Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
சாக்ஷியின் மனநிலை
மகிழ் நொறுங்கி போய் நின்றிருக்க, மாயா அவன் சட்டையை விடுவதாக இல்லை. அதே கேள்வியை திரும்ப திரும்ப அவள் கேட்டு அவனை வேதனைப்படுத்திக் கொண்டிருந்தாள்.
மாயா எதற்காக அப்படி கேட்க வேண்டும்?
இந்த கேள்விக்கான காரணத்தை எண்ணியபடியே அவன் சிலையாக சமைந்திருந்தான்.
மாயாவின் செயலை கவனித்த அவளின் தாய் யாழ்முகை, மகிழை அவளிடமிருந்து விடுவித்து,
"ஏன் மாயா இப்படி நடந்துக்கிற... ?" என்று கோபமாய் கடிந்து கொண்டார்.
மாயா உடனே முகத்தை மூடி அழ, மகிழ் அதிர்ச்சியில் இருந்து மீளாமலே நின்றிருந்தான்.
யாழ்முகை மகிழை நோக்கி "ஒண்ணும் தப்பா எடுத்துக்காதீங்க மகிழ்... சாக்ஷியோட இழப்பை அவளால தாங்கிக்க முடியல...
அதனாலதான் அவ இப்படி நடந்துக்கிட்டா?!" என்றார்.
மகிழால் அந்த சமாதானத்தை ஏற்கமுடியவில்லை. மாயாவின் வார்த்தை ஏதோ உணர்ச்சிவசத்தால் வெளிவந்ததல்ல. அதில் ஆழமான வலி இருந்தது.
மாயா நிறுத்தாமல் அழுது கொண்டே இருக்க மகிழ் அவளிடம்,
"எதுக்கு அப்படி என்னை கேட்டீங்க...? எனக்கு மட்டுமே அவ இழப்பு வலியில்லையா மாயா ?!"
மாயா முகத்தை துடைத்து நிமிர்ந்தவள் "என்னை விடவா உங்களுக்கு வலியும் இழப்பும் ???" என்று கேட்டு நிறுத்த, அவளுக்கு எப்படி தன் காதலின் வலியை புரிய வைக்க...
"உங்களவுக்கு நான் சாக்ஷி வாழ்க்கையில இல்லதான்... ஒத்துக்கிறேன்... ஆனா நான் அவளை உயிருக்கு உயிரா நேசிச்சேன்... அதோடு வலி என்னன்னு உங்களுக்கு நான் சொன்னாலும் புரியாது மாயா" அழுத்தமாய் சொல்லி முடித்தான்.
"சாக்ஷி பேரை கூட நீங்க சொல்ல வேண்டாம்" சீற்றமாய் மாயா தன் ஒற்றை விரலை காட்டி அவனை எச்சரித்தாள்.
மகிழால் மாயாவின் கோபத்தின் பிண்ணனி என்ன என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.
யாழ்முகை மாயாவின் தோள்களை பிடித்து "என்னாச்சு மாயா உனக்கு... ? ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கிற ?" என்றதும் அவள் கோபத்தோடு "இவரை முதல்ல இங்கிருந்து போகச் சொல்லுங்கமா" என்று கத்தினாள்.
யாழ்முகை தன் மகளின் மனநிலையை புரிந்து மகிழிடம் "இப்போதைக்கும் நீங்க இங்கிருந்து கிளம்புங்க மகிழ்... அப்புறம் பேசிக்கலாம்" என்றார் இளகிய பார்வையோடு!
"இல்ல ஆன்ட்டி... நான் மாயாகிட்ட சில விஷயங்கள் கேட்கனும்... அதுவும் முக்கியமா அவங்க என் மேல ஏன் கோபமா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்கனும்"
யாழ்முகைக்கு மாயாவின் மனநிலையை யூகிக்க முடியவில்லை.
மாயா அலட்சியமாக திரும்பி கொண்டவள் "நான் தேவையில்லாம யார்கிட்டயும் பேச விருப்பப்படலம்மா... அவரை போக சொல்லுங்க" என்று சொல்லி திரும்பி நடக்க
"நில்லுங்க மாயா... சாக்ஷிக்கு எப்படி ஆக்ஸிடென்ட் நடந்துச்சுன்னு சொல்லிட்டு போங்க..."
"உங்களாலதான்" என்றபடி திரும்பி நின்றாள்.
யாழ்முகை அவளை கோபமாய் பார்த்து "பைத்தியம் மாதிரி பேசாதே மாயா" என்றார்.
"நான் சரியாதான் பேசிறேன்மா... இவர் மட்டும் சாக்ஷி வாழ்க்கையில நுழையாம இருந்திருந்தா இப்படி எல்லாம் நடந்திருக்காது..."
மகிழ் தன் பொறுமையிழந்தான்.
"ஸ்டாப் இட் மாயா... ரொம்ப அதிகமா பேசிட்டிருக்கீங்க... இப்படி எல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிருந்தா நான் ப்ரண்டோட மேரேஜுக்காக டெல்லி வரைக்கும் போயிருக்கவே மாட்டேன்... என் விதி.. அவ முகத்தை கூட கடைசியா பார்க்க எனக்கு கொடுத்து வைக்காம போச்சே..." என்று புலம்பும் போது அவன் கண்களிலும் கண்ணீர் வடிந்தது.
"யாருக்கும்தான் அவ முகத்தை பார்க்க கொடுத்த வைக்கலயே மகிழ்" என்று வருத்தமாய் யாழ்முகை உரைக்கவும் மாயா தன் அம்மாவை கட்டிக் கொண்டு அழுதாள்.
"என்ன சொல்றீங்க ஆன்ட்டி ?" அதிர்ச்சியோடு கேட்டான்.
"ஆமாம் மகிழ்... ஆக்ஸிடென்ட்ல சாக்ஷி உடம்பு மொத்தமா சிதைஞ்சி போச்சு... அவளோட வாட்ச்... அவ கட்டியிருந்த புடவை...அவ கழுத்தில இருந்த ராகவேந்திரா டாலர்... அதை வைச்சுதான் ஐடென்டிபைஃவ் பண்ணோம்"
மகிழுக்கு இந்த வார்த்தைகள் உச்சப்பட்ச வலியும் வேதனையும் உண்டாக்க, அவன் தடுமாறி நின்றான்.
மாயா தாங்கமுடியாமல் அழுதபடியே இருந்தாள்.
சாக்ஷி இறந்த செய்தி அவனுக்கு டெல்லியில் இருக்கும் போதுதான் கிடைத்தது. அவன் வருவதற்கு முன்னதாகவே அவளின் இறுதி சடங்கெல்லாம் முடிவுற்றிருந்தது. அவன் வீட்டில் உள்ள யாருமே சொல்லவில்லை முழுமையாய் இந்த விஷயத்தை சொல்லவில்லை. அவன் தாங்குவானா என்று சொல்லாமல் விட்டார்கள் போல.
சாக்ஷிக்கு இப்படி ஒரு மரணம் நேரிட வேண்டுமா?
கலங்கி நின்றிருந்தான் மகிழ்.
தன் தாய் மீது சாய்ந்து மாயா கண்ணீர் வடித்துக் கொண்டிருக்க உணர்வுகளற்ற முகத்தோடு அவள் புறம் திரும்பியவன் "எப்படி மாயா சாக்ஷிக்கு இப்படி நடக்க விட்டீங்க ?... எப்பவுமே நீங்க அவ கூடதானே இருப்பீங்க...?" என்று கேட்க மாயவின் வேதனை அதிகரித்தது.
ஆம் ! சாக்ஷியை மாயா எங்கயுமே தனியாக செல்லவிட்டதில்லை. அதிகபட்சம் மாயாவும் சாக்ஷியையும் தனியாக பார்க்கவே முடியாது.
சாரதா இல்லத்தை நடத்திவரும் யாழ்முகை மாதவனின் ஒரே மகள்தான் மாயா. அவர்கள் இல்லமும் வீடும் வேறுவேறு அல்ல. மாயாவும் அங்கே இருந்த குழந்தைகளோடுதான் வளர்ந்தாள்.
ஒரு மோசமான விபத்தில் சாக்ஷியின் பெற்றோர் இறந்துவிட, அதே விபத்தில் ஐந்து வயது சாக்ஷிக்கு கண்பார்வையற்று போனது. அவளின் உறவினர்கள் யாரும் அவளை பொறுப்பேற்று வளர்க்க முன்வரவில்லை. அவள் அநாதரவாய் மாதவன் நடத்திய சாரதா இல்லத்தில் விடப்பட்டாள். மாயாவும் சாக்ஷியும் ஒரே வயதினர் என்பதாலோ என்னவோ இருவரும் நெருங்கிய தோழிகளாக மாறினர். அதுவும் மாயா சாக்ஷியை நொடி நேரம் பிரியமாட்டாள்.
அவளுக்கு இசைக்கருவிகள் வாசிக்க ஆர்வமிருப்பதை அறிந்த மாயா, சாக்ஷி வீணை பயில்வதற்கு தன் பெற்றோர்கள் மூலம் ஏற்பாடு செய்தாள்.
பல நேரங்களில் மாயா புத்தகங்கள் படிக்க, சாக்ஷி அதனை உன்னிப்பாக கேட்டு உள்வாங்கி கொள்வாள். ஒரே ஒரு முறை மாயா படிப்பதை கேட்டாலே அந்த புத்தகங்களில் உள்ள விஷயங்கள் எல்லாம் அவள் மனதில் ஆழபதிந்துவிடும் அளவுக்கான நினைவாற்றல் சாக்ஷிக்கு!
சாக்ஷி யார் துணையுமின்றி வெளியே செல்ல பழகியவள்தான். சில நேரங்களில் இசை நிகழ்ச்சிகளுக்கும் தனியாகவும் சென்றிருக்கிறாள். சமீப காலமாய் மாயா சாக்ஷியை தனியாக விடுவதில்லை. அதற்கு காரணம் சாக்ஷியின் வளர்ச்சியும் அழகும் பெருகியிருந்தது. பார்ப்பவர்களை நொடி நேரத்தில் வசீகரித்துவிடும் அழகு அவளுக்கு !
இந்த வக்கிரமான உலகத்தின் பார்வை அவளுக்கு ஆபத்தாக முடிந்துவிடும் என்ற பயம்தான்.
மகிழ் சாக்ஷியிடம் காதலை சொல்லிய போது கூட மாயாவிற்கு ஏனோ அச்சமே அதிகரித்தது. மகிழுக்கும் அவளின் அழகின் மீதே ஈர்ப்போ என்ற சந்தேகம். மாயா சாக்ஷியிடம் மகிழை காதலிக்க வேண்டாம் என மறுப்பு தெரிவித்தாள்.
ஆனால் மகிழ் ரொம்பவும் ஆழமாய் சாக்ஷயின் மனதில் நின்றுவிட்டானே! அவளால் தன் தோழியின் மனதை மாற்றவே முடியவில்லை.
மௌனமாய் நின்ற மாயாவிடம் மீண்டும் கேட்டான்.
"ஏன் என் கேள்விக்கு பதில் சொல்மாட்டிறீங்க... சாக்ஷிக்கு எப்படி இந்த ஆக்ஸிடென்ட் நடந்துச்சு ?"
மாயா அவனை நோக்கி "ஆக்ஸிடென்ட் நடந்தது இருக்கட்டும்... உங்க பிறந்த நாளுன்னு சொல்லி சாக்ஷியை தனியா கூட்டிட்டு போனிங்களே... அன்னைக்கு என்ன நடந்துச்சு ?" என்று கேட்க
"எப்பவும் போல அவளை வீட்டுக்கு கூட்டிட்டு போனேன்... பேசிட்டு சாப்பிடிட்டு அப்புறமா நானே கொண்டு வந்து டிராப் பண்ணிட்டேனே... "
"இல்ல... வேறெதோ நடந்திருக்கு... நீங்க அவகிட்ட தப்பா நடந்துக்கிட்டிருக்கீங்க.. அவளோட இயலாமையை நீங்க பயண்படுத்திட்டிருக்கீங்க"
"என்ன சொல்ற மாயா ?" என்று யாழ்முகை அதிர்ச்சியானார்.
"நீங்களா கற்பனை பண்ணிக்காதீங்க... நான் போய் சாக்ஷிகிட்ட தப்பா நடந்துப்பேனா? ... சத்தியமா இல்லை" என்று மறுதலித்தான் மகிழ்.
"அப்படி எதுவும் இல்லன்னா... அன்னைக்கு திரும்பி வந்தவ ஏன் அப்செட்டா இருக்கனும்... நான் என்னன்னு கேட்டதுக்கு என்னை கட்டிபிடிச்சிட்டு அழனும்.?...அதுவும் அவ என்கிட்ட அழுதுகிட்டே என்ன சொன்னா தெரியுமா ?! நீ சொன்னது சரிதான்...
நான் மகிழை காதலிச்சி பெரிய தப்பு செஞ்சிட்டேன்னு சொன்னா? மகிழுக்குஎன் மேல இருக்கிறது உண்மையான காதல் இல்லைன்னு சொன்னா...
இப்ப சொல்லுங்க மகிழ்... நீங்க எதுவும் பண்ணாமலா அவ அப்படி ஒரு வார்த்தையை சொன்னா ?!"
யாழ்முகை தன் மகளிடம் "என்கிட்ட ஏன் இத பத்தி முதல்லயே சொல்லல ?" என்று கேட்க
"ஏதோ இரண்டு பேருக்குள்ள சின்ன பிரச்சனையா இருக்கும்... மகிழ் டெல்லியில் இருந்து வந்த பிறகு என்ன ஏதுன்னு கேட்டுக்கலான்னு இருந்தேன்... ஆனா சாக்ஷி எந்தளவுக்கு காயப்பட்டிருந்தா நம்மகிட்ட எல்லாம் சொல்லிக்காம இல்லத்தை விட்டு போயிருப்பான்னு இப்ப தோணுது..."
"என்ன மாயா நீ... இதை பத்தி மூன்னாடியே என்கிட்ட நீ சொல்லி இருக்கனும்... போலீஸ் நம்மல குற்றவாளி மாதிரி நிற்க வைச்சி கேள்வி கேட்டாங்களே... அப்பயாச்சும் சொல்லி இருக்கலாமே..."
"எனக்கு அப்ப இருந்த பதட்டத்தில எதுவும் தோணலமா... ஆனா இப்ப பொறுமையா யோசிச்சி பார்த்தா இவர்தான் எல்லாத்துக்கும் காரணம்னு தோணுது... "
இவர்களின் சம்பாஷணைக்கு இடையில் மகிழ் அதீத குழப்பமடைந்து மாயாவை பார்த்தவாறு "உண்மையிலயே நீங்க சொல்றதை என்னால நம்ப முடியல.. சாக்ஷி அப்செட் ஆகிறளவுக்கு எதுவும் நடக்கல... அன்னைக்கு என் பிறந்த நாள்... சாக்ஷி கூட தனியா டைம் ஸ்பென்ட் பண்ணனும் தோணுச்சு... அதனாலதான் நான் அவளை அழைச்சிட்டு போனேன்"
மாயா உக்கிரத்தோடு "தப்பு என் பேர்லதான்... உங்க மனசில இருக்கிற வக்கிரமான எண்ணம் தெரியாம நான் அவளை அனுப்பியிருக்க கூடாது"
"தப்பா பேசிறீங்க மாயா" ரொம்பவும் கோபமடைந்து சொன்னான்.
"நான் தப்பா பேசல... சரியாதான் பேசிறேன்... முதல்லியே எனக்கு தோணுச்சு...அதெப்படி பார்த்த உடனே காதல் வரும்னு... வேண்டான்டி இந்த லவ்னு ஆரம்பத்தில நான் சாக்ஷியை எச்சரிச்சேன்... அவதான் உங்க மேல இருந்த கிரேஸை லவ்னு தப்பா புரிஞ்சிக்கிட்டா.. அப்புறம் நீங்க பேசினது பழகினதை பார்த்து நான் கூட நீங்க ரொம்ப நல்லவர்னு நம்பிட்டேன்... ஆனா இப்ப புரியுது... நீங்க சாக்ஷி மேல வைச்சிருந்தது லவ் இல்ல... இட்ஸ் ஜஸ்ட் அ லஸ்ட்" என்றதும் மகிழின் மூகம் வெளிறிப் போனது. செங்குருதிக்கு பதிலாக அவன் நாளங்களில் செந்தழல் பாய்ந்த உணர்வு.
விழிகள் சிவக்க,
"மாயா... திஸ் யுவர் லிமிட்... இதுக்கு மேல ஒரு வார்த்தை பேச வேண்டாம்... நீங்க என் காதலை மட்டுமில்ல... என்னையும் சேர்த்து அசிங்கபப்படுத்திட்டீங்க... சாக்ஷி ஏன் உங்ககிட்ட அப்படி சொன்னான்னு சத்தியமா எனக்கு தெரியல... ஆனா சாக்ஷியை நான் எந்தளவுக்கு காதலிக்கிறேன்னு யாருக்கும் நான் ப்ரூஃப் பண்ண வேண்டிய அவசியமில்லை... அது என் சாக்ஷிக்கு நல்லா தெரியும்" என்றான் மகிழ்.
அவன் கோபத்தை கண்டு மாயா மௌனம் காத்து நிற்க அவன் உடனடியாக அங்கிருந்து வெளியேறினான்.