அவர்களை வழியனுப்பி விட்டு வீட்டிற்குள் வீட்டிற்குள் வந்த கருணாகரன்... சீதாவிடம் வயல்வேலைகள் இன்று பார்க்காததால், தான் சென்று மதியம் வருவதாக கூறி புறப்பட்டு விட்டார்.
“இந்த முத்ரா எங்க போனா... இன்னும் கீழ வரல...”
என்று சீதா மேலே சென்று பார்க்க... அங்கு முத்ரா அக்காவின் மேல் கையை போட்டவாறு அவளுடன் உறங்கி கொண்டிருந்தாள்.
“நல்ல புள்ளைங்க...”
என்று தலையில் அடித்தவர்... காலி பாத்திரத்தை எடுத்துக்கொண்டு கீழே சென்றுவிட்டார்.
பின்மதிய வேலையில் உறக்கம் கலைந்து எழுந்து அமர்ந்த ருத்ரா... தன் தங்கையும் தன்னுடன் உறங்குவதை கண்டு புன்னகையுடன் அவள் தலையை வருடினாள்...
மனம் காலையில் நடந்ததை எண்ணி பார்த்தது...
உணவை எடுத்து வந்த முத்ரா படுத்திருந்த தன் தமக்கையை எழுப்பியவாறு...
“என்ன ருத்ரா... இந்த ரூம்க்கு வந்துட்ட... அங்க தான இருந்த..? இந்த மாசம்... அந்த ரூம்...”
என்று நினைவு படுத்தினாள்.
அதற்கு பதில் கூறாமல் ருத்ரா இருக்கவே.. என்ன நடந்தது என்று விசாரிக்க ஆரம்பித்தாள்.
ருத்ராவிற்கும் மனதிற்குள் இருப்பதை யாரிடமாவது இறக்கி வைக்க வேண்டும் என்று தோன்றியதோ...? வழக்கம் போல் தங்கையிடம் பகிர்ந்தாள்.
விகாஷினி கன்ஸ்ட்ரக்ஷனின் துரோகத்தை கூறி அதனால் தான் வேலையை விட்டதையும் கூறினாள்.
அதை கேட்ட முத்ரா,
“எவ்வளோ தைரியம் ருத்ரா அவளுக்கு... இதை ஒன்னும் பண்ண முடியாதா...? அதை தன்னோட டிசைன்னு நிருபிக்காம இப்படி கோழை மாதிரி வேலைய விட்டுட்ட”
என்று பொங்கினாள்.
“எனக்கு அது தெரியாதுனு நினைச்சியா...? அதுக்கு முதல்ல அப்பாகிட்ட சொல்லணும். அப்புறம் அவங்க ரொம்ப பெரிய இடம் ஈசியா நம்மளை தோற்க்கடிச்சிருவாங்க... மீறி வெற்றி பெற்றாலும் அதுக்கு ரொம்ப செலவுமாகும்... பிரச்சனையும் சமாளிக்கணும்... எதுக்கு வம்புனு தான் ஒதுங்கிட்டேன்... ஆனா இப்போ நான் வேற கம்பெனிக்கு போறேன்... அந்த விகாஷினிய தோற்கடிக்காம விடமாட்டேன்...”
என்று குரலில் உறுதியுடன் கூறினாள் ருத்ரா.
அதற்கு முத்ரா,
“இப்போ நீ போகிற கம்பெனியும் ஏமாற்றமாட்டங்கனு என்ன நிச்சியம் ருத்ரா...”
என்று கேட்கவும்...
“அவங்க அப்படியெல்லாம் பண்ண மாட்டங்கனு தான் தோணுது... பார்ப்போம்...”
என்று முகிலனின் மீது இருந்த எதோ ஒரு நம்பிக்கையில் கூறினாள் ருத்ரா.
“எவங்க...? நீ யார சொல்லுற...?”
என்று முத்ரா குழம்பி கேட்டாள்.
“இப்போ பேசிட்டு போனாரே... அவரை தான் சொல்றேன்”
என்று கூறி.. அவன் மிரட்டினதை தவிர மற்ற எல்லாவற்றையும் கூறினாள். ஏன் அதை கூறவில்லை என்பது அவளிற்கே வெளிச்சம்.
முத்ராவும்...
“ஒஹ்...அப்படியா... அப்போ சரி.. அப்பாவோட பெர்மிஷனோட வேலை பார்க்க போற நீ... கலக்கு ருத்ரா..”
என்றுவாறு கைகுலுக்கினாள்.
அதன் பின் சகோதரிகள் இருவரும் உண்டுவிட்டு உறங்கினர்.
அதை நினைத்துக்கொண்டே ருத்ரா அமர்ந்திருக்க.. முத்ராவும் எழுந்துவிட்டாள். இருவரும் இறங்கி கீழே சென்றனர்.
மாலை ஆறு மணியளவில் மாணிக்கவேல் குடும்பம் அவர்களின் வீட்டை அடைந்தனர்.
அனைவரும் சோர்வாக தங்களை சுத்தப்படுத்திக்கொண்டு ரூம்மை விட்டு வெளியே வர...
அதே நேரம்... கார்முகிலனும் கார்த்திகேயனும் அவசரமாக வெளியே செல்ல தயாராக கிளம்பி வந்தனர்.
“என்னடா... இப்பவே ஆபீஸ் போகனுமா ரெண்டு பேரும்...? ரெஸ்ட் எடுத்து காலையில் போனா என்ன...?”
என்று அபிராமி கேட்டார்.
முகிலனோ...
“இல்லமா... கொஞ்ச நேரத்துல வந்துடறேன்.. முக்கியமான வேலை”
என்று சொல்லி புறப்பட்டு விட்டான்.
கார்த்தியும்
“ஆமா.. அம்மா எனக்கும் முக்கியமான வேலை இருக்கு... ஆனா அதுக்கு முன்னாடி என் போனை ரிப்பேர் பண்ணனும்... கீழ விழுந்துருச்சி... ஆன் ஆகமாட்டிங்குது...”
என்று கூறும் போதே... அன்னிசையாய் முத்ரா நியாபகமும் சேர்ந்தே வர... பல்லைக் கடித்தான்.
“சரி... பா பாத்து போயிட்டு வா”
என்று அபிராமி தான் அனுப்பிவைக்க வேண்டியதானது.
இங்கே இப்படி இருக்க...
மும்பை புறநகர் பகுதியில் இருக்கும் விக்ரோலி பகுதியில் வானை தொட முயன்று கொண்டிருந்த பிரமாண்ட கட்டடத்தின் முன்புறம்.. விகாஷினி கன்ஸ்ட்ரக்ஷன் என்று பெரிய எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்தது.
அதனுள்ளே இருந்த எம்டி அறையில்... சுழல் நாற்காலியில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு பின்னால் சாய்ந்தவாறு கணினியை புருவம் சுளிக்க பார்த்துக்கொண்டே...
“ஹொவ் டார் ஷி இஸ்...? ( how dare she is…?)”
என்று ஆத்திரமாக முணுமுணுத்தாள் ஒரு அழகிய இளம்பெண்... அவள் தான் விகாஷினி... விகாஷினி க்ரூப்ஸின் ஏக போக வாரிசு...
காலையில் ருத்ரா அனுப்பிய மெயிலை தான் பார்த்துக்கொண்டிருந்தாள்...
அவள் வேலையை விட்டு நீங்குவது அவளுக்கு ஒரு பொருட்டே இல்லை... ஆனால் அவ்வாறு நீங்குவதற்கு காரணமாக அவள் கூறிய வேறு ஒரு கம்பெனியில் வேலை என்பதை தான் தாங்க முடியவில்லை.
“இந்த விகாஷினி கன்ஸ்ட்ரக்ஷனை விட வேற ஒரு கம்பெனி அந்த கன்ட்ரி புரூட்க்கு பெருசா போச்சா...? பார்க்கலாம்... இவ எப்படி வேலை செய்யப்போறானு... ச்சே... இப்போ பார்த்து வேலை தலைக்கு மேல இருக்கு... இவளை ஒரு கை பார்க்கலாம்னா... டாட் வேற... இந்த வேலையெல்லாம் 3 மாசம் கழிச்சு வச்சிக்கோனு அடக்கி வைக்குறாரு... வரேன்டி ருத்ரா வரேன்... வெயிட் அண்ட் ஸீ...”
என்றாள் விகாஷினி ஒரு மர்ம புன்னகையோடு.
கோவையில்...
இரவு பதினோரு மணிக்கு வந்த கார்முகிலன்... தன்னிடம் உள்ள மாற்று சாவியை வைத்து உள்ளே வந்து தனது அறைக்கு சென்றான்... முதலில் எல்லாம் அபிராமி காத்திருப்பார்... இவன் தூங்க சொல்லவும், அவர் கேட்காததால்
“இனி நான் உங்களை தூங்காம முழித்திருப்பதை பார்த்தால் அடுத்த நாளில் இருந்து வீட்டுக்கு நைட் வர மாட்டேன்... லேட் ஆகிவிட்டது அப்படினா ஆபிஸ்ல தூங்கிருவேன் பரவால்லையா மா...?”
என்று மிரட்டவும் தான் அபிராமி அரைமனதாக இப்பொழுதெல்லாம் உறங்க செல்கின்றார். (அம்மாவையும் மிரட்டாம விட்டு வைக்கலையா நீ...?)
குளித்து இரவு உடை அணிந்து வந்தவன்... மடிகணினியில் எதையோ செய்துகொண்டிருக்க... சிறிது நேரத்தில் தூக்கம் வரவே, அதை அணைத்து டேபிளில் வைத்தான். பின்பு விளக்கை ஆப் செய்து தூங்கியும் விட்டான்.
நடுஇரவில்... அவன் ஆழ்ந்து உறங்குகையில் கனவொன்று அவன் மூளைக்குள் உருவானது... அதில் பளிங்குமுகமாகிய ருத்ராவின் முகம் ஆற்றின் நடுவே தத்தளிக்கும் காட்சி தத்ரூபமாய் இருந்தது.