Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
புது பரிமாணம்
இருவரும் மரணத்தோடு போராடி உயிர்பெற்று வந்திருந்தனர்.
சற்றுமுன்பு வேகமாய் சுழன்றிருந்த உலகம், இப்போது அப்படியே சுழலாமல் நின்றுவிட்டதாய் தோன்றியது.
வெகுநேரமாய் அவர்களின் அணைப்பின் இறுக்கம் தளரவேயில்லை.
அவனுக்குள் முழ்கி கிடந்தவளுக்கோ அவனை பிரியும் எண்ணமே எழவில்லை. அவனுக்குமே அவளை விட்டுவிலகட மனமே வரவில்லை.
ஆனால் வீரேந்திரன் தன் அருகாமையில் அசைந்த நிழலுருவை கண்டு தமிழை தன் அணைப்பிலிருந்து விடுவித்தான்.
விழிகள் மூடி அவன் மேல அயர்ந்திருந்தவள் அவன் விலகப் போனதும் தன்னிலை உணர்ந்த விழித்துக் கொண்டாள்.
அவன் எழுந்து நின்று கொண்டு தன் கரத்திலிருந்து மணலை தட்டியபடியே "அந்த கடத்தல் கும்பல் எங்க இருக்காங்க சண்முகம் ?" என்று கேட்க,
சண்முகம் அவனிடம் தூரத்தில் கட்டி வைத்திருப்பவளை கைநீட்டி காண்பிக்க அவர்களை பார்த்தவன் விஷ்வா ஆதியை நோக்கி நடந்தான்.
தமிழ் தன் எதிரே மோதிக் கொண்டிருந்த அலைகளை நன்றியுணர்வோடு பார்த்தாள்.
தாத்தா அடிக்கடி சொல்வதுண்டு. இந்த கடலும் இந்த கடலில் இருக்கும் அவர்களின் குலதெய்வமும் அவர்களை என்றும் விட்டுகொடுத்துவிடாது என்று.
எழுந்து நின்றவள், பின்னோடு பிரமாண்டத்தின் முழு ரூபமாய் நின்றிருந்த அரண்மனையை பார்த்து நிம்மதி பெருமூச்சுவிட்டாள்.
அதோடு அவள் முன்னே நடந்து சென்று கொண்டிருந்த வீரேந்திரனை நோக்கினாள்.
இத்தனை நேரம் தன்னை இறுக்கமாய் அவனின் அரவணைப்பில் வைத்திருந்துவிட்டு, இப்போது கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்தது ஏன்?
தன் மீதான கோபமா என்று எண்ணத்தோடு விரக்தியுற்றவவள் நடக்க முடியாமல் நடந்து வந்தாள்.
வெறுங்கால்களோடு ஓடி வரும் போது அவள் கால்களை குத்திய எதுவும் அப்போது வலிக்கவில்லை. ஆனால் இப்போது நடக்க முடியாமல் அவஸ்த்தையாய் இருந்தது.
வீரேந்திரன் நேராய் விஷ்வாவை பார்த்ததும் புன்னகையித்தபடி "கிரேட் விஷ்வா... உண்மையிலேயே நீங்க செஞ்சது ரொம்ப பெரிய விஷயம்... என்ன கட்ஸ் ?!! " என்று பாராட்டியபடி அவனை தன் தோளோடு அணைக்க விஷ்வா வியப்பின் விளிம்பில் தன் மனைவியை பார்த்தான்.
சற்றுமுன்பு வரை விஷ்வாவும் ஆதியும் படபடப்போடு என்ன நேருமோ என்று காத்திருந்த சமயத்தில் தூரத்தில் தமிழும் வீரேந்திரனும் அவர்கள் உயிர்களை பணைய வைத்து பாமை தூக்கிவீசியதை பார்த்து கொண்டுதான் இருந்தனர்.
எல்லோருமே கிட்டதட்ட பரபரப்பின் உச்சத்தை எட்டிய தருணம் அது. அந்த பாம் வெடித்த சத்தம் அந்த இடத்தையே அதிர வைத்திருந்தது.
விஷ்வா தமிழ் வீரேந்திரனின் வீரசாகசத்தை பார்த்து மெய்சிலிர்த்து போயிருக்க அவன் தன்னை பாராட்டி பேசுவது நெகழச்சியாய் இருந்தது.
வீரேந்திரனின் புகழ்ச்சிகளுக்கு தான் உரித்தானவன் இல்லையே என்ற எண்ணத்தோடு விஷ்வா "ஸார் நான்.." என்று அவன் பேசுவதற்காக முன்னதாக ஆதி அவன் கரத்தை பற்றி கொண்டு அழுத்தினாள்.
அவன் மௌனமாகிட பின்னர் அவள் புன்னகையோடு "விஷ்வா மட்டும் இல்லைன்னா அவனுங்க தப்பிச்சி போயிப்பாங்க... நான் வேண்டாம் விஷ்வா... அவனுங்க ஆறு பேர் இருக்கானுங்கனு ரிஸ்க்னு சொன்னதுக்கு... ரிஸ்க்கெல்லாம் எனக்கு ரஸ்க்கு சாப்பிடற மாதிரின்னு அஸால்ட்டா அவனுங்கள அடிச்சி போட்டுட்டாரு" என்றாள்.
விரேந்திரன் புன்னகையித்தபடி கேட்டுவிட்டு விஷ்வாவின் தோளை தட்டி மெச்சிய பார்வை பார்க்க, அவனோ புருவத்தை ஏற்றி தன் மனைவி சொன்னதை கேட்டு வியப்பாய் பார்த்திருந்தான்.
அவன் தன் மனைவி காதோடு "நான் எப்போடி இப்படி எல்லாம் சொன்னேன்... நீ பாட்டுக்கு ஏசிபி சார்கிட்ட கதையா அளந்துட்டிருக்க" என்றான்.
வீரேந்திரன் குழப்பமாக "என்ன விஷ்வா? ஏதாச்சும் சொல்லனுமா? !" என்று கேட்கவும் விஷ்வா யோசனை குறியோடு "அது ஒண்ணும் இல்ல... போலீஸ் ஸ்டேஷ்னல உங்ககிட்ட கொஞ்சம் ரூடா பேசிட்டேன் சாரி" என்றான்.
"விடுங்க விஷ்வா... உங்க பாயின்ட் ஆஃப் வீயூல இருந்து பார்த்தா நீங்க பேசினதில ஒண்ணும் தப்பில்லை" என்றான்.
இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்க, தமிழ் பொறுமையாய் அவர்களிடம் வந்து சேர ஆதி தன் தோழியை இறுக்கி அணைத்து கொண்டு "ரொம்ப டென்ஷன் படுத்திட்ட தமிழ்... எங்களுக்கெல்லாம் உயிர் போய் உயிர் வந்த மாதிரி இருந்துச்சு" என்றாள்.
தமிழும் தன் தோழியை தழுவியபடி "ஹ்ம்ம் சாரி" என்றாள்.
ஆதி தன் தோழியின் முகத்தை பார்த்து "சாரியை என்கிட்ட இல்ல... உன் ஹஸ்பெண்ட்கிட்ட சொல்லு... பாவம் அவர்தான் ரொம்ப டென்ஷனாயிட்டாரு... அவர் உனக்காக ஓடின ஓட்டம் இருக்கு இல்ல... ப்ச்... நாங்கெல்லாம் அப்படியே ஸ்டர்ன் ஆயிட்டோம்... அவர் கத்திட்டு ஓடினதை பார்த்து என்ன நடக்குமோன்னு பார்த்திட்டிருந்த எங்களுக்கே பிபி எகிறிடுச்சு... ஏசிபி சார் நிலைமை" என்று சொல்லிக் கொண்டிருக்க விஷ்வா வீரேந்திரனை பார்த்து "நீங்க ரியல் ஹீரோ சார்" என்றான்.
ஆதி தன் தோழியின் முகத்தை பார்த்தபடி "ட்ரூ" என்றாள்.
வீரேந்திரன் தலையசைத்து "நீங்க சொல்றளவுக்கு எல்லாம் இல்ல... நான் ஒரு ட்ரெயின்ட் போலீஸ்... பட் நீங்க செஞ்சதுதான் பெரிய விஷயம்" என்று விஷ்வாவையும் ஆதியையும் புகழ, தமிழ் அவர்கள் பேசியதன் அர்த்தம் புரியாமல் பார்த்து கொண்டிருந்தாள்.
வீரேந்திரன் தன் அலைப்பேசி எடுத்து கொண்டு அவர்களிடம் "எக்ஸ்க்யூஸ் மீ" என்று சொல்லி அகன்றுவிட, ஆதி அப்போது அந்த கடத்தல் கும்பலை பிடித்த நிகழ்வுகளை தன் தோழிக்கு விவரித்த அதே சமயத்தில் தன் கணவனின் புகழுரைகளும் ஓயாமல் பாடி தீர்த்தாள்.
தமிழ் விஷ்வாவை நோக்கி "பயங்கரமா பைஃட் பண்ணி இருக்கீங்க போல... நான்தான் அந்த ஸ்டன்ட் சீனெல்லாம் பார்க்க முடியாம மிஸ் பண்ணிட்டேன்" என்றாள்.
"பாமை தூக்கிட்டு ஓடினதைவிடவா... நான் செஞ்சது பெரிய ஸ்டன்ட்டு" என்றான் விஷ்வா.
தமிழ் அசட்டுத்தனமாய் சிரிக்க விஷ்வாவே மேலும் தொடர்ந்தான்.
"புரிஷன்மார்களை டென்ஷன்படுத்திறதில உங்களுக்கு எல்லாம் அப்படி ஒரு ஆனந்தம்" என்றான்.
ஆதி கோபமாய் முறைத்து "இப்ப என்ன சொல்ல வர்ற...? " என்று கேட்டாள்.
விஷ்வா அந்த பேச்சை தொடராமல் "நீங்க இரண்டு பேரும் ரொம்ப டயர்ட்டா இருக்கீங்க... தண்ணி பாட்டிலும் சாப்பிட ஏதாச்சும் வாங்கிட்டு வர்றேன்" என்று நழுவி கொண்டான்.
பெண் உரிமை, பெண் சுதந்திரம் என்று பேச ஆரம்பித்தால் ஆதி வசைமாறி பொழிந்து அவனை ஒரு வழி செய்துவிடுவாள். அதனால்தான் ரொம்பவும் சாமர்த்தியமாய் அந்த பேச்சை வளர்க்காமல் தப்பிக் கொண்டான்.
தமிழ் தன் தோழியினை பார்த்து "நீ விஷ்வா சாரை ரொம்பதான் மிரட்டி வைச்சிருக்க" என்றாள்.
"அய்யோ ? அவனா மிரள்வான்... உலக மகா ப்ராஃட்டு" என்று ஆதி விஷ்வாவை பற்றி சொல்லி சிரிக்க தமிழும் இதனை கேட்டு புன்னகையித்தாள்.
இவர்களின் சம்பாஷணை நிகழ்ந்து கொண்டிருக்கும் அதே சமயத்தில் வீரேந்திரன் நேராய் கட்டிவைக்கப்பட்டிருந்த அந்த கடத்தல் கும்பலிடம் அருகில் சென்றான்.
வீரேந்திரன் சண்முகத்திடம் திரும்பி "சுற்றி நிக்கிற எல்லாரையும் க்ளியர் பண்ணுங்க" என்றான்.
அங்கே நடந்த கலவரத்தாலும் எழுந்த பெரிய சத்ததாலும் மக்கள் கூட்டம் அந்த இடத்தை சூழ்ந்து கொண்டிருந்தது. அவர்கள் எல்லோரையும் சண்முகமும் மற்ற கான்ஸ்டபிள்களும் பிராயத்தனப்பட்டு போகச் செய்ய இப்போது அந்த இடம் வெறிச்சோடிப் போனது.
வீரேந்திரன் எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல் அங்கிருப்பவர்கள் ஒவ்வொரு பெயராய் விசாரித்தான். அந்த கூட்டத்து தலைவன் யார் என்பதை ஆதி விவரித்ததை வைத்து கண்டறிந்தான். அவன் தன்னை உமேஷ் என்று சொல்லி அறிமுகம் செய்து கொண்டான்.
அப்போது வீரேந்திரன் தூரத்தில் நின்று பேசிக் கொண்டிருந்த இரு தோழிகளையும் அருகில் வர சொல்லி கையசைத்து அழைத்தான்.
அப்போது உமேஷின் தலைமுடியை பற்றியவன் ஆதியை நோக்கி "என்னை கொன்னாலும் பாம் எங்க வைச்சிருக்கேன்னு சொல்ல மாட்டேன்னு சொன்ன வீராதி வீரர் இவன்தானே" என்று கேட்க "ஆமாம்" என்றாள்.
தமிழும் எரிச்சலோடு "இவன்தான் என்னை அடிச்சி என் முடியெல்லாம் பிடிச்சி இழுத்து ரொம்ப இன்ஸல்ட் பண்ணான்" என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வீரேந்திரனின் கோபம் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருந்தன.
உடனே சண்முகத்திடம் திரும்பியவன் "இந்த அஞ்சு பேரையும் ஜீப்ல ஏத்துங்க.. இவனை தவிர" என்று வீரேந்திரன் சொல்ல உமேஷிற்கு கதிகலங்கி போனது.
அந்த பயத்தை வீரேந்திரனின் விழிகள் நுணுக்கமாய் கவனிக்க, சண்முகமும் அவன் சொன்னது போலவே அந்த ஐந்து பேரையும் வண்டியில் ஏற்றினான்.
உமேஷும் அவன் பிண்ணனியில் உள்ள கூட்டத்தினரும் வீரேந்திரனின் குணத்தை பற்றி விசாரித்த பின்னரே இப்படி ஒரு திட்டத்தை தீட்டியிருந்தனர்.
நிச்சயம் இந்த குண்டுவெடிப்பில் அவன் இறந்துவிடுவான் என்று அவர்கள் கட்டிய மனக்கோட்டை எல்லாம் இப்போது சீட்டுக்கட்டு கோபுரமாய் சரிந்திருக்க தனியாய் வந்து சிங்கத்தின் வாயில் தலையை கொடுத்துவிட்டோம் என்று தோன்றியது அவனுக்கு.
வீரேந்திரன் அவன் முகமாற்றங்களை கவனித்தபடியே நெருங்கி தன் துப்பாக்கியை அவன் வாயில் நுழைத்து தொண்டை குழியில் அழுத்துவது போல் இறக்க அவன் அரண்டு போய்
"உஹும் ஹும்" என்று கனைத்தபடி தலையசைத்தான்.
வீரேந்திரன் புருவத்தை ஏற்றியபடி "என்னடா ?!... கொன்னாலும் பரவாயில்லைனு நீதானே சொன்ன " என்று தன் துப்பாக்கியை எடுக்காமலே கேட்க, அவன் செயலை பார்த்து கொண்டிருந்த தமிழுக்கும் ஆதிக்கும் கூட அச்சம் தொற்றி கொண்டது.