~15~
பழையபடி தமையனின் அன்பு கிட்டியதை நினைத்து சிவாவின் முகம் கூடுதல் மகிழ்ச்சியில் தத்தளிக்க, வாய் ஓயாமல் சர்வாவிடம் பேசிக் கொண்டிருந்தது.
அவளின் இடைவிடாத பேச்சில் இருந்தே பெற்றவர்களுக்கு அவளின் ஏக்கம் தெரிந்துவிட, ஓரளவிற்கு சுயமாய் யோசிக்கத் துவங்கியிருந்த சர்வாவிற்கு கூடச் சிவாவின் இத்தனை நாள் ஏக்கம் தெளிவாய் புரிந்தது.
இன்னும் கொஞ்சம் சீக்கிரமாகச் சிவாவிடம் பேசியிருக்கலாம் என அவனுக்கும் இப்போது வருத்தமாய் இருந்தது.
இரவு உணவு உண்ணும் போது கூட அண்ணனிடம் பேசியவளை ராதைக் கண்டித்து சாப்பிடச் சொல்ல வேண்டியதாக இருந்தது.
தூங்கும் சமயத்தில் பழைய நினைவில் சர்வாவின் ரூம் பக்கம் படுக்கச் சொல்ல, சர்வாவும் இடம் விட்டு படுத்துக் கொண்டான்.
பேசிக் கொண்டே இருந்த சிவாவின் புறம் திரும்பி படுத்த சர்வா, “சிவா நான் இல்லாத இத்தனை மாசத்துல நீ கஷ்டப்படுற மாதிரி ஏதாச்சும் நடந்துச்சா..?” சர்வாவின் கேள்வியில் பேந்த பேந்த விழித்த சிவாவிற்கு ஆட்டோ டிரைவரின் நினைவு வர எழுந்தமர்ந்து வெளியே எட்டிப் பார்த்தவள்..
“சர்…” என்றாள் தயக்கத்துடன்.
அவனது முகத்தில் இருந்தே புரிந்து கொண்ட தமையனும், “சொல்லு டா..” என்றான்.
“அதுவந்து..” என ஆரம்பித்தவள் அனைத்தையும் சொல்லி முடிக்க
சர்வாவிற்கே ராக்கியின் இத்தகைய மாற்றம் புதிதாய் இருந்தது. நாளை அவனை நேரில் பார்த்து பேச வேண்டும் என நினைத்துக் கொண்டவனுக்கு அடுத்தும் அவளை வெளியே அனுப்பிப் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் பயத்தையே கொடுத்தது.
தான் அல்லது தந்தை இருந்திருந்தால் அவளுக்கு இந்நிலை வந்திருக்காது என நினைத்துக் கொண்டவன், அதையே சிவாவிடம் சொல்லி மன்னிப்பு வேண்ட
“அதுலாம் ஒண்ணுமில்ல சர்...இப்படியே நீங்க என்னை எத்தனை நாள் பாதுகாப்பீங்க..விடு..எல்லாம் என் விதிபடி தான் நடக்கும்..” என்றவனின் வார்த்தைகள் இருந்த வலி முகத்தில் இல்லை..
“சிவா...உன் வாழ்க்கை முழுசும் நான் உன்கூட இருப்பேன் டா...எப்பவும் உன்னைப் பத்திரமா பார்த்துப்பேன்…ப்ராமிஸ்..” சர்வாவின் உறுதி மறுநாளே காணாமல் போகும் என்பதை அறிந்திருந்தால் அவன் என்ன செய்திருப்பானோ?
பேசிக் கொண்டே இருந்த இருவரில் சிவா முதலில் தூங்கிவிட அவளுக்குப் போர்வையை போர்த்திவிட்ட சர்வாவும் சிவாவின் பேச்சினை அசைபோட்ட படி தூங்கினான்.
மறுநாள் மதியம் ராக்கியை திருச்சியில் இருக்கும் தங்கையின் வீட்டுக்கு அனுப்பி வைத்த கோமு, நேற்று இரவு ஆட்டோகாரன் பேசியதை நினைத்துப் பார்க்க ‘இன்று அந்த ****** நாயை விடுறதா இல்ல’ என மனம் கொந்தளித்தது.
அந்நாளில் வரப்போகும் பூகப்பம் அறியாமல் கிருஷ்ணாவின் குடும்பம் மகிழ்ச்சியில் திளைக்க அதை இரட்டிப்பாக்க வாசனின் குடும்பமும் வந்து சேர்ந்தது.
தன்னை அக்கா அக்காவென சுத்தி வரும் சாராவை சிவாவிற்கு பிடித்துவிட, கண்ணனும் சர்வாவும் போட்டி போட்டு நக்கல் அடித்து அந்த இடத்தை மேலும் கலகலப்பாக்கினர்.
ராக்கி ஊருக்கு கிளம்பி சென்ற அடுத்த பத்தாவது நிமிடம் கோமு சிவாவின் வீட்டிற்கு வந்தார்.
இரண்டாம் தளத்தில் இருக்கும் சிவாவின் வீட்டுக்குள் நுழையாமல் தெருவில் நின்றே ராதையை குரல் கொடுத்து அழைக்க, சந்தோசமாய் பேசி சிரித்துக் கொண்டிருந்தவரும் சத்தம் கேட்டு வெளியே வந்து எட்டிப் பார்த்தார்.
கோமுவை எதிர்பாராத ராதை, “வாங்க ராக்கி அம்மா..” என்று வரவேற்பாய் அழைக்க
துச்சமென பார்த்த கோமு, “எதுக்கு டி என் பையனை வளைச்சு போட்ட மாதிரி என்னையும் வளைச்சு போடுறதுக்கா..?” அவரது சத்தத்தில் அக்கம் பக்கத்தினரின் தலை எட்டிப் பார்த்தனர்.
“என்ன ஆச்சு அக்கா..?” ராதை கலக்கத்துடன் வினவ
“பண்ணுறதெல்லாம் பண்ணிட்டு என்ன ஆச்சுனா கேக்குற…?” கோமு வாசலில் இருந்து கொடுத்த சத்தத்தில் ஆங்காங்கே எட்டிப் பார்த்த கூட்டம் இப்போது வாசலுக்கு வந்து பார்க்கத் துவங்கினர்.
அவரின் சத்தம் கேட்டு சிவா உட்பட அனைவரும் வாசலுக்கு வர, சிவாவைப் பார்த்த கோமுவின் கோபம் எகிறி வார்த்தையும் தடித்து வந்தது.
“என்னங்க பிரச்சனை சொன்னா தானே தெரியும்..?” கிருஷ்ணா படிகளில் இருந்து இறங்கி கோமுவை நோக்கி வர, அனைவரும் கிருஷ்ணாவுடன் கீழிறங்கி வந்தனர்.
“பொட்டைய பெத்து வச்சதும் இல்லாம ஊர் மேய விட்டு வேலைப் பார்க்குறீயோ..?” கோமுவின் பேச்சில் முகத்தைச் சுளித்தவர்
“என்ன மா ஓவரா பேசுற போலீஸ்க்கு போன் பண்ணனுமா..?” என்ற வாசுவிற்கும் கோபம் தான்
“போலீஸுக்கா? போன் போடு..நானும் போன் போடுறேன்..கெளரவமா நாலு பேர் வாழுற இடத்துல இப்படி ஒரு பிள்ளைய பெத்து வச்சதும் இல்லாம ஆள் பிடிக்க வேறஅனுப்புறீங்களோ?” கோமுவின் பேச்சைக் கேட்ட அக்கம் பக்கத்தினர்
அவரிடமே என்ன என விசாரிக்கத் துவங்க, ராக்கியை சிவா வளைத்துப் போட அலைவதாகச் சொன்னவர், ஒன்றிற்கு இரண்டாக திரித்து சொன்ன ஆட்டோ டிரைவரின் வார்த்தைகளை இன்னும் திரித்து கோமு சொல்ல,
அதைக் கேட்ட சிவாவின் குடும்பாத்தாருக்கு அவமானமாய் இருந்தது, சர்வா இதையெல்லாம் மறுத்து கோமுவிடம் பேசத் துவங்க அவனை கை நீட்டித் தடுத்தவர் அந்த ஆட்டோ டிரைவருக்கே போன் போட்டு வரச் சொன்னார்.
அடுத்த சில நிமிடங்களில் சிவாவின் வீட்டுக்கு வந்த ஆட்டோ டிரைவரும் அதையே சொல்ல, அக்கம் பக்கத்தினர் இப்போது சிவாவையும் அவனது குடும்பத்தாரையும் ஏக வசனத்தில் பேசத் தொடங்கினர்.
அனைவரின் பேச்சைக் கேட்டு கேவி அழுத சிவா அன்னையின் காலில் விழுந்து, “அம்மா என்னை நம்புங்க
மா..” எனக் கதறி அழ
காலில் விழுந்த மகனாகிய மகளைத் தூக்கி தோளோடு அணைத்த ராதை..சண்டையிட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணா, சர்வா மற்றும் வாசுவைத் தடுத்து, “என் சிவா மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.. நாம யாருக்கும் பதில் சொல்லனும்னு எந்த அவசியமும் இல்லை..வாங்க நாம வீட்டுக்குப் போகலாம்..” திடமாய் பேசியவர் நொடியும் தாமதியாமல் சிவாவை கை வளைவிற்குள் வைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றுவிட்டார்.
ராதையின் கூற்றை ஆமோதித்த கிருஷ்ணாவும் வாசுவும் வீட்டுக்குள் சென்றுவிட, தூங்கிக் கொண்டிருந்த சாரா அப்போது தான் எழுந்து அமர்ந்தாள்.
வீட்டுக்குள் வராத சர்வா கண்ணனை அழைத்துக் கொண்டு வெளியே சென்றுவிட, முதன் முதலாய் என்னை ஏன் படைத்தாய் கடவுளே என்ற சுயஇரக்கத்தில் தன்னைப் புதைத்தாள் சிவா..
பிரச்சனை இல்லாத மனிதர்களும் இல்லை, வாழ்க்கையும் இல்லை..அவரவரின் கையடக்கத்தில் தான் பிரச்சனைகள் வரும்..
அதாவது நம்மால் தீர்க்க முடியாத பிரச்சனை என்பது இந்த உலகத்தில் எதுவும் இல்லை..இதுவும் கடந்து போகும் என அந்நிமிடத்தை ஒதுக்கி அடுத்த கட்டத்தில் தன்னைப் புகுத்திக் கொள்கிறவன் தான் மகிழ்ச்சியுடன் வாழ்கிறான்.
பிரச்சனை என்பதைப் புள்ளியாய் நினைத்துக் கடந்து போக வேண்டுமே தவிர பாறாங்கல்லாய் நினைத்துத் தூக்கி சுமக்கக் கூடாது.
மீறிச் சுமந்தால் வலியும் பளுவும் நமக்குத் தான்..
சிவாவின் பிரச்சனைகள் தீருமா..?
****
ருத்ரனின் வருகையைச் சற்றும் எதிர்பாராத ருத்ரா திடுக்கிட்டுப் பார்த்தாள், அங்கிருந்த அனைவரின் முகத்தையும் ஒருமுறைச் சுற்றிப் பார்த்தவன்.. வரவேற்கும் அப்ஷராவிற்கு விரிந்த புன்னகையை பதிலாய் கொடுக்க,
அதில் சுயத்திற்கு வந்த ஞானவேல், “வாங்க தம்பி..உங்களை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே..யார் நீங்க?” எனக் கேட்க
இருகரம் குவித்து வணக்கம் வைத்தவன் பதில் சொல்லும் முன் அவனை முந்திய அப்ஷரா, “அங்கிள் இவர் பெயர் தான் ருத்ரன்..நான் கூட சொன்னேன் தான..நம்ம மகிழ் மையத்திற்கு டொனேட் பண்ணுறதுக்காக வந்தாருன்னு..” என்றவளின் பேச்சில் நினைவு கூர்ந்த ஞானவேல்
“அப்படியா தம்பி உட்காருங்க...டேய் குடிக்க ஏதாவது கொண்டு வரச் சொல்லு..” ருத்ராவை நோக்கி குரல் கொடுக்க
ருத்ரனுக்கு குடிக்க காபி கொண்டு வந்து கொடுத்தவள் அவனுக்கு கண் ஜாடைக் காட்டி எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள்..
அதைக் கண்டு கொள்ளாத ருத்ரன், “மேடம் நேத்து நீங்க என் கார்ல வரும் போது உங்க பர்சை விட்டுட்டு போயிட்டிங்க..அதைக் கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன்..” ரத்தின சுருக்கமாய் சொன்னவன், வந்த வேகத்தில் விடைபெற்று கிளம்பிவிட்டான்..
அவன் போனதும் ருத்ராவின் புறம் திரும்பிய ஞானவேல், “என்ன டா இது? இவ்வளவு கேர் லெஸா இருக்க கூடாது..” ஆயிரம் அட்வைஸ்களை அள்ளிவிட்டவர் இறுதியாய் பர்ஸை அவளிடம் கொடுக்க
ருத்ராவிற்கு அட்வைஸ் செய்வது போல் அப்ஷராவும் நக்கல் அடித்துக் கொண்டாள்..
யாரோ என நினைத்து கோபம் கொண்ட ஞானவேலும் ரவியும் அமைதியாகி விட, ருத்ராவிற்கும் போன உயிர் அப்போது தான் திரும்பி வந்தது.