ரொம்ப கஷ்டம்Vanakkam மக்களே,
இது கொஞ்சம் சோகமான எபி.படிச்சுட்டு அப்படியே போயிடாமா, நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு கமெண்டில் சொல்லுவீங்களாம்.
-அனிசிவா
எவனோ ஒருவன் -6
தாரிணி கண் முழித்துப் பார்க்க,சின்னவனைக் காணவில்லை. கதவு வெளிப்புறமாய் பூட்டியிருந்தது.
பதறிப் போனாள்.இப்படியா ஒருத்தி தூங்குவது! எங்கே போயிருப்பான்?
பரபரப்பாய் ஒவ்வொரு அறையிலும் போய் தேட,
கதவை திறந்துக் கொண்டு வீட்டினுள் வந்தனர் அப்பா & மகன்.
“அம்மா கிட்ட சொல்லாம எங்கே போன மித்து?உன்னை தேடுவேன்ல”அவனை ஆதரவாய் அணைத்துக் கொண்டே பக்கத்தில் நின்றிருந்த
சரணை முறைத்தாள்.
பிள்ளையை கைநீட்டிவிட்டோம் என்ற குற்ற உணர்வும் இப்போது அவளுக்கு சேர்ந்துக் கொண்டது!
“இங்கே பாருங்க,நான் நோட் எழுதி வச்சிட்டு தான் போனேன்,அப்பா கூட.”
அவள் தலைமாட்டில் குட்டியாய் ஒரு காகிதத்தில்
‘கோயிங் டு பார்க் வித் அப்பா’.கவனிக்காமல் விட்டது அவள் தவறு.
“எல்லாத்துலையும் அவசரம்”
முணுமுணுத்த சரணை அவள் நிமிர்ந்து பார்க்குமுன் இடத்தை காலி செய்திருந்தான்.
எப்படியாவது இவனை அனுப்பிவிடலாம் என்ற எண்ணம் இப்போது காணாமலேயே போய்விட்டது.அந்த அளவுக்கு அவளுக்கு பிடிக்கவில்லை என்றாலும் அந்த வீட்டில் ஐக்கியமாகி விட்டான்.
‘அற்புதாவின் திருமணம் முடியட்டும் இவன் கதையை ஆரம்பிக்கலாம்!’
கண்ணனிடம் போனில் அற்புதா தன் சம்மதத்தை தெரிவித்திருந்தாள்.
“உங்க அம்மா அப்பாவுக்கு இதில் சம்மதம் தானா,கண்ணன்?”
“ஆமா அற்புதா!”
அவள் மேல் இரக்கப்பட்டு அவன் இந்த திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறான் என்பதாக அவளுக்கு தோன்றியது.
“இப்ப காலேஜ் கிளம்புறேன்,அப்புறம் பார்க்கலாமா?”
அவனும் தயங்கியபடி,
“வீட்டுக்கு வாயேன் சாயந்திரம்,அம்மா உன்னை பார்க்கணும்னு சொன்னாங்க”
இத்தனை சீக்கிரம் அழைப்பான் என்று அவளும் எதிர்பார்க்கவில்லை.இந்த தாரிணி அங்கென்றால் உடன் வர மாட்டாளே!
“வந்து… தாரிணி வர யோசிப்பா!நான் பேசிட்டு சொல்றேனே”
அன்று மாலை, ‘மித்ரன் பார்ம்ஸ்’ போனவள் தாரிணியிடம் விஷயத்தை சொல்ல,
“இந்த பாரு டி, நான் வர மாட்டேன்.அவங்க என் இடத்துக்கு வந்தா எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை”
“இதை நீயே சொல்லிடு!உன் வீட்டுக்கு வரணும்னா நீ தான் அவங்களை அழைக்கணும்!”
‘அடிப்பாவி!
மாமியார் வீட்டுக்கு சப்போர்ட்டை பாரு!
“மத்தபடி நீ என்னை எங்க வர சொல்றியோ அங்க வந்து கழுத்தை நீட்டுறது மட்டும் தான் என் வேலை.மத்ததை எல்லாம் நீயே பார்த்துக்கோ!”
‘ஓஹோ, ஒரே நாளில் உன்னை மடக்கிட்டானா என் அண்ணன்!’
“நேத்து யாரோ வேற மாதிரி பேசினாங்க!?அந்த மகராசியை நீ பார்த்த?”
சட்டென்று தாரிணியிடமிருந்து பார்வையை தழைத்தவள்,
“உன்னை...அப்புறம் வச்சிக்கிறேன்.நான் இப்ப கிளம்புறேன்”
வெகு நாட்களுக்கு பிறகு மனமார சிரிக்கிறாள் அற்புதா.இன்னமும் தாமதம் கூடாது.யோசிக்க ஆரம்பித்தாள் தாரிணி.
தன் பெற்றோரை பார்த்து வருடங்கள் இருக்கும்.பேரனை மட்டும் வாரம் ஒருமுறை அழைத்துக் கொள்வார்கள்.அவன் போய் இரண்டு நாள் தாத்தா, பாட்டி,மாமாவுடன் ஆட்டம் போட்டுவிட்டு வருவான்.
அவனை அவள் இல்லத்திலிருந்து அழைப்பது டிரைவர் தாத்தாவின் வேலை.தாரிணியின் சிறுவயதிலிருந்து அவர்கள் வீட்டில் வண்டி ஓட்டிக் கொண்டிருப்பவர்.
‘சின்னவரை கூப்பிட இப்ப வரட்டுமா தாரிணி மா?’
‘இப்ப அவரை கொண்டு வந்து விடலாமா மா’ அவளிடம் இந்த இரண்டு வாக்கியத்தை தவிர மனுஷன் சமீப நாட்களில் எதையும் பேசவும் மாட்டார்.
என் முதலாளி வெறுப்பவர்களை நானும் வெறுக்கிறேன் என்ற அவரின் மனோபாவம் அவளுக்கு தாமதமாகத் தான் புரிந்தது.
பல கிலோமீட்டர்கள் பயணம் செய்து விட்ட அவள் சிந்தனைகளின் ஊடே அவளும் இப்போது தன் வீட்டிற்கு வந்திருந்தாள்.யாரை முதலில் அழைப்பது என்று யோசித்து முதலில் கண்ணனை அழைத்தாள்.
மித்து குட்டியிடம்,
“மாமா டா ,பேசு”என்று தர,
“மாமா நான் மித்து.இந்த வீக் எந்த ஆத்துக்கு போலாம்?...ஃபால்ஸா,ஹைய்யா ஜாலி…”
“போனை கொடுத்ததும் ப்ளானிங்கா...பொடியா, குடுறா…”
“மா...மா...வெயிட்” அவனின் மறுப்பை சட்டை செய்யவில்லை.
“கண்ணா நான் தாரிணி பேசுறேன்!”
“சொல்லு”
“கல்யாண விஷயம் பத்தி பேச நீங்க எல்லாரும் என் வீட்டுக்கு வாங்க”
நீண்ட அமைதிக்கு பிறகு,
“எனக்கு பிரச்சனையில்லை, அம்மா பா பத்தி தெரியலை”
“அடுத்து அவங்ககிட்ட தான் பேச போறேன்,நீயும் சமாளிச்சு கூப்பிட்டு வா.வச்சிடவா?”
“நல்லா இருக்கியா டி”
யாரும் அவளை கேட்டதில்லை இந்த சில வருடங்களில்!இப்போது தமையனின் இந்த கரிசனம் கூட அவளுக்கு பிடிக்கவில்லை.
“நான் அற்புதாவோட ஃபிரண்டா மட்டும் தான் உங்கிட்ட பேசிட்டு இருக்கேன், வைக்கிறேன்”
இருவரின் மனமும் கனத்து போனது.அந்த பாச போராட்டத்தை சற்று ஓரங்கட்டியவள்,
அடுத்த போன் தன் அன்னை சாந்திக்கு செய்தாள்.
மித்து போட்டான் ‘பர்ஸ்ட் பாலை’ வழக்கம் போல்!
“பாட்டி எனக்கு அந்த சாதி குழம்பு வேணும்,வித் சிப்ஸ்”
‘அடேய் அது சாதி இல்ல டா சொதி!’
தாரிணி செல்லமாய் அவன் தலையில் தட்டியிருந்தாள்.
எதிர்பக்கம் சாந்தியும் நகைத்துக் கொண்டிருந்தாள் பேரனின் பேச்சில்.
இதுதான் சரியான நேரம் என்று போனை வாங்கிய தாரிணி,
“நான் அற்புதா ஃபிரண்ட் தாரிணி பேசுறேன்.கல்யாண விஷயமா பேச நீங்க உங்க குடும்பத்தோட என் வீட்டுக்கு வரணும். என் ஃபிரண்டுக்கு அம்மா அப்பா கிடையாது,அதனால்…”
‘நீயும் தானடி என் குடும்பம்’
சாந்தியின் மனம் சொன்னாலும் அதனை வெளிக்காட்டாது,
“சரி மா,கண்டிப்பா வரோம். உன் பேர் என்ன மா சொன்னே , சரியா கேட்கலை”
‘ஜானகி பொண்ணுன்னு அடிக்கடி என் கிட்டையே நிறுபிக்கிற சாந்தி!’
“தாரிணிங்க”
“சரி தாரிணி, நல்ல நேரம் பார்த்திட்டு உங்களுக்கு சொல்றேன்”
போனை வைத்து விட்டு இருவரும் தங்கள் பேச்சை நினைத்து சிரித்துக் கொண்டது அவர்கள் இருவருக்குமான ரகசியம்!
என்னவானாலும்,இன்று சாந்தியின் செய்கையால் எதுவோ ஒன்று உடைந்தது தாரிணியின் உள்ளுக்குள். அதன் பெயர் ஈகோவாம்!!
——
“எனக்கென்னவோ அந்த பையனை பார்த்தா ஒரு நல்ல அபிப்பிராயமே வரலை தாரிணி.அற்புதாவோட அப்பாமா கொஞ்சம் நிதானமா இந்த கல்யாணத்தை நடத்தி இருக்கலாம்”
“நீங்க சும்மா இருங்க மா.நல்ல வேலையில் இருக்கார்,பண்பா பேசுறார்.அற்புதாவே ஒத்துகிட்டு கல்யாணம் செஞ்சியிருக்கா, சும்மா ,சம்மன் இல்லாம ஆஜர் ஆகிட்டு!”
ஆனால் சாந்தியின் மனதில் தோன்றிய ஐயம் கூடிய விரைவில் நிஜமாகியது.
அடிக்கடி அற்புதா தன் பெற்றோர் வீட்டில் வந்து இருக்க ஆரம்பித்தாள். தாரிணி போய் தோழியைப் பார்த்தாலும் அவளிடம் ஒழுங்கே முகம் கொடுத்து பேசுவதில்லை.எந்நேரமும் அவள் முகத்தில் ஒரு சோகம் தாண்டவமாடியது.
“உன்னை நல்லா பார்த்துக்குறாரா அற்பு?”
“ம்ம் ஆமா தாரிணி!”
வாய் சொன்னதை பொய் என்று சுட்டிக் காட்டியது அவள் கண்கள்.தாரிணிக்கு தெரிந்துவிட்டது என்னவோ பெரிய பிரச்சனை என்பது!
தாரிணி ஒரு டிகிரியுடன் தன் படிப்பை முடித்து விட்டு சாந்தியின் அண்ணன் சென்னையில் நடத்தும் கம்பெனியில் வேலைக்கு சென்றுவிட்டாள்.அங்கே அவளாகவே தனக்கென தேர்ந்தெடுத்துக் கொண்டவன் தான் சரண்.
சென்னையில் இருந்தாலும் வாரம் தவறாமல் அற்புதாவிடம் பேசிக் கொண்டு தானிருந்தாள். அப்படி ஒரு முறை போன் செய்ய போனை எடுத்தது அவள் கணவன்.இவள் அற்புதாவிடம் பேச வேண்டும் என்றதற்கு,
“நீ யாரு?அந்த ஒழுக்கம் கெட்டவளோட ஃபிரண்டா?”
“மிஸ்டர் மரியாதையா பேசுங்க”
“உங்களுக்கெல்லாம் என்ன டி மரியாதை.அந்த ஓடுகாளி எப்போவோ ஓடி போயிட்டா.வை போனை”
தாரிணியின் நெஞ்சு தவிக்க அரம்பித்தது.
‘இந்த மடையன் என்ன சொல்கிறான்?’
தன் அன்னைக்கு போன் செய்து அற்புதாவை பற்றி அவள் பெற்றோரிடம் விசாரிக்க சொன்னாள்.
அது நாள் வரையிலும் மகள் சின்னதாக சொன்ன பிரச்சனைகளெல்லாம் ஒன்றுமே இல்லை அதனை விட பெரிய பிரச்சனைகளை அவள் மறைத்திருக்கிறாள் என்ற உண்மை வெளிவந்தது.தாங்கள் தேர்ந்தெடுத்த மருமகன் ஒரு முழு ‘சைக்கோ’என்பதை தாமதமாக புரிந்துக் கொண்டனர்.அற்புதாவை கண்டு பிடிக்க அவளின் பெற்றோர் சேலம் விரைந்தனர்.
வந்தவர்களை வீட்டினுள் கூட விடாமல் வாசலில் வைத்து தகாத வார்த்தைகள் பேசிய தன் மருமகனை நம்ப முடியாமல் பார்த்தனர் இருவரும்.
‘எப்படி தன் மகள் இந்த நரகத்தில் இருந்தாளோ?’
“அற்புதாவ கூப்பிடு, நாங்க அவளை பார்க்கணும்!”
“எத்தனை தடவை இதையே கேட்பீங்க?ஓடிப்போனவளை கூப்பிடுன்னு சொன்னா,நான் எங்க போய் தேடுவேன்”
விட்டேத்தியாக பேசியவனை ஒன்றும் செய்ய தோன்றவில்லை.
காவல் நிலையத்தில் அவன் பேரில் ஒரு புகாரை தந்தவர்கள் மகளை தேடி செய்தித்தாளில் விளம்பரம் தந்தனர்.தாரிணிக்கும் கண்ணனுக்கும் விஷயம் தெரிந்து,அவர்களும் அந்த பக்கத்தில் தெரிந்தவர்கள் மூலம் தேட முயல,எந்த தகவலும் இல்லை.
அற்புதாவின் பெற்றோர் மனம் நொந்திருந்தனர். பூவை போல் பார்த்து பார்த்து வளர்த்த மகளை இப்படி ஒரு அரக்கனால் தொலைத்துவிட்ட துக்கம் அவர்களை வாட்டி எடுத்தது.
இதனிடைய கண்ணனின் நண்பன் மூலம் அற்புதா இருந்த இடம் தெரிந்தது.சேலத்தில் ஒரு அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்தனர் அவளை.
அவள் பெற்றோருடன் கண்ணனும் அங்கு விரைய சுயநினைவின்றி உயிரை மட்டும் பாக்கி வைத்திருந்த அற்புதாவை கண்டனர்.மகளை அப்படி ஒரு நிலையில் கண்டு அவர்கள் கதறியது அந்த மருத்துவமனை முழுவதும் எதிரொலித்தது!
அவளை டிஸ்சார்ஜ் செய்தபின் சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர். கண்ணன் உடன் இருந்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்திருந்தமையால் ஓரளவு நிம்மதி.ஊரில் அவளை மருத்துவமனையில் சேர்த்து குற்றுயிராய் கிடந்தவளை தேத்தியிருந்தனர்.அந்த சைக்கோவிடம் விவாகரத்து பெற்று, அவளை மேற்படிப்பு படிக்க வைத்தார்கள்.மகளுக்கு ஆபத்து என்றதும் உதவிக்கு வராத சொந்தங்கள்,டிவோர்ஸ் வாங்கியதை தவறு என்று போதிக்க பொழுதன்னைக்கும் வந்து தொல்லை செய்தனர்.
அந்த தொல்லைகளை ஓரங்கட்டி மகளுக்கு பழைய சந்தோஷத்தை கொண்டு வர வேண்டும் என்று முயற்சித்து கொண்டிருந்த அற்புதாவின் பெற்றோர் ஒரு விபத்தில் சிக்கி அவ்விடத்திலேயே அகால மரணமடைந்தனர்.தனக்கு இருந்த உறவுகள் எல்லாம் போய் யாருமற்றவளாய் ஆகிவிட்டாள் அற்புதா!
super epi..
ore sogam.....
ரொம்ப கஷ்டம்
Nice ud sis ?
Nandriஅற்புதாவுக்கு நடந்தது ரொம்ப கொடுமை
aamaaArputha pola innum pala pengal thappikka vazhi theriyamal thavithu kondu irukirargal pa