~13~
ராக்கி அறியாமல் அவனைக் கண்காணித்த தாய்க்கு அவனும் சிவாவும் இந்த ஒரு வாரமாய் எங்கேயும் பார்க்கவுமில்லை பேசவுமில்லை என்ற செய்தி நிம்மதியைத் தர, முற்றிலும் சந்தேகத்தை விலக்காவிட்டாலும் ஓரளவிற்கு சமாதானம் ஆகியிருந்தார்.
சிவாவின் தந்தை கிருஷ்ணாவின் உயிர்பதவிக்காக தேர்வு எழுத கோயம்பத்தூர் சென்றுவிட, ஒருவாரத்தில் வருவதாய் போன கிருஷ்ணாவின் வேலை மேலும் பத்து நாட்களுக்கு இழுத்தது.
ஒருவாரம் கழித்து இறுதி பரீட்சை எழுத வேண்டிய நிலையில் கிருஷ்ணா வெளியூர் சென்றுவிட, இன்றைக்கு ஆட்டோவில் போய் வருமாறு சொல்லும் தாயிடம் எப்படி மறுப்பது? எனத் தெரியாமல் நின்றாள் சிவா.
“சிவா, ஆட்டோ வந்துட்டு என்ன இன்னும் யோசனை..?”ராதையின் குரலில் நடப்புக்கு வந்தவள்..
“அம்மா..எனக்கு பயமாயிருக்கு நீங்களும் கூட வாங்களேன்..” சிவாவின் பேச்சில் பதறிய ராதை
“ஏன் சிவா என்ன ஆச்சு ஏதும் வலிக்குதா..?இல்ல படிக்கலையா..?” என்றவருக்கு கிருஷ்ணா உடன் இல்லையே என்றிருந்தது.
அன்னையின் பயம் போக்க நினைத்தவள், “லாஸ்ட் எக்ஸாம்ல அதான் மா பயமா இருக்கு..நீங்களும் என்கூட வாங்க ப்ளீஸ்..” இதுநாள் வரையில் தன்னை அழைக்காதவள் இன்று அழைக்கவும்,
“சரி சிவா..நில்லு..” என்றவர் வீட்டின் கதவைப் பூட்டி சாவியைக் கையில் எடுத்துக் கொண்டவர்.
“சிவா, எக்ஸாம் பத்தி பயப்படாம எழுது..நீ மார்க் எடுக்கலனா கூட அம்மா எதுவும் சொல்ல மாட்டேன்..சரியா..தெரிஞ்சத எழுது..” பிள்ளையின் பயம் போக்க அவர் பேசிக் கொண்டே வர, சிவாவின் உண்மையான பயம் எதனால் என்று தெரிந்தால் அவளையும் வீட்டை விட்டு அனுப்பியிருக்க மாட்டார் அவரும் வந்திருக்க மாட்டார்.
கீழே வந்தவர் ஆட்டோவில் ஏற, போன பரீட்சைக்கு வந்த அதே ஆட்டோ டிரைவர் தான் இப்போதும்,கொஞ்சமும் பயம் இல்லாமல் அவன் இளித்த இளிப்பு சிவாவின் மனதில் பயத்தை விதைக்க அன்னையிடம் நெருங்கி அமர்ந்து கொண்டாள்.
பள்ளியின் வாயிலில் சிவா இறங்கியதும், “சிவா மதியம் இந்த அங்கிள் வருவாரு இவர் கூடவே வீட்டுக்கு வந்திடு” என்றவர்
ஆட்டோ டிரைவரிடம், “அண்ணா மறக்காம கூட்டிட்டு வந்திருங்க..” என்றார்.
ராதையிடம் சரியென சொன்ன டிரைவரின் பார்வை சிவாவின் மேல் நக்கலாய் விழ, அவளுக்கு உள்ளே குளிரெடுத்தது.
பரீட்சை எழுதக் கூட முடியாமல் பயத்தில் அவள் திணற, இறுதி ஒரு மணி நேரத்தில் முடிந்த அளவிற்கு எழுதிய சிவா இன்றைக்கு தன்னைக் காப்பாற்ற ராக்கி வரமாட்டானா என்ற வேண்டுதலுடன் பள்ளிவிட்டு வெளியே வந்தாள்.
ஆட்டோ தயாராக காத்திருக்க, சுற்றும் முற்றும் கண்களை சுழல விட்டவளுக்கு எதிர்க் கடையின் வாசலில் ராக்கி நின்றிருப்பது தெரிந்தது.
அவனருகே வேகமாய் சிவா செல்ல, அவள் சென்ற திசையைப் பார்த்த டிரைவருக்கு ராக்கியின் வரவு எரிச்சலைத் தந்தது.
“என்ன சிவா..?” தன்னை நோக்கி வந்தவளிடம் ராக்கி கேட்க
“எனக்கு பயமா இருக்கு..” என்றவளின் பார்வை ஆட்டோ மீது பதிந்து ராக்கியின் மீது விழ
“ம்ம்...சரி வா..வீட்டில் விடுறேன்..” என்றான் சிநேகமாய்
சரியெனத் தலையசைத்த சிவாவும் அவனுடன் பைக்கில் ஏறிக் கொள்ள, வண்டி வேகமெடுத்தது என்றால் ஆட்டோ டிரைவரின் போன் ராக்கியின் அன்னைக்குப் பறந்தது.
“சிவா..” பின்னாடி அமர்ந்திருந்தவளை ராக்கி அழைக்க
“என்ன..?” என்றாள்
“இப்படியே எத்தனை நாள் பயந்திட்டு இருப்ப..?”
“அப்பா வந்துட்டா பயம் இருக்காது..” என்ற சிவாவிற்கு அவனது கேள்வியின் அர்த்தம் புரியவில்லை
“சிவா..எப்பவும் உன் அப்பா கூடவே இருக்க முடியாது. முதல்ல தைரியமா இருக்க கத்துக்கோ..சாவே வந்தாலும் முகத்தில் பயம் இருக்க கூடாது. அன்னைக்கு உன்கிட்ட தவறா நடக்க முயற்சிக்கும் போது நீ பயப்படாம துணிச்சலா சமாளிச்சிருந்தா இதோ இன்னைக்கு அவன் வந்திருக்க மாட்டான்..” நீளமாய் அவன் பேசியதற்கு.
“புரியுது..” என்றாள் ஒற்றை வார்த்தையாய்
“உங்க அப்பா கிட்ட சொல்லி ஏதாச்சும் தற்காப்பு வகுப்பு போ...ஷேர் ஆட்டோவில் போய் பழகு..” என்றான் அவளது நிலை அறியாமல்..
“இல்ல..அப்பா என்னை சேர்த்துவிட நிறைய பேர் கிட்ட கேட்டாங்க யாருமே என்னை சேர்த்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க..” என்றான் சின்னக் குரலில்
அவனது பதில் வருத்தத்தை கொடுக்க, “தனியா ஆட்டோவில் போக மத்த பசங்க கூட ஷேர் பண்ணி ஆட்டோவில போக வேண்டியது தானே..நம்ம ஏரியா பசங்க பொண்ணுங்க எவ்வளவு பேர் உங்க ஸ்கூல்ல படிக்கிறாங்க..?” என்றான் அடுத்த விளக்கமாய்
“என்னை ஷேர் ஆட்டோவில் ஏத்துனா வேற யாரும் ஏற மாட்டங்க அதனால என்னை ஏத்த மாட்டிக்காங்க..நம்ம ஏரியா பசங்க பொண்ணுங்கள என்கூட சேர கூடாதுன்னு அவங்க பேரெண்ட்ஸ் சொல்லிருக்காங்களாம் அதனால யாரும் என்கிட்ட பேச மாட்டாங்க..நீங்க மட்டும் தான் பேசுவீங்க..”
சிவாவின் குரலில் இருந்த வருத்தம் ராக்கிக்கும் இருக்க, ‘ஆண்டவன் செய்த தப்புக்கு சிவா என செய்வா..?’ என்ற கேள்வி எழுந்தாலும் யாரிடம் கேட்க முடியும் என வாயை மூடி அவளை இறக்கிவிட்டான் ராக்கி.
உடல் ஊனமுற்றோரை ஒதுக்காதே என்று பேசும் நாம் தான் பல தலைமுறையாய் ஒரு சமூகத்திற்கு கேவலமான முத்திரை குத்தி ஒதுக்கி வைத்துள்ளோம்.
கோவில் கோவிலாய் சென்று பாவ மன்னிப்பு கேட்டும், வரங்கள் கேட்டும் கொண்டாடும் அந்த ஆண்டவன் செய்த அற்புதத்தைத் தவறு என்ற இடத்தில் ஒதுக்கி வைத்து அவர்களின் வாழும் வழி அனைத்தையும் அடைத்து வைத்துள்ளோம்.
*******
ரவியின் அண்மையில் நியாயமாய் மறக்க வேண்டிய கசப்பான நிகழ்வுகள் அனைத்து வரிசை கட்டி மனதைப் பிசைய தலை குனிந்து அமர்ந்து கொண்டாள் அப்ஷரா
அவளின் முகத்தை நிமிர்த்த கை பரபரத்தாலும் அதை அடக்கியவன், “சொல்லு டி..” என்றான் அதட்டலாய்..
அவனின் அதட்டலில் நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளில் காதலும் கோபமும் போட்டிப்போட்டு நீராய் வெளியேற, தொட வேண்டாம் என நினைத்து அடக்கிய கைகள் நீண்டு தன்மேல் சாய்த்து அணைத்துக் கொண்டது.
“நான் உன்கிட்ட பேசனும்...ஆனா இன்னைக்கே எல்லாத்தையும் பேசனும்னு இல்ல...” நிதானமாய் உரைத்தவன் அவளைத் தன்னிடம் இருந்து விலக்கி எழுந்தவன், அவள் எழ கை கொடுக்க..
அவனின் தற்போதைய செய்கைகள் வீசிச் சென்ற இதத்தில் கேள்வி கேட்காமல் எழுந்தவள், “ஏன்..?” என்ற கேள்வியை அவளது விழிகளில் தாங்கி நிற்க
“நான் பண்ணுன எதையும் சாரின்னு ஒரு வார்த்தையில் மறைக்க முடியாது..எதுவும் பேசாத என்கூட வா..” கைபிடித்து அவன் அழைக்க சாவி கொடுத்த பொம்மையாய் அவனுடன் சென்றாள்.
உணவு மேஜைக்கு அழைத்துச் சென்றவன் மீதமிருந்த சாதத்தை தவிர்த்து, ப்ரெட்டும் பாலும் சூடு செய்து கொடுக்க அமைதியாய் பார்த்திருந்தாலே தவிர அவனிடம் பேசவில்லை.
“முதல்ல சாப்பிடு...” என்றான் க்ளாஸில் தண்ணீர் ஊற்றிய படி..
தயக்கமாய் அவன் முகம் பார்த்தவள், “நீங்க சாப்பிடலையா..?” என்றாள் உள்ளே போன குரலில்
“எனக்கு பசிக்கல...நீ சாப்பிடு..” என்றவன் தட்டை அவளிடம் நீட்ட, வாங்கியவள் இரண்டு பிரட் துண்டுகளையும், பாலையும் காலி செய்தாள்.
இவ்வளவு நேரம் இருந்த கோபம், லேசாக மட்டுப்பட இறுதியாகக் குடித்த தண்ணீர் அவளது மனநிலையை மாற்றியிருந்தது.
தண்ணீரின் சிறப்பே அது தானே..!
உண்டு முடித்தவள், கை கழுவி வரும் வரையிலும் அங்கே அமர்ந்திருந்தவன் அவள் வந்ததும், “உன்கிட்ட கொஞ்சம் பேசனும் என்கூட வா..” என்றான்.
மறுப்பேதும் கூறாமல் அவன் பின்னே அவனது அறைக்குள் சென்றாள்.
கட்டிலில் அவன் அமர்ந்து அவளைப் பார்க்க, இவ்வளவு நேரம் இருந்த அறை தான் என்றாலும் தயக்கமாய் அவன் முகம் பார்த்து கதவின் அருகே நின்று கொண்டாள்.
அவளது தயக்கம் புரிந்தவன், “இங்க வர சொன்னா தான் வருவியா..?” என்றான்
இல்லையென்பது போல் தலையாட்டியவள் கதவை அடைக்காமல் அவனை நெருங்க, “டோரை க்ளோஸ் பண்ணிட்டு வா..” என்றான் அவள் மீது பார்வையை பதித்து.
கோபமும் ரோசமும் போட்டிப் போட வேண்டிய இடத்தில் அவன் பார்வையும் பேச்சும் வெட்கத்தைக் கொடுக்க, மிகுந்த சிரமம் கொண்டு உதட்டு சிரிப்பை மறைத்தவள் கதவை அடைத்து அவன் அருகே சென்றாள்.
“ம்..உட்காரு...நான் நிறைய பேசனும்..” தனது பக்கத்து இடத்தைக் காட்டிச் சொல்ல அவளும் பதுமையென அமர்ந்து கொண்டாள்.
தொண்டையை செறுமியவன், “அப்..ஷரா.. என்னால உன்கிட்ட மன்னிப்பு எதுவும் கேட்கமுடியாது..”
“நான் பண்ணி வச்சிருக்க தப்பு ரொம்ப பெருசு தான்..எனக்குப் புரியுது ஆனா என்னால எதையும் முழுசா அப்போ இருந்த மனநிலையில் நம்ப முடியல…” என்றான் யாரிடமும் திறக்காத தன் மனதைத் திறந்து.
அவனது முகத்தைக் கண் சிமிட்டாமல் அப்ஷரா பார்க்க அவனே தொடர்ந்தான்.
“நான் உன்னைக் கஷ்டப்படுத்தியிருக்கேன்..எனக்கும் என் குடும்பத்துக்கும் நீ செஞ்ச எல்லா உதவியையும் நான் மறந்துட்டு இல்ல நினைவுக்குக் கொண்டு வராம உன்னை நான் கஷ்டபடுத்தியிருக்கேன்..” என்றவன் இப்போது அவளது கண்களை நேருக்கு நேர் பார்க்க அவளும் அவனைத் தான் பார்த்திருந்தாள்.
“உடனே எல்லாத்தையும் உனக்கு மீட்டுக் கொடுக்க முடியாட்டாலும் கொஞ்சம் கொஞ்சமா நான் மாறுவேன் நம்ம வாழ்க்கையையும் தான்..”
“என்னை நம்பி இந்த ஒரு தடவை வாய்ப்பு கொடு..நான் எல்லாத்தையும் மாத்துறேன்..” என்றவனின் கெஞ்சல் மொழியில் தன்னிலை உணர்ந்தவள்..