"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்."
என்ற குறளின் பொருளை கருத்தாக சொன்ன கதை,நம் மனதை மயக்கிய கதை..@Zinab's ன் மயங்காதே மனமே..
கதையின் தலைப்பை"மயங்காதே மனமே"ன்னு வச்சிட்டு கதாசிரியர் அம்மணி தன்னுடைய ஒவ்வொரு பதிவிலும் தன் எழுத்தால் நம் மனதை மயக்குவதையே முழு நேர வேலையாகவே வைத்திருந்தார் என்றே சொல்லலாம்...
இரண்டு பெரிய தொழிற்குடும்பத்தின் ஆண்வாரிசுகள்,அபிமன்யு S/o நாராயணன், மித்ரன் S/oராஜேந்திரன். முன்னவனோ ஒழுக்கத்தின் உறைவிடம், பின்னவனோ காட்டுப் பறவைகளின் புகலிடம்..இவர்கள் இருவரின் கண்களில் விழுந்து கருத்தையும் கவர்ந்தாள் கீதாஞ்சலி..
தன்னுடன் அஞ்சலி யின் ஃபோட்டோ பத்திரிகை யில் வந்த சூழ்நிலை யில் அபிமன்யு கீதாஞ்சலி யை அதிரடியாக திருமணம் செய்து கொள்ள,செய்தி தெரிந்த மித்ரன் ருத்ரனாக மாற, அபியை சாய்க்க நேரம்பார்த்திருந்த ராஜேந்திரன், இதை சாக்காக வைத்து அபியும் கீத்துவும் காரில் பயணம் செய்யும் போது ஆட்களை ஏற்பாடு செய்து அபியின் காரை விபத்துக்குள்ளாக்குகிறார்..
கீத்து ஓரளவு அடியோடு தப்பித்துக் கொள்ள, அபி பெரிய அளவில் பாதிக்கப்படுகிறான்..
தன் கணவனின் நிலையைக் கண்ட கீதாஞ்சலியின் நிலை என்ன?
அபியின் விபத்துக்குப் பின் தன் தகப்பனின் இன்னொரு முகம் தெரிய வந்த மித்ரனின் மனநிலை என்ன?
குணமடைந்த அபி மித்ரனையும்,ராஜேந்திரனையும் பழிவாங்கினானா?? என்று ஆசிரியர் அவரது பாணியில் அழகாக சொல்லியிருக்கிறார் கதையில்..
அபிமன்யு- கீதாஞ்சலி:
கற்புங்கறது ஆணுக்கும்,பெண்ணுக்கும் பொதுன்னு சொல்லுற அந்த இடத்திலேயே அபி நம்ம மனதில் ஒரு ஹீரோவா பசைபோட்டு ஒட்டிக்கிறான்..
தன் திருமணமும் தன்னைப் போல பாராம்பரியம் மிக்க ஒரு குடும்ப பெண்ணோடே நடக்க வேண்டும் என்று நினைக்கும் அபி, நர்சரி டீச்சர் கீதாஞ்சலி யை கண்டு காதலில் விழும் போது நம்மையறியாமலே ஒரு சிரிப்பு நம் இதழ்கடையோரம் வருவதை தவிர்க்க முடியவில்லை..
அதுவும் அவன் அஞ்சலியிடம் தன் காதலைச் சொல்ல, அவளோ நிலவுக்கதை சொல்லி மறுக்க, இவன் பதிலுக்கு நிலாக்கதை சொல்ல என்று கவிதையாய் அமைந்திருக்கும் அந்த காட்சி..
அபியின் விபத்தில் தானும் துவண்டு போனால்,குடும்பத்தில் உள்ள எல்லோருமே தளர்ந்து போவார்கள் என்று நிமிர்ந்து நிற்கும் அஞ்சலி நம்மை பிரம்மிக்க வைக்கும் அதே நேரம் தனிமையில் கணவனை எண்ணி கலங்கும் பெண்ணவள் நம்மையும் கலக்கம் கொள்ள வைக்கிறாள்..
தன் கணவன் குணமாகி தொழிலை தன் கையில் எடுக்கும் போது தொழில் நேர்த்தியாக இருக்க வேண்டும், தொழிலை எனக்கும் கத்துகுடுங்க மாமா ன்னு அபியின் அப்பாவிடம் கேட்க்கும் போது காரியம் யாவிலும் கை கொடுக்கும் காரிகையாய் பரிமளிக்கின்றாள் பெண்ணவள்..
அபி பேச முடியாத சூழ்நிலை யில் அந்த கைபேசி அவன் வாய்க்கு Substitute ஆக மாறிய விந்தை ஆஹா!!..
அவனின் அஞ்சலிக்கான "அம்மாடி" என்ற அழைப்போ கவிதை ..
கண்டிப்பாக கதை படிக்கும் வாசகிகளை தன்னுடைய கணவனோ/காதலனோ தன்னையும் "அம்மாடி" என்று கூப்பிடமாட்டாங்களா என்று எதிர்பார்க்க வைக்கும் ...
கடைசியில்அபியின் விபத்துக்கு காரணமானவர்களை அபியே மன்னித்தாலும் நான் மன்னிக்க மாட்டேன் என்று சொன்ன பெண்ணவள் உடல்நலம் திரும்பிய பின் கணவனின் பழிவெறி கண்டு
இந்த அபி எனக்கும் வேண்டாம், என் குழந்தைக்கும் வேண்டாம் என்ற ஒரே வார்த்தையில் இந்த செயல் தனக்கு பிடிக்கவில்லை என்பதோடு,தங்களின் குழந்தைக்கு தான் தாயாக போகும் விஷயத்தையும் ஒரு சேர சொல்லும் நேர்த்தி அருமை ..
வார்த்தை யில் விளையாடுகிறார் Zinab
தன் மனைவியின் விருப்பத்திற்காக, தன்னை வாழ்வின் இறுதி கட்டத்திற்கே கொண்டு சென்ற ராஜேந்திரனை மன்னிக்கும் அபி கிரேட்..தன் வேதனைகளையும்,வலியையும் தாண்டி அபி எடுக்கும் இந்த முடிவில் தன் மனைவி மீதான அளப்பறிய காதல் நமக்கு தெள்ளத்தெளிவாகிறது.
மித்ரன்- தாமரை:
கதையில் வில்லனாக அறிமுகமாகி,
ஆன்டி-ஹீரோ வாக மாறி, தாமரையின் மணாளனான பின் முழு ஹீரோவாக அவதாரம் கண்ட கதாபாத்திரம் தான் மித்ரன்..
சில இடங்களில் ஹீரோ அபியைக்காட்டிலும் வாசகிகளின் அபிமானத்துக்கு ஆளானவன் என்று சொன்னால் கூட அது மிகையாகாது.
கீதாஞ்சலி யின் காதலுக்காக காட்டாற்றைப்போல ஆர்பரித்து பாயும் தன் இயல்பைக் கைவிட்டு நின்ற மித்ரன், அபிக்கும் கீத்துவிற்கும் இடையில் காதல் என்று ஒன்று இருந்தது என்று தெரிந்து திகைத்து நின்ற இடத்தில் கொஞ்சம் பரிதாபத்தையும்,விபத்தின் போது காரில் இருந்த அபியை பற்றி தனக்கு கவலையில்லை என்று சொல்லி கொஞ்சம் கோபத்தையும் சம்பாதித்துக் கொள்கிறான் நம்மிடமிருந்து..
அஞ்சலியிடம் நான் உன் கணவனின் விபத்திற்கு காரணமில்லை என்று தெளிவு செய்யும் பொருட்டு ஃபோனில் பேசும் போது ஏடாகூடமாக பேசி அதைக்கேட்க நேர்ந்த தன் தாத்தாவிடம் அறை வாங்கும் இடம்,இந்த அறையை நீங்க கொஞ்சம் நாட்களுக்கு முன்னரே குடுத்திருக்கலாம் தாத்தா moment..
பாட்டியின் மூலம் தகப்பனின் முன் கதை தெரிய அடுத்த இரண்டு நாட்களில் தாமரையோடான திருமணம் ஆச்சர்யத்தை கொடுக்குமிடம்.
அதிலும் தாமரைக்கு தன் மீது காதல் இருந்தது,அதுவும் ஸோனா கூட தன்னைக் கண்ட பின்பும் என மித்ரனுக்கு தெரிய வருமிடத்தில் வியப்பின் உச்சகட்டம் சென்று அந்த தாமரைப்பெண்ணின் மலர்ப் பாதங்களில் சரணடைந்து ஆண் என்ற கர்வம் சிறிதும் இன்றி கண்ணீர் சிந்தும் மித்ரனின் செயலில் அவனது கடந்த கால கசடுகள் அனைத்தும் கரைந்துவிட்டதாகவே ஒரு தோற்றம்.
தாமரை அத்தான் என்று மித்திரனை அழைத்து அன்பாக, அக்கறையாக செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் மித்திரனை ஈர்ப்பதுபோல நம்மையும் ஈர்க்கிறாள்.
தாமரையோடான அன்பான, அழகான மித்ரனின் வாழ்க்கை யை காணும் போது,
"கட்டுத்தறி காளை நானே கன்னுக்குட்டி ஆனேனே" என்ற பாடல் வரிகளை தன்னியல்பாக நம் இதழ்கள் முணுமுணுப்பதை தடுக்க இயலவில்லை.
கதிர்:
கதையில் ஹீரோக்களுக்கு இணையாக பேசப்பட்ட கதாபாத்திரம்.
முதலாளி என்ற சிறு பயமும் இன்றி மித்ரனின் தவறை எடுத்துரைப்பவன்.
ஆரம்பத்தில் கீதாஞ்சலி யை மித்ரனிடமிருந்து காப்பாற்றி விட வேண்டுமென்று இவன் செய்யும் ஒவ்வொரு செயலும் ஒரு தங்கை க்கு அண்ணன் இவன் என்பதை சொல்லாமல் சொல்லும் இடங்கள் .
பெற்றோர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நாராயணன்- சீமா தம்பதியர்..
எவ்வாறு இருக்கக்கூடாது என்பதற்கு ராஜேந்திரன்- சுலோச்சனா..
அதிலும் சுலோச்சனா அம்மம்மா!!!
என் பாட்டியைப் போல பெண் வேண்டும் என்று மித்ரன் சொல்லும் ஒற்றை வரியில் அம்மணியின் குணநலனை Zinab சொல்லாமலேயே சொல்லிவிடுகிறார்..
கதையின் அத்தனை கதாபாத்திரங்களையும் தனது உயிரோட்டமான உரையாடல்கள் மூலம் நம் முன்னே சாதாரணமாக உலவவிடுகிறார் Zinab..
அதிலும் இம்முறை கறுப்புக் குதிரையோடு,வெண்ணிலவு கதை முழுவதும் கைகோர்த்து உலா வந்தது இன்னும் அழகு..
இன்னமும் இது போன்று எண்ணில்லா கதைகள் எழுதி,எழுத்துலகில் உனக்கென தனி முத்திரை பதிக்க வேண்டுமென்று வாழ்த்துகிறேன் தோழி..