ஆஹான்..’ சின்ன சிரிப்புடன் இடம் வலமாக தலை அசைத்தான் முகிலன் ‘நான் எங்கே பாரதியார் எங்கே? என்னை பாரதின்னு சொல்றதை நான் கண்டிப்பா ஒத்துக்க மாட்டேன். ஆனா அவார்ட் வாங்க யாருக்கு கசக்கும் சொல்லுங்க’ என்றான் நிதானமாக. அவன் பார்வை மட்டும் சற்றே தவிப்புடன் அமர்ந்திருந்த வெங்கட்ராமன் மீது.
நம்ம ‘மயூரா வெங்கட்ராமன்’ படத்திலே நடிச்சா அடுத்த வருஷம் எனக்கு அவார்ட் நிச்சியம். வர சான்சை எதுக்கு வேண்டாம்னு சொல்லணும். நடிச்சிடுவோம் விடுங்க’ அவன் அவரை விட்டு பார்வையை விலக்காமலே சொல்லி முடிக்க அரங்கம் கரகோஷத்தில் நிறைந்து போனது.
சம்பளம் போன்ற மற்ற விஷயங்கள் எதை பற்றியும் பேசாமல் இப்படி சட்டென ஒப்புக்கொள்வான் என நினைக்கவே இல்லை அவள். இப்போது மயூராவின் முகமெங்கும் சந்தோஷ பூக்கள் பூத்து குலுங்கின.
அதே நேரத்தில் எரிச்சலோடு வேறு பக்கம் திரும்பிக்கொண்டார் அவர். பொதுவாக அவர் மகள் இயக்கும் திரைப்படங்கள் விஷயத்தில் தலை இடுவது இல்லை. அவள் எது செய்தாலும் சரியாக செய்வாள் நம்பிக்கையும் உண்டு. அவள் மீது. அவள் எல்லைகள் எப்போதும் அவளுக்கு தெரியும் எனவும் அவர் நம்புவது உண்டு.
ஆனால் இன்று? என்ன செய்து வைத்திருக்கிறான் இந்த முகிலன்? கண்டிப்பாக அவன்தான் ஏதோ பேசி அவளை மாற்றி வைத்திருக்கிறான். முதலில் என் மகன் இப்போது என் மகளா? கொதித்து கொதித்து பொங்கிக்கொண்டிருந்தார் வெங்கட்ராமன்.
எப்போதும் மயூரா ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதை மாற்றிக்கொள்வது கடினம். இவன் வேண்டாம் என்று சொன்னால் ஆயிரம் கேள்விகள் கேட்பாள். இப்போது என்ன செய்து அவளுக்கு புரிய வைப்பது யோசித்தபடியே அமர்ந்திருந்தார் அவர்,
‘சார் கடைசியா ஒரு கேள்வி நீங்க ரெண்டு பேரும் ஒரே நிறத்திலே டிரஸ் பண்ணி இருக்கீங்க இன்னைக்கு. பிளான் பண்ணி பண்ணினதா?’ தொகுப்பாளர் கேட்க அப்போதுதான் அதை கவனிக்கவே செய்தாள் மயூரா. அரங்கத்தில் உற்சாக கூவல்கள்
‘நீங்க வேறே இது தற்செயலா நடந்தது சார்’ மயூரா அவசரப்பட
‘அப்படியா நீங்க என்ன சார் சொல்றீங்க?’ கேள்வி முகிலன் பக்கம் திரும்ப அழாகாய் சிரித்தான் முகிலன்.
‘இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தமாம்’ வெங்கட்ராமன் மனதிற்குள் எரிமலை கொதித்தது.
‘எனக்கு நிறைய வேலை இருக்கு. இந்த விளையாட்டுக்கு நான் வரலை. நன்றி’ கரம் குவித்து விட்டு அவன் நடக்க அவளும் சிரித்தபடியே அவனுடனே நடந்தாள்.
கேமரா வெளிச்சங்கள் அவர்கள் இருவரையும் விழுங்கிக்கொண்டிருக்க வெங்கட்ராமனை பார்த்தபடியே நடந்து சென்று தனது இருக்கையில் அமர்ந்தான் முகிலன். அவனருகே அமர்ந்தாள் அவள்.
‘நீங்க இப்படி டக்குனு சரின்னு சொல்லுவீங்கன்னு நான் நினைக்கலை ‘தேங்க் யூ முகிலன் ’கண்கள் படபடக்க அவள் சொல்ல அவள் உச்சரித்த அந்த முகிலன் அவன் அனுமதி இல்லாமலே அவன் மனம் வருடியது.
‘மயூரா வெங்கட்ராமன்’ வேண்டுமென்றே இறுக்கி வைத்துக்கொண்ட தொனியில் அவளை முழு பெயர் சொல்லி அழைத்தான் முகிலன்.
‘இவன் ஏன் என்னை இப்படி முழு பெயர் சொல்லி அழைக்கிறான்?’ திகைத்து பார்த்தாள் அவனை.
‘இந்த தேங்க்ஸ் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். உங்க அப்பாவுக்கும் எனக்கும் கொஞ்சம் பிரச்னை நடந்திட்டு இருக்கு. அது உங்களுக்கு தெரியுமா? என்றான் நேரடியாக.
‘தெரியுமே’ என்றாள் பட்டென.
‘அப்புறம் எப்படி நீங்க என்னை சூஸ் பண்ணீங்க உங்க படத்துக்கு?’ அவன் கண்கள் அவள் முகத்தை அளந்தன
‘அது வேறே இது வேறே முகிலன்’ என்றாள் அவள் உறுதியாக. ‘
அப்போ உங்க அப்பா என்ன சொன்னாலும் நீங்க பின் வாங்க மாட்டேன்னு சொல்றீங்க இல்லையா?’
‘கண்டிப்பா. நான் என் மனசாட்சிக்கு மட்டுமே பயந்து பழக்கம் முகிலன். அது அப்பாவாகவே இருந்தாலும் சரிதான். நான் செய்யறது தப்புன்னு எனக்கு தோணாத வரைக்கும் நான் யாருக்காகவும் என் முடிவுகளை மாத்திக்கறது இல்லை. நான் என்ன செய்யறேன் எப்படி செய்யறேன்னு எனக்கு நல்லாவே தெரியும்’
‘ஆஹான்...’ என்றான் அவன். அவள் வார்த்தைகளில் இருந்த நிமிர்வு அவனுக்கு நிரம்பவே பிடித்தது. ‘பார்க்கலாம். போக போக பார்க்கலாம்’
‘கண்டிப்பா பாருங்க’ என்றாள் அவள் புன்னகையுடன் ‘நீங்க இப்போ ஃப்ங்ஷன் ஃபுல்லா இருக்கணுமா. இல்லை கிளம்பலாமா? எனக்கு உங்க கிட்டே கதை, அப்புறம் மத்த விஷயங்கள் எல்லாம் பேசணும்’
‘இப்போவேவா?’
‘எஸ். இப்போவே பேசினால் நல்லது. எனக்கு சீக்கிரம் ஷூட்டிங் போகணும்’
‘சரி கிளம்பலாம் மயூரா வெங்கட்ராமன்’ அவன் எழுந்துக்கொள்ள அவளும் எழுந்து நிற்க சரியாக அவன் தோள் உயரம் இருந்தாள் அவள்.
விடை பெற வேண்டியவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு, உடன் வந்த காரியதரிசியின் பக்கம் திரும்பினாள் இவள்.
‘நீ டிரைவர்க்கு போன் பண்ணி வர சொல்லி வீட்டுக்கு போயிடு வித்யா’ என்றாள் கார் சாவியை அவளிடம் கொடுத்தபடியே ‘நான் வர லேட் ஆகும்;
முகிலனும், மயூராவும் ஒன்றாக நடக்க படபடபடவென படபடத்துக்கொண்டிருந்தது அவள் தந்தையின் இதயம். அவர்கள் பின்னாலேயே நடந்தான் ஷ்யாம்.
மூவரும் வெங்கட்ராமனை கடந்து நடக்க அதிர்ச்சியில் விழுந்த முகபாவத்துடன் இவர்களையே பார்த்துக்கொண்டிருந்த அவர் மனநிலை நன்றாகவே புரிந்துதான் இருந்தது முகிலனுக்கு. பாவம் அவரும் ஒரு பெண்ணின் தந்தை அல்லவா?
அவர் கற்பனை குதிரை இப்போது எங்கெல்லாமோ தறிகெட்டு ஓடும் என நன்றாகவே தெரியும் அவனுக்கு.. ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து நடந்து சென்றால் அது எப்படி நம் மக்களின் மனங்கள் இப்படி எல்லாம் கற்பனை செய்கின்றனவோ? அதை நினைக்கும் போது ஒரு வகையில் உள்ளூர கொஞ்சம் சிரிப்பு கூட வந்தது அவனுக்கு
ஆனால் இனி இந்த நிகழ்ச்சியில் அவர் எதுவும் பேச மாட்டார். பேசுவது என்ன மகள் பத்திரமாக வீடு திரும்பும் வரை அவரால் நிம்மதியாக மூச்சு கூட விட முடியாதுதான்.
காரை நெருங்கியதும் ஷ்யாமிடமிருந்து சாவியை இவன் வாங்கிக்கொண்டான். ‘நீ இங்கேயே இரு ஷ்யாம். அப்டேட்’ என்றான் அவனிடம். அடுத்து இங்கே என்ன நடக்கிறது என்று எனக்கு சொல் என்பதாக.
இவர்கள் இருவரையும் சேர்த்து காமெராக்கள் விழுங்கிக்கொண்டிருக்க அவளுக்கென கார் கதவை திறந்து விட்டான் முகிலன்
அவள் ஏறி அமர்ந்துக்கொள்ள இவன் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து சரேலென காரை ரிவெர்சில் எடுத்து திரும்பி கிளம்பி பறந்த வித்ததில் அவள் முகத்தில் ரசிப்பின் பாவம்.
காரின் ஏ,ஸி காற்று சில்லென்று தாலாட்டு பாட, மெதுவாக விழிகளால் அவள் அவன் முகம் வருடிய நொடியில்
‘ம்.. சொல்லு...ங்...க ம...யூ...ரா வெ..ங்க...ட்ரா...மன்’ எங்கே போகலாம்?’ என்றான் அந்த வெங்கட்ராமனில் நிறைய அழுத்தம் கொடுத்தபடியே.
‘எனக்கு எங்கேயாவது பீஸ்ஃபுல்லா உட்கார்ந்து பேசணும் அவ்வளவுதான். இடம் உங்க சாய்ஸ்’ என்றவள் ‘அது ஏன் என்னை இப்படி முழு பேர் சொல்லி அழுத்தி அழுத்தி கூப்பிடறீங்க? சும்மா மயூரானு கூப்பிடலாம்தானே’ என்றாள் அவள்.
‘ம்?’ என்றவனிடமிருந்து சில நொடிகள் பதிலில்லை.
‘நீ பார்க்கும் ஒற்றை பார்வையிலேயே உனக்குள் நான் இடறி இடறி விழுகிறேனடி பெண்ணே. உன் தந்தையின் பெயர் என்பது நான் எனக்கு போட்டுக்கொள்ளும் வேலி. நீ வெங்கட்ராமன் மகள் என எனக்கு நானே திரும்ப திரும்ப சொல்லிக்கொள்வது மட்டுமே உன்னிடமிருந்து நான் தப்பித்துக்கொள்ளும் ஒரே வழி’ சொல்லிக்கொண்டான் தனக்குள்ளே.
இதையெல்லாம் அவளிடம் சொல்லிக்கொண்டா இருக்க முடியும்?’
உங்க அப்பா பேரு வெங்கட்ராமன்தானே இல்லையா? சமீபத்திலே எதுவும் மாத்தி வெச்சுகிட்டாரா? என்றான் எடக்காக.
‘வெங்கட்ராமன்தான்’ அவள் குரல் கொஞ்சம் இறங்கிதான் ஒலித்தது.
‘அப்போ உங்களை அப்படி கூப்பிடுறதுதானே சரி’ என்றான் அவள் பக்கம் திரும்பாமலே.
‘எனக்கு அது என்னமோ மாதிரி இருக்கு’
‘அதுக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது’ என்றான் இன்னுமாக இறுகிய தொனியில். அதற்கு மேல் எதுவும் பேசாமல் மௌனமானாள் மயூரா..
அவனது ஆடி சாலையில் பறந்துக்கொண்டிருக்க சில நிமிடங்கள் கழித்து மௌனத்தை உடைத்தான் முகிலன். ‘நான் உங்ககிட்டே ஒண்ணு கேட்கணும்’
‘சொல்லுங்க’
‘வருண் உங்களுக்கு ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்டா? அவனை இத்தனை தடவை டா போட்டு பேசறீங்க? இவனிடமிருந்து இப்படி ஒரு கேள்வியை கண்டிப்பாக எதிர் பார்க்கவில்லை மயூரா.
‘ஆமாம் ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்தான்.. ஏன் கேக்கறீங்க? சொல்லப்போனா நாங்க இந்த உலகத்திலேயே பெஸ்ட் ஃப்ரெண்டஸ்.’
‘ஆஹா...ன்’ அவள் சொன்ன விதத்தில் சடக்கென திரும்பி அவள் முகம் பார்த்தவன் காரை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு அவள் பக்கம் திரும்பி அமர்ந்தான்.
நிஜமாகவே அவன் முகம் பார்த்து அவன் எண்ண ஓட்டங்களை அவளால் படிக்கவே முடியவில்லை ‘ஏன் நான் அவனை லவ் பண்றேன்னு யோசிக்கறீங்களா?’ என்றாள் மெல்ல.
பேசாமல் அவள் முகம் பார்த்துக்கொண்டே இருந்தவன் இரண்டு நொடிகள் இடைவெளி விட்டு நிதானமாக சொன்னான் ‘நீங்க அவனை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டா கூட எனக்கு அது ரொம்ப ரொம்ப சந்தோஷம் மயூரா வெங்கட்ராமன். ஆனா நீங்க ரெண்டு பேரும் பெஸ்ட் ஃப்ரெண்டஸா மட்டும் இருக்கவே முடியாது’
‘ஏன்? ஏன்? ஏன்?’ படபடத்தாள் அவள். ‘ஒரு ஆணும் பொண்ணும் பழகினா உடனே அவங்க லவ் பண்ணனும். பெட்டுக்கு போயிடணும் அப்படித்தானா? நான்சென்ஸ்’
‘ஹேய்.. வெயிட் வெயிட்’ என்றான் முகிலன் உடனே பாரதியாரை எல்லாம் துணைக்கு கூப்பிட்டு பெண்ணீயம் பேசி சண்டைக்கு வராதீங்க. நான் சொல்ல வந்தது நீங்க ரெண்டு பேரும் எப்பவும் பெஸ்ட் ஃப்ரெண்டஸா இருக்கவே முடியாது அப்படின்னுதான். அது மட்டும் இனிமே எங்கேயும் சொல்லாதீங்க’
‘ஏன்? ஏன் அப்படி? அவளுக்கு ஆறவில்லை.
அது அப்படிதான் நீங்க மட்டும் இல்லை இந்த உலகத்திலே வேறே யாருமே அவனுக்கு பெஸ்ட் ஃப்ரெண்டா இருக்கவே முடியாது’
‘அதுதான் ஏன் எனக்கு புரியலை?’
புரிய வேண்டாம். விடுங்க. ‘ஆனா நீங்கதான் அவனோட பெஸ்ட் ஃப்ரெண்ட் அப்படிங்கற எண்ணத்தை மட்டும் மாத்திக்கோங்க’ என்று அவள் கண்களை ஊடுருவியபடியே நிதானமாக சொன்னவன் அடுத்த நொடி சரேலென காரை கிளப்பிக்கொண்டு பறந்தான்.
இத்தனை நாட்கள் முகிலனை ஒரு பாறாங்கல்லாகவே நினைத்திருக்கிறாள். தமிழ்நாட்டில் பலருக்கு அவன் அப்படிதான் பரிச்சயம். ஆனால் அவனுக்குள் இருக்கும் இந்த உணர்வு எதை குறிக்கிறது? அவன் நிஜமாகவே எதை தேடி தவிக்கிறான்? புரியாமல் அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் மயூரா.
தொடரும்...
.