தன் அத்தை அன்று சொன்னது போல் திரும்பவும் தன் செடிகளுடன் நேரம் செலவளிக்க முயன்றாள். இத்தனை நாளும் எட்டி கூட பார்த்திடாத தன் மாடி தோட்டத்தை வந்து பார்க்க அவளுக்கே கஷ்டமாகி போனது!பாதிக்கும் மேற்பட்ட செடிகள் காய்ந்து போயிருந்தன! முடிந்த அளவிற்கு வேண்டாதவற்றை அப்புறப்படுத்தி,இருக்கிறவற்றின் மண்ணை கிளறி விட்டு தண்ணீர் ஊற்றினாள். இனி எந்தெந்த செடிகள் தேவைப்படும் என்று யோசித்து வாங்க வேண்டியவைகளை ஒரு லிஸ்ட் போட்டு வைத்தாள்.
திடீரென்று அந்த வாரத்தில் ஒரு மாலையில், மதியின் பெற்றோர் பிரசாத்தும், மோகனாவும் வந்தனர் இவர்கள் வீட்டிற்கு! வந்த பின்னரே அவளின் விஷயம் தெரிந்தது அவர்களுக்கு.
“ரொம்ப சந்தோஷம் மா.மதி இதை எங்க கிட்ட சொல்லவே இல்லையே!”
அவளுக்கே தெரியாதே, மனதில் நினைத்துக் கொண்டதை அவர்களிடம் சொல்லவில்லை வெண்பா.சில மணி நேரம் அவர்களுடன் பேசிவிட்டு சென்றனர். ஏனோ வெண்பாவுக்கு ஒரு மாறுதலாய் இருந்தது.மாடியேறி வந்தவள் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிவிட்டு அங்கேயே சற்று நடைப்பயின்றுக் கொண்டிருந்தாள்.
ஒரு மணிநேரத்திலேயே மதியிடமிருந்து போன்.அசந்து தான் போனாள் வெண்பா.பழைய சண்டையெல்லாம் மறந்துவிட்டனர் இருவருமே!
“மதி, எப்படி டி இருக்கே?”
“நீயெல்லாம் ஒரு பிரண்டா, எவ்ளோ நல்ல விஷயம் நடந்திருக்கு! என் கிட்ட சொல்லத் தோணலையே உனக்கு?”
“சாரி மதி. நிறைய குழப்பங்கள்.நீ எப்படி இருக்கே!”
“இன்னும் நீ தெளியலையா? அதான் கடவுள் உன்னை பிஸியாக்க ஒரு ஆளை அனுப்பியிருக்கார்”
நகைத்துக் கொண்டனர்.
“லண்டன் பேபி தானே டி அது?”
விஷமமாய் மதி கேட்க பதில் சொல்லவில்லை வெண்பா!
“உடம்பை பத்திரமா பார்த்துக்கோ டி. அக்கா இங்க இப்ப வேலைக்கு போறேன்.வீட்டில் ரொம்ப போர், அதான்.அடிக்கடி வாட்ஸ் ஆப் மெஸேஜ் அனுப்பு. என்னை மறந்துடாதே டீ.ப்ளீஸ் ஐயம் யுவர் பெஸ்ட் பிரண்ட் யா”
மதியின் பதிவான டயலாக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தாள் வெண்பா.போனை வைத்த பின்பும் அந்த சிரிப்பு உதட்டில் ஒட்டிக் கொண்டிருந்தது!அவள் கீழே வர, விழியனும் வந்திருந்தான் இப்போது.
“யாரு வெண்பா போனில்?”கேட்டது ரேணுகா,
“மதி அத்தை.விஷயம் கேள்விப்பட்டு போன் செய்தா! வேலைக்கு போறாளாம்”
அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இன்னொரு போன் வந்தது.மதி தான் மறுபடியும் போல என்றெண்ணி அதை பார்க்க, அழைத்தது ரதி!