வரட்டும்.... பரவாயில்ல...நான் பாக்குறேன்”
“மொதல்ல அப்பாவைக் கவனிங்கம்மா...”
வீட்டிற்குள் வந்த சிதம்பரம், இருவருடைய சத்தம் வரும் திசையை நோக்கியவாறு, “காதம்பரி, அப்பாக்கு குடிக்க தண்ணீ கொண்டு வாடா.....”
உடனே அம்மாவிடம் பொறுப்பை கொடுத்துவிட்டு வேகமாக செம்பில் நீருடன் வந்தாள்.
“இந்தாங்கப்பா....” என நீரை கொடுத்தாள்.
வாங்கிய நீரை அருந்திவிட்டு, சற்று நேரம் மகளுடன் பேசியபடி இருந்தார். அங்கு வந்த கமலா, அவரது தாய் கோவிலுக்கு வருமாறு கூறியதைக் கூறினார்.
சற்று நேரம் யோசித்துவிட்டு, “சரி போவோம்.... ஆனா நம்ம காதம்பரிக்கு...” என மகளை நோக்க
“எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லப்பா....” என்றவாறு தனது தாயிடம் கூறியதை தந்தையிடமும் கூறினாள்.
ஒருவாராக அடுத்த வாரத்தில் ஊருக்கு செல்வதாக முடிவு செய்யப்பட்டு காதம்பரி தனது அறைக்கும், சிதம்பரம் அவர்களது அறையை நோக்கியும் சென்று விட்டனர்.
காதம்பரி, தனது மொபைலில் சிறிது நேரம் செலவழித்து விட்டு, பிறகு லேப்பை ஆன் செய்து அதில் அடுத்த வாரம் ஊரில் இல்லாத போது தனது ஷெட்யூல் வேலைகள் என்னென்ன? அதை ஊருக்குச் செல்லும்முன்பு முடிக்க வேண்டிய பணிகளை அட்டணை செய்து அதன்படி வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்.
ஹாலில் இருந்த கமலாவின் போன் ஒலியில், அங்கு வந்து அதை எடுத்து பேச ஆரம்பித்தார்.
“சொல்லுங்க தரகரே, ...”
“உங்க பொண்ணூக்கு பொருந்தற மாதிரி ஏழு ஜாதகம் கைல இருக்கு”
“ம் அப்டியா.... நாளைக்கு காலைல பதினோரு மணிக்கு மேல் வாங்க” என்றவாறு போனை வைத்து விட்டு, அங்கிருந்தபடி மகளின் அறையை நோக்கியவாறு, ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டு இருந்த கணவரிடம் விசயத்தினை கூறினார்.
அடுத்து வந்த நாட்களில் கோவில் விசேசத்திற்கு தங்களது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டத்திலுள்ள மானகிரி செல்வதற்கான பணிகளை மேற்கொண்டனர்.
தந்தை மற்றும் மகள் இருவரும் அவரவர் அலுவலகப் பணிகளில் நேரத்தினை செலவிட்டனர்.
கமலா மகளுக்கு வந்த ஏழு ஜாதகத்தினை எடுத்துக் கொண்டு பொருத்தம் பார்க்கவும், பொருத்தமான ஜாதகங்களின் மாப்பிள்ளை மற்றும் குடும்பம் பற்றிய விசயங்களைக் கவனிப்பதிலும், விசாரிப்பிலும், ஊருக்கு கிளம்பும் நாளும் வந்தது.
சிதம்பரம் தனது வருகையை முன் கூட்டியே தனது தாய் மனோகரியிடம் தெரிவிக்க, அங்கு அவர் தனது குலதெய்வத்திடம், பேத்திக்கு விரைவில் மணக்கோலம் அமைய வேண்டுதலை வைத்துவிட்டு.., தனது மகனின் குடும்ப வரவை எண்ணி ஆவலோடு காத்திருந்தார்.
வேண்டுதல் நிறைவேறுமா?.......