MithraPrasath
SM Exclusive
மரணத்தின் மர்மம்
அத்தியாயம் 2போலீஸ் வண்டி கிளம்பியது. முகத்தில் அதிர்ச்சியுடன் வண்டியை பார்த்து கொண்டு நின்றிருந்தாள் சௌந்தர்யா. வண்டி தெருவை தாண்டி செல்லும் வரை அதை விட்டு கண் விலகவில்லை. தெரு முனை சென்று திரும்பியது போலீஸ் வண்டி. யோசனையோடு திரும்பினால் அப்போது கோவிலுக்கு அருகில் சைமன் நிற்பதை கவனிக்கிறாள். “சைமன்” என சௌந்தர்யா கூப்பிட, சைமன் திரும்பி விட்டான். அங்கிருந்து நகன்று சென்று விட்டான்.
போலீஸ் வண்டி கோவிலை தாண்டி மெயின் ரோட்டிற்கு வந்தது. சிறிது நேரத்தில் இன்ஸ்பெக்டரின் மொபைல் போனுக்கு கால் வந்தது. அவர் அதை எடுத்து பார்க்கிறார். கால் ஸ்டேஷன் நம்பர். எடுத்து பேசுகிறார்,
“ ஹலோ...”
“சார், நான் கான்ஸ்டபில் தங்கமுத்து பேசுறேன்”
“சொல்லுங்க முத்து.”
“சார், அந்த ஆக்சிடென்ட் கேஸ் போஸ்ட்-மார்ட்டம் ரிப்போர்ட் வந்திருக்கு”
“ஓகே. நான் ஸ்டேஷன் தான் வர்றேன். வந்து பாக்குறேன். வேற ஏதாவது கேஸ் வந்துச்சா?”
“இல்ல சார்”
“ஓகே, ஓகே. வச்சுருங்க. நான் இதோ வந்துட்டேன்.”
கெளதம் கலங்கிய கண்களோடு, குழப்பத்தில் அமர்ந்திருந்தான். வண்டி போலீஸ் ஸ்டேஷனுள் நுழைந்தது. இறங்கியவுடன் இன்ஸ்பெக்டர் உள்ளே செல்கிறார். கான்ஸ்டபில் கெளதமை இழுத்து கொண்டு வந்தார். “அவன அந்த ஓரத்துல ஒக்கார வைங்க. முத்து எங்க ரிப்போர்ட், எடுத்துட்டு வாங்க.” கான்ஸ்டபில் பைல் ஒன்றை எடுத்து வருகிறார். அதை இன்ஸ்பெக்டரிடம் தருகிறார். அதை பார்த்தவுடன் இன்ஸ்பெக்டர் முகத்தில் ஏதோ மாற்றம். “எவ்ளோ தைரியம்...” கோப பார்வையுடன் கெளதமை நோக்கி “கான்ஸ்டபில் அவன இழுத்துட்டு வாங்க” கான்ஸ்டபில் கெளதம் அருகில் சென்று
“டேய்! எழுந்திரி, என்ன அய்யா குப்பிடுறது கேக்கல? கைய பிடிச்சு கூட்டிட்டு போகனுமா.. எழுந்திரி எழுந்திரி.”
கெளதம் மெதுவாக எழுந்து இன்ஸ்பெக்டர் அருகில் சென்றான். அவன் முகம் கவலையோடும், கண்கள் கலங்கியும் இருந்தன. இறுகிய முகத்தோடு பேச கூட தெம்பில்லாதவன் போன்றும் இன்ஸ்பெக்டர் முன் வந்து நின்றான். நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.
இன்ஸ்பெக்டர் அவனை கூர்ந்து கவனித்து கொண்டு இருந்தார். கண்களில் ஏளனம் கோபம் எல்லாம் சேர்ந்து இருந்தது. அவன் நிமிர்ந்து கூட பார்க்காததால் அவர் டேபிள் மேல் இரு கைகளையும் ஒரு சேர தட்டினார். அவனை நோக்கி
“டேய்!.. இன்னும் எவ்ளோ நேரத்துக்கு நடிக்கபோற?”
அவனிடம் எந்த பதிலும் வரவில்லை. அவன் முகத்தில் சிறு சலனம் கூட இல்லை. அவன் நிமிர்ந்து பார்க்காததால் இன்ஸ்பெக்டர் கோபத்துடன் எழுந்து “ ஹே! என்ன திமிரா, இங்க பாரு”
அவன் நிமிர்ந்தான்.
“சொல்லு, எதுக்கு முருகன கொல பண்ண?”
அவனது முகம் அதிர்ச்சியினால் உறைந்தது. ஆனால் பேசமால் யோசனையோடு நின்றான்.
“நீயா சொல்லிட்டா நல்லது. நாங்க கண்டுபிடிச்சா உனக்கு தான் கெட்டது. சொல்லு வாய திறந்து”
“சார் நான் எதுவும் செய்யல. நீங்க ஏதோ தப்பா புரிஞ்சுக்கிட்டு என்ன கூட்டிட்டு வந்துட்டீங்க.”
“நாங்க எதுவும் தப்பா உன்ன அர்ரெஸ்ட் பண்ணல... உன் மேல கேஸ் பைல் ஆகிருக்கு. முருகன் மிஸ்ஸிங் கேசா தான் எங்களுக்கு பைல் ஆச்சு, அவன் லாஸ்ட்டா உன்னை தான் பாக்க வந்துருக்கான். பட் அந்த ஆக்சிடென்ட் கேஸ்ல இறந்தது முருகன் தான்னும், அது ஆக்சிடென்ட் இல்ல கொலன்னு கன்பார்ம் ஆகிருக்கு. இப்போ நீ தான் உண்மைய சொல்லணும், ஏன் முருகன கொலை பண்ண?”
“சார், நான் எந்த கொலையும் பண்ணல”
“ம்ம்ம்.... நீ எந்த பதிலும் சொல்ல மாட்ட போல, உன்ன மாதிரி ஆளுகளுக்குக்கெல்லாம் இப்டிலாம் கேட்டா பதில் வராது. அதுக்கு வேற வழி இருக்கு. கான்ஸ்டபில் இவன இழுத்துட்டு போங்க..” பதற்றமாகிய கெளதம்
“சார், சார்... நான் நிஜமாவே எதுவும் செய்யல.” அதற்குள் கான்ஸ்டபில் வந்து அவனது கையை இழுத்தார்.
“உனக்கு அரைமணி நேரம் தான் கொடுப்பேன். அதுக்குள்ள நீ உண்மையா சொல்லல... அப்பரமா நான் என்ன பண்ணுவேனு தெரியாது, போய் அந்த பெஞ்ச்ல உக்காரு.”
என இடதுபுற மூலையில் உள்ள கைதிகள் அமர்ந்திருக்கும் இடத்தை காட்டினார். அவன் மெதுவாக சென்று, அங்கு ஓரமாக நின்றான். இன்ஸ்பெக்டர் வேறு எதோ பைல் எடுத்து பார்த்து கொண்டிருந்தார். கால் மணிநேரம் சென்றிருக்கும், சௌந்தர்யா வருகிறாள். “அய்யா..” இன்ஸ்பெக்டர் திரும்பி பார்க்கின்றார்.
“யாருமா நீ?.. என்ன வேணும்? எதுவும் கம்ப்ளைன்ட் பண்ண வந்துருக்கியா?.... கான்ஸ்டபில்... ம்ம்ம்...” என கான்ஸ்டபில் கைகாட்டி, அவரை பார்க்குமாறு சொன்னார்.
“அய்யா நான் சௌந்தர்யா, கெளதம்” என அவனை கை காட்டி, “அவர பாக்க வந்தேன்.”
இன்ஸ்பெக்டர் சிரித்து கொண்டே “இன்னும் விசாரனையே ஸ்டார்ட் பண்ணல, அதுக்குள்ள வந்தாச்சு... சொல்லும்மா... எதுக்கு வந்த?”
“அய்யா, கெளதம் ரொம்ப நல்லவர். அந்த ஆக்சிடென்ட்க்கும் அவருக்கும் எந்த சமந்தமும் இருக்காது. அவர விட்டுருங்க”
“அப்பறம்...” என கேலியாக பேச,
“நிஜமாவே அவர் ரொம்ப நல்லவர். முருகனும், அவரும் ரொம்ப நல்ல ப்ரெண்ட்ஸ். முருகனோட ஆக்சிடென்ட்க்கும், இவருக்கும் எதுவும் சம்மதம் இல்ல.”
“என்னம்மா எங்கள பாத்தா எப்டி தெரியுது. நீ வந்து சொன்னா உடனே விட்டுறுவோமா?” முருகனோட போஸ்ட்- மார்ட்டம் ரிப்போர்ட் பைலை எடுத்து அவள் முன் காட்டுகிறார். “இங்க பாருமா இது போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட். முன்னாடி இது ஆக்சிடென்ட் கேஸா இருந்துச்சு. இப்போ கொலை கேஸ் ஆகிடுச்சு. முருகன் லாஸ்ட்டா இவன தான் பாக்க வந்துருக்கான். அதவும் முருகன் இவன பாக்க வந்ததுக்கு சாட்சி இருக்கு. சோ கேஸ் ஸ்ட்ரோங். இப்போ எதுவும் பண்ண முடியாது. நீ கிளம்புமா.”
சௌந்தர்யா பேசாமல் கெளதமை திரும்பி பார்த்தாள். அவன் முகம் எதுவும் தனக்கு தெரியாது என்பது போல் இருந்தது. அவள் இன்ஸ்பெக்டரை பார்த்து “சார், நான் அவர் கூட கொஞ்சம் பேசிக்கிறேன்.”
“உனக்கு அஞ்சு நிமிசம் தான்மா டைம், அதுக்கு மேல கிடையாது. அப்பறம் சார, ஒழுங்கா எதுக்கு கொலை பண்ணினானு சொல்ல சொல்லு. அது தான் அவனுக்கு நல்லது.”
என கூறிவிட்டு வேற பைலை எடுத்து பார்க்க ஆரம்பித்தார். இருவரும் ஓரமாக சென்று பேசினார்கள். அவர்களுக்கு தெரியாமல் இன்ஸ்பெக்டர் கான்ஸ்டபிளை பார்த்து, அவர்களை கவனிக்குமாறு கண்ணசைத்தார்.
“கெளதம் என்ன இது... இப்டி சொல்றாங்க. என்ன நடந்தது.”
அவனது முகத்தையே பார்த்து கொண்டிருந்தாள். ஆனால் அவனது முகம் சோகத்தில் பேச எதுவும் முயற்சி கூட செய்ய தோன்றாமல், முருகனை இழந்த கவலையில் கண்களின் ஓரத்தில் கண்ணீருடன், எப்படி நடந்தது, என்ன செய்வது, எப்படி செய்வது என ஒன்றும் புரியாமல் பதற்றத்துடன் இருந்தான். சௌந்தர்யா அவனது கையை பரிவுடன் பிடித்தாள். அவன் நிமிர்ந்து பார்த்தான். அவன் கண்களில் பயம், சோகம், ஆதரவற்ற நிலையில் பரிதவிக்கும் சிறு குழந்தை போல் காணப்பட்டது. அவள் அவனை புரிந்தவள், அவளது ஆதரவு அவனுக்கு முக்கியம் என்பதை உணர்ந்தவள், மன தைரியம் அதிகம் கொண்டவளும் கூட, இந்த நிலையில் அவனை தாங்கும் கைகள் அவளுக்கு வேண்டும் என்பதை நன்கு அறிந்திருந்தாள்.
“நான் உங்கள நம்புறேன். உங்க கூட தான், நான் எப்போவும் இருப்பேன். எதுக்கும் கவலை படாதீங்க. நான் எப்டியாது உங்கள வெளில கொண்டு வருவேன். இப்போ கூட உங்கள கூட்டிட்டு வர்றதுக்கு, உதவிக்காக சந்தோஷ் கூப்பிட போனேன். அவர் இல்லன்னு சொல்லிட்டாங்க. என்ன பண்ணனு எனக்கு தெரியல.”
இன்ஸ்பெக்டர் அவர்களை பார்த்தார். அவன் என்ன பேசுகிறான் என கவனித்து கொண்டு இருந்தார். அப்போது டெலிபோன் ஒலித்தது. உடனே அவர் கான்ஸ்டபிளை நோக்கி அவர்களை கவனிக்குமாறு கண்ணசைத்தார். கான்ஸ்டபில் தலையசைத்த உடன், போன் பேச ஆரம்பித்தார். போன் பேசி முடித்த உடன் எழுந்தார்.
“கான்ஸ்டபில்.... எனக்கு வெளில வேலை இருக்கு. நான் கிளம்புறேன். ஸ்டேஷன் பாத்துக்கோங்க. எனி எமர்ஜென்சி... எனக்கு கால் பண்ணுங்க. நான் ஒரு ஒன் ஹவர் ல வந்துருவேன். அப்பறம்... அந்த எல்லா அக்கியூஸ்டயும் லாக் அப் ல வைங்க.” என கூறி விட்டு வெளியே சென்றார். வண்டி அருகே வந்தவுடன் ஏதோ தோன்றியது போல “ கான்ஸ்டபில்...”
“சார்... சொல்லுங்க.”
“அந்த பொண்ண அனுப்புங்க முதல்ல, நான் வர்ற வரைக்கும் பாத்துக்கோங்க.”
“ஓகே சார். நான் அந்த பொண்ண அனுப்பிடுறேன் இப்போவே.”
வண்டி கிளம்பியது. கான்ஸ்டபில் முத்து உள்ளே சென்றார். கெளதம், சௌந்தர்யா இருவரும் பேசி கொண்டு இருந்தனர்.
“ஏய்! பொண்ணே...” திரும்பவில்லை அவர்கள். “இந்தாமா... இங்க பாரு...” சௌந்தர்யா திரும்பினாள், அவர் ஏளனத்தோடு “கிளம்பு... போதும் பேசினது. போ.. போ...”
“அதான் அய்யா போய்ட்டாங்க, நீங்க கொஞ்ச நேரம் எங்கள பேச விடுங்க அண்ணா, நான் இன்னும் கொஞ்ச நேரம் இருக்கேன்”
“என்னம்மா... அதுக்கெல்லாம் அனுமதி கொடுக்க முடியாது, நீ விட்டா இங்கயே இருப்ப போல, கிளம்பு. சார் வந்தா எங்களுக்கு தான் திட்டு விழுகும். இன்ஸ்பெக்டர் போகும் போது சொல்லிட்டு போயிருக்கார். கிளம்புமா”
“ப்ளீஸ் அண்ணா...”
“போம்மா...” என அவர் கூறியவுடன், விளித்து கொண்டிருந்தாள். கெளதமை பார்த்தால், கிளம்பு என கண்ணசைத்தான். ஸ்டேஷன் விட்டு வெளியே சென்றவள், குழப்பத்தோடு நடக்க ஆரம்பித்தாள். இடையே மரத்தடி பிள்ளையார் கோவில் வந்தது. அங்கு வந்தவுடன் நின்று கண் மூடி வேண்டுகிறாள்.
‘உன்ன நம்பி தான நாங்க இருக்கோம். நீ இப்டி பண்ணலாமா கடவுளே?...
உனக்கு அவர பத்தி நல்லாவே தெரியும், அவருக்கு ஏன் இப்டி சோதனைய கொடுக்குற?....
நாங்க நல்லா இருக்குறது உனக்கு பிடிக்கலையா?....
இதுவரைக்கும் அவர் எவ்ளோ கஷ்டப்பட்டார், உன்ன வணங்காம எந்த வேலையும் தொடங்கமாட்டார், இருந்தும் அவருக்கு தான் கஷ்டம் எல்லாம். உன்ன கும்பிடுறதுக்கு அர்த்தமே இல்லாம போச்சு.
இப்போ அவர் எப்படி இதுல இருந்து வெளில வர போறாரோ?....
எனக்கு ஒண்ணுமே புரியல, என்ன பண்ண, எது பண்ணனு?...
ஆனாலும் உன் மேல வச்ச நம்பிக்கைய மட்டும் நாங்க விடல. கண்டிப்பா நீ காப்பாத்துவனு நாங்க நம்புறோம். கை விட்டுறாத பிள்ளையாரப்பா.’
மனதினுள் முறையிட்டு கொண்டவாறே, கண்களில் வழிந்த நீரை துடைத்து கொண்டு, சுற்றி பார்க்கிறாள். “திருநீர் எங்க காணோம்.” சிலைக்கு பின்புறம் திருநீர் கும்பா உள்ளதை பார்க்கிறாள். அதில் இருந்து திருநீரை எடுத்து நெற்றியில் பூசுகிறாள். பின்பு மெதுவாக திரும்பி கிளம்ப எத்தனித்த போது, தெரு முனையில் உள்ள டீக்கடை பெஞ்சில் சைமன் அமர்ந்திருப்பதை காண்கிறாள். அவனை கூப்பிட வாய் திறந்தாள். பின்பு அது ஒரு மக்கள் அதிகம் நடமாடும் சாலை, அவனை பேர் சொல்லி கூப்பிடுவது தேவை இல்லாதது என அவளுக்கு தோன்றியது. அருகில் சென்று கூப்பிட்டு பேசலாம் என நினைத்து கொண்டு அவன் இருக்கும் இடத்தை நோக்கி நடந்தாள்.
பாதி தூரம் சென்றிப்பாள். யாரோ அவனை இடித்து சென்றதில் கையில் வைத்திருந்த நியூஸ்பேப்பர் கீழே விழுந்தது. அதை எடுக்க எழுந்தவன், இவளை பார்த்தது போன்று தோன்றியது அவளுக்கு. அவன் பேப்பரை பெஞ்சில் வைத்துவிட்டு திரும்பி நடக்க ஆரம்பித்தான். அவன் நகர ஆரம்பிக்கவும், இவள் சைமனை அழைத்தாள். ஆனால் அவன் வேகமாக நடந்து, தெருவை கடந்து சென்று கொண்டிருந்தான். இவள் வேகமாக நடந்தும், இடையில் கார் ஒன்று வந்ததால் நின்று செல்வதற்குள் அவன் எங்கு சென்றான் என்பது அவளுக்கு தெரியவில்லை. அவன் எந்த பக்கம் சென்றிருப்பான் என தேடினாள். அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை. பின் அங்கிருந்து சென்றுவிட்டாள்.