அசூயையாய் மாறியது
நாட்கள் தேய்ந்து வாரமானது...
சாரங்கபாணி உடல் நிலை சரியாகி வீட்டிற்குத் திரும்ப, சாரதியின் சம்மதத்தோடு அவர்களையும் தங்களோடே தங்க வைத்துக் கொண்டாள் வீரா!
வீராவின் அன்பிலும் கவனிப்பிலும் தெய்வானையும் சாரங்கபாணியும் நெகிழ்ந்தனர். அந்த அன்பின் வெளிப்பாடாக அவர்களும் வீராவையும் அவள் சகோதரிகளையும் தங்கள் மகள்களாகவே பாவித்தனர். இதனால் சாரதிக்கு ஆச்சர்யத்தோடு மனநிறைவும் ஏற்பட்டது.
தனிமையில் இருந்தவனுக்கு இந்த உறவின் ******* இன்பத்தில் திளைக்கச் செய்ய, இதற்கெல்லாம் முழுமுதற் காரணமான வீரா அவன் மனதில் ஆகாயம் போல எங்கும் நீக்கமற நிறைந்தாள்.
வாரங்கள் மாதமாக...
இன்னும் ஒரு வாரத்தில் வீரா சாரதியின் திருமண வரவேற்பு...
அதற்கான ஏற்பாடுகளில் அவன் படுமும்மரமாய் இருந்தான். அவன் கவனம் முழுக்க அதில்தான் நிரம்பியிருந்தது.
காலை வீரமாகாளி கோவிலில் முறைப்படி அவர்களின் திருமணம் என்றும்.... அன்று மாலையே பெரிய நட்சத்திர ஹோட்டலில் திருமண வரவேற்பு என்றும் முடிவு செய்யப்பட்டிருந்தது.
அதுவும் வீராவின் விருப்பத்திற்காகவே சாரதி கோவிலில் திருமண ஏற்பாடுகள் செய்தான்.
வீராவிற்கு தெரிந்தவர்கள் உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் கோவிலில் நடைபெறும் திருமணத்திற்கு அழைப்பதென்றும் வரவேற்பு நிகழ்ச்சி சாரதியின் வியாபார நண்பர்களை அழைப்பதென்றும் முடிவு செய்யப்பட்டது.
இருவேறு ஸ்டேட்டஸ் நிலையில் உள்ளவர்களை ஓரிடத்தில் சங்கமிக்க வைப்பது தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தும் என்பதால் இத்தகைய திட்டமிடல்!
அதற்கேற்றாற் போலச் சாரதி இரண்டு வெவ்வேறான திருமண அழைப்பிதழ்களை அச்சிட்டிருந்தான்.
சாரதி தன் வியாபார நண்பர்கள் எல்லோரையும் அழைத்துவிட்ட நிலையில் வீரா தன்வழி சொந்தங்கள் நண்பர்கள் அனைவரையும் அழைக்க அவனும் உடன் வரவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாள்.
வேறுவழியின்றி சாரதியும் அவள் உடன் வந்தாலும் அவன் நினைப்பெல்லாம் வேலையில்தான். அவன் சலிப்போடு,
"கண்டிப்பா நான் வந்தே ஆகனுமா" என்று கேட்க,
"வண்டியை ஒரமா நிறுத்து" என்று அவள் சொல்லவும், "மாட்டேன்பா... ஒருதடவை வாங்கினதே போதும்" என்று பயம் கொள்வது போல் பாவனைச் செய்தான் சாரதி!
ஆனால் வீரா அடங்கா கோபத்தோடு, "சும்மா அப்படியே பயப்படுற மாதிரி சீனை ஓட்டாதே... நீ வண்டியை நிறுத்து... நான் வூட்டுக்கு போறேன்... நீ ஆபிஸுக்கு போ... போய் அந்த கணேஷையே கட்டிக்கின்னு அழுவு" என்றவள் சொல்ல
"சும்மா நீ ஏன் அவனையே வம்புக்கு இழுக்கிற?!" என்று சாரதி கேட்க அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது
"பின்ன... நேரங்காலமில்லாம போஃன் போட்டா... கடுப்பாவல" என்றவள் சொல்ல, "அதானடி அவன் வேலை" என்று சாதாரணமாக சொன்னான் சாரதி.
இவ்விதம் அவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே அவன் செல்பேசி அலற வீராவின் முகம் மேலும் கடுகடுத்தது.
சாரதி அவள் முறைப்பையும் மீறி பேசியை எடுத்துப் பார்த்து, "கணேஷ்தான்" என்று அசடு வழிய
அவள் மறுகணமே பேசியை அவனிடமிருந்து பறித்து கொண்டுவிட்டாள்.
"வீரா" என்று சாரதி அதிர்ந்து குரலெழுப்ப,
"ஷ்ஷ்ஷ்" என்று அவனை அடக்கிவிட்டு, அவளே பேசினாள். அதுவும் அவன் குரலில்!
"சொல்லு கணேஷ்"
அவனுக்கோ தூக்கிவாரி போட்டது... வேகமாய் சென்ற கார் சட்டென ஸ்பீட் பிரேக்கில் ஏறி இறங்கியது போல ஒரு நொடி ஜெர்க்கானது அவனுக்கு.
எதிர்புறத்தில் கணேஷ் என்ன சொன்னானோ?!
இவள் உடனே, "எந்த வேலையா இருந்தாலும் நாளைக்கு போஸ்ட்போன் பண்ணிடு... அன் போஃன் பண்ணி சும்மா சும்மா டிஸ்டர்ப் பண்ணிட்டிருக்காதே... நான் கொஞ்சம் பெர்ஸ்னல் வேலையா வெளியே போயிட்டிருக்கேன்" என்று டக்கென்று உரையை முடித்து அவள் அழைப்பைப் பட்டென துண்டித்தாள்.
அச்சு பிசகாமல் அவன் குரலில் அதுவும் அவன் பேசும் விதத்திலேயே அவள் பேசியதில் அதிர்ச்சி கலந்த வியப்போடு பார்த்தவன்,
"ஏ கேடி! இது முதல் தடவையா இல்ல... முன்ன பின்ன எப்பயாச்சும் இப்படி பேசியிருக்கியா" என்றவன் கேட்க அவள் முகத்தில் ஓர் குறும்புப் புன்னகை!
"சரியான ப்ராஃடு" என்று அவன் சொல்லி அவள் தலையில் அடிக்க,
"ப்ராடா... அதுவும் உன்னை விடவா?!" என்று கேலியாய் சொல்ல அவன் சினத்தோடு,
"இதெல்லாம் நல்லா பேசுற... இதுவே காலேஜ் போய் படின்னு சொன்னா அதுக்கு மட்டும் வாயே வராது மேடமுக்கு" என்றவன் சொல்ல அவள் அலுத்துக் கொண்டு,
"வராததை வா வான்னா எப்படிய்யா வரும்" என்றவள் படபடவென பொரிய
"வராது... வரவே வராது... அதுவும் உனக்கு சத்தியமா வராது" என்று சாரதி தீவிரமாகச் சொல்ல, வீராவின் முகம் சுருங்கி போனது.
"ஷப்பா... இரண்டு மாசமே என்னால உன்னை வைச்சுக்கிட்டு முடியல... எப்படிதான் உங்க அம்மா இத்தனை வருஷம் உன்னை சமாளிச்சாங்களோ?!" என்று அவன் கேலியாகத்தான் சொன்னான். ஆனால் அந்த வார்த்தைகள் அவளை ஆழமாய் காயப்படுத்தும் என்றவன் எதிர்பார்க்கவில்லை.
"அம்மா" என்றவள் குரல் தழுதழுக்க, அந்தச் சமயம் கார் அவர்கள் தங்கியிருந்த குடித்தன வாசலின் முன் வந்து நிறுத்தப்பட்டிருந்தது.
அவள் வேதனை நிரம்பிய முகத்தைப் பார்த்தவன் குற்றவுணர்வோடு,
"சாரிடி... ஏதோ பேச்சு வாக்கில" என்றவன் சொல்ல அவளோ
அவன் சொன்னதை காதில் வாங்காமல் காரை விட்டு வெளியே வந்து அந்தச் சாலையை வெறுமையாய் பார்த்துக் கொண்டு நின்றாள்.
"வீரா" என்று சாரதி மிருதுவாய் அவள் தோள்மீது கரம் பதித்தான்.
"இங்கேதான்... எங்கம்மா... அவங்க உடம்பு... ரத்தமும் சதையுமா உயிரில்லாம கிடந்துச்சு" என்றவள் அந்த சாலையை கை காண்பித்து வேதனையோடும் வலியோடும் உரைக்க
சாரதி அவளைத் தோளோடு அணைத்துப் பிடித்து தேற்றியபடி,
"வா... உள்ளே போலாம்" என்றான்.
அந்தச் சமயம் அந்தத் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அவளை அடையாளம் கண்டுகொண்டனர்.
அவர்கள் ஓடிவந்து, "வீரா க்கா" என்று பாசமாய் அவளைச் சூழ்ந்து கொள்ள, அவர்களைப் பார்த்த நொடி அவள் மனநிலை முற்றிலும் மாறியது.
அவர்களுடன் சிரித்துப் பேசி மகிழ்ந்தவள் அவர்களுக்காக வாங்கிவந்த இனிப்புகளை வழங்க, எல்லோரும் குதூகலமாய் ஆரவாரித்தனர்.
பிறகு அங்கு வசிக்கும் எல்லோருக்கும் அழைப்பிதழ்களை வழங்க அதைப் பார்த்து சிலர் சந்தோஷம் கொள்ள சிலர் அவள் காதுப்படவே அவளைத் தவறாகவும் குத்தலாகவும் பேசினர்.
சாரதிக்கு கோபமேற வீரா அவனைக் கட்டுப்படுத்தி அவற்றையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாமென்று கூற, அவனும் அவளுக்காக அமைதியானான்.
அதன் பின் சுகுமார் வீட்டிற்கு அவர்கள் செல்ல, சாரதியை அவன் ரொம்பவும் மரியாதையாய் வரவேற்று அமர வைத்தான்.
அதோடு சுகுமார் வீராவை பற்றி சாரதியிடம் கதை கதையாய் சொல்ல அவன் சிரித்து சிரித்து, "என்னால சத்தியமா முடியல" என்று ஓய்ந்து போனான்.
வீரா கடுப்போடு,
"டே... சுகுமார்ர்ர்ர்ரு" என்று இழுக்க,
"நீ சொல்லு சுகுமாரு... அப்புறம் என்ன நடந்துச்சு?" என்று சிரிப்பை நிறுத்திவிட்டு கேட்க,
"அய்யோ அப்புறம்தான் சீனே... இவ அடிச்ச விசிலை பார்த்த தலைவரே டென்ஷனாகி... இவளை கூப்பிட்டுவிட்டாரு... எனக்கா அல்லுவுட்டிருச்சு" என்று சுகுமார் அன்று நடந்தவற்றை ஆக்ஷனோடு தெரிவித்தான்.
"சிக்கியிருக்க மாட்டாளே! எமகாதகி" இதை சொன்னது சாக்ஷாத் சாரதிதான். அதுவும் கேலியாய் அவளை ஓரப்பார்வை பார்த்து கொண்டே!
"போதும் இதோட நிறுத்துறியா?" என்று சுகுமாரை மீண்டும் முறைத்தாள் வீரா!
ஆனால் சுகுமார் விடாமல் நடந்த முழு கதையும் சொல்லி முடிக்க, சாரதியின் சிரிப்பு சத்தத்தில் அந்த இடமே அதிர்ந்தது.
வீரா உடனே சுகுமாரை பார்த்து, "இருடி...நான் உன்னை பத்தி சொல்றேன்" என்றவள் மிரட்டல் விடுக்க,
"இன்னா சொல்ல போற?" என்று கேட்டு எகத்தாளமாய் சிரித்தான்.
"ஒருதடவை.... நான் ஸ்கூல் படிக்கும் போது நீ எனக்கு ஐஸ்கீரீம் வாங்கி தர்றேன்ன்ன்ன்ன்னு..." என்றவள் இழுவையாய் இழுக்க,
"அய்யோ! தெய்வமே" என்று அலறிவிட்டான் சுகுமார்.
"என்ன மேட்டர்?" என்று சாரதி விசாரிக்க, "எந்த மேட்டரும் இல்ல சார்... அவ ஏதோ உளர்றா" என்ற போதே சுகுமாரின் குரல் நடுங்கியது.
"யாரு...? நான் உளர்றேனா?" என்று சுகுமாரை முறைத்தவள், "நான் சொல்லுவேன்" என்று சாரதியின் புறம் திரும்பினாள்.
சுகுமார் அவளிடம் கெஞ்சலாய் வேண்டாமென்று தலையசைக்க,
"அந்த பயம்" என்று வீரா சமிஞ்சையால் அவனிடம் சொல்ல,
"எதை... இரண்டு பேரும் என்கிட்ட இருந்த மறைக்கிறீங்க" என்று இடையிட்டு கேட்டான் சாரதி.
வீரா உடனே,"அதெல்லாம் ஒண்ணுமே இல்ல... சல்பி மேட்டர்" என்று அவள் சமாளிக்க அப்போதுதான் சுகுமாருக்கு மூச்சே வந்தது.
புறப்படும் முன்னர் அவர்கள் சுகுமாரை திருமணத்திற்கு அழைத்துவிட்டுக் கிளம்ப, சுகுமார் வீராவின் பின்னோடு வந்து எதோ சைகை செய்ய அவள் தாமதித்து நின்றாள்.
"அந்த மேட்டரை மட்டும் சாரதி சார்கிட்ட சொல்லி... என் பொழப்பில மண்ணள்ளி போட்டிறாத தெய்வமே" என்றான் அவன்!
"அய்யே! இதெல்லாம் போய் சொல்லின்னு இருப்பாங்களா... நான் சும்மா உன்னை கலாஞ்சேன்"
"எனக்கு படபடன்னு வந்திருச்சு தெரியுமா?!" என்றவன் பரிதாபமாய் சொல்ல,
"சரி அதை வுடு... நீ மறக்காம கல்யாணத்துக்கு வந்திரனும்... சரியா" என்று சொல்லிக் கொண்டே அவள் முன்னேறிச் செல்ல,
"வராம எப்படி... முதல் ஆளா வந்திருவேன்" என்றான் மகிழ்ச்சியோடு!
வீரா வாசலுக்கு வரவும் சாரதி கார் அருகில் நின்று கொண்டு, "பேசியாச்சா போலாமா?!" என்று கேட்க பின்னோடு இருந்து,
"வீரா" என்ற ஓர் அழைப்பு!
அந்த குரலை அவளை அப்படியே ஸ்தம்பிக்கச் செய்துவிட்டது. அதே நேரம் இதயத் துடிப்பு அபரிதமான வேகத்தில் பெருக அவள் பதட்டத்தோடு,
"காரை...எடுய்யா போலாம்" என்றாள்.
"பின்னாடி யாரோ உன்னை கூப்பிடிறாங்கடி... உனக்கு தெரிஞ்சவங்க போல" என்று சாரதி சொல்ல அவளுக்கு உடலெல்லாம் நடுங்க ஆரம்பித்தது.
"அய்யோ! எனக்கு எவனையும் தெரியாது... நீ முதல்ல வண்டியை எடு" என்றவள் படபடக்க முகமெல்லாம் வியர்த்து வடிய ஆரம்பித்தது.
சாரதி பின்னோடு வந்தவரையும் அவளையும் புரியாமல் குழப்பமாய் பார்க்க,
"வீரா" என்று மீண்டும் அந்தக் குரலின் அழைப்பு... அதுவும் இன்னும் நெருக்கமாய் கேட்க
எதோ அசிங்கத்தை மிதித்தவள் போல அவள் முகம் அசூயையாய் மாறியது. வீராவிற்கு அதற்கு மேல் பொறுமையில்லை. அவளால் அங்கே நிற்க முடியவில்லை. நிற்கவும் முடியாது.
அந்த நொடியே சாரதி கையிலிருந்து கார் சாவியை பறித்துக் கொண்டு துரிதமாய் காரில் அமர,
"வீரா" என்று சாரதி அதிர்ச்சியான அதே நேரம் அவள் எண்ணம் அறிந்து அவனும் ஏறி கதவை மூடும் போதே அந்த கார் விர்ரென பறந்து அந்த இடத்தை விட்டு அகன்றது.
நிதானமற்ற நிலையில் அவள் காரை இயக்கிய காரணத்தால் அது தாறுமாறாய் சாலைகளில் ஓட,
"வீரா... ஸ்லோ டவுன்?" என்று அவன் அறிவுறுத்திக் கொண்டிருக்கும் போதே அவள் சாலை ஓரமாய் இருந்த போஸ்ட்கம்பத்தில் காரை மோதினாள்.