வானமும் கடலும்
சென்னை விமான நிலையம் பரபரப்பாய் இயங்கி கொண்டிருக்க, ஜென்னியும் புறப்படுவதற்கான தயார் நிலையில் நின்றாள்.
ராகவ் விமான நிலையத்திற்கு அவளை வழியனுப்ப வருவதாக சொல்ல, அவன் வந்தால் தேவையில்லாமல் கூட்டம் கூடும் என மறுதலித்துவிட்டு அலைப்பேசியின் மூலமாகவே அவனிடம் விடைப்பெற்று கொண்டாள்.
டேவிடையும் அவள் வர வேண்டாமென மறுத்திருக்க, அவனோ கேட்காமல் அவளுடன் வந்தான்.
"சரி... நான் கிளம்பிறேன்... அங்கிளை பார்த்துக்கோங்க... அவர்கிட்ட கொஞ்சம் நார்மலா பேசுங்க" என்றாள் புறப்படுவதற்கு முன்னதாக,
"ஹ்ம்ம்" என்றான்.
அவளை பிரிய முடியாத தவிப்போடு அவன் முகம் வாட்டமுற்றிருக்க,
"ஜஸ்ட் டென் டேஸ்தான்... நான் திரும்பியும் சென்னைக்கு வருவேன் டேவிட்" என்றவள் அவன் மனநிலைமையை புரிந்து சமாதானம் சொல்ல
வார்த்தைகள் வராமல் "ஹ்ம்ம்ம்" என்றான் அதற்கும்.
அவன் விழிகள் மெல்ல கலங்க,
"டேவிட் என்ன?" என்று அவள் புரியாமல் கேட்க,
"உம்ஹும்... நத்திங்... யூ டேக் கேர்.." என்று தன் விழியோரம் நின்ற கண்ணீரை துடைத்துவிட்டு, அவளை புறப்படச் சொல்ல,
அவன் தவிப்பையும் ஏக்கத்தையும் உள்வாங்கியவளுக்கோ உள்ளம் கனத்து போனது.
அவள் பாதங்கள் முன்னேறி நகர்ந்தாலும் அவள் மனமோ பின்தாங்க, அது எத்தகைய உணர்வு என்று அவளாலே யூகித்து கொள்ளவே முடியவில்லை.
*********
அவள் சென்று ஒரு வாரம் கடந்திருந்தது.
அன்று டேவிட் விடியற் காலையிலயே தேலாயத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருக்க, மகனின் வருகைக்காக முகப்பு அறையில் காத்திருந்தார் தாமஸ்.
அவன் வருவதை பார்த்ததுமே தன் ஸ்டிக்கின் உதவியோடு எழுந்து நின்றவர் "டேவிட்" என்றழைக்க, அவன் அவரருகில் சென்றான்.
அவர் ஆனந்தமாய் மகனை கட்டியணைத்தபடி "ஹேப்பி பர்த்டே மை ஸன்" என்று உரைக்க, டேவிட் விழிகளில் நீர் துளிர்த்து விழுந்தது.
எப்போதும் அவன் பிறந்த நாளுக்கு அவர் தந்தையிடம் இருந்து விலையுயர்ந்த பரிசுகள் தவறாமல் வரும்.
கோல்ட் வாட்ச், டைமன்ட் ரிங், கார் இப்படியாக.
ஆனால் கரிசனத்தோடும் அன்போடும் அவர் அணைத்துக் கொண்டு வாழ்த்தியது இதுதான் முதல்முறை.
அவன் இதுநாள் வரை அவரிடமிருந்து எதிர்பார்த்து ஏங்கியது அந்த அன்பான அரவணைப்புகாக மட்டும்தான்.
இன்றுதான் அவர் தந்ததிலேயே அவன் பெற்றிராத விலைமதிப்பில்லாத பரிசு என்று எண்ணிக் கொண்டு அவனும் அவரை ஆரத்தழுவிக் கொள்ள, அந்த தருணம் ரொம்பவும் நெகிழ்ச்சியாய் மாறியிருந்தது.
மெல்ல இருவரும் இயல்பு நிலைக்கு திரும்ப அப்போது தாமஸ் தன் மகனிடம் "ஜென்னி உன்கிட்ட கொடுக்க சொல்லி ஒரு கிஃப்ட் கொடுத்துட்டு போயிருக்கா" என்க,
"நிஜமாவா?!" என்று கேட்டவனின் முகம் அத்தனை பிரகாசமாய் மாறியது.
தாமஸ் அந்த கணம் ஒர் பணியாளனை அழைத்து தன் அறையிலிருந்த பரிசை எடுத்துவர சொல்லி பணிக்க, அவனும் அதை எடுத்து வந்தான்.
டேவிட் அதை ஆர்வமாய் பிரித்து பார்க்க அது ஓர் தத்துரூபமான ஓவியம்.
நீல நிற வானமும், அலை மோதிக் கொண்டிருக்கும் கடலுமென உயிரோட்டமாய் காட்சியளித்த அந்த ஓவியத்தை உன்னிப்பாய் கவனித்தான்
தன்னிலை மாறாமல் இருக்கும் வானமும் ஓயாமல் அலைமோதும் அந்த கடலும் இணைந்தே இருந்தாலும் அவை சேர்வது சாத்தியமில்லை.
அப்படிதான் நம் உறவும் எந்நிலையிலும் சேரவே முடியாது என்பதை அவள் அந்த ஓவியத்தின் மூலம் உணர்த்துகிறாள் என்பதை அவன் மனம் நன்றாகவே புரிந்து கொண்டது.
ஜென்னி சரியாய் அந்த சமயம் டேவிடின் அலைப்பேசிக்கு தொடர்பு கொண்டு உற்சாகம் ததும்பிய குரலில் "ஹேப்பி பர்த்டே டேவிட்" என்று வாழ்த்தினாள்.
"தேங்க் யூ"
"கிஃப்ட் எப்படி இருந்துச்சு" அவள் ஆர்வமாய் கேட்க,
"ரொம்ப அழகாவும் இருந்துச்சு... அர்த்தமுள்ளதாவும் இருந்துச்சு... தேங்க்ஸ்" என்றவனின் குரலில் தொனித்த இறுக்கம் அவள் மனதை பிசைந்தது.
அவள் பதில் பேசாமல் மௌனமாகிட, டேவிட் அந்த நொடி "சென்னைக்கு எப்போ வர ஜென்னி" என்று கேட்டு அவள் எண்ணத்தை திசைமாற்றினான்.
"தெரியல டேவிட்..." என்றவள்,
பின்னர் "டேவிட்...எனக்கு ஒரு ரிக்வஸ்ட் ? பண்ணுவீங்களா?" என்று அவனிடம் கெஞ்சலாய் கேட்டாள்.
"சொல்லு ஜென்னி"
"இன்னைக்கு நைட் ஸெவனோ க்ளாக்... நான் சொல்ற பிளாஸுக்கு வரனும்... முடியுமா ?!"
"எங்கே ?"
"அதெல்லாமே நான் சொல்றேன்... நீங்க வர முடியுமா ?! அது மட்டும் சொல்லுங்க" என்றாள்.
"நீ கேட்கும் போது நான் மாட்டேன்னு சொல்லுவேனா ?"
"தட்ஸ் கிரேட்" என்றவளின் குரலில் அத்தனை சந்தோஷம்.
அவள் குரலில் தொனித்த சந்தோஷத்திற்கான காரணி அப்போது அவனுக்கு புரியவில்லை.
ஆனால் அவள் சொன்ன இடத்திற்கு சென்ற பின் அவனுக்கே தானாக புரிந்து போகும்.
continuation nxt epi .வானமும் கடலும்
Hi friends,
முந்தைய அத்தியாயத்திற்கான உங்களுடைய கருத்துக்களுக்கு மிகுந்த நன்றி. இந்த அத்தியாயத்திற்கான உங்கள் கருத்துக்களை மறவாமல் பகிர்ந்து கொள்ளுங்கள். மற்றபடி ஏதேனும் பிழை இருப்பின் தயவுகூர்ந்து பொறுத்தருளுங்கள்.
சுவராஸ்யமான நெகிழ்ச்சியான மற்றும் நம்ப முடியாத சில வேதனையான நிகழ்வுகளும் அடுத்த அடுத்த பதிவுகளில்..
காத்திருங்கள்.