சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னால்
நல்லது கெட்டது தெரிந்ததடா
பிரகாஷ் சற்று தள்ளியிருந்து இதை எல்லாம் வேடிக்கை பார்த்தாலும் தலையிடவில்லை.ரதியின் முகம் போன் போக்கு அவனுக்கு ஏனோ நிம்மதியை தந்தது!
“நீ என்னை நம்பித் தான் ஆகணும் வெண்பா”
“மாட்டேன் , நான் உன்னை நம்ப மாட்டேன் விழியன்.நீ மறுபடியும் பொய் சொல்லுவே”
“சரி இப்ப என்ன செய்யணும்?”
“இந்த குழந்தை நமக்கு வேணுமா…?” அதிர்ச்சியாக பார்த்தான் அவளை.
அவளுக்குமே அப்படி கேட்க முழுமனசு இல்லை தான். ஆனாலும் கேட்டாள். சற்று நேரம் தன் கோபத்தை அடக்க அந்த அறையில் நடை பயின்றவன்,
“எனக்கு கட்டாயம் வேணும் வெண்பா!”
“உண்மையில்லாத இடத்தில் குழந்தையையும் பெத்துகிட்டு என்னால் கஷ்டப்படமுடியாது… நாளைக்கே நீ அவ பின்னாடி போயிட்டேன்ன என் கதியே கேள்விக்குறி!அதில் இந்த குழந்தையின் கதி என்ன ஆகும்?”
‘நான் அவள் மேல் உயிரை வைத்திருக்க, எப்படி பேசிகிறாள் இவள்? நாக்கில் நரம்பில்லாமல்!’அறையலாம் போல இருந்தது…
“வெண்பா இப்ப எதுவும் பேசாதே… நீ அந்த குழந்தையை வேண்டாம்னு சொல்றதை அதுவால் உணர முடியும்! என் மனசை சாகடிச்சது போதும், என் பிள்ளையை ஹர்ட் பண்ணாதே!ப்ளீஸ்”
யாசித்தான், உருவமில்லா அவன் பிள்ளைக்காக! அவள் அதை சட்டை செய்ததை போல் இல்லை.
இப்போது அவளை முறைக்க மட்டுமே முடிந்தது.அவள் தான் கூறியவற்றின் தாக்கம் தெரியாமல் தரையை பார்த்தபடி இருந்தாள்.அவள் கேட்டது சகிக்காமல் சற்று நேரத்தில் அறையை விட்டு வெளியே போனான் விழியன்.வெண்பாவுக்கு துக்கமாய் இருந்தது!அவனை நம்ப வேண்டும் என்று ஆசை தான்! ஆனால் ரதியுடன் இருந்த அந்த புகைப்படம் இன்னும் அவள் கண்ணை விட்டு மறையவில்லை.அவளை தெரியாது என்று வேறு பொய் சொல்லியிருக்கிறான், இன்னும் தன்னிடம் என்னென்ன பொய் சொல்லியிருக்கானோ!
வீட்டில் இவர்கள் பிரச்சனை முழுவதுமாக தெரியாததால், அனைவரும் இருவருக்கும் சரியாகி விட்டது என்று நம்பினர். ரேணுகாவுக்கு மட்டுமே மகன் மற்றவர்கள் முன் நடிக்கிறான் என்பது புரிந்தது.வந்ததிலிருந்து தன் மருமகளிடம் ஒரு வார்த்தை பேசவில்லை அவள். அத்தனை கோபம்! தன் பிள்ளையை இப்படி சந்தேகப் பட்டுவிட்டாளே என்ற ஆத்திரம்! இருக்கும் தானே.உண்மையை எல்லாம் தெரிந்தவள் ஆயிற்றே!
குழந்தை பேச்சை மறுபடியும் எடுக்கவில்லை இருவரும்.ஆனால் விழியனுக்கு மிகவும் இக்கட்டான சூழ்நிலை! எதுவும் செய்து விடுவாளோ என்ற பயம். அங்கிருந்த நாளில் அவளை மறுபடியும் மருத்துவமனை அழைத்துப் போனான்.
அவளுக்கு எல்லாமே நார்மல் என்று மருத்துவர் சொன்ன பின்,
“டிராவல் செய்யலாம் தானே டாக்டர். சென்னைக்கு அழைச்சிட்டு போறேன்”
அப்படி சொன்னபிறகு தான் அவன் அந்த யோசனையில் இருப்பதே வெண்பாவுக்கு தெரியும். அவளுக்கு சிறிதும் அதில் இஷ்டமில்லை. அங்கு வைத்து எதுவும் சொல்லாமல்,காரில் வருகையில்,
“விழியன் எனக்கு அங்க வர இஷ்டமில்லை. நான் இங்கேயே இருக்கேன்” என்றாள்.
“சாரி !முடியாது வெண்பா.பிள்ளை பிறக்கிற வரை என்கூட இருக்கணும்” என்று முடித்து விட்டான்.உறுதியாய் அவன் சொல்ல செய்வதறியாது திகைத்தாள் அவள்.
அவன் நினைத்த மாதிரியே அவளை அழைத்து வந்துவிட்டான் அவனின் சென்னை வீட்டுக்கு.மகளை கவனித்து கொள்ள சரஸ்வதியும் கூடவே வந்திருந்தாள்.அவர்கள் அறைக்கு போவதை போல் பழக்கத்தில் கால்கள் போய்விட அதை கட்டுப்படுத்தி சோபாவில் அமர்ந்துக் கொண்டாள் வெண்பா. வீட்டினுள் நுழைந்ததிலிருந்து வெண்பாவுக்கு அத்தனை தர்ம சங்கடம். இத்தனை நாள் தன்னுடைய வீடாய் இருந்தது இன்று வேறு மாதிரி பட்டது!
அசதியாயிருந்தது.படுத்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் வேறு தோன்றியது.
சரஸ்வதியும் ரேணுகாவும் இவளை கவனிக்கவில்லை. கிட்சனில் வேலைகளை ஆரம்பித்து விட்டனர். இவள் இப்படி விழியனிடம் ஒதுங்க ஆரம்பித்ததிலிருந்து யாரும் அவளிடம் அதிகம் பேசுவதில்லை. ரேணுகாவின் பாராமுகம் புரிந்தது. அதற்காகவே பேசி பேசி சரஸ்வதியை உடன் அழைத்து வந்திருந்தாள் வெண்பா! சோபாவில் சாய்ந்து அமர்ந்தவள் அப்படியே கண்ணை மூடிக் கொண்டாள்.விழியன் காரிலிருந்த பைகளை தூக்கிக் கொண்டு வருகையில் தூங்கும் தன் மனைவியை கண்டு, ‘இங்க என்ன பண்றா?’
“வெண்பா மேல வந்து படு” எழுப்பிவிட்டு தன் வேலைகளை தொடர,அப்போது அசையவில்லை அவள்.
பிறகும் அவன்“மேலே வா” என்று கர்ஜிக்க,அவன் கோபத்திற்கு வழி வைக்காமல், மேலே தங்கள் அறைக்கு சென்றுவிட்டாள்.
ரதியை பற்றிய சிந்தனையில் மூழ்கியிருந்தான் பிரகாஷ்.அவள் அன்பு செலுத்த லாய்க்கில்லாதவள் என்ற எண்ணம் அவனுக்கு இப்போது இல்லை.ரதிக்கு அதிக அளவில் அன்பு தேவைபட்டது.அவள் தந்தை அவளுக்கு தந்ததை போல்.இப்போது ஒரு கணவனாய் அவன் ஏதேனும் அவளுக்கு செய்யத் தான் வேண்டும்!