Annapurani Dhandapani
மண்டலாதிபதி
இது இருளல்ல!
13.
பாஸ்கர் மாமா கொண்டு வந்த செய்தியென்னவோ நல்ல செய்திதான்! ஆனால் அது வாசுவுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை!
பாஸ்கர் மாமா, தன் மகள் சௌமியாவுக்கு ஒரு நல்ல வரன் வந்திருப்பதாகவும் அதுவும் அவர்களே தேடி வந்திருப்பதாகவும் கூறி, அதனால் சீக்கிரமே அவளுக்கு திருமணம் செய்துவிடலாம் என்று முடிவு செய்திருப்பதாகவும் கூறிக் கொண்டு வந்திருந்தார்!
கிருஷ்ணாவுக்கு பாஸ்கர் கூறிய செய்தி அதிர்ச்சியாயிருந்தாலும் அவர் எதையும் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை!
ஆனால் வாசுவால் அப்படி சும்மாயிருக்க முடியவில்லை!
"மாமா! ப்யூட்டிக்கு அப்டி என்ன வயசாயிடுச்சுன்னு இப்பவே அவளுக்கு கல்யாணம் பண்ண துடிக்கறீங்க! இன்னும் அவ படிப்பே முடியல! அதுக்குள்ள மாப்ள வந்தானாம்... இவர் கல்யாணம் பண்றாராம்!" என்று கடிந்து கூறினான்.
"டேய்! என்னடா! எம்பொண்ணுக்கு நா எப்ப வேண்ணா கல்யாணம் பண்ணுவேன்! அதப்பத்தி ஒனக்கென்னடா?"
"எனக்கென்னவா? அவ என் தங்கச்சி! நா கேப்பேன்!" என்றான் உரிமையோடு!
"தங்கச்சின்னா..... அவ உன் கூடப் பிறந்தவளா......"
"வேணாம் மாமா! நீங்க பேசறது கொஞ்சம் கூட நல்லால்ல!"
"எதுடா நல்லால்ல..... என்னமோ நான் அவளுக்கு கல்யாணம் பண்ண குதிச்ச மாதிரியும் அவ வேணாம்னு அழற மாதிரியும்ல சொல்ற! மொத மொதல்ல நம்மாத்து பொண்ணுக்கு தானாவே மாப்ள வந்திருக்குன்னா அது எவ்ளோ பெரிய விஷயம்! சந்தோஷப்படறத விட்டுட்டு இப்டி அஸ்து கொட்றியே!" என்று கடிந்து கொண்டார்!
"சரி மாமா! அந்த மாப்ள பத்தின விவரம் சொல்லுங்க! நா அவனப் பத்தி நல்லா விசாரிச்சப்றமா நாம அவங்க கிட்ட மேற்கொண்டு பேசலாம்!"
"ஆங்.... இப்ப சொன்னியே.... இது நல்ல பிள்ளைக்கு அழகு! அண்ணனா லட்சணமா இத மொதல்ல செய்!" என்று கூறி விட்டு அந்த மாப்பிள்ளையின் விவரங்களை அவனிடம் கூறினார்! மாப்பிள்ளையின் புகைப்படத்தையும் கொடுத்தார்!
வாசு அந்த புகைப்படத்தைப் பார்த்துவிட்டு,
"ஆளு என்னமோ பாக்க நல்லாதான் இருக்கான்! குணம் எப்டியோ?" என்றான்.
கிருஷ்ணா அதை வாங்கிப் பார்த்துவிட்டு,
"ம்! நீ சொல்றதும் சரிதான்! நல்லா விசாரிச்சப்றம் மேற்கொண்டு பேசலாம், பாஸ்கரா!" என்றார்!
பாஸ்கர் மாமா தலையாட்டினார்.
வாசு, மாமா கொடுத்ததையெல்லாம் கவனமாகக் குறித்துக் கொண்டு தன் துப்பறியும் நண்பன் ஸ்டீவனுக்கு அனுப்பி வைத்தான்!
ஸ்டீவனும் அந்த மாப்பிள்ளை பற்றி நன்றாக விசாரித்து அவன் நல்லவன்தான்; நல்ல வேலையிலிருக்கிறான்; கை நிறைய சம்பாதிக்கிறான் என்றெல்லாம் அவனுக்கு நற்சான்றிதழ் வழங்கி அவனைப் பற்றிய அறிக்கையை வாசுவுக்கு அனுப்பி வைத்தான்!
சென்னையில்தான் மாப்பிள்ளை வீடு என்பதால் பெண் பார்க்க, மேற்கொண்டு பேச என்று அடுத்தடுத்த நிகழ்ச்சிகளுக்காக மாமா, மாமி, சௌமி, ஐஷூ எல்லாரும் சென்னை வந்துவிட்டார்கள்!
இரு வீட்டாரும் கலந்து பேசி சௌமியாவின் கல்யாண நிச்சயதார்த்தத்துக்கு ஏற்பாடு செய்தார்கள்!
பாஸ்கர் மாமாவின் குடும்ப வழக்கப்படி மாப்பிள்ளை வீட்டில்தான் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற வேண்டும்; ஆனால் மாப்பிள்ளை வீட்டார், பெண் வட்டாரே இதையும் நடத்திவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டதால் நிச்சயதார்த்த விழா பாஸ்கர் மாமாவின் சார்பாக கிருஷ்ணா எடுத்து நடத்தினார்.
வாசு சௌமியாவிடம் கேட்டான்.
"சௌமி! உனக்கு இந்த கல்யாணத்தில விருப்பம்தானே? மாமாவோ மாமியோ கட்டாயப்படுத்தறாங்களா?" என்று கேட்டான் அக்கரையாய்!
"அண்ணா! அப்டில்லாம் இல்லண்ணா! விருப்பமில்லன்னு சொல்ல முடியாது! அதுக்காக விருப்பம்னும் சொல்ல முடியாது!" என்றாள்!
"என்னம்மா குழப்பற?"
"இல்லண்ணா! எனக்கு என் படிப்பு முடியலையேன்னு கவலையா இருக்கு!" என்றாள்.
"ஆனா இப்ப வெறும் நிச்சயதார்த்தம்தானே! கல்யாணம் உன் படிப்பு முடிஞ்சப்றம்தானே! அப்டிதானே அவங்க வீட்ல சொன்னாங்கன்னு மாமா சொன்னாரு!"
"இல்லண்ணா.... நிச்சயம் ஆய்டுச்சுன்னா காலேஜ்ல ஆம்பள பசங்கல்லாம் கிண்டல் பண்ணுவாங்க..... என்னோட ஃப்ரண்ட்ஸே பயங்கரமா கலாய்ப்பாங்க; ப்ரொஃபஸர்ஸ் நக்கலா பேசுவாங்க; அப்றம் ரொம்ப முக்கியமா அந்த மாப்ள போன் பண்ணுவார்; பேசுவார்; மெயில் பண்ணுவார்; வெளிய மீட் பண்லாம்னு கூப்டுவார்! படிப்புல கான்சென்ட்ரேட் பண்ணவே முடியாது! என்னால கல்யாணம் ஆகப்போறதேன்னு சந்தோஷப்படவும் முடியல! என் படிப்பு கெடறதேன்னு கவலப்படாமலும் இருக்க முடியல!" என்றாள் மனதை மறைக்காமல்.
"ம்! ... யோசிக்க வேண்டிய விஷயம்தான்! நம்ம மாப்ள கிட்ட பேசலாம்மா! சும்மா என் தங்கச்சிய டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுடான்னு கண்டிஷன் போட்ருலாம்! சரியா!" என்றான் வாசு!
"ஆமா ப்யூட்டீ! அவன் நம்ம கண்டஷன மீறி உன்ன டிஸ்டர்ப் பண்ணா நானே போய் அவன் சட்ட காலர பிடிச்சி நாலு அற வுட்டு கண்டிஷன ஞாபகப்படுத்தறேன்! சரியா?" என்றாள் ஸ்வீட்டி சிரிக்காமல்!
"இரு! இரு! மொதல்ல உன்ன அறையறேன்!" என்றபடியே எழுந்து அவளை அடிக்க வந்த வாசுவை தள்ளிவிட்டுவிட்டு அவள் ஓட, பார்த்திருந்த எல்லாரும் சிரித்தார்கள்.
அப்போதைக்கு சிரித்து வைத்தாலும் சௌமியாவுக்கு மனம் தவித்தபடிதான் இருந்தது!
நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்காக ஏற்பாடுகள் செய்வதில் யாமினி பெரும் பங்காற்றினாள்.
மண்டபம் புக் செய்வது, கேட்ரிங் புக் செய்வது, சமையல் மெனு, மண்டப அலங்காரம், சௌமிக்கு அலங்காரம், பட்சணங்கள் என அவள் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து கிருஷ்ணாவிடமும் பவதாரிணியிடமும் பாஸ்கர் மாமாவிடமும் ருக்மணி மாமியிடமும் சொல்லி செய்ய, அவர்களுக்கு இவளைப் பார்த்து மிகவும் வியப்பாயிருந்தது!
நிச்சயத்துக்கு இன்னும் ஒரு வாரம் இருந்த நிலையில் வாசுவை திடீரென்று நாலு நாள் வேலையாக தூத்துக்குடி செல்ல அலுவலகத்திலிருந்து கட்டாயப்படுத்த, வேறு வழியின்றி அவன் கிளம்பினான்!
அதற்காக சௌமியா மிகவும் வருத்தப்பட,
"நோ வொரீஸ்டா சௌமி! நா கரெக்டா நிச்சயத்துக்கு மொத நாளே வந்துடுவேன்! நம்ம ஃபங்ஷன சூப்பரா ஜமாய்ச்சுடலாம்! சரியா?" என்று அவளிடம் உறுதி கூறிவிட்டு எல்லாரிடமும் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினான்.
கிளம்பும் போது யாமினி ஏதோ இவனிடம் கூற வருவது போல இவனுக்குத் தோன்ற, அவளருகில் வந்து,
"நா போய்ட்டு வரேன்! சௌமிக்கு துணையா இரு! அவ ரொம்ப குழம்பி போயிருக்கா! அவள பத்திரமா பாத்துக்கோ!" என்றான்!
"ம்!" என்று தலையாட்டினாள்.
அவள் ஏதாவது சொல்லுவாள் என்று எதிர்பார்த்தானோ என்னவோ, அவள் ஒன்றும் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்ட, அவனுக்கு ஏமாற்றமாயிருந்தது! ஆனால் அவளிடம் எதையும் காட்டிக் கொள்ளாமல் அவனும் தலையாட்டிவிட்டு நகர,
"ம்..... எதப் பத்தியும் கவலப் படாம பத்திரமா போய்ட்டு வாங்க! இங்க எல்லாத்தையும் நா பாத்துக்கறேன்!" என்றாள் அவன் மனதைப் படித்தது போல!
அவன் எதிர்பார்த்த வார்த்தை அவளிடமிருந்து வரவும், அவனுக்கு மனதில் சாரலடித்தது போல இருந்தது!
அவளைப் பார்த்து புன்னகைத்து விட்டு கிளம்பினான்!
தூத்துக்குடி சென்று அங்கு தனக்கு இடப்பட்டிருந்த பணிகளை செவ்வனே முடித்துக் கொண்டு சொன்னது போலவே நிச்சயத்திற்கு முதல் நாளே வந்துவிட்டான் வாசு!
அதற்குள் நிச்சயத்திற்கு வேண்டிய எல்லாவற்றையும் மிக மிக நேர்த்தியாக தயார் செய்துவிட்டாள் யாமினி! திருமண கான்ட்ராக்டரிடம் வேலை செய்து கிடைத்த அனுபவம் அவளுக்கு இப்போது பெரிதும் கைகொடுத்தது!
அது மட்டுமல்லாமல் சௌமியாவின் மனக்கலக்கத்தையும் ஓரளவு சரி செய்திருந்தாள்! அதனால் அவளும் ஸ்வீட்டியும் எப்போதும் போல வம்பளக்கத் தொடங்கியிருந்தார்கள்!
பாஸ்கர் மாமவும் மாமியும் அழைக்க வேண்டியவர்களை நேரில் சென்று அழைப்பு விடுத்தார்கள்!
நிச்சயத்துக்கு முதல்நாள் காலை சென்னை வந்த வாசு, அலுவலகம் சென்று தூத்துக்குடியில் சேகரித்த செய்திகளை அலுவலகத்தில் சேர்ப்பித்துவிட்டு சீக்கிரமே வீடு வந்துவிட்டான்!
அதன் பிறகு அவனும் யாமினியுடன் சேர்ந்து பொறுப்பாய் நிச்சய வேலைகளை முன்னின்று கவனித்துக் கொண்டிருந்தான்.
மறுநாள் அழகாய் விடிந்தது!
எல்லாரும் நிச்சயதார்த்த விழாவுக்காக அதிகாலையிலேயே மண்டபம் போய்ச் சேர்ந்தார்கள்!
வாசுவும் யாமினியும் ஒன்றாக அங்கே எல்லா வேலைகளையும் கவனித்துக் கொள்ள, பார்த்திருந்த பெரியவர்களுக்கு மனம் மகிழ்ந்தது! இருவரும் நல்ல பொருத்தமான ஜோடி என்று தங்களுக்குள் பேசி மகிழ்ந்தார்கள்.
சௌமிக்கு அழகு நிலையத்தில் ஏற்பாடு செய்திருந்த பெண் வந்து அலங்கரிக்கத் தொடங்கினாள்.
நேரம் ஆக ஆக விருந்தினர் வருகை ஆரம்பிக்க, விழா களைகட்டத் தொடங்கியது!
பத்தரை மணிக்கு மேல் நிச்சயதார்த்தம் என்பதால் ஒன்பது மணி சுமாருக்கு மாப்பிள்ளை வீட்டார் வந்தனர்!
அனைவரையும் வரவேற்று உபசரித்தனர் பெண் வீட்டார்!
நிச்சயதார்த்த நிகழ்ச்சி ஆரம்பிக்க இன்னும் பத்து நிமிடங்களே இருந்த நிலையில் வாசுவுக்கு ஸ்டீவன் போன் செய்தான்!
"ஹே! ஸ்டீவன்! என்ன ஃபங்ஷனுக்கு வராம கால் பண்ணிகிட்டிருக்க?"
"வாசு! பேச நேரம் இல்ல! நா அங்கதான் வந்துகிட்டே இருக்கேன்! நீ ஃபங்ஷன நிறுத்த ஏற்பாடு பண்ணு!"
"என்னடா? என்னாச்சு?"
அவன் சொன்ன செய்தியைக் கேட்ட வாசு தன் தலையில் இடி இறங்கியதைப் போல உணர்ந்தான்!
- இது இருளல்ல...... விரைவில் வெளிச்சம் வரும்!
Last edited: