Vathsala Raghavan
மண்டலாதிபதி
- Joined
- Jan 17, 2018
- Messages
- 239
- Reaction score
- 3,372
ப்ரியங்களுடன்.... முகிலன் 22
மறுநாள் காலை
சில்லென்று விடிந்திருந்தது உதகமண்டலத்தின் காலைப்பொழுது. குளித்து முடித்து கைப்பையில் இருந்த மற்றொரு உடைக்கு மாறிக்கொண்டு இரவில் முகிலன் கொடுத்த முத்தம் போதாதென்று இன்னுமாக முத்தமிட்டு செல்லும் பனி மூட்டத்தின் நடுவே தோட்டத்தில் அமர்ந்து தூரத்தில் மேகங்களை காதலித்துக்கொண்டிருக்கும் மலைகளை ரசித்தபடியே சுடச்சுட காபியை பருகிக்கொண்டிருந்தாள் மயூரா.
‘குட் மார்னிங் மயூரா வெங்கட்ராமன்’ சில்லென கலைத்து நிமிர்த்தியது முகிலனின் குரல். விருட்டென எழுந்து நின்றாள் அவள்.
‘குட் மார்னிங் முகிலன்’ அவள் முகத்தில் அவளே அறியாமல் கொஞ்சம் வெட்க பூக்கள் பூக்கத்தான் செய்தன.
‘நல்ல தூக்கமா நைட்?’ வெகு இயல்பாக கேட்டவனின் முகத்தை அவள் அவசரமாக ஆராய ‘ஐ ஆம் ரெடி நாம ஷூட்டிங் போகலாம்’ என்றான் எதுவமே நடவாதது போல்.
அவன் விழிகளை படித்தவளுக்கு நேற்று இரவு நடந்தது எதுவுமே அவனுக்கு மருந்துக்கு கூட நினைவில்லை என்று நன்றாக புரிந்தது.
‘என்ன அப்படி பார்க்கறீங்க மயூரா வெங்கட்ராமன்?’ அவன் கேட்க ஒன்றுமில்லை என தலை அசைத்தாள் பெண். அவனது மயூரா வெங்கட்ராமன் இப்போது அவள் இதழ்களில் ஒரு ரகிசய சிரிப்பை விதைத்தது
அவன் ஆழ் மனதில் இருப்பதை எல்லாம் நேற்று இரவே தெரிந்துக கொண்டாகி விட்டது. என் முகிலனை எனக்கு தெரியுமே! இனி அவனிடம் வாதாடுவதற்கு எதுவும் இருக்கிறதா என்ன?’ சிரித்துக்கொண்டாள் தனக்குள்ளே
‘உங்களுக்கு உடம்பு நல்லா ஆகிடுச்சா?’ சிறு புன்னகையுடன் கேட்டாள் பெண்.
‘ரொம்ப நல்லா ஆகிட்டேன், நைட் ரொம்ப நல்ல தூக்கம்’ அவன் சொல்ல
‘குட் வெரி குட்’ என்றபடி இரவின் நிகழ்விலிருந்து தன்னை வெளியே தள்ளிக்கொண்டு இயல்பாக்கி கொண்டாள்.
‘முகிலன்.. ரெண்டு நாள் முன்னாடி நான் இங்கே பக்கத்து வீட்டுக்குத்தான் வந்தேன் வருணை பார்க்க’ என்றாள் வருண் வீட்டின் மீது பார்வையை பதித்துக்கொண்டே.
‘ஆஹான்’ என்றான் முகிலன். நேற்று அவன் பேசியதை அவளிடம் சொல்லவில்லை. ‘இப்போ எப்படி இருக்கான் அவன்?’ என்றான் பக்கத்து வீட்டை பார்த்துக்கொண்டே
’ம்’ என்றவளின் முகத்தில் கொஞ்சம் மாற்ற ரேகைகள். ‘இப்போது இந்த பேச்சை ஆரம்பித்து இருக்க கூடாதோ?’ லேசாக நெருடியது அவளுக்குள்ளே.
‘என்னாச்சு? உங்க முகம் அப்படியே மாறுது?’ முகிலன் அவள் முகம் பார்த்து மனம் படித்து மெல்ல குடைய
‘நல்லாத்தான் இருக்கான் முகிலன். நாம கிளம்புவோம்’ அவள் நகர முயல
‘வருண் எப்படி இருக்கான் சொல்லுங்க’ ஒரு வித அழுத்தத்துடன் அவன் மறுபடியும் கேட்டான். ‘ஏதோ ஒன்று சரி இல்லை என்று புரிந்திருந்தது அவனுக்கு.
‘பச்....’ என்றபடியே அவன் பக்கம் திரும்பினாள் மயூரா. ‘நிறைய ஸ்மோக் பண்றான் போல இருக்கு முகிலன்’ என்றாள் அவன் முகம் பார்த்து ‘திடீர்னு வந்த புது பழக்கம்’
‘வாட்?’ ‘ஸ்மோக் பண்றானா?’ அவன் குரலில் பேரதிர்ச்சியை சந்தித்த பாவம். உள்ளுக்குள் ஒரு பய உருண்டை உருண்டு மேலே வரும் உணர்வு அவனுக்கு.
நெற்றியை தேய்த்துவிட்டுக் கொண்டவன் இடம் வலமாக தலை அசைத்துக்கொண்டு ‘நீங்க அவன்கிட்டே பேசலையா இதைப் பத்தி’ என்றான் அவள் முகம் பார்த்து.
‘கேட்டேன் என் நிம்மதிக்குன்னு சொல்றான். தனக்கு யாருமே இல்லைன்னு ஃபீல் பண்றா மாதிரி தெரியுது.’
‘அதுக்குத்தான். அதுக்குத்தான் நீங்க அவன் கூடவே இருங்கன்னு சொன்னேன்’ என்றான் அவசரமாக.
‘கூடவேன்னா எப்படி முகிலன்?’ அவள் குரலில் கொஞ்சம் சூடு ஏறியது. ‘நீ அரை மணி நேரம் எனக்காகவே இருக்க முடியுமான்னு கேட்டான். அப்படி எப்பவும் இருந்தேன்னா நான் சிகரெட் விட்டுடறேன்னு சொல்றான். என்னாலே அதெல்லாம் முடியாது’
சில நொடிகள் அப்படியே மௌனத்தில் விழுந்தான் முகிலன்.
‘அவனுக்கு உங்களை ரொம்பவும் பிடிக்குமோ? அதன் பிறகு மெல்ல கேட்டான் அவன்.
‘பிடிக்கும் முகிலன். ஒரு இத்தனை நாள் ஃப்ரெண்டாதான் என்னை அவனுக்கு பிடிக்கும். பட் இப்போ அவன் இருக்கும் மனநிலையில் என்ன யோசிக்கிறான்னு தெரியலை. அவன் வேறே மாதிரி ஏதாவது யோசிச்சு இருந்தான்னா என்னாலே அதுக்கு அப்புறம் அவன் முகத்தை கூட பார்க்க முடியாது. அதனாலே இதை பத்தி நான் மேலே பேசாமல் கிளம்பி வந்திட்டேன்’ என்றவள் அதற்கு மேல் இந்த பேச்சை வளர்க்க விரும்பாமல்
‘நீங்க சீக்கிரம் ரெடி ஆகுங்க முகிலன். நாம ஷூட்டிங் போகலாம்’ சொல்லிவிட்டு உள்ளே சென்றிருந்தாள்
‘ஒரு வேளை அனுபமா இடத்தில் மயூராவை வைத்து பார்க்கிறானா வருண்’ அவசர கேள்வி கேட்டது அவனது மூளை.
வருண் மனதில் நினைப்பதை கூட எப்போதும் சரியாக கணித்துவிடும் முகிலன் இந்த முறை கொஞ்சமாய் சறுக்கி இருந்தான். அவன் புகை பிடிக்கிறான் என்ற ஒரு செய்தியே அவன் மூளையை மொத்தமாக மழுங்க செய்ய போதுமானதாக இருந்தது. யோசனையில் கண்கள் மூடி இருக்க கேசத்தை அழுந்த கோதிக்கொண்டான் முகிலன்.
சிகரெட்! முதலில் அதை விளையாட்டாகத்தான் ஆரம்பித்தான் மாதவன். இவன் அதை ஆரம்பித்த நேரத்தில் கண்ணனுடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கவில்லை. சிகரெட் பிடிப்பவன்தான் கம்பீரமான ஆண் மகன் என அவனது பல நண்பர்கள் துவங்கி சினிமா வரை எல்லாருமே கற்று தந்த காலம் அது.
சிகரெட்டை வாயில் வைத்துக்கொண்டு நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு இடுப்பில் கையை வைத்துக்கொண்டு புகையை வெளியிடுவான் மாதவன்.
வாழ்க்கையில் எல்லாவற்றையும் ஜெயித்து விட்ட உணர்வு தோன்றும் அவனுக்கு. சிகரெட் பிடிக்கும் போது உடம்பில் ஒவ்வொரு அணுவிலும் ஏதோ ஒரு அமைதி ஒரு கிறக்கம் பிறப்பது போன்றதொரு உணர்வு தோன்றும் அவனுக்கு.
பதினாறு வயதில் துவங்கிய பழக்கம் கண்ணன் அவன் வாழ்வில் வருவதற்கு முன்னரே அதற்கு அடிமையாகி இருந்தான் மாதவன். கண்ணன் அவன் நண்பனாக வந்த பிறகு அதை குறைக்க அவன் எடுத்த எந்த முயற்சியும் பலிக்கவில்லை.
ஒரு நாளைக்கு ஐந்து ஆறு என இருந்தது அவன் வேலைக்கு என டெல்லி சென்ற பிறகு ஐம்பது அறுபது என மாறிப்போனது. வேலை நிமித்தமாக எங்கிருந்தாலும் வாரம் ஒரு முறை சொந்த ஊருக்கு வந்து எட்டி பார்க்கும் வசதி எல்லாம் இருந்ததில்லை அந்த காலத்தில். டெல்லியிலிருந்து வருடத்துக்கு ஒரு முறை ஊருக்கு வந்தால் அதிகம். மாதவனின் தனிமைக்கு சிகரெட்டே துணையாக இருந்தது.
விளைவு இதய நோய். அதை யாரிடமும் சொல்லிக்கொள்ளவும் இல்லை மாதவன். சரியான சிகிச்சையும் எடுத்துக்கொள்ளவில்லை. அதன் அடுத்த கட்டமாக ஹார்ட் அட்டாக். இருபத்தி ஏழு வயதில் அவனுக்கு வந்தது ஹார்ட் அட்டாக். டெல்லியில் உடன் பணி புரிந்தவர்கள் துணையில் உயிர் பிழைத்தான். இதை கண்ணனிடம் கூட இதுவரை சொன்னதில்லை அவன்.
தீபாவளி அன்று இரவு மாதவன் வீட்டிலேயே தங்கி இருந்தான் கண்ணன். மாதவனுக்கு நடந்த அவமானத்திற்கு பிறகு அண்ணனுடன் இனி பேசுவதில்லை எனவும் வீட்டில் இனி சாப்பிடுவதில்லை எனவும் முடிவு செய்திருந்தான் கண்ணன்.
வெளியில் புயலும் மழையும் துவங்கி இருந்தது. அன்று இரவு தனதருகில் படுத்து கிடந்த கண்ணனிடம் மெதுவாக சொன்னான் மாதவன்
‘ஒரு விஷயம் சொல்றேன். வீட்டிலே யாருக்கும் சொல்லாதே. ரெண்டு மாசம் முன்னாடி எனக்கு ஹார்ட் அட்டாக் வந்திடுச்சுடா’
‘அதிர்ந்து போய் எழுந்து அமர்ந்தான் ‘ஹார்ட் அட்டாகா? என்னடா பேசறே? இந்த சின்ன வயசிலே எப்படிடா?’
‘சிகரெட்’ அவன் ஒற்றை வார்த்தையில் சொல்ல பகீரென்றது கண்ணனுக்கு
‘டேய்... டேய்.. என்னடா என்னடா நீ? சரியா ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டியா இல்லையா? பதறினான் உயிர் நண்பன்
‘எல்லாம் எடுத்துக்கிட்டேன்டா. மாத்திரை சாப்பிடறேன். இப்போ நல்லாத்தான் இருக்கேன்’ மாதவன் சாதாரணமாக சொல்ல மனம் தாளவில்லை இவனுக்கு. இரவு முழுதும் புலம்பிக்கொண்டே இருந்தான் கண்ணன். இரவு முழுதும் உறங்கவில்லை. ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை மாதவனை தொட்டு தொட்டு பார்த்துக்கொண்டே இருந்தான் அவன்.
‘அடுத்த தடவை நீ டெல்லி போகும் போது நானும் உன் கூட வரேன். அங்கே எனக்கு ஏதாவது ஒரு வேலை கிடைக்காம போகாது. இனிமே நான் உன்னை தனியா விடுறதா இல்லை’
சிரித்தான் மாதவன். ‘நான் போற இடத்துக்கெல்லாம் உன்னாலே வந்திட முடியுமாடா? உலகத்திலே இதெல்லாம் நடை முறையிலே சாத்தியம் இல்லை.’ ஆனால் கடைசியில் அப்படித்தான் வரப்போகிறான் என்பதை அப்போது உணரவில்லை மாதவன்.
கன மழை இரண்டு நாட்கள் தொடர்ந்துக்கொண்டே இருக்க சென்னை வெள்ளகாடாக மாறி இருந்தது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.
‘முதலமைச்சர் எம்.ஜி.ஆர் ராமவரம் வீட்டுக்குள்ளே கூட தண்ணி வந்திடுச்சாம். அவராலே வெளியிலே வர முடியலையாம். ஒரு போட் வெச்சு அவரை கன்னிமாரா ஹோடேலுக்கு கூட்டிட்டு போயிருக்காங்க’ அடுத்தது அவர்கள் வாழ்க்கையில் வரப்போகும் விபரீதங்கள் பற்றி அறியாமல் பேப்பர் படித்து எல்லாருக்கும் கதை சொல்லிக்கொண்டிருந்தாள் மீரா.
வீட்டில் சாப்பிடுவதை தவிர்த்து மாதவனின் வீட்டில்தான் சாப்பிட்டுகொண்டிருந்தான் கண்ணன். அம்மாவுக்கு அவன் மீது கோபம்தான்.
இரண்டு நாட்கள் கடந்திருக்க. அப்பா சொன்னார் கண்ணனிடத்தில் ‘ரெண்டு நாள் கோயம்புத்தூர் வரைக்கும் போயிட்டு வர முடியுமாடா கண்ணா. ஒரு முக்கியமான வேலை இருக்கு.?’ கோபம் அமுதனின் மீது அப்பா என்ன செய்தார்?
மாதவனை விட்டு செல்ல மனமில்லை என்றாலும் அப்பாவின் பேச்சை தட்ட முடியாமல் கிளம்பி இருந்தான் கோவைக்கு. மழை சற்று மட்டுப்பட்டிருக்க ரயில் சேவைகளும் துவங்கி இருந்தன,
எப்போதும் போல் அவனுடன் கிளம்பின அவனது கேமரா அதனோடு மீராவின் புகைப்படங்கள். என்றுமில்லாமல் அன்று அவனை வழி அனுப்ப ரயில் நிலையம் வந்திருந்தான் மாதவன்.
‘பத்திரமா இருந்துக்கோ மாதவா. இன்னும் நாலஞ்சு நாள் லீவு இருக்கில்ல. நான் வந்ததும் அப்பாகிட்டே சொல்லிட்டு நானும் உன்னோட டெல்லி வரேன். அதுவரைக்கும் ஊரிலேயே இரு. எங்கேயும் போகாதே’ மூன்று நான்கு முறை திரும்ப திரும்ப சொல்லிவிட்டுதான் கிளம்பினான் கண்ணன்.