Vathsala Raghavan
மண்டலாதிபதி
- Joined
- Jan 17, 2018
- Messages
- 239
- Reaction score
- 3,372
ப்ரியங்களுடன் முகிலன் 26
படப்படிப்பு தளத்திருக்கு வந்திருந்தனர் முகிலன் மயூரா, வருண் மூவரும். அன்றிரவு இவன் தோளில் அழுது முடித்த பிறகு வருண் ஒரு சிகரெட் கூட பிடிக்கவில்லை என்பது முகிலனுக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது.
பேன்ட் பாக்கெட்டில் கைகளை நுழைத்துக்கொண்டு அந்த பகுதியை சுற்றி விழிகளை சுழற்றிக்கொண்டே நின்றிருந்தான் முகிலன்.
நிறையவே சரிவுகளும், வளைவுகளும் கொண்ட அந்த மலைப்பாதையில் நின்ற போது அவன் உணர்வுகளில் கண்டிப்பாக மகிழ்ச்சி ரேகைகள் இல்லை. ஏனென்றே தெரியாத மெலிதான ஒரு அழுத்தம். நேற்று இரவு அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்த போது இருந்த மனத்திருப்தி கூட இப்போது காணாமல் போயிருந்தது.
‘என்ன இடம் இது.? இந்த மன அழுத்தத்துக்கு இந்த இடமும் ஒரு காரணமா என்ன? புரியவில்லை அவனுக்கு.
முகிலன் அடிக்கடி சொல்வதுதான். ஒன்றும் ஒன்றும் எப்போதும் ரெண்டாகத்தான் இருக்கும்.
இறைவனின் புத்தகத்திலும் அதே கணக்குத்தான். நாம் பேசும் பேச்சுக்கள் தொடங்கி விடும் மூச்சுக்கள் வரை எல்லாம் இந்த கணக்கிலேயே அடக்கம். கணக்குகள் நேராகும் வரை இறைவன் தனது விளையாட்டை நிறுத்துவதில்லை.
அன்று இதே இடத்தில் அமுதனும், வெங்கட்ராமனும் விளையாடிய விளையாட்டுகளை இன்று முடித்து வைக்க தயாராக நின்றிருந்தன அங்கே இருந்த மூன்று வண்டிகள்.
காமெராவை வைத்து கோணம் பார்த்துக்கொண்டிருந்தாள் மயூரா. தூரத்திலிருந்து அவளையே பார்த்துக்கொண்டிருந்த முகிலன் மெல்ல அவள் அருகில் வந்தான்.
என்றைக்கும் இல்லாமல் ‘ஹாய் மயூரா வெங்கட்ராமன்’ என அவனே துவங்கினான்.
இன்று மெரூன் நிற சல்வாரும் காதில் ஆடும் ஜிமிக்கிகளுமாக வந்திருந்தாள் மயூரா. அவளை ரசிக்க வேண்டுமென துடித்த மனதை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டான் முகிலன்.
‘ம்’ முகத்தில் எந்த பாவமும் காட்டாமல் தலை அசைத்துவிட்டு நகர்ந்திருந்தாள் அவள்..
நேற்று அவர்கள் இருவரையும் சேர்த்து அவன் எடுத்த அந்த புகைப்படமே காரணம் என்று புரிந்திருந்தது முகிலனுக்கு. எப்போதுமே அவள்தானே இவனிடம் தானாக வந்து பேசிப்பழக்கம். அவளது பாராமுகம் இன்று ஏனோ அவனை படுத்தி எடுத்தது.
எங்கிருந்தானோ அவன் அருகில் வந்து நின்றான் வருண். அங்கே அந்த காட்சிக்காக அந்த வண்டிகள் தயாராகிக்கொண்டிருந்தன. இருவரும் அந்த வண்டிகளையே பார்த்திருந்தனர்.
‘என்ன சீன் முகிலா இன்னைக்கு?’ என்றான் வருண். அந்த வண்டிகளை பார்த்துக்கொண்டே. ஏதோ ஒரு கலக்கம் அவனையும் ஆட்டிக்கொண்டிருந்தது.
‘தெரியலை. கேட்கணும் ஏதோ ஆக்ஷன் சீன் போலிருக்கு’ இது முகிலன். சில நொடிகள் கழித்து
‘வருண்’ என்றான் முகிலன்.
‘ம்’
‘உனக்கு என்கிட்டே ஏதாவது கேட்கணுமா? என் சட்டையை பிடிச்சு உலுக்கு கேட்கறதுனாலும் கேட்டுடு. அப்புறம் நமக்கு எப்போ நேரம் இருக்கும்னு தெரியலை.’ அந்த காட்சிக்கென தயாரக நிற்கும் பைக்கை பார்த்துக்கொண்டே சொன்னான் முகிலன்.
‘நேரமிருக்காதா ஏன்?’ வருண் கொஞ்சம் திடுக்கிட
‘இல்ல நீ ஊருக்கு போயிடுவே. அதான் சொன்னேன்’ சட்டென கலைந்துதரை இறங்கினான் எங்கிருந்தோ.
‘சில கேள்விகள் கேட்டுத்தான் பதில் தெரிஞ்சுக்கணும்னு இல்லை முகிலா’ என்றான் வருண் வானத்தை பார்த்துக்கொண்டே. ‘தெரிஞ்சே தான் கேட்கலை. நீ தப்பு செஞ்சிருக்க மாட்டேன்னு தெரிஞ்சேதான் கேட்கலை, அவ தப்பு செஞ்சிட்டானு தெரிஞ்சேதான் கேட்கலை. உங்க அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வரும்போது அவரை பார்க்க நிறைய ஹிந்தி நடிகர்கள் வந்தாங்க. அவங்க மூலமா அனுபமா பத்தி எனக்கு தெரிஞ்சிடுச்சு முகிலா’. என்றான் ஆழ்ந்த மூச்சுடன்
கொஞ்சம் நிம்மதி கலந்த சுவாசம் எழுந்தது முகிலனிடத்தில்.
‘எனக்கு இதயத்திலே ஏதோ ஒரு பிரச்சனை. அதுக்கு நீ ஆபரேஷன் பண்ணிட்டே. சரி. அதுக்கு பதிலா உன் இதயத்தை எடுத்து வைக்கிறேன்ன்னு சொல்றது எப்படி முகிலா சரியா வரும். அது முட்டாள்த்தனம் இல்லையா? அந்த இதயம் எனக்கு ஒத்து வரணும் இல்லையா?.
வருண் தெள்ளத்தெளிவாக கேட்க ஆடிப்போனான் முகிலன்.
‘எனக்கு மயூரா ஒரு ஃப்ரெண்ட் மட்டும்தான். ஒரு ஃப்ரெண்டா அவளை எனக்கு ரொம்ப பிடிக்கும்தான். ஆமாம் கேட்டேன். நீ எனக்காக அரை மணி நேரம் இருப்பியான்னு கேட்டேன். அரை மணி நேரம் உன் தோளிலே சாஞ்சு அழணும்ன்னு நான் கேட்க வந்தேன் அதுக்குள்ளே மேடம் பொங்கிட்டாங்க. அது உன் வரைக்கும் வந்திடுச்சு’ அழகாய் புன்னகைத்தான் வருண்.
அந்த நேரத்தில் அங்கே வந்து நின்றாள் மயூரா ‘ஷாட் ரெடி முகிலன்’ என்றாள் அவன் முகம் பார்க்காமல்.
நீங்க என்ன சீன்னே சொல்லலையே மயூரா வெங்கட்ராமன்’ முகிலன் கேட்டு வைக்க
‘ஆங்... நான் செத்து போற சீன்’ என்றாள் இவள் படீரென.
ஹேய்...’ நண்பர்கள் இருவருமே பதறிப்போயினர்
‘ஏன் மயூரா இப்படி பேசறே?’ வருண் கேட்க
‘பின்னே வேறே எப்படி பேச? நான் என்ன பொம்மையா? என்ன தைரியம் இருந்தா என்னையும் உன்னையும் ஒண்ணா வெச்சு போட்டோ எடுப்பான் இந்த ஆளு? அதுவும் அக்னி முன்னாடி’ அவள் வார்த்தைகள் வெடித்து எழ
‘மயூரா வெங்கட்ராமன்’ முகிலன் சற்றே தழைந்த குரலிலேயே ஆரம்பிக்க
‘வாயை மூடறீங்களா? எகிறினாள் பெண் ‘எப்போ பாரு ம...யூ...ரா வெ...ங்...கட்...ரா...மன்.’ ஏன்னு கேட்டா முகிலன் முகிலனா இருக்கணும் அதுக்காக அப்படின்னு சொல்றது. ஆனா மத்தவங்க மட்டும் அவங்க அவங்களா இருக்க கூடாது. இவர் பொம்மை மாதிரி தூக்கி மத்தவங்க கையிலே கொடுப்பார். நாம அப்படியே போயிடணும்’
‘அவன் உங்க ஃப்ரெண்ட்ன்னா நீங்க உங்க உயிரை கூட அவனுக்காக கொடுக்கலாம். ஆனா என்னை கொடுக்க உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது’ அவள் கட்டை விரல் அவன் முன்னால் நீண்டது.
வாழ்கையில் முதல் முறையாக ஒரு ஆழ்ந்த மூச்சுடன் சற்றே தலை குனிந்தான் முகிலன்.
ஆனால் கொஞ்சமும் கோபம் எழவில்லை அவனுக்கு. மீரா இப்படி இருக்க வேண்டும் என்றுதானே அந்த கண்ணன் விரும்பினான். இன்று இப்படி தைரியமாக பேசும் மயூராவை பார்த்து முகிலனுக்கு கோபம் வருவதில் ஏதேனும் நியாயம் இருக்கிறதா என்ன ?
‘உண்மையிலேயே நீங்க என்னை மனசிலே எந்த இடத்திலே வெச்சிருக்கீங்கன்னு எனக்கு தெரியும் முகிலன். அது எனக்கு மட்டும்தான் தெரியும்’ மெல்ல தழைந்தது அவள் குரல்.
சட்டென விழிகளை நிமிர்த்தி அவள் கண்களுக்குள் மாறி மாறி பார்த்தான் முகிலன். மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு இருவரையும் பார்த்துக்கொண்டே நின்றிருந்தான் வருண்.
‘தெரியலை. எந்த ஜென்மத்திலே யாரோட அன்பை நான் நிராகரிச்சேன்ன்னு தெரியலை. இந்த ஜென்மத்திலே நீங்க என்னை நெருங்க விட மாட்டேங்கறீங்க.’ குரல் இன்னுமாக தழைந்து போயிருந்தது.
‘அது என்ன வலின்னு இப்போதான் எனக்கு தெரியுது. அப்படி யாரையாவது நான் நிராகரிச்சு இருந்தா அவங்க என்னை மன்னிசிடுங்க’ அவள் வானத்தை பார்த்து சொல்ல இப்போது முகிலனின் கண்களில் ஏனென்றே தெரியாமல் மெல்ல மெல்ல நீர் சேர்ந்தது.
அவனை அப்படி பார்க்கவும் மனம் தாளவில்லைதான் மயூராவுக்கு. என்ன இருந்தாலும் முகிலன் முகிலனாக இருப்பதுதான் அழகு எனவும் தோன்றியது அதற்கு மேல் அங்கே நிற்கவும் தோன்றவில்லை அவளுக்கு.
‘ஷாட் ரெடி முகிலன்’ இது ஆக்ஷன் சீன். ஒண்ணும் பெரிய ரிஸ்க் இல்லை. நீங்க பைக்லே வேகமா முன்னாடி போற வண்டியை சேஸ் பண்ணனும். அவ்வளவுதான். நான் பின்னாடி வண்டியிலே கேமராவோட வருவேன்’ சொல்லிவிட்டு அவன் முகம் பார்க்காமல் நகர்ந்தாள் பெண்.