காலை விடிந்தது முதல் வெண்ணிலாவின் வீடே அன்று அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது.
வெண்ணிலாவைச் சூழ அவளது ஒட்டுமொத்தக் குடும்பத்தினரும் நின்று கேள்வியாகக் கேட்டுக் கொண்டிருக்க வெண்ணிலாவோ அமைதியாக தலை குனிந்த வண்ணம் மேகசின் படிப்பதில் மூழ்கி இருந்தாள்.
ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை எல்லாம் மறைந்து போக வெற்றி வெண்ணிலாவின் கையில் இருந்த மேகசினை பறிக்க சலிப்போடு அவனை நிமிர்ந்து வெண்ணிலா எதுவும் பேசாமல் எழுந்து கொள்ள அழகர் அவள் முன்னால் வந்து நின்றார்.
வெண்ணிலா அவரைப் பார்த்துக் கொண்டே
“இப்போ எதுக்கு எல்லோரும் என்னை ஏதோ கொலை பண்ண குற்றவாளியைப் பார்க்குற மாதிரி பார்க்குறீங்க???” என்று கேட்கவும்
“நீ என்ன பண்ணனு உனக்குத் தெரியாதா????” என்று வெற்றி கோபமாக கேட்டான்.
சிரித்துக் கொண்டே அவனருகில் வந்த வெண்ணிலா
“ஏன் இந்த விஷயம் ஆல்ரெடி நான் அறிவிச்சது தானே…இப்போ வந்து புதுசா கேட்குறீங்க….போய் வேலை இருந்தா அதை பாருங்க போங்க” என்று கூறினாலும் அவள் குரலில் இருந்த கலக்கம் மற்றவர்களுக்கு புரியாமல் இல்லை.
“நிலாம்மா நீ யோசிச்சு தான் இதெல்லாம் பண்ணுறியா??? இது உன் வாழ்க்கை விளையாட்டு இல்லமா….ப்ளீஸ் நிலா இப்போ கூட உன் முடிவை நீ மாத்திக்கலாம் கொஞ்சம் யோசிமா…” என்று அழகர் கூறவும்
சிறிது நேரம் யோசிப்பதைப் போல பாவனை செய்தவள்
“நான் நல்லா யோசிச்சுப் பார்த்துட்டேன்பா….நான் சூர்யாவை டிவோர்ஸ் பண்ணப் போறது உறுதிதான்…..நீங்க என்னதான் சொன்னாலும் நான் மாறப் போறது இல்ல…” என்று கூற
“நிலா…..” என்று கோபமாக சத்தமிட்டான் வெற்றி.
வெற்றியின் சத்தத்தில் நிலா மட்டுமின்றி சூழ நின்ற அனைவருமே திடுக்கிட்டு போயினர்.
கோபமாக பேசினாலாவது வெண்ணிலா சிறிது மனம் மாறலாம் என்று எண்ணிக் கொண்ட வெற்றி எப்படியாவது வெண்ணிலாவிற்கு அவள் ஆழ் மனதில் உள்ள எண்ணங்களை தடவை எழுப்ப வேண்டும் என்று நினைத்து கொண்டு கோபமாக அவள் முன்னால் வந்து நின்றான்.
“நீ உன் முடிவில் உறுதியாக இருந்தா இப்போ எங்க முடிவையும் கேட்டுக்கோ….பெரியவங்க பேச்சை மதிக்காம நீ உன் இஷ்டப்படி தான் இருப்பேன்னு பிடிவாதமா இருந்தா உனக்கு இந்த வீட்டில் இனி இடம் இல்ல…நீ உன் இஷ்டப்படி என்ன வேணா பண்ணு…ஆனா அதை இங்க வைச்சு பண்ணதே…எல்லோரோட சந்தோஷத்தையும் இல்லாமல் ஆக்கி தான் உனக்கு நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும்னா நீ தாராளமாக என்ன வேணா பண்ணிக்கோ....இப்போ நீ இங்க இருந்து போகலாம்” என்று வெற்றி கூறவும்
“வெற்றி….”
என்று அனைவரும் அதிர்ச்சியாகி நின்றனர்.
“வெற்றி கொஞ்சம் பொறுமையாக இருப்பா….நீயும் அவளுக்கு மேலே பேசிட்டு இருக்கியே…எதுவாக இருந்தாலும் பேசலாம்....அதை விட்டுட்டு வீட்டை விட்டு வெளியே போக சொல்றதெல்லாம் சரி இல்லை வெற்றி....என்ன இருந்தாலும் அவ உன் தங்கச்சி....” என்று ஆண்டாள் வெற்றியை சமாதானப் படுத்த முயல அவனோ வெண்ணிலாவை முறைத்துக் கொண்டு நின்றான்.
“தங்கச்சிங்குற ஒரே காரணத்துக்காக தான் இவ்வளவு பொறுமையாக இருக்கேன்....இல்லேனா இங்க நடக்குறதே வேற.....நாம எல்லாரும் என்னதான் காட்டுக் கத்து கத்தினாலும் அவ புத்திக்கு ஏறாதுமா….நான் புடிச்ச முயலுக்கு மூணு கால் தான்னு நிப்பா….இப்படியே பேசிட்டே நின்னா சரி வராது..” என்ற வெற்றி வெண்ணிலாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு செல்ல
“லூசாட்டம் நடந்துக்காம கையை விடு வெற்றி….” என்று நிலா தன் கையை விடுவித்து கொள்ள எவ்வளவு முயன்றும் அவள் கூறியதை அவன் காதில் வாங்கவே இல்லை.
"எப்படியாவது உன் மனசுல இருக்குற உண்மையான எண்ணங்களை உனக்கு புரிய வைச்சே ஆகணும் நிலா....ஐ யம் ஸாரி...." என்று மனதிற்குள் வெண்ணிலாவிடம் மன்னிப்பு கேட்டவனாக அவள் கை பற்றி இழுத்து சென்றான் வெற்றி.
வெண்ணிலாவை வாசல் பக்கமாக வெற்றி இழுத்து செல்ல அவனின் பின்னால் ஆண்டாள், அழகர் மற்றும் அபிநயா
"அவளை விடு வெற்றி....." என்று சத்தமிட்ட வண்ணம் ஓட்டமும் நடையுமாக பின் தொடர்ந்து வந்தனர்.
வெண்ணிலா வெற்றியின் முன்னால் வந்து தன்னால் முடிந்த மட்டும் பலம் கொண்டு வெற்றியின் கையில் இருந்து தன் கையை உருவிக் கொள்ள சமநிலை தடுமாறி வெண்ணிலா பின்னோக்கி வீழ்ந்தாள்.
"நிலா....." என்று எல்லோரும் அதிர்ச்சியில் சத்தமிட அவளை கீழே விழாமல் தாங்கிப் பிடித்தவாறு வந்து நின்றான் சூர்யா.
"சூர்யா....." என்று அதிர்ச்சியாக வெண்ணிலா அவனைப் பார்க்க அவளை தூக்கி நிறுத்தி தன் தோளோடு சேர்த்து அணைத்தவாறு வெற்றியை நோக்கி வந்தான் சூர்யா.
"என்ன பண்ணிட்டு இருக்க வெற்றி நீ??? என்னதான் பிரச்சினை இருந்தாலும் இப்படியா நடந்துப்பாங்க??? அவ தான் சரியாக முடிவெடுக்கலனா நீயும் அதே தப்பை பண்ணுறியே வெற்றி...." என்று சூர்யா கேட்கவும் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றான் வெற்றி.
வெண்ணிலா அவன் அணைப்பில் இருந்து விலகி நிற்கவும் அவள் புறம் திரும்பிய சூர்யா
"உனக்கு என் கிட்ட இருந்து என்ன வேணும்??? டிவோர்ஸ் தானே....சரி...." என்று கூறியவன் தன் கையில் இருந்த டிவோர்ஸ் பேப்பரில் கையெழுத்து இட அனைவரும் அதிர்ச்சியடைந்து போய் அவனைப் பார்த்து கொண்டிருந்தனர்.
"சூர்யா என்னடா பண்ற நீ???" என்று அபிநயா கேட்கவும் அவளை பார்த்து விரக்தியாக ஒரு புன்னகை சிந்தியவன் வெண்ணிலாவிடம் அந்த பேப்பரை நீட்டினான்.
வெண்ணிலா திகைத்துப் போய் அவனைப் பார்த்து வண்ணம் நிற்க அவள் கையில் அந்த பேப்பரை திணித்தவன்
"நான் வரேன் அபி, வெற்றி.....ஸாரி அத்தை....ஸாரி மாமா.....உங்க எல்லோரையும் நான் கஷ்டப்படுத்தி இருந்தா தயவு செய்து என்னை மன்னிச்சுக்கோங்க....." என்று விட்டு சென்று விட அந்த இடமே நிசப்தத்தில் உறைந்து போய் இருந்தது.
ஆண்டாள் வாயை மூடிக்கொண்டு அமைதியாக கண்ணீர் வடிக்க அழகர் அவரை அழைத்து கொண்டு தங்கள் அறைக்குள் நுழைந்து கொண்டார்.
வெற்றி வெண்ணிலாவின் அருகில் வந்து
"நீ நினைச்சதை சாதிச்சுட்ட....ஆனா இப்போ கூட நீ தோற்று போய் தான் நிற்குற....சந்தோஷமாக இரும்மா....நான் உன்னை வீட்டை விட்டு அனுப்பப் போறேன்னு சொன்னது கூட உன் மனசுல இருக்குற விஷயங்களை உனக்கு புரிய வைக்கணும்னு தான்....ஆனா இப்போ எல்லாம் முடிஞ்சு போச்சு...." என்று விட்டு சென்று விட அபிநயா யாருக்கு துணையாக பேசுவது எனப் புரியாமல் தவித்துக் கொண்டு நின்றாள்.
வெண்ணிலாவின் அருகில் வந்து அவள் தோள் மீது அபிநயா கை வைக்க அவள் மேல் சாய்ந்து கதறி அழுதாள் வெண்ணிலா.
"ஏன் எல்லோரும் என்னையே தப்பு சொல்றீங்க??? என் மனசுல என்ன இருக்குன்னு யாராவது கொஞ்சமாவது கேட்டீங்களா??? ஆளாளுக்கு பேசிட்டே போறாங்க....நான் சூர்யாவை கோபப்படுத்திப் பார்க்கணும்னு தான் இவ்வளவு பண்ணேன்....ஆனா டிவோர்ஸ் பேப்பரில் சூர்யா சைன் போடுவான்னு நான் நினைக்கல அபி....வழக்கம் போல வந்து திட்டிட்டுப் போவான்னு தான் நினைச்சேன்....ஆனா அவன் நான் வேணாம்னே முடிவெடுத்துட்டான்....என்ன பண்ணுறதுனே தெரியல அபி....நான் தான் எல்லா தப்பும் பண்ணுறேனா....சூர்யா பண்ணுறது எல்லாமே சரியா??? " என்று சிறு குழந்தை போல அழுது கொண்டிருந்த வெண்ணிலாவை பார்த்து அபிநயாவிற்கு என்ன சொல்வது என்று புரியவில்லை.