மழைப்பாடல்
வானக் கூடிழிந்து வருநீர்ப் பறவையோ?
வாடும் நிலமகளை வாழ்விக்கும் அமுதமோ?
பேணக் கூரையிலார் பெற்றதீ வினைதானோ?
பெருமழையே பொழிகின்றாய், விடைசொல்லிப் பொழியேன்!
நாளும் வெப்பத்தால் நாங்கள் படும்துயரை
நல்லகுளிர் மழைவந்து நசிக்கின்றாய் போற்றி!
ஆளும் திறனற்றேம், யாருக்கும் உதவாது
நீளும் சாக்கடையில் நீகலப்பாய் போற்றி!
வாராத போதுன்னை வரவேண்டிக் காய்வோம்,
வந்துவிட்டால் வெள்ளமென மன்றாடி மாய்வோம்!
தீராதே எமதிந்தத் திண்டாட்டம், மழையே!
சீராக உன்பணியைச் செய்கநீ போற்றி!
ஏரிகளில் கால்வாயில் எடுத்தகுளம் தம்மில்
எங்களிட்டப் படிவீடு எழுப்பிக் கொண்டிருப்போம்,
மாரியுந்தன் வழிகளையாம் மாற்றிக்கொளச் சொல்வோம்,
"மடப்பயல்கள்!" என்றெமைநீ மதியாது செல்வாய்!
வெள்ளத்தால் அழிவென்று வெறுப்புற்றுக் கூவி
விளங்காத மழையென்று வைதிடுவோம் உன்னை,
உள்ளத்தில் கொள்ளாது உன்பணியை நீசெய்க,
உம்பர்வான் பொழியமுதே, உறுமழையே போற்றி!
கடலன்னை ஈன்றளித்த ககனமுகில் தாயின்
உடல்வழியும் ஒருமகளே, உறுமழையே போற்றி!
மடமையினால் உன்னருளை மறந்தாலும் உன்னை
உடைமையினால் உய்கின்றோம், உறுமழையே போற்றி!
-வி ???