~14~
தன்னையே பார்த்து நின்ற ஆதிக்கை அங்கே எதிர்பாராதவள் எழுந்த நடுக்கத்தை மறைத்து, “ஹாய் பாஸ்..” என்றாள் ஒற்றைக் கையை மேலே தூக்கி திருட்டு முழியுடன்..
அவளது அழைப்பு மற்றும் செய்கை வியப்பைக் கொடுத்தாலும் அதைப் புறம் தள்ளியவன் ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கி ஆள்காட்டி விரலை அவள் நோக்கி அசைத்து ‘வா’ என்பது போல் அழைக்க, தூக்கிய கையை கீழே போட கூடத் தோன்றாமல் அவனை நெருங்கினாள் மதி.
மதியை எங்கே எனத் தேடி வந்த குழலி, மாப்பிள்ளையுடன் அவள் நின்று கொண்டிருப்பது கண்ணில் பட, வந்த தடம் தெரியாமல் சென்றுவிட்டார்.
ஒற்றைக் கையை மேலே தூக்கி கொண்டு தன் முன்னால் நிற்கும் மதியைக் கண்டவனின் இதழ்கள் சிரிப்பில் நெளிய, அவளோ அவனை இமைக்க மறந்து பார்த்து கொண்டிருந்தாள்.
அவளது பார்வை அவனுக்கே ஒருமாதிரி இருக்க, “யாரையாச்சும் ஹெல்ப்புக்கு கூப்பிடவா..?” என்றான் அவள் முகத்தின் நேரே சொடக்கிட்டு,
அவனது கேள்விக்கு புரியாத பார்வை பார்த்து வைக்க, “இல்ல, இன்னும் எவ்வளவு நேரம் தான் கையை தூக்கிட்டு நிப்ப..அதான் கேட்டேன்..” என்றவனின் இதழ்கள் இப்போது நன்றாய் சிரிக்க..
அவனது கண்களும் சேர்ந்து சிரிப்பதை சில நொடிகள் ரசித்தவள், தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, “ஏன் வேற யாரையோ கூப்பிடனும் நீங்க இறக்கிவிட வரமாட்டிங்களா..?” என்றாள் அவனைப் போலவே ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கி.
அவளது உடனடி சுதாரிப்பில் மெச்சுதலாய் ஒரு பார்வை பார்த்தவன், “போன்’ல என்னமோ சொன்னியே எனக்குச் சரியா கேட்கல, இப்போ சொல்லு..” என்றான் கைகளை மார்பின் குறுக்கே கட்டி,
“அது ஒண்ணுமில்லை பாஸ்..” எனத் தொடங்கியவள் வேகமாய் நிறுத்தி அவனது முகம் பார்க்க, அவளது கலவர பார்வையில்,
“என்ன ஆச்சு மதியழகி..?” என்றான் அவசரமாய்..
இப்போது கூட தனது பெயரை நீட்டி முழக்கும் ஆதிக்கை முறைத்தவள், தனது வலது கையை அவன் புறம் நீட்டி..
“ஹாய்..ஐ அம் மதியழகி..க்ளாட் டூ மீட் யூ பாஸ்..” என்க
சமந்தமே இல்லாமல் உளருபவளை, ‘நீ என்ன லூஸா..’ என்பது போல் பார்க்க, அவனது பார்வையின் அர்த்தம் புரிந்தாலும் தனக்கு வேண்டிய தகவல் வந்தாக வேண்டுமே என்பதால்
“அய்யோ கையை கொடுங்க பாஸ்..” என்றாள் நல்ல பிள்ளையாய்
அவனும் தனது வலது கரத்தை நீட்டி, “ஹாய்..” என்றவனின் கைகளின் உறுதியும் திடமும் அவளுக்கு உரைத்தாலும்
“பாஸ் நேம் சொன்னா நேம் சொல்லனும்னு உங்களுக்குத் தெரியாதா..? பரவாயில்லை இன்னொரு டைம் நாம ட்ரை பண்ணலாம்..” என்றதும் தான் அவனுக்கு உரைத்தது, இவளுக்குத் தனது பெயர் தெரியாது என்பது.
அவனது முகமாற்றங்களை கண்டு கொள்ளாமல் மறுபடியும் தனது வலது கரத்தை சேலையின் முந்தானையில் நன்றாகத் துடைக்க, இப்போது தான் அவனது பார்வை அவளை நிதானமாய் அளக்கத் துவங்கியது.
கைகளை நன்றாகத் துடைத்தவள் கைகளை அவன் புறம் மறுபடியும் நீட்டி, “ஹாய்..ஐ அம் மதியழகி..க்ளாட் டூ மீட் யூ பாஸ்..” என்க
“என் பெயர் உனக்குத் தெரியாதா..?” என்றான் தீர்க்கமான பார்வையுடன்
அவனது பார்வைக்கும் கேள்விக்கும், “ஹி..” எனச் சிரித்து வைத்தவளின் வாய் பசை போட்டது போல ஒட்டிக் கொள்ள அவளது தலையோ வேகமாய் ஆம் என ஆடியது.
அவனுக்கு அவளைப் பார்க்கும் போது எழும் சுவாரசியத்தை என்ன முயன்றும் தடுக்க முடியவில்லை.
ஆடிக் கொண்டேயிருந்த அவளது தலையை ஒற்றைக் கையால் பிடித்து வைத்தவனுக்கு அவளை வம்பிழுக்கும் ஆசை எழ,
“நல்லது தான்..என் பெயர் தெரியாததும் ஒருவிதத்தில் நல்லது தான்..நீ என்னை மாமா இல்ல அத்தான்னு கூப்பிடு..” என்றான் சிரிக்காமல்
அவனது பேச்சில் ஆவென அவள் வாய்பிளக்க, “டோர் க்ளோஸ்” என்றவன் இருவிரல் கொண்டு அவளது வாயை மூடிவிட,
“புருஷன் பெயர் சொன்னா அவனோட ஆயுசு குறைஞ்சிடுமாம்..சோ நீ மாமானே சொல்லு..” என்றான்
“அப்போ மாமா சொன்னா..?” என்றவளும் சிரிக்காமல் சந்தேகம் கேட்க, அவளது முகத்தின் பாவனைகள் வைத்தே அவள் நம்பிவிட்டாள் என்பதைக் கண்டு கொண்டவன்
“அப்போ ஆயுசு கூடும்..” என்றான் உண்மை போல
வேகமாய் மண்டை ஆட்டி கொண்டவள், “ஓ..” என்றவளுக்கும் பேச வந்த விசயம் மறந்து போயிருக்க, அவளின் மனதைச் சரியாக கணித்து வைத்த ஆதிக்கின் இதழில் அழகான சிரிப்பு குடி கொண்டது.
“சரி மதியழகி..நான் கிளம்பட்டுமா..?” என்றவனை இப்போது முறைத்தவள்..
“ப்ளீஸ்..என்னோட பெயரை நீட்டி முழக்காதீங்க..” என்றாள் பாவனையாய்
அவளின் ரியாக்சனில் சிரிப்பு வர, “நீ எப்போ உன் பெயரை சரியா சொல்றீயோ அப்போ உன் பெயரை நீட்டி முழக்குறத நான் விடுதேன் ஓகேவா..?” என்றவனுக்கும் இப்போது திருமணம் வேண்டாம் எனத் தான் எடுத்திருந்த சத்தியங்கள் மறந்து போயிருந்தது.
அவனிடம் சரியென தலையசைத்தவள் எதையோ சிந்திக்கும் போதே, “அப்புறம் இன்னொன்னு புருஷன் ஆகப் போறவன எதுவும் கூப்பிடாம பேசுனால் எனக்கு ஒண்ணும் ஆகாது ஆனா பாரு பொண்டாட்டி ஆகப் போறவள நாய் துரத்துமாம்..” என்றான்
இவ்வளவு நேரம் வெறுமனே சரியென்று தலையசைத்துக் கொண்டிருந்தவள் அவனது கடைசி வார்த்தைகளில், “என்ன சொல்லுறீங்க..” என ஆரம்பித்து
“என்ன சொல்லுறீங்க மாமா..” என முடிக்க
அவனும் சிரிக்காமல், “கரெக்ட் மதியழகி..சரியா பாயிண்டை பிடிச்சுட்ட..இப்படி தான் கூப்பிடனும்..பேச ஆரம்பிக்கும் முன்னாடியும் பின்னாடியும் மாமா இல்ல அத்தான்னு சேர்த்துகோ அப்புறம் பாரு ஊருல ஒரு நாயும் உன்னைத் துரத்தாது..” என்றவனிடம் சரியென வேகமாய் சொன்னவள்
“மாமா, இனி இப்படியே கூப்பிடுறேன் மாமா..” என ப் பயபக்தியாய் அவள் உரைக்க, இதற்கு மேல் இங்கிருந்தால் சிரித்துவிடுவோம் என்பதை உணர்ந்தவன்,
“சரி மதியழகி..நான் கிளம்புறேன்..” என்க
“மாமா போயிட்டு வாங்க மாமா..” என்றவளும் கையசைத்து அங்கிருக்கும் இருக்கையில் தொப்பென்று அமர்ந்தாள்.
அவளிடம் விடைபெற்றவனின் கார் ஹாஸ்பிட்டல் நோக்கிப் பறக்க, அவனது உதட்டில் உறைந்த சிரிப்பில் தர்மர் அதிசயித்துத் தான் போனார்.
அவன் கிளம்பி அரை மணி நேரம் கழித்து அவளது அருகே வந்த குழலி, “மதி உனக்கு சாரீஸ் எல்லாம் வாங்கிட்டேன்..சுடிதார் நீ வந்து செலக்ட் பண்ணுறீயா..?” என்றவரிடம்
“நோ மாம்..போதும்..சுடிதார் இருக்கு வேணும்னா நான் அப்புறமா வந்து வாங்கிக்கிறேன்..”
அவரும் மகளிடம் சரியென தலையசைத்து அவளையும் அழைத்துக் கொண்டு வேணியைக் காண மருத்துவமனை நோக்கி பயணம் செய்தனர்.
காரில் போகும் போது தான், ‘அவனிடம் பேச வேண்டியதைப் பேசவில்லை..” என்பது புரிந்தது.
அதற்கும் அவன் மேலே தனது கோபம் மொத்தமும் திரும்ப, “உன்னை சும்மா விடமாட்டேன் டா..” என நினைத்தவள் அதையே மனதில் பதிய வைத்துக் கொண்டாள்.
திருமணத்திற்கு விகாஷும் மித்ராவும் உடையெடுக்க அழைக்க, வரவில்லை என மறுத்து விட்டாள் ரேகா.
நேற்றைக்கு ராஜ் வாரி இறைத்துச் சென்ற வார்த்தைகள் மொத்தமும் அமிலமாய் உடல் முழுவதும் எரிய, மனமோ அவன் தன்னை எப்படி தவறாக எண்ணலாம் என்பதில் நிலைகுத்தி நின்றது.
‘எத்தனை முறை நீ வேணும்னு உன் பின்னாடி நாயா சுத்தியிருப்பேன் அப்போ எல்லாம் எங்க டா போன..’ ஊமையாய் உதடுகள் ராஜிடம் கேட்க
மனமோ,”அவன் உனக்கு வேண்டாம்..” என்பதில் நிலையாய் நின்றது.
தான் அழும் போது கூட அவன் தன்னை நிமிர்ந்து பார்க்கவில்லை, என்பதில் தொடங்கி நேற்று அவன் பேசியது, இதுநாள் வரையில் அவன் நிராகரித்தது என அனைத்தும் ராஜிற்கு எதிராய் நிற்க
தனக்கு அவன் வேண்டாம் என்ற முடிவை சாதாரணமாய் எடுத்துவிட்டவளால் அதைச் செயல் படுத்தத் தான் தெரியவில்லை.
இன்னும் ஒரு நாள் தான் திருமணத்திற்கு மீதமிருக்கும் நிலையில் தான் ஏன் அவனைப் பற்றி நினைக்க வேண்டும் என்ற நினைப்பு எழ
மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாத தனது நிலையை எண்ணி கண்ணீர் வடித்தாள் ரேகா.
இனி அவனைத் தன் வாழ்நாளில் சந்திக்க கூடாது என்ற உறுதியுடன் பல நினைவுகளை மறக்காமல் புதைக்கத் தயாரானாள்..
புதைத்து வைத்தவற்றில் சில விருட்சமாய் வளரும் என்பது தெரிந்திருந்தாள் அதைச் செய்திருக்க மாட்டாலோ?
வேணியுடன் மருத்துவமனையில் இருந்து ராஜிற்கு என்ன செய்வது என ஒன்றும் புரியவில்லை.
வேணியிடம் சொல்லலாம் என்றாள் அவர் எதையும் காது கொடுத்துக் கேட்காமல் எதுவாகயிருந்தாலும் ஆதிக்கிடம் பேசிக் கொள் என்றுவிட
வழிதெரியாத காட்டிற்குள் சிக்கிக் கொண்டவனைப் போல் அமர்ந்திருந்தான்.
காலையில் இருந்து அழுது வடியும் அவனது முகத்தைக் காண சகிக்காத வேணி..
“ராஜ் குட்டிமா..” எனப் பாசமாக அழைக்க
அவரை முறைத்தவன், “என்ன..?” என்றான் கோபமாய்
“அம்மா மேல கோபமா இருக்கியா செல்லம்..?” என்ற வேணி அவனது தாடையை தொட்டுக் கொஞ்ச,
அவரது கையை வெடுக்கெனத் தட்டிவிட்டவன், “இப்போ உங்களுக்கு என்ன வேண்டும்..” என்றான் அதட்டலாய்..
அவனின் கோபத்தை தூசி போல் தட்டிவிட்டவர், “உனக்கு வர வர இந்த அம்மா மேல பாசமே இல்ல டா..” என்றார் மூக்கை உறிஞ்சி..
தன்னிடமே அவரது நடிப்பைக் காட்டும் வேணியை முறைத்தவன், “ஏதாச்சும் திங்க வேணுமா..?” என்றான் அவரது நாடி பிடித்து..
அவனது சரியான கண்டுபிடிப்பில் ஒரு நிமிடம் கண்கள் மின்னி மறைய முயன்று முகத்தைச் சீர் செய்தவர், “என்ன டா அம்மா உன்னைப் பாசமா கொஞ்சுனா இப்படி தான் அசிங்கப்படுத்துவியா..” என அவன் முகம் காண
அவனோ வேணியைக் கண்டு கொள்ளாமல் ரேகாவின் நினைப்பில் உழன்றான்.