Annapurani Dhandapani
மண்டலாதிபதி
இது இருளல்ல!
11.
வாசு தன் வேலை முடிந்து தன் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தான்!
சாலையில் சிக்னலுக்காக நிற்கையில் அவனுக்கருகில் ஒரு டாடா சுமோ வந்து நின்றது! அதிலிருந்து ஒரு கைக்குட்டை ஒன்று இவனுடைய காலருகில் விழ இவன் திரும்பி அந்த வண்டியைப் பார்த்தான்.
வண்டியில் ஆண்களும் பெண்களுமாக சில பெரியவர்கள்
இருக்க இரண்டு சிறுமிகள் ஜன்னலோரத்தில் எதிரெதிரே அமர்ந்திருந்தனர்! அந்தச் சிறுமிகளுள் ஒருத்தியின் கைக்குட்டைதான் கீழே விழுந்தது!
"ஏய்! என்னடீ?" பெரியவள் ஒருத்தி கேட்டாள்.
"இ.... இல்ல.... கர்ச்சீப்...."
"சரி! சரி!" என்றபடியே திரும்பிக் கொண்டாள்.
பதில் சொன்ன சிறுமி வாசுவைப் பார்க்க, வாசு அவளைப் பார்த்து புன்னகைத்தான்.
அந்தச் சிறுமி தன் உள்ளங்கையை அவனிடம் காட்டினாள்! அதில் என்னவோ கிறுக்கியிருந்தது! அவளுக்கு எதிரில் அமர்ந்திருந்த சிறுமி தன் இரு கரங்களையும் கூப்பிக் காட்டினாள். இருவருடைய கண்களும் அவனுக்கு எதையோ உணர்த்திவிடத் தவித்தன!
வாசு அதை ஒழுங்காகப் புரிந்து கொள்வதற்குள் பச்சை சிக்னல் விழுந்துவிட, டாடா சுமோ கிளம்பியது! சட்டென்று தன் கைகளை உள்ளே இழுத்துக் கொண்டாள் சிறுமி!
சிறுமிகளின் முகத்தில் சொல்லொணாத் துயரம்!
வாசுவுக்கு எதோ ஒரு நெருடல்! என்ன சொல்லுதுங்க இந்தக் கொழந்தைங்கன்னு புரியலையே என்று யோசித்தபடியே தன் பைக்கை அந்த டாடா சுமோ பின்னாலேயே செலுத்தினான்! அடுத்த சிக்னலிலும் சுமோ பக்கத்திலேயே அவன் நிற்கும்படி அமைய, இந்த முறையும் சிறுமியின் கையிலிருந்த கிறுக்கலை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை; அதற்கு அவனுக்கு நேரமும் கிடைக்கவில்லை! சரி, அடுத்த சிக்னலில் பார்க்கலாம் என்று இவன் நினைத்திருக்க, இப்போது சிறுமிகள் ஜன்னலோரத்தில் இல்லை! அந்த பெரிய பெண்களுக்கு மத்தியில் நசுங்கிக் கொண்டிருந்தனர்!
இதெல்லாம் சென்னையின் கனமான போக்குவரத்தில் அடுத்தடுத்த சிக்னலில் சில நிமிடங்களிலேயே நிகழ்ந்தன!
வாசு கவனமாக டாடா சுமோவின் பதிவெண்ணை மனதில் குறித்துக் கொண்டு, வேக வேகமாக தன் வண்டியை ஓரம் கட்டினான்! தன் கைப்பேசியில் தன் நண்பன் ஒருவனுக்கு ஏதோ செய்தியை அனுப்பினான்! கூடவே தன் துப்பறியும் நண்பன் ஸ்டீவனுக்கு அழைத்து அதை அப்படியே ஹெட்போனில் கேட்டபடியே தன் வண்டியைக் கிளப்பிக் கொண்டு அந்த டாடா சுமோவை கொஞ்சம் இடைவெளிவிட்டு பின் தொடரலனான்!
டாடா சுமோ அடையாறின் ஆடம்பரமான சாலைகளைத் தாண்டி ஏதோ ஒரு தெருவுக்குள் நுழைந்து வேகமாகச் சென்று கொண்டிருந்தது.
வாசுவும் பின் தொடர்ந்து கொண்டிருந்தான். அவன் அனுப்பிய குறுஞ்செய்தி உரியவருக்குச் சென்று சேர்ந்ததன் அறிகுறியாக, ஏற்கனவே ஸ்டீவனுடன் கைப்பேசி அழைப்பில் இணைந்திருந்தவனுடன் இப்போது மேலும் சிலர் இணைப்பில் வந்திருந்தனர்! அவர்களுடன் கான்-காலில் பேசியபடியே வாசு அந்த வண்டியை தொடர்ந்தான்.
இதுவும் சென்னைதானா? அல்லது ஏதாவது புறநகர்ப்பகுதியா? என்று அவனுக்குத் தோன்றியது! அந்தத் தெருவைப் பார்த்தால் ஏதோ சேரிக்குள் நுழைவது போலிருந்தது! குறுக்கும் நெடுக்குமாக ஓடிய பிள்ளைகளுடன் கூடவே ஓடும் நாய்கள்; வண்டிகள் போவதற்கு இடமிருந்தாலும் வசதியேயில்லாத சாலைகள்; வண்டிகள் விரைந்து ஓடிக்கொண்டிருந்தாலும் தெருவின் குறுக்கே போடப்பட்டிருக்கும் கயிற்றுக் கட்டில்கள்; அதன் மீது சோம்பிக் கிடக்கும் பெரிசுகள்; சாலையின் நடுவே நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் லோடு வேன்கள்; திறந்து கிடக்கும் கழிவுநீர் ஓடைகள்; அதிலிருந்து வீசும் துர்நாற்றம்; சென்னைத் தமிழின் வாடை மட்டும் அங்கே கேட்கவில்லையென்றால் அது சென்னையின் அங்கம் என்று நம்மால் ஒப்புக் கொள்ளவே முடியாது! ஏனெனில் சென்னையின் அடர்ந்த ஆரம்பரமான பகுதிக்கு நடுவில் இப்படி ஒரு குடியிருப்புப் பகுதியை யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை!
மாலை மயங்கி இருள் வரத் தொடங்கியிருந்தது! தெருவில் மின் விளக்குகள் இல்லை! அதனால் தெருவில் அதிக வெளிச்சமுமில்லை! அந்தத் தெருவின் முடிவில் ஒரு திருப்பத்தில் திரும்பிய டாடா சுமோ அங்கிருந்த சிறிய வீட்டு வாசலில் நிற்க, அதிலிருந்து இறங்கிய சிறுமிகளை அந்தப் பெண்கள் அந்த வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்கள்.
வாசு அந்த திருப்பத்தில் இருந்த பெட்டிக் கடையில் ஏதோ முகவரியைக் கேட்பது போல நின்றான்.
தள்ளியிருந்து பார்த்தால் அந்தப் பெண்கள் சாதாரணமாக அழைத்துச் செல்வது போலதான் தெரியும்! ஆனால் அவர்கள் அந்தச் சிறுமிகளின் கையை அழுத்தமாகப் பிடித்து இழுத்துச் சென்று கொண்டிருந்தார்கள் என்பது அருகில் சென்றால் மட்டுமே தெரியும்!
அவர்கள் உள்ளே போனதுமே அந்த டாடா சுமோ கிளம்பியது! அதை ஓட்டிக் கொண்டிருந்தவன் வாசு நின்றிருந்த பெட்டிக் கடைக்காரனுக்கு எதோ சைகை செய்துவிட்டுச் சென்றான். கடைக்காரனும் அந்தக் கூட்டத்தில் ஒருவன்தான் என்று வாசுவுக்குப் புரிந்தது! கான்-காலில் இருந்த ஸ்டீவனிடம் அந்த சுமோவை கவனித்துக் கொள்ளப் பணித்துவிட்டு, கடைக்காரனிடம் திரும்பினான்!
வாசு, ஒரு சிகரட்டை வாங்கி, அதை சாவதானமாக பற்ற வைத்தபடி, அந்த கடைக்காரனிடம்,
"இந்த சைட்ல வீடு எதாச்சும் வாடகைக்கு கிடைக்குங்களா?" என்று விசாரித்தான்!
"தெர்லீங்களே!"
நானே ஒரு தில்லாலங்கடி! எங்கிட்டயேவா? என்று வாசு தன் மனதுக்குள் நினைத்தபடியே கேட்டான்!
"இல்ல! நா இந்த ஊருக்கு புதுசு! இங்கதான் பக்கத்தில வேல கெடச்சிருக்கு! அதான்!"
"கண்ணாலம் ஆயிருச்சா?"
"கண்ணாலம்னா?" வாசு வேண்டுமென்றே அவன் பேசும் சென்னைத் தமிழ் புரியாதது போல நடித்தான்!
"ஓ... சார் எந்த ஊரு?"
"நமக்கு கோயமுத்தூர் பக்கம்ங்க! உடுமலைப்பேட்டை தாண்டி ..... சின்ன கிராமம்!"
"ஆனா ஆளப்பாத்தா அப்டி தெர்லயே?" என்று வாசுவை ஏற இறங்க பார்த்தபடி சந்தேகமாய்க் கேட்ட கடைக்காரனிடம்,
"ஓ..... நா போட்டிருக்க உடுப்பப் பாத்து கேக்கறீங்களா? இது இங்க வந்தப்றம் ஒரு ஃப்ரண்டு என்ன இப்டி மாத்தி வுட்டுட்டாருங்க!" என்று புளிகினான்.
அவன் புளுகுவதை அந்த கடைக்காரனும் முழுமையாய் நம்பினான். அதற்கு முக்கிய காரணம் வாசுவின் வார்த்தைகளில் கொங்குத் தமிழின் மணம் கனமாக வீசியது!
"சாருக்கு கல்யாணம் ஆயிருச்சா?" என்றான் கடைக்காரன் தெளிவாக!
"ம்... இன்னும் இல்லீங்க!" என்றான்! மனதில் யாமினியின் முகம் ஒரு முறை வந்து போனது!
"இங்க ..... பக்கத்தில..... ஒரு வீடு இருக்கு! பசங்கல்லாம் சேந்து தங்கற மாதிரி எடம்! பாக்கறீங்களா?"
"பசங்கன்னா..... பள்ளிக்கூடப் பசங்களாங்க?!" என்று கேட்டான் வாசு!
"ஹ.....ஹ.....ஹ....." பெருங்குரலில் சிரித்தான் கடைக்காரன்!
சிரிடா! சிரி! நல்லா சிரி! இப்ப வருவான் பாரு! ஒம்மாமியார் வீட்லேந்து..... அப்ப எப்டி சிரிப்பன்னு நானும் பாக்கறேன்! என்று தன் மனதில் நினைத்த வாசுவும் கடைக்காரனைப் பார்த்து சிரித்தபடியே கேட்டான்!
"ஏங்க சிரிக்கறீங்க..... நா எதும் தப்பா கேட்டு போட்டேனுங்களா?"
இதற்கும் ஒரு மூச்சு சிரித்து விட்டே பதிலிருத்தான் கடைக்காரன்!
"அதெல்லாம் இல்ல தம்பி! சரி! வாங்க! வீட்ட பாக்கலாம்!" என்று கூறிவிட்டு கடையிலிருந்த மற்றொருவனிடம் தலையாட்டிவிட்டு வாசுவை அழைத்துச் சென்றான் அவன்.
அந்தப் பெண்கள் நுழைந்த வீட்டுக்கருகில் ஒரு சிறிய சந்து இருந்தது! அந்த சந்துக்குள் செல்லாமல் அதைத் தாண்டி இரண்டு வீடுகள் தள்ளி அழைத்துச் சென்று, ஒரு வீட்டின் வாசலில் நின்று குரல் கொடுத்தான் கடைக்காரன்.
அந்த வீட்டிலிருந்து யாரோ ஒருவன் வெளியே வரவும், அவனிடம் விவரம் கூறிவிட்டு கடைக்காரன் நகர, இப்போது வந்தவனுடன் சென்றான் வாசு!
அவனுடன் சென்று வீடு பார்க்கிறேன் பேர்வழி என்று ஏதேதோ கேட்டுக் கொண்டே அந்தப் பகுதியைப் பற்றிய விவரங்களை கான்-காலில் இணைந்திருக்கும் தன் நண்பர்களும் அறிந்து கொள்ள உதவினான்.
"இங்க தண்ணி வசதி நல்லாயிருக்குங்களா?
"இந்த பக்கத்தில சாப்பாடு கெடக்குமா? இந்த மெஸ் மாதிரி எதுனாச்சும்....."
"நா ராத்திரி வேல விட்டு லேட்டா வந்தா பரவால்லதானே? ஏன்னா.... நமக்கு நேரங்காலம் பாக்க முடியாத பொழப்புங்க...."
"வீடு கூட்ட யார்னா வருவாங்களா?..."
இப்படி பேச்சுக் கொடுத்து தனக்கு வேண்டிய விவரங்களை கேட்டுக் கொண்டு அவனிடம் விடை பெற்றுக் கொண்டு வெளியே வந்து மெதுவாய் நடந்தான் வாசு!