Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
33
மீண்டும் கொங்கு தேசத்தில்
மீண்டும் கொங்கு தேசத்தில்
கோவிலில் இருந்து புறப்பட்ட சூர்யாவின் மனமோ தாங்க இயலாத வேதனையில் உழன்றது. எந்த காதலுக்காக ஈஷ்வரை எதிர்த்து கொண்டாலோ இப்போது அந்த காதலையே விட்டு கொடுக்கும் சூழ்நிலை உருவாகும் என்று அவள் கனவிலும் எண்ணியிருக்கவில்லை. அபியின் உயிரை விடவும் காதல் பெரிதல்ல என்று சொல்வது சுலபமாயிருந்தாலும் அதை நடைமுறையில் செயல்படுத்தும் மனோதைரியம் அவளிடம் இல்லை. இன்னொரு புறம் ஈஷ்வரால் அபியின் உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் என்ற கவலை வேறு அவளை ஆட்கொண்டு தவிப்புற செய்து கொண்டிருந்தது. எந்நிலையிலும் தைரியத்தை விடாமல் எந்த பிரச்சனையானாலும் எதிர்கொள்ள வேண்டும் என்ற சூர்யாவின் துணிவும் இப்போது அவளை விட்டு தொலைதூரம் சென்றுவிட திக்கில்லாத காட்டில் சிக்கி கொண்டவளாக சூர்யாவின் நிலைமையிருந்தது.
அவள் வீட்டினை அடைந்த போது வாசலில் நின்றிருந்த காரை கவனித்த நொடி ஈஷ்வரின் வருகையை அறிந்து கொண்டாள். அதிர்ச்சியோடு வாசலிலேயே நின்றவளுக்கு உள்ளே சென்று அவனை எதிர்கொள்ளவே வெறுப்பாய் இருந்தது. அந்தளவுக்கு அவனின் நடவடிக்கை அவளுக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்க அவன் என்ன திட்டத்தோடு வந்திருக்கிறான் என்பதை அறியவாச்சும் தான் உள்ளே சென்றுதானாக வேண்டும் என விருப்பமின்றி உள்ளே நுழைந்தாள்.
ஈஷ்வர் முகப்பறையில் கம்பீரமாய் இருக்கையில் வீற்றபடி அவளின் தந்தையிடம் பேசிக் கொண்டிருக்க அங்கே நின்றிருந்த அவளின் தாய் சூர்யாவை பார்த்து "இதோ சூர்யா வந்துட்டாளே" என்று அறிவிக்க அவனோ எதிர்பார்ப்போடு அவளின் மீது பார்வையை திருப்பினான். சூர்யாவின் கண்கள் வெறுப்பாய் உமிழ்ந்தபடி நிற்க
சுந்தர் அவளை நோக்கி "பாஸ்... வந்திருக்காரு... வாங்கன்னு கூட கூப்பிடாம சிலை மாறி நிக்கிற" என்றார்.
ஈஷ்வர் புன்னகையோடு "என்னை திடீர்னு பார்த்ததும் சூர்யாவிற்கு பேச்சு வரல போல... ஷாக்காயிட்டிருப்பா? " என்றான்.
சூர்யாவும் ஆமோதித்திபடி "ஆமாம்... திடீர்னு இப்படி உங்களை பார்த்ததும் ஷாக்காயிட்டேன்... முன்னாடியே ஒரு வார்த்தை வரன்னு சொல்லிருக்கலாமே" என்று கேட்க,
"சொல்லியிருந்தா" என்று அவன் புன்னகையிக்க
அவள் வெறுப்பை காட்டிக் கொள்ளாமல் "நல்லா கிராண்டா வெல்கம் பண்ணிருக்கலாம்.." என்று அவள் சொன்ன தொனியில் இருந்த அர்த்தத்தை ஈஷ்வர் மட்டுமே உணர்ந்து கொள்ள
அது புரியாமல் அவளின் தந்தை அவனை நோக்கி "சூர்யா சொல்றதும் சரிதான்... நீங்க என்கிட்டயாச்சும் வரன்னு ஒரு வார்த்தை சொல்லிருக்கலாமே" என்று வினவினார்.
ஈஷ்வர் சூர்யாவை பார்த்தபடியே "அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனையில்லை... நான் கெஸ்ட்டா வரல உங்க வீட்டில ஒருத்தனதான் வந்திருக்கேன்.." என்று உரைக்கும் போது சந்தியா காபி கோப்பையோடு வந்து நின்றார்.
சில நிமடங்களில் ஈஷ்வர் சந்தியாவிடமும் ரொம்பவும் இயல்பாய் பேசி பழகினான். சுந்தரின் புறம் திரும்பி ரம்யாவை பற்றியும் விசாரிக்க அவளும் சில நிமடங்களில் மருத்துவமனையில் இருந்து வந்து சேர்ந்தாள். ரம்யா ஈஷ்வரை பற்றி அறிமுகமான சில நொடிகளில் தன் பெற்றோர்களை இணைத்து வைத்த காரணத்திற்காக நன்றியாய் கூறியதில்லாமல் அவனின் மதிப்பான பேச்சும் எளிமையோடு பழகும் திறனும்அவளை வியப்பில் ஆழ்த்தியிருந்தது. ரொம்பவும் குறுகிய நேரத்தில் அவன் அவர்கள் குடும்பத்தில் ஒருவனாய் பழகிவிட்டிருந்தான். இத்தனை நேரத்திலும் அவன் பார்வை சூர்யாவின் பாவனைகளை மறவாமல் கவனித்து கொண்டிருந்தன. நொடி நேரத்தில் எல்லோரையும் கவர்ந்துவிடும் அவனின் வல்லமையே அவனின் அபராமான திறமை போல என எரிச்சலோடு எண்ணிக் கொண்டாலும் யாரிடமும் அவள் தன் மனதின் எண்ணத்தை காட்டாமல் சிரமப்பட்டு அந்த நொடி நடித்து கொண்டிருக்க அவன் புறப்படுகிறேன் என சொன்ன ஒற்றை வார்த்தைதான் அவளுக்குள் நிம்மதியை ஏற்படுத்தியது.
ஆனால் அவன் கிளம்புவதற்கு முன்னதாக சூர்யாவை பார்த்து "நாளைக்கு காலையில பத்து மணிக்கு ப்ளைட் சூர்யா... அப்புறம் ஒரு டுவன்டி டேஸ் ஆகும் வொர்க் முடிய... எல்லாத்துக்கும் ப்ரிப்பேர்ட்டா வந்திரு..." என்று சொன்னவனை பார்த்து அதிர்ச்சியில் அவள் உறைந்தபடி நிற்க அவன் எல்லோரிடமும் விடைபெற்றுவிட்டு வேகமாய் வெளியேறினான்.
சூர்யா அவசரமாய் அவன் பின்னோடு வந்து நின்று காரில் ஏறப்போனவனிடம் "யாரை கேட்டு நீ எனக்கும் சேர்த்து ப்ரோக்ராம் பிஃக்ஸ் பண்ணிட்டிருக்க.. அதுவும் டுவன்டி டேஸ்.. முடியவே முடியாது" என்றாள்.
அவன் இறுக்கமான பார்வையோடு "நான் உன்கிட்ட பெர்மிஷன் எல்லாம் கேட்கல... இன்ஃபர்மேஷன் சொன்னேன்" என்றான்.
அவள் எரிச்சல் நிறைந்த பார்வையோடு "நீ என்ன கம்பெல் பண்ண முடியாது... நான் வரமாட்டேன்" என்று சொல்லிவிட்டு செல்ல பார்த்தவளிடம் "நீ வரனும் சூர்யா.. அப்பதான் நம்ம சவால் படி அபிமன்யு என்கிட்ட தோற்கிறதை நீ பார்க்க முடியும்... " என்றான்.
சூர்யா குழப்பமாக அவனை நோக்கி திரும்ப ஈஷ்வர் காரில் ஏறிவிட்டு "நாளைக்கு நீ வர்லன்னா... இப்ப நாட் ரிச்சப்பளில் இருக்கிற அபிமன்யு... எப்பவும் நாட் ரிச்சபிளில் போயிடுவான்... அப்புறம் உன் இஷ்டம்" என்று சொன்ன மறுகணம் கார் கதவை மூடிவிட்டு, வேகமாய் விரைந்தான்.
ஈஷ்வரின் வார்த்தைகள் சூர்யாவை கலங்கடித்திட அபிமன்யுவிற்கு என்ன நேர்ந்துவிடுமோ என ஒவ்வொரு நொடியும் நெஞ்சம் பதற தொடங்கிய அதே சமயத்தில் ஈஷ்வரோடு தனியாய் பயணிப்பதை எண்ணும் போதே அவள் தேகமெல்லாம் நடுக்கமுறச் செய்தது.
அந்த இரவு விடியாமலே நீண்டு கொண்டிருக்க வேண்டும் என்று எண்ணியபடி படுக்கையில் சரிந்தவளின் தன்னம்பிக்கையும் சரிந்து போயிருந்தது.
பொழுது புலரத் தொடங்க நிலமகளை தம் ஆயிரம் கரங்களால் சிறையெடுத்து கொண்டான் ஆதவன்.
வேறுவழியில்லாமல் சூர்யா எழுந்து ஒரு இயந்திரம் போல சென்னை ஏர்போர்ட்டிற்கு செல்ல தயாரானவள் கண்ணாடியின் முன் நின்ற போது அவள் கண்ட பிம்பத்தை அவளாலயே நம்பமுடியவில்லை. முதல்முறையாய் கண்ணாடியில் பிரதிபலித்தது அவளின் பயந்த முகம்தான். ஈஷ்வரோடு இருக்க போகும் தருணங்களை குறித்த அழுத்தமான அச்சம். எனினும் அதனை சற்றும் விரும்பாதவள் அவள் பிம்பத்திடமே "நான் ஏன் பயப்படனும்... அந்த ஈஷ்வரால் என்னை என்ன பண்ணிட முடியும்... கண்டிப்பா அபிமன்யுகிட்ட ஈஷ்வர் தோற்கதான் போறான்... அதை நான் பார்க்கதான் போறேன்... " என்று தீர்க்கமாய் உரைத்துவிட்டு மனோதிடத்தை வரவழைத்து கொண்டு தெளிவுபெற்றவளாய் புறப்பட்டாள்.
சென்னை விமான நிலையத்தை அவள் வந்தடைந்த நொடி அவள் சுற்றிலும் பார்வையை அவனை தேடியபடி அலைபாயவிட கைப்பேசியில் அவனை அழைக்கவும் விருப்பமில்லாமல் தன் பெட்டியை பிடித்து சாய்வாய் நின்றபடி காத்திருந்தவளின் மெல்லிய இடிப்பை ஒரு கரம் வளைக்க பதறியபடி விலகி திரும்பியவள் வெறுப்பாய் பார்த்து "யூ ஆர் டிஸ்கஸ்டிங்" என்று வெறுப்பை உமிழ்ந்தாள். அவனோ வசீகரமான புன்னகையோடு அவளை பார்த்து கண் சிமிட்ட அவனை அழுத்தமாய் முறைத்து கோபத்தை வெளிப்படுத்திவிட்டு பதில் பேசாமல் முன்னே தன் பெட்டியை இழுத்து கொண்டு நடந்தாள்.
சென்னையிலிருந்து கோயமுத்தூர் புறப்படும் விமானத்தில் இருவருமே தங்கள் பயணத்தை மேற்கொண்டனர்.
சூர்யா விமானத்திலிருந்து இறங்கும் வரை ஈஷ்வரின் புறம் பார்வையை கூட திருப்பவில்லை. அவளின் கோபத்தை தாண்டிய இந்த நிராகரிப்பு அவனுக்குள் அதீதமான எரிச்சலை உண்டாக்கியிருந்தது.
அவர்களின் எண்ணங்கள் எந்த இடத்தில் நிறைவேறாமல் முடிவுற்றதோ அங்கயே அவர்கள் போராட்டம் மீண்டுமே தொடர இருக்கிறது. இனி வரப் போகும் நாட்கள் அவர்கள் மூவரின் வாழ்க்கையையும் முற்றிலுமாய் புரட்டிப் போடவும் காத்திருந்தது.
மதி விமான நிலையத்திற்கு அவர்கள் இருவரையும் அழைத்து செல்ல வந்திருந்தான். மதிக்கு தன் பாஸை பார்த்த மாத்திரத்தில் முகம் அத்தனை பிரகாசமடைய அதே பிரதிபலிப்பு ஈஷ்வரின் முகத்திலும் இருந்தது. மதி சூர்யாவிடமும் இயல்பாய் விசாரிக்க அவளும் பெயருக்கென்று அவனிடம் பதிலுரைத்தாள். அதுமட்டுமின்றி அவள் எந்த உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தாமல் அழுத்தமாகவே அவர்களோடு வந்தாள். ஈஷ்வரும் மதியும் ஏதோ ரகசியமான சம்பாஷணைகளில் ஈடுபட, சூர்யாவின் கவனமோ அவர்களிடம் இல்லை. அவள் அப்படி எதிலும் ஆர்வமின்றி பொருட்படுத்தாமல் இருக்க ஈஷ்வர் அப்போதைக்கு அவளை அவள் போக்கிலேயே விட்டிருந்தான். அன்று மாலையே கோவை பிரேஞ்சில் நடந்த மீட்டிங்கில் ஈஷ்வருக்கு வரவேற்புகள் பலமாய் நடக்க அங்கேயும் அவனின் பேச்சு வல்லமையால் எல்லோருமே ஈர்க்கப்பட்டனர்.
மீட்டிங் நன்றாகவே முடிந்த நிலையில் ஈஷ்வரும் மதியும் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் இருந்தபடி உரையாடி கொண்டிருந்தனர்.
ஈஷ்வர் மதியை நோக்கி "எல்லா ஏற்பாடும் பக்காவே செஞ்சிட்டல்ல மதி..." என்று கேட்க
மதி தலையசைத்தபடி "எஸ் பாஸ்" என்றான்.
ஈஷ்வர் இறுக்கமான பார்வையோடு "ஏதாச்சும் தப்பா நடந்துச்சு ?" என்று முறைக்க மதி அவனின் பார்வையின் கூர்மையால் அஞ்சியபடி
"கண்டிப்பா நடக்காது பாஸ்.. எல்லா ஏற்பாடும் பக்காவா பண்ணியாச்சு... இந்த தடவை ஒரு சின்ன தப்பு கூட நடக்காது" என்று உறுதி கொடுக்க ஈஷ்வரும் "ம்ம்ம்.. பார்க்கலாம்" என்றான்.
இப்படியாக அவர்கள் பேசிக் கொண்டிருக்க ஈஷ்வரின் கைப்பேசி அவந்திகாவின் அழைப்பை அறிவிக்க மதி அந்த அறையை விட்டு நாகரிகமாய் வெளியேறினான்.
ஈஷ்வர் அழைப்பை ஏற்று "எஸ் மாம்... நானே பேசனும்னு நினைச்சேன்... நீங்களே கால் பண்ணிட்டீங்க" என்றான் ஆர்வமாக.
அவந்திகா மறுபுறத்தில் "எப்போ மும்பைக்கு வருவ தேவ் ?" என்று வினவ
"கொஞ்சம் வொர்க் இருக்கு மாம்... முடிஞ்சதும்" என்றான்.
"பிரேஞ்ச் மீட்டிங் எல்லாம் முடிஞ்சிடுச்சி இல்ல... இன்னும் என்ன வொர்க் ?" என்று சந்தேகமாய் கேள்வி எழுப்பினார்.
"தமிழ்நாட்ல ஒரு ரிசர்ச் சென்ட்ர் ஓபன் பண்ணலாம்னு ஒரு ஐடியா... அது ரிகாடிங்கா" என்று சொல்லும் போதே
அவந்திகா உடனடியாக "என்கிட்ட இதை பத்தி சொல்லவே இல்லையே" என்றார்.
"நானே சொல்லலாம்னு நினைச்சேன்... அதுக்குள்ள நீங்களே"
அவன் சொன்ன அந்த காரணம் நம்பகத்தன்மை கொண்டதாக இல்லையெனினும் அதை குறித்து அவர் பேசாமல் அமைதியாய் இருந்துவிட்டு மீண்டும் யோசனையோடு
"ஒகே அது போகட்டும்... உன்கிட்ட வேறு ஒரு விஷயம் கேட்கனும்" என்றார்.
"ம்ம்ம்... சொல்லுங்க மாம்"
Last edited: