ஹாய் மக்களே
ஒரு வழியா தேடல் போட்டி முடிஞ்சாச்சு. முடிவுகளை அறிவிச்சாச்சு. ஒரு பெரிய பாரத்தை இறக்கி வச்ச உணர்வு. வெகுவாக திருப்தியாக இருக்கிறது. போட்டியில் கலந்து கொண்ட அனைவருமே உங்களது அதீத உழைப்பை கொடுத்து இருக்கிறீர்கள். ஆறு மாத பயணம். அதன் பின் எழுத்தாளர்களில் வேண்டுகோளுக்காக ஒரு மாத எக்ஸ்டென்ஷன். அதன் பின் முடிவுகளுக்காக இரண்டு மாத காத்திருப்பு. முடிவுகளில் எந்தவிதமான காம்ப்ரமைஸும் இருக்கக் கூடாது என கருதி ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து, ஓடி, களைத்து அமர்ந்து இருந்தாலும், ஒரு மிக பெரிய செயலை செய்து முடித்த திருப்தி எங்களுக்குள்.
நடுவர்களினால் ஒரு நாளைக்கு ஒரு நாவலை தான் படிக்க முடியும். அதுவும் கூட மிகப் பெரிய நாவல்களை எல்லாம் படிக்க ஒரு வாரம் கூட ஆனது.(நேமிராவின் நாவல் கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு பக்கங்களுக்கும் மேல்... இது போல தான் ஸ்ரீஜா வெங்கடேஷ் அவர்களின் அகத்திய ரகசியமும்... இன்னும் இது போல நிறைய உண்டு) இந்த இரண்டு மாத கால அவகாசம் போதவில்லை என்பது தான் உண்மை.
முடிவுகளில் சிலருக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம். இந்த முடிவுகள் நடுவர்களுடைய தீர்ப்பும், வோடிங் ஆக இரண்டுமாக சேர்ந்து முடிவெடுக்கப்பட்ட ஒன்று.
முதல் பரிசுக்கு எந்த படைப்பும் தகுதியாக இல்லை என்று நாங்கள் சொல்லவில்லை. அப்படி சொல்வது எங்களை நாங்களே குறைத்து சொல்வது போலத்தான். இப்படிப்பட்ட வார்த்தைகள் கண்டிப்பாக எழுத்தாளர்களை காயப்படுத்தும். ஆனால் இன்னும் அழுத்தமாக எதிர்பார்த்தோம். ஆரம்பம் முதலே கூறி வந்திருக்கிறேன், இது விளையாட்டு போட்டியல்ல. இணைய வரலாற்றில், இந்த ஜெனரில் யாருமே கொடுக்க முடியாத வாய்ப்பு ப்ளஸ் பரிசு இது என்று. அப்படி நாங்கள் ஒரு முயற்சியை முன்னெடுக்கிறோம் என்றால் எங்களுக்கான எதிர்பார்ப்பு மிக அதிகம் என்பதை எழுத்தாளர்கள் தயவு செய்து உணர்ந்து கொள்ளுங்கள் என்பதுதான் அது.
ஒரு கதையை பொறுத்தவரை வாசிப்பாளரின் பார்வை என்பது வேறு, எழுத்தாளரின் பார்வை என்பது வேறு, அதே கதையை ஒரு க்ரிடிக் பார்க்கும் பார்வை என்பது நிச்சயமாக வேறு தான். அதனால் தான் தங்களுக்கு பிடித்த கதை முதலிடத்தில் வரவில்லை என்றதும் சிலர் தங்களது கருத்தை பதிவு செய்திருக்கிறீகள். ஆனால் ஒருவருக்கு பிடித்த கதையை கிரிட்டிக்கும் நடுவர்களும் அலசி ஆராயும் போது கிடைக்கும் முடிவுகள் வேறு மாதிரியாகத்தான் இருக்கிறது என்பதை வாசிப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
எழுதிய ஒவ்வொருவரின் திறமையை பார்க்கும் போது வியப்பாக இருந்தது. ஆனால் அவர்கள் அவர்களது வட்டத்தை வெறும் நான்கு ரொமான்ஸ் சீனுக்குள் அடக்கிக் கொண்ட போது மனம் வருத்தப்படுகிறது. யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. இலக்கண பிழை, எழுத்து பிழை, கருத்து பிழை என்று நடுவர்கள் பட்டியலிடும் போது எங்கள் மனம் தவித்தது.
இரண்டு நாவல்கள், அவர்கள் உபயோகப்படுத்திய நேர்மையற்ற முறைகளுக்காக தேர்வில் சேர்த்து கொள்ளப்படவில்லை. ஒரே IP யில் இருந்து பல்வேறு பெயரில் மெயில் செய்வது, ஓட்டெடுப்பின் தன்மையை மாற்றி அமைக்க முயல்வது, ஒருவரே வேறு பெயர்களில் கமென்ட் செய்வது போன்றவைகளுக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டது.
முதல் பரிசை ரிசர்வ் செய்தால் கேள்விகள் வரும் என்று தெரியாதவர்களா நாங்கள்? இல்லை, அறுபதாயிரத்திற்கான பரிசை அறிவிக்க முடிந்தவர்களுக்கு இன்னும் நாற்பதாயிரம் ஒரு பிரச்சனையா என்ன? ஆனால் நாங்கள் சொல்ல வந்தது வேறு.
இன்னும் வெகு அழுத்தமாக, அனைவரையும் திரும்பி பார்க்க செய்யும் கதையாக இருக்க வேண்டும் என்று இத்தனை பெரிய பரிசுத் தொகையை அறிவித்து திறமையை தேடியதில் என்ன தவறு இருக்கப் போகிறது?
அடுத்த சிவசங்கரியையும், வாஸந்தியையும், எண்டமூரி வீரேந்திரநாத்தையும் தேடியதில் எங்கள் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது தான் உண்மை.
குடும்ப நாவல் என்ற வட்டத்தை மிகக் குறுகிய வட்டத்திற்குள் எடுத்து சென்ற பெருமை நிறைய பேருக்கு உண்டு. என்னிடமே, ‘குடும்ப நாவல் என்ற பெயரில் மேட்டரை தான மா எழுதறீங்க..?’ என்று கேள்வி வந்ததும் உண்டு. அந்த வட்டத்தை உடைக்க நினைத்து ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த தேடல்.
இது ஒரு முன்னெடுப்பு. அதற்காக பொழுதுபோக்கு தளத்தை மாற்றியமைப்பது எங்கள் நோக்கமல்ல. ஆனால் வட்டத்தை பெரிதாக்குவதுதான் எங்கள் நோக்கம். வாசிப்பவர்கள் பரந்துபட்ட எழுத்துக்களை வாசித்து உணர வேண்டும்.
ஆனால் இங்கு நடந்தது என்ன?
வித்தியாசமான எழுத்துக்களை நிறைய பேர் வாசிக்கவே இல்லை. அந்த வருத்தம் மிகவுண்டு. வோட்டிங் மிக முக்கியமாக கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்து இருந்தபோதும் அதில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை எங்களுக்கு திருப்தியளிக்கவில்லை.
மொத்தம் 710 பேர் கலந்து கொண்டனர் இந்த ஓட்டெடுப்பில்! ஒருவருக்கு மூன்று ஓட்டுக்கள்.
Vanisha - 394
Monisha - 257
Thendral -191
Vathsala Raghavan -174
*********** -162
Madhumathi Bharath -143
நல்ல கதைளை படித்து வாக்களிக்கவில்லையே என்று இப்போது வருத்தப்படுகிறார்கள் சிலர்.
தாங்கள் நினைத்த கதை வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக அந்த கதைகளுக்கு ஓட்டு போட்டிருக்க வேண்டும். தங்களது நண்பர்கள் வட்டத்துக்கும் அந்த கதைகளை அறிமுகப்படுத்தி படிக்க செய்திருக்க வேண்டும். நல்ல கதைகளுக்கு ஆதரவு கொடுத்திருக்க வேண்டும். ‘என்னோட ப்ரெண்ட்ஸ் மூணு பேர் எழுதறாங்க... அவங்களுக்கு வோட் போட்டேன் மேம்...’ என்று என்னிடம் கூறியவர்கள் ஏராளம்.
இவ்வளவு சீரியசான ஒரு போட்டியில், அதிலும் அடுத்த தேடலுக்கு மீடியா கை கோர்க்க தயாராக உள்ள ஒரு போட்டியில், வாசிப்பாளர்களின் கருத்துக்களுக்கும் ஓட்டுக்கும் மிகுந்த முக்கியத்துவம் உள்ள ஒரு இடத்தில், உங்களது கருத்துக்களையும் இருப்பையும் நாங்கள் மதிக்கிறோம் என்று சொல்லும் போது வாசிப்பாளர்களின் பொறுப்பும் தேவையும் மிக அதிகமானதாகிறது.
நியுஸ் செவன் சேனல் எம்டி என்னிடம் சொன்னது ஒன்றுதான். எக்ஸ்ட்ராடினரி டாலேண்ட்சை எங்களுக்கு அறிமுகப்படுத்துங்க... மீதியை நாங்க பார்த்துக்கறோம் என்பதுதான்.
அந்த எக்ஸ்ட்ராடினரி திறமைகளை தேடும் போது இயற்கையாகவே, எங்களது எதிர்பார்ப்பின் ஸ்கேல் ஆப் ரெபரென்ஸ் மிக அதிகம்.
சிவசங்கரியின் நண்டோ, அல்லது நமது மைதிலியின் உயிரானாய் உணர்வானாய் போன்ற ஒரு கதைகள் நிச்சயம் மைல்கல்கள். அதை போன்றதொரு மைல் கல்லை படைக்க முடியாதவர்கள் அல்ல நம் தோழிகள். இது முதல் களம்... பயிற்சி களமாகட்டும். எங்களுக்கும் சரி... உங்களுக்கும் சரி...
அடுத்த களத்தில் நிச்சயம் இன்னும் பெரிய எதிர்பார்ப்போடு சந்திப்போம். சரித்திரம் படைக்க நினைப்பவர்கள் கண்டிப்பாக எங்களோடு கைகோர்த்து கொள்ளலாம்.
அதுவரை இதில் மூக்கை நுழைத்து அரசியல் செய்ய நினைப்பவர்களும் செய்யலாம். ஏனென்றால் எல்லோருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு. முடிந்தால் இதே போன்றதொரு போட்டியை எப்போதும் போல காப்பியடித்து எங்களை விட இன்னும் நேர்மையாக எருமையாக கருமையாகவும் நடத்தலாம். அவர்கள் இஷ்டம். இந்த பாரா அரசியல் செய்ய நினைக்கும் சிலருக்கு மட்டுமே.
ஆனால் இந்த போட்டியை நடத்தி முடித்ததில் எங்களுக்கு வெகுவான மகிழ்ச்சி ப்ளஸ் திருப்தி. தேடலில் முடிவு எப்படி வந்திருந்தாலும் விமர்சனத்திற்கு உள்ளாகித்தான் இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். ஏனென்றால் வாசித்த ஒவ்வொருவரும் உளப்பூர்வமாக வாசித்தீர்கள் என்பதும் தெரியும், எழுத்தாளர்களின் உழைப்பும் மிக அதிகம். இது போன்ற போட்டிகளுக்கு பழகாத இந்த ஜனரஞ்சகமான எழுத்துக்களுக்கு அங்கீகாரம் கிடைக்க இன்னும் நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம் மக்களே!
வாருங்கள் பயணிப்போம்!
டிஸ்கி1 :
அடுத்த பத்து நாட்களுக்கு என்னால் சைட் பக்கம் கூட வர முடியாது மக்களே. எதுவாக இருந்தாலும் கேட்டு வைங்க. வந்து பதில் சொல்றேன். தம்பியின் திருமணத்திற்கு ரெடி ஆகிட்டு இருக்கோம். அம்மாவும் தங்கையும் இல்லாததால் நான் ஒருத்தி மட்டுமே அத்தனை வேலைகளையும் பார்த்துட்டு இருக்கேன். சோ இப்போதைக்கு கண்ணை கட்டிட்டு இருக்கு வேலையெல்லாம்.
டிஸ்கி2:
அக்டோபர் 20 & 21 என் உடன்பிறப்புக்கு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திருமணம். இதையே அழைப்பாக எண்ணி தோழிகள் (தோழர்களும் வரலாம்
) அனைவரும் வந்துவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் மக்களே