Very interesting.. can you give bigger updates.. pleeeeeeaaaassseeeeee~26~
அறைக்குள் வந்தவன் மொபைலை எடுத்துப் பார்க்க, அதில் புதிய எண்ணில் இருந்து வந்த மெசேஜை திறந்து பார்த்தவனின் முகம் கோபத்தில் தகித்தாலும், மனதின் ஓரத்தில் சிறு துளியாய் புரியா உணர்வு வந்து சென்றது..
இருந்த கோபத்தோடு மறுபடியும் அந்த மெசேஜை படித்தவனின் கண்கள் இறுதியாய் அவள் அனுப்பியிருந்த , “பை Mrs.மதியழகி ஆதிக் வர்மன்” என்ற பெயரிலே நிலைத்திருந்தது..
“அவளோட தேவைக்கு நம்மல யூஸ் பண்ணிக்க வேண்டியது..” அலுப்பாய் வார்த்தைகளைத் துப்பியவன், உடை கூட மாற்றாமல் கட்டிலில் படுத்துவிட்டான்..
கண்களை மூடி கட்டிலில் புரண்டு புரண்டு படுத்து கடிகாரத்தை நிமிர்ந்து பார்த்தாலும், அது இவன் அவசரத்துக்குச் சுற்றுமா என்ன..?
“மதி வந்தா நமக்கு என்ன வராட்டி நமக்கு என்ன நீ தூங்கு டா ஆதிக்..?” பலமுறை தனக்குத் தானே சொல்லிக் கொண்டவனுக்கு தூக்கமும் வந்தபாடில்லை..மதியின் நினைவுகளும் போனபாடில்லை..
“எதற்காக வருகிறாள்? ஒருவேளை விவாகரத்து கேட்டு வருகிறாளா..?” இப்படியாய் பல கேள்விகள் வரிசைக் கட்டி நிற்க, வேகமாய் ஒரு நம்பருக்கு அழைப்பு விடுத்தான்..
எதிர் முனையில் அழைப்பு எடுக்கப்பட்டதும் அவர்களிடம் மதியின் வருகையைப் பற்றி கேட்டவனின், புருவம் நெளிந்து இதழில் ஒரு இகழ்ச்சி புன்னகை தோன்றி மறைந்தது..
விமானத்தில் ஏறி அமர்ந்த மதிக்கும் படபடப்பாய் தானிருந்தது..ஆதிக்கை எதிர்கொள்ளும் துணிவு நிச்சயமாய் இப்போது அவளுக்கு இல்லை என்றே கூறலாம்..
‘எதில் தவறினேன் நான்..’ ஆதிக்கை கண்ட நாள் முதல் நேற்று நடந்தது வரையிலும் நினைத்துப் பார்த்தவளுக்கு அவள் மீதிருக்கும் தவறு புரியவேயில்லை..
இத்தகைய சிந்தனையோடு சென்னை விமானநிலையத்தை மதி அடைந்திருக்க, ஆதிக் வீட்டில் இருக்கும் மற்றொரு காரில் பறந்து கொண்டிருந்தான்..
ஆதிகாலையில் சாலை வெறிச்சோடியிருக்க, அவளைக் காண போகிற ஆவலோ கோபமோ எதுவோ ஒன்றை காரில் காட்டி விரட்டிக் கொண்டிருந்தான் ஆதிக் வர்மன்..
வேகம் வேகம்..வேகம்..அத்தனை வேகம்.. ஒரு மணி நேரத்தில் அடைய வேண்டிய இடத்தை அரை மணி நேரத்தில் அடைந்தளவிற்கு வேகம் தான்..இவ்வளவு ஏன் பின்னே துரத்தி வந்த டிராபிக் போலீசைக் கூடக் கவனிக்காத வேகம்..
விமான நிலைய என்ட்ரென்ஸில் தனது வேகத்தைக் குறைத்தவன் காரை ஓரமாய் பார்க் செய்துவிட்டு வெளியே போடப்பட்டிருந்த இருக்கையில் அமர, அவளது ஃப்ளைட் ஒரு மணி நேரம் தாமதமென அறிந்தவனுக்கு இப்போது எரிச்சல் மண்டியது..
ஒரு மணி நேரம் என்பது இரண்டு மணி நேரமாய் கடக்க, அயர்வாய் தனது மொபைலை சட்டைப் பையில் வைத்தவன், திரும்பிப் பார்க்க தூரத்திலே ஒயிலாய் நடந்து வந்து கொண்டிருந்தாள் மதியழகி..
ஆறு மாதத்திற்கு முன்னே பார்த்ததைவிட இன்னும் சிறுத்து போயிருந்தவளின் நடையில் எப்போதும் இருக்கும் துள்ளல் இல்லை..
மனதில் எதையோ போட்டு குழப்பிக் கொண்டிருக்கிறாள் என்பது அவளது முகத்தில் இருந்தே தெரிய, கழற்றி வைத்திருந்த கூலர்ஸை அணிந்து கொண்டவன் இப்போது நிதானமாய் அவளை மேலிருந்து கீழாய் நோட்டம்விடத் தொடங்கினான்..
மதியின் கால்கள் தணிச்சையாய் ஆதிக்கின் புறம் திரும்பி, அவனை நோக்கி தனது வேக எட்டுகளை எடுத்து வைக்க,
‘தன்னை இவள் கண்டு கொண்டாளா..?’ என்றக் கேள்வியில் கோபம் கொஞ்சம் தணிந்தது..
இவனது இருக்கைக்கு அருகே வந்தவள், பேக்கை இவனது பக்கத்து இருக்கையில் வைத்துவிட்டு அதற்கு அடுத்ததாக அமர்ந்தவளின் விழிகள் இப்போது விமான நிலையத்தையே அலசியது…
அவளது தேடலான பார்வையில் இருந்தே தன்னை அவளுக்கு அடையாளம் தெரியவில்லை என்பதில் மட்டுப்பட்டிருந்த கோபம் மேலெழும்ப, இன்னும் தேடட்டும் என நினைத்தவன் அவளை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே உட்கார்ந்துவிட்டான்..
அவனுக்குத் தெரியும் எப்படியும் தனது எண்ணுக்கு அழைப்பு விடுப்பாள் என, அதனால் தனது எண்ணை சைலண்ட்டில் போட்டவன் அவளை நோட்டம் விட்டவாறு அமர்ந்து கொண்டான்..
ஆதியின் எண்ணுக்கு அழைப்பு விடுத்துப் பார்த்தவள், அது எடுக்கப்படவில்லை என்றதும் விகாஷிற்கு தனது அழைப்பை விடுத்தாள் மதியழகி..
அந்தப் பக்கம் விகாஷ் தர்மரின் எண்ணைக் கொடுத்திருப்பான் போல, இவள் தனது தந்தைக்கு அழைப்பு விடுப்பதைக் கண்டவன், இப்போது இருக்கையிலிருந்து எழுந்து, அவளை நோக்கி இரண்டு எட்டுகளை எடுத்து வைத்து, சொடக்கிட்டு அழைத்தான்..
அவனது அழைப்பில் விழியுயர்த்தி பார்த்தவளை, ஆள் காட்டி விரல் அசைத்து பின்னே வருமாறு செய்கை செய்தவன் முன்னே சென்றுவிட, அவனது செய்கையில் இருந்தே அவனைக் கண்டு கொண்டவள் உறுதிப்படுத்திக் கொள்ள பின்னே பையை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு ஓடினாள் மதியழகி..
ஓடும் வழியெங்கும் அவனது அலட்சியம் அவளது கோபத்தைக் கிளற, ‘என்னையா கண்டுக்காம போற’ மனதினுள் கருவியவள் அவன் வண்டியில் ஏறி, டிக்கியின் கதவைத் திறந்த பின் ஒரு பையை உள்ளே வைத்தவள் மற்றொரு பையை தூக்க முடியாதது போல் பாவ்லா காட்டிக் கொண்டிருந்தாள்..
கால் மணி நேரம் போயும் அவள் வராததைக் கண்டவன், வண்டியில் இருந்து வெளியே இறங்கி வந்து பார்க்க, அவளோ அவனை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே நடிப்பைத் தொடர,
‘உச்ச்’ இதுவேறா என்ற எரிச்சலை அப்பட்டமாய் முகத்தில் காட்டியவன், கையசைவால் அவளை விலகச் சொல்லியவன், கனமாய் இருக்குமோ என்பதில் பலம் போட்டுத் தூக்க அதுவோ காற்றாய் இருந்தது..
அவளது நடிப்பில் அதுவும் வந்ததும் வராததுமாய் தன்னை முட்டாளாக்கிய அவளை முறைக்க நிமிர்ந்து
பார்க்க, அவளோ ஆளுக்கு முன்னே வண்டியில் ஏறி அமர்ந்தது மட்டுமில்லாது ஹாரனை அடித்து வெறுப்பேற்றினாள்..
மீண்டுவிட்ட அவளது விளையாட்டில் பல்லைக் கடித்தவன், டிரைவர் சீட்டில் வந்து அமர்ந்து வண்டியைக் கிளப்ப, அவளோ அவனையே எடைபோடும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள்..
அவளது அடிக்கும் பார்வையை ஒரு கட்டத்திற்குள் மேல் தாங்க முடியாதவன், வண்டியை ஓரமாய் நிறுத்த அப்போதும் அவனை என்னவென பார்வை பார்த்து வைத்தாள்..
தலைமுடியை அழுந்தக் கோதியவன் அவளிடம் பேச முற்படும் போது, அவனது அலைபேசி தனது இருப்பைக் காட்ட, குழலி தான் அழைத்துக் கொண்டிருந்தார்..
அவளிடம் தனது பேசியை நீட்டியவன், கண்களால் பேசு எனச் செய்கை காட்ட, கை நீட்டி அவனிடமிருந்து வாங்கியவள்,
“சொல்லுங்க மாம்..” என்றாள்
“மதியழகி..உன் ப்ளூ பேக்ல ஒரு சின்ன பர்ஸ் இருக்கும் அதை மாப்பிள்ளை கிட்ட கொடுத்திருங்க..” என்றவருக்கு அவள் சரியென பதிலளித்தவள், ஆதிக்கிடம் போனைக் கொடுக்க
“சொல்லுங்க அத்தை..” என்றான் அவளிடமிருந்து வாங்கி
“தம்பி..மதி இப்போ உங்க கிட்ட ஒரு பையை கொடுப்பா..அதோட மதிப்பு என்னன்னு தெரியாம தான் இப்படி பண்ணிட்டா..எப்போ நீங்க அவளை உங்க சரிபாதியா மன்னிச்சு ஏத்துக்கிறீங்களோ அப்போ அதை அவகிட்ட கொடுங்க..நீங்க கொடுப்பீங்கன்னு நம்பிக்கை இருக்கு மாப்ள..” கோர்வையாய் பேசியவரின் பேச்சில் இருந்தே அவர் எதைப் பற்றி பேசுகிறார் என்பதை மதி கையில் திணித்த பையின் அளவில் இருந்தும் அவளது வெற்று கழுத்தில் இருந்தும் புரிந்து கொண்டவனுக்குத் தான் எப்படி உணர்கிறோம் என்றே தெரியவில்லை..
கோபத்தில் வார்த்தைகள் சிதறுமென்பதை உணர்ந்தவன், வண்டியைக் கிளப்பி பீச் சாலையில் பயணித்தான்..
அவளுக்கு அவனது இறுக்கம் புரிந்திருக்க வாய்ப்பில்லை..பீச்சின் அருகே காரை நிறுத்தியதும், “ஹய்
பீச்சா..?” குதுகலமாய் உச்சரித்தவள், காரின் ஜன்னலை இறக்கிவிட
“மதியழகி நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்..” என்றான் கடலை வெறித்த வண்ணம்..
“சொல்லுங்க ஆதிக்..” அவனது முகத்தைக் காணும் வகையில் திரும்பி அமர்ந்தாள்…
“எதுக்கு வந்த..?”
“அதை எதுக்கு உன்கிட்ட சொல்லனும்..” அலட்சியமாய் அவள் கேட்டு வைக்க,
“போகும் போது மட்டும் எதுக்கு சொல்லிட்டு போன..?”
“அது…நீ என் புருஷன் சோ சொல்லிட்டு போனேன்..” அவளது பதிலில் ஆதிக்கின் உதடு நக்கலாய் வளைய
“ஹே இப்போ நீ எதுக்கு சிரிக்கிற..?” கோபமாய் அவனது கையைப் பிடித்து கேட்டவளை, முறைத்துப் பார்த்தவன் கைகளை தன்னிடமிருந்து விலக்கி விட்டவாறு,
“இந்த தொட்டுப் பேசுற வேலை என்கிட்ட வேண்டாம் மதியழகி..” என்றவனின் குரலில் கோபம் மிதமிஞ்சியிருந்தது..
‘தொடாதே..’ என்றவன் சொன்னப்பின் அப்படி தான் தொடுவேன் என்றவளது ஈகோ பதில் கொடுக்க முனைய,
“ஏன் நான் தொட்டா கரைஞ்சிடுவியா..?” என்ற கேள்விக்கு அவன் பதிலளிக்க விரும்பவில்லை என்பது அவனது மூடிய விழிகளில் இருந்தே தெரிந்தது..
“மதி லிசன் மீ..” என்றவன் இப்போதும் கண்களைத் திறக்கவில்லை..
“மதி, எதுக்கு வந்த..?” என்றவன் அதே கேள்வியைக் கேட்டு வைக்க
“எதுக்கு நான் இங்க வரக்கூடாதா..?” என்றவளது குரல் சற்றே உள்ளே இறங்கியிருந்தது.
“ஆமாம் வரக் கூடாது தான்..எந்த உரிமையில நீ இங்க வந்த..?”உறுத்து விழித்தவன் அவளைப் பார்த்து கேட்டு வைக்க,
“என்ன உரிமை என்கிட்ட இல்ல..?” அவளும் அவனைப் போலவே உறுத்து விழித்துக் கேட்க
அவன் பையினுள் கைவிட்டு அவள் கொடுத்த பையில் இருந்த தாலியை எடுத்தவன் அவளது முகத்தின் நேரே நீட்டி, “இதைப் பார்த்துட்டு சொல்லு உனக்கு இங்க என்ன உரிமை இருக்குன்னு..?” என்றான்..
தனது அறையில் பெட்டிக்குள் எனக் கட்டம் கட்டி தேடிய தாலி அவனது கைகளில் பார்த்ததும், திரு திருத்து விழித்தவளுக்கு அத்தாலியின் புனிதம் சுமதியின் வாயிலாய் அறிந்திருந்தாள்..
தவறிழைத்த குழந்தையாய் அவள் விழிப்பதை சட்டை செய்யாதவன், “நான் வேணாம்னு தான இந்தத் தாலியை கழட்டி வீசிறுக்க..?” அவனது கேள்வியில் இல்லை என்பது போல் தலையசைக்க, அதை உணராதவன்
“இங்க பாரு மதி..இப்போ இங்க என்ன ப்ளான்ல வந்திருக்க எனக்குத் தெரியாது..பட் என்கிட்ட எப்பவும் தள்ளியே இரு...அன்ட் ஒன் மோர்..இதுக்கு அப்புறம் உன்னால என் குடும்பத்துக்கோ என் அம்மாவுக்கோ ஏதாச்சும் ஆச்சு...இந்த உலகத்துல நீ எந்த மூலைக்கு போனாலும் உன்னை..” ஒற்றைக் கை நீட்டி எச்சரித்தவன் அமைதியாய் காரைக் கிளப்ப முயல
அவனது கையைச் சுரண்டியவள், “கோபமா இருக்கியா..?” எனக் கேட்டவளைப் பார்த்து பல்லைக் கடித்தவன்..
“ச்சீ..என்னைத் தொடாத..” வெறுப்பாய் உச்சரித்தவனின் இதழ்களோ அடுத்தவள் சொன்னதில் சிரிப்பால் வளைந்தது..
ஆதி சுட்டெரிப்பான்…