Sanofarmansur
நாட்டாமை
Nice update sis
திக் திக் நிமிடங்கள்
ஆதி அவனிடம் சொன்னது இதுதான்.
"அரண்மனையில 9.00 மணிக்கு வெடிக்கிற மாதிரி டைம் பாம் செட் பண்ணி இருக்காங்களாம்... அதுவும் தமிழை அடைச்ச வைச்ச ரூம்ல"
வீரேந்திரன் அந்த தகவலை கேட்டு அப்படியே உடைந்து நொறுங்கி போனான்.
தன் கைகடிகாரத்தில் அவசரமாய் நேரத்தை பார்க்க அது 8. 54 என்று காண்பிக்க அவன் பதட்டத்தோடு "எந்த ரூம் ?" என்று கேட்டான்.
"அந்த ஆளு... என்னை கொன்னாலும் சொல்ல மாட்டேன்... முடிஞ்சா கண்டுபிடிச்சிக்கோன்னு சொல்லிட்டான்" என்றதும், வீரேந்திரன் கோபத்தோடு "ஜஸ்ட் ஷுட் ஹும்" என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்.
நெற்றியெல்லாம் வியர்வை வழிய அவசரமாய் வெளியே வந்தவன் சண்முகத்திற்கு அழைத்தான்.
வெளியே நிற்கும் எல்லா காவலர்களையும் அரண்மனைக்குள் அனுப்பி தேடச் சொன்னான்.
அடிவயிற்றில் இருந்து "தமிழச்சிசிசிசிசிசிசிசிசிசி" என்று முழக்கமிட்டான்.
அந்த அரண்மனை முழுக்கவும் எதிரொலித்தது. அது அவள் காதில் விழுந்திருக்குமா... தெரியாது... மீண்டும் அதே போல் பலமுறை கத்தியவன் மூச்சு வாங்க கூட நேரமில்லாமல் அந்த பிரமாண்ட அரண்மனையின் ஒவ்வொரு அறைக்குள்ளும் நுழைந்து தேடினான்.
அவன் கண்ணீர் உடைப்பெடுக்க ஆரம்பிக்க, ரொம்பவும் பிராயத்தனப்பட்டு தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டுவந்தான். அவன் தேடியது போலவே ஒவ்வொரு காவலர்களும் தேடினர்.
ஆனால் அவர்களின் தேடல் அத்தனை சுலபமாய் முடிந்துவிடுமா என்ன ? இருளின் பிடியில் இருக்கும் அந்த அரண்மனையின் ஒவ்வொரு அறையும் பிரம்மிப்பூட்டும் அளவிற்கு பெரியது. அவர்கள் தேடல் அத்தனை சுலபமில்லை.
அவன் அந்த அரண்மனை பற்றி இதுவரையிலும் அறிந்து கொள்ளவில்லை. பொறுமையாய் தெரிந்து கொள்ளவும், ஆராய்ச்சி செய்யவும் இப்போது அவனுக்கு நேரமுமில்லை.
தன் திருமணத்திற்கு வந்த போது கூட இத்தகைய பெரிய அரண்மனையை பிரமிக்கவோ சுற்றி பார்க்கவோ கூட அவனுக்கு நேரமோ பொறுமையோ இருக்கவில்லை.
ஆனால் இன்று அந்த அரண்மனையின் பிரமாண்டம் அவனை மிரட்சியடைய வைத்தது. ஒரு பக்கம் எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.
அவன் ஒவ்வொரு அறைக்குள்ளும் நுழைய அது இன்னொரு அறையோடு இருந்தது.
நேரத்தை கவனித்தான் 8.57.
இன்னும் மூன்று நிமிடங்களே மீதமிருக்க கீழ்தளத்திற்கு இறங்கினான்.
அவள் இருக்கும் அறையில்தான் அந்த வெடிகுண்டு இருக்குமெனில் அவளை கண்டுபிடித்தால் மட்டுமே எதுவும் செய்ய முடியும்.
அவள் இருக்குமிடத்தை இப்போது வரை யாராலும் கண்டறிய முடியவில்லை எனும் போது அவள் எங்கே ? மனம் அதீதமான பதட்டத்தை நிரப்ப நேரத்தை கவனித்தான்.
அதே 8.57தான்... கால சக்கரம் சுழலாமல் அப்படியே நின்றுவிட்டாள் என்ன ? என்று தோன்றியது.
அங்கே தேடி கொண்டிருக்கும் காவலர்கள் யாருக்கும் எதுவும் நேர்ந்துவிட கூடாதென்ற கவலை உண்டாக, எல்லா காவலர்களையும் உடனடியாய் வெளியேற சொல்லி உத்தரவு பிறப்பித்தான்.
சண்முகம் உடனிருப்பதாக சொல்ல அவரையும் கட்டாயப்படுத்தி வெளியேற சொல்லிவிட்டு அவன் மட்டும் தன்னந்தனியாய் நின்றான்.
அந்த அரண்மனை முழுவதும் நிசப்தமாகிட அவன் சத்தமாய் "ஏ தமிழச்சி... எங்கடி இருக்க ?" என்று ஆவசமாய் கத்தினான்.
அவன் குரல் அந்த அரண்மனை முழுவதும் எதிரொலித்தது. ஆனால் எந்தவித பதிலும் இல்லாமல் மீண்டும் நிசப்தமானது.
மணி 8. 58ஐ தொட்டுவிட்டது. 120 விநாடிகள்... என்ன செய்வதென்று புரியாமல் அப்படியே நின்றுவிட்டான்.
ஒவ்வொரு நொடியும் மரணித்து விடும் உணர்வு...
அப்போது அந்த நிசப்தத்தை உடைத்தபடி ஏதோ விழுந்த சத்தம். கூர்மையாய் தீட்டி காத்திருந்த அவன் செவிகள் அந்த சத்தம் வந்த திசையை சரியாய் கணிக்க, அவசரமாய் ஓடிச்சென்றான்.
அங்கிருந்த அறையை திறக்க, பழைய பொருட்களெல்லாம் அங்கே வைக்கப்பட்டிருந்தது.
"தமிழச்சி" என்றழைத்தபடி அந்த அறை முழுக்க அவன் அவசரமாய் தேடினான். ஆனால் பலனில்லை.
அப்போது அவனின் கழுகு பார்வை அங்கே கிடந்த பச்சை நிற திரைசீலையை கவனித்தது.
உடனே அது மேலே அவள் தாத்தா அறையில் பார்த்தவை என்று கணித்தான்.
சட்டென்று அவன் மனதில் உதித்த எண்ணம் அவனை அதிர்ச்சிக்குள்ளாகியது.
இப்படியும் அவள் செய்ய கூடுமா ?
இத்தனை தைரியமா அவளுக்கு? என்று தானே கேட்டபடி நிலைகுலைந்து போனான்.
அவளை பற்றி ரகுவிடம் அவன் சொன்ன வார்த்தை இப்போது அவன் காதில் ஒலித்தது.
'அவளுக்கு பிடிச்ச விஷயங்களை விட்டுகொடுக்காம இருக்க அவ எந்த எக்ஸ்டென்ட்டுக்கும் போவா'
ஒரு நொடி அப்படியே அசைவற்று அதிர்ந்து நின்றவன் அடுத்த நொடியே நேரத்தை பார்க்க 8.59... இன்னும் 60 விநாடிகள் மட்டுமே...
சில நிமிடங்களுக்கு முன்பாக...
ஆதி சுரங்க பாதை வழியாய் சென்ற போது தமிழ் அந்த ஓவியத்தை திறந்து வெளியே வந்தாள்.
அவள் வந்த வழியை பார்த்த அங்கிருந்த மூவரும் வியப்பில் ஆழ்ந்துவிட்டனர்.
அதில் தலைமையாய் இருந்த ஒருவன் உடனடியாய் ஆச்சர்யத்தில் இருந்து மீண்ட நொடி "எங்கடி உன் கூட இருந்தவ ?!" என்று கேட்க,
"தெரியாது" என்றாள்.
"டே... இவ வேலைக்காக மாட்டா... நீங்க உள்ளே போய் தேடுங்கடா" என்று ஆட்களை பணித்தவன், அத்தோடு நிற்காமல் அவளை வலுக்கட்டாயமாய் இழுத்து அறை வாசலில் அசைந்து கொண்டிருந்த பச்சை நிற திரைசீலையை கிழித்து அவளின் இருகரத்தையும் பிணைத்தான்.
சற்று முன்புதான் அவளின் சாகசத்தையும் புத்திகூர்மையையும் பார்த்தானே! இனியும் அவளை அப்படி சாதாரணமாய் விட்டுவிடுவானா என்ன? அவள் தப்பிக்க எந்தவித சந்தர்ப்பத்தை இனியும் அவளுக்கு வழங்க அவன் தயாராக இல்லை.
அவளை வெறுப்பாய் பார்த்தவன் "இப்ப காட்டிறி உன் புத்திசாலித்தனத்தையும் திமிரையும்" என்றான் சவால் தொனியில்.
தமிழ் சிறிதும் அஞ்சாமல் சிரித்தபடி "என்ன பாஸ்... என் கையை கட்டிட்டு காட்டுன்னா... எப்படி முடியும்? கழட்டி விடுங்க காட்டிறேன்" என்றாள்.
அதற்குள் அவனின் ஆட்கள் ஓடிவந்து "உள்ளே ஒரு சுரங்க பாதை இருக்கு... அது வழியாதான் அந்த பொண்ணு வெளியே போயிருக்கா" என்றார்கள்.
அவள் புன்னகையோடு "ப்ர்லியன்ட்தான்.. கண்டுபிடிச்சிட்டீங்களே" என்றாள்.
அத்தனை நேரம் அவன் கொண்டிருந்த பொறுமையெல்லாம் கோபமாய் மாற, தமிழ் நெற்றியில் துப்பாக்கியை நிறுத்தியவன் "உன் கட்டுகதையெல்லாம் அளக்காம பொக்கீஷம் எங்கன்னு இப்ப உண்மையை சொல்ற... இல்ல" என்று மிரட்டலாய் பார்த்தான்.
"இல்லன்னு என்ன பண்ணுவ...... சுட்டிருவியா... சுடு... ஆனா என்னை தவிர அந்த பொக்கிஷத்தை எடுக்கவும் முடியாது... யாரும் கண்டுபிடிக்கவும் முடியாது" என்றாள்.
"உன் உயிரை விட அந்த பொக்கிஷம் முக்கியமா? "
"அதேதான் நானும் கேட்கிறேன்.. உங்க எல்லார் உயிரை விட அந்த பொக்கிஷம் முக்கியமா... ஒழுங்கா ஓடி போயிடுங்க" என்று அவள் எச்சரிக்கவும் அவன் கோபத்தில் அவள் கன்னத்தில் அறைந்தான்.
அவள் சீற்றமாகி அவனை முறைத்தபடி "வேண்டாம்... நீ செய்றதெல்லாம் என் தாத்தா பார்த்திட்டிருக்காரு... அப்புறம் உன் நிலைமை அதோகதிதான்"
"எங்கடி உன் தாத்தா ?" என்று கேட்டு சிரித்தான்.
"அதோ" என்று சுவற்றில் மாட்டியிருந்த சிம்மவர்மன் புகைப்படத்தை காண்பிக்க அங்கே இருந்தவர்கள் இன்னும் சத்தமாய் சிரித்தனர்.
"செத்து போன தாத்தா உன்னை வந்து காப்பாத்துவாரா... ?!"
"நீங்கெல்லாம் செத்தா மண்ணாதான்டா போவீங்க... எங்க தாத்தா இறந்து கடவுளா வாழ்றாரு... அவர் என்னை நிச்சயம் காப்பாத்துவாரு" என்று திடமான நம்பிக்கையோடு உரைத்தாள்.
அந்த அறைக்குள் அவசரமாய் ஓடி வந்தவன் "வெளியே போலீஸ் நிற்குது" என்றான்.
அவர்களின் தலைவன் அந்த கணமே "எந்த ரூம் லைட்டும் எரிய கூடாது ஆஃப் பண்ணுங்க" என்று சொல்லி அந்த அறையின் விளக்கையும் அணைத்தான்.
தமிழ் புன்னகையித்தபடி "மாட்டினிங்களா !" என்று சொல்லி பரிகசித்தவள் அவர்களை நோக்கி "அதான் சொன்னேனே எங்க தாத்தா என்னை காப்பாத்துவாருன்னு" என்று சொல்லவும்
தன் அலைபேசி ஒளியை எரியவிட்டு, அவள் தலைமுடியை அவன் பிடித்து கொள்ள "விடிறா" என்று சீறினாள்.
"ரொம்ப திமிரு உனக்கு... நாங்க செத்தா... மண்ணா போவோம்னு சொன்ன இல்ல .. இப்ப நீ... உன் அரண்மனை... உன்னை தேடி வர உன் ஆறடி மனிஷன்... எல்லாரும் மண்ணா போயீடுவீங்க... அப்ப உன் தாத்தா வந்து காப்பாத்துவாராடி" என்று ஆக்ரோஷமாய் கேட்டவன் தன் ஆட்களிடம் இருந்த பெட்டியை திறந்து காண்பிக்க அவள் அதிர்ந்து போனாள்.
அவள் தலைமுடியை விடாமல் இறுக்கியபடி "என்ன... மிரண்டுட்டியா... இதான் பிளாஸ்டிக் எக்ஸ்பிளோஸிவ்... முன்னே பின்ன பார்த்திருக்கியா" என்று கேட்க அந்த நொடி அவளின் ரத்த நாளங்களில் செங்குருதிக்கு பதிலாக செந்தழல் பாய்ந்து உஷ்ணமேற்றிய உணர்வு.
அவள் நினைத்ததை விடவும் இவர்கள் ரொம்பவும் கொடூரமானவர்களாய் இருக்க, இப்படி ஒரு மோசமான நிலையை எதிர்கொள்ள நேரிடும் என்று அவள் கனவிலும் எண்ணி கொண்டதில்லை.
அந்த நொடி இதெல்லாம் கனவாய் இருந்துவிட கூடாதா என்ற ஏக்கம்.
என்ன செய்ய? கனவும் கூட அவளுக்கு கற்பனை அல்ல? நிஜ நிகழ்வுகள்தானே !
துரிதமாய் சிந்திக்கும் அவள் மூளை அப்போது சிந்திக்கும் திறனை இழந்து ஸ்தம்பித்து கிடக்க, மத்தளமாய் கொட்டும் அவள் இதயத்துடிப்பு அவள் செவியை துளைத்து இன்னும் அவள் உயிரோடு இருக்கிறாள் என்பதை பறைசாற்றி கொண்டிருந்தது.
ஆனால் இன்னும் எத்தனை நிமடங்கள்... அவளும் அந்த அரண்மனையும்...
தன் உயிரை விடவும் அரண்மனையே அவளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாய் பட, தன் எதிரே கொடூரமாய் நின்றிருந்தவனிடம் மன்றாட ஆரம்பித்தாள்.
Hi friends,
நீங்க காது குளிர என்னை திட்டிறது எனக்கு நல்லாவே கேட்குது. நான் கதையை இழுக்கனும்னு நினைக்கல... அதுவாதான் ஒவ்வொரு அத்தியாயமா வளர்ந்திட்டிருக்கு... இவற்றை எல்லாம் தாண்டி உங்கள் மனதில் பல கேள்விகள் இருக்கும். அவையெல்லாம் முடிவில் தெளிவுப்படும்.
இந்த கதையை தொடராய் படிப்பது சிரமம்தான். இருப்பினும் எனக்கும் வேறுவழியில்லை.