MithraPrasath
SM Exclusive
இடைவிடாத இன்னல்கள்
அத்தியாயம் 10
அதிர்ச்சியாக இருந்தது சுந்தரத்திற்கு. பெரும் நம்பிக்கை பொய்யானது. இப்போது அவள் விருப்பட்டு போனாளா..? அல்லது யாரும் கடத்தி சென்று இருப்பார்களா..? என்று சந்தேகம் வந்துவிட்டது அனைவருக்கும். அழகன் மிகவும் பயந்து போய் விட்டான். சுந்தரம் என்ன நடந்திருக்கும் என்று குழம்பி கொண்டிருந்தான்.
ஆனந்த், “இது என்ன புது பிரச்சனை...?” என்று தலையில் கை வைத்தான்.
விக்னேஷ், “உன்னோட தங்கச்சிய யாரும் கடத்திட்டு தான் போய் இருப்பாங்க.. அது யாருன்னு கண்டு பிடிக்கணும்..”
“இல்ல எனக்கு சந்தேகமா இருக்கு. கடத்துறாங்க ன்னு தெரிஞ்சு எப்டி அவங்க கூட அவ போவா..? அது மட்டும் இல்லாம இந்த லெட்டர் எப்டி இங்க வந்தது...? யாரும் வீட்டுக்குள்ள வந்தாங்களா..? எனக்கு ஒண்ணுமே புரியல...” என்று சுந்தரம் புலம்ப,
“நீ சொன்னதும் சரி தான்... அவ அவங்க கூட அமைதியா போயிருக்கான்னா, அவளுக்கே தெரியாம அவள கடத்திருக்கணும்... யாரும் தேட கூடாதுன்னு இப்டி ஒரு லெட்டர் எழுதி அனுப்பிருக்கணும்... அப்டி தான் நடந்திருக்க வாய்ப்பு உண்டு...” என்று விக்னேஷ் கூறினான்.
“இந்த லெட்டர் என்னோட ரூம் ல டேபிள் ல இருந்தது அண்ணா... நம்ம வீட்டுக்குள்ள யாரு வர முடியும். என் கிட்ட, அக்கா கிட்ட மட்டும் தான் சாவி இருக்கு...” என்று அழுது கொண்டே சொன்னான் அழகன்.
அப்போது அங்கு கோமதி வந்தார். அவர் வருவதை பார்க்கவும் அழகன் வேகமாக கண்ணை துடைத்தான். மற்ற மூவரும் பேசுவதை நிறுத்தினர். அவர் உள்ளே வரவும் அவர்களது நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தியது. இருந்தாலும் நேராக சமையல் அறைக்கு சென்றார். மற்ற வேலைகளை கவனிப்பது போல இங்கு இவர்கள் பேசுவதை ஒட்டு கேட்டு கொண்டு இருந்தார். அழகன் முகம் அழுது சிவந்து இருப்பதை கண்டு ஏதோ பிரச்சனை என்பது புரிந்தது.
விக்னேஷ், “நீ உடனடியா ஒரு கம்ப்ளைன்ட் ரிஜிஸ்ட்டர் பண்ணு... அப்போ தான் கண்டு பிடிக்க வசதியா இருக்கும். அப்பறம் மலர் நம்பர் வேணும் சுந்தரம்... நான் அது இப்போ எங்க இருக்குன்னு செக் பண்ண சொல்லுறேன்...
எப்டியும் அவ எங்க இருக்கான்னு கண்டுபிடிச்சுடலாம். யாரும் எதுவும் பண்ணிருக்க முடியாது. நீங்க ரெண்டு பேரும் தைரியமா இருங்க... நான் உன்னோட தங்கச்சிய கண்டுபிடிச்சுடுறேன்.” என்று விக்னேஷ் கூறி கொண்டிருப்பதை மறைந்திருந்து கோமதி கேட்டு கொண்டிருந்தார்.
கோமதி செய்வதை ஆனந்த் கவனித்து விட்டான்.
“ஏம்மா...! என்ன பண்ணுறீங்க..? வேலைக்கு வந்தா வேலைய மட்டும் பாருங்க..” என்று திட்டினான்.
“நான் சும்மா தொடைச்சுட்டு தான் இருந்தேன்.. மற்றபடி ஒன்னும் இல்ல..” என்று கூறிவிட்டு அங்கிருந்து அகல பார்க்க,
விக்னேஷ், “இங்க வாங்க நீங்க...” என்று அழைத்தான்.
பயந்து கொண்டே வந்தார் கோமதி...
“நேற்று நீங்க மலர் எப்போ பார்த்தீங்க..?” என்று கேட்டான்.
“நான் காலைல வேலைக்கு வந்தேன். அப்போ மலர் வீட்டுல இருந்துச்சு. ஆனா காலேஜ் க்கு கிளம்பிட்டு இருந்தது. அதுனால என்னை சாயங்காலம் வேலைக்கு வர சொல்லி கிளம்ப சொல்லிடுச்சு. நானும் கிளம்பிட்டேன்.”
“பஸ் ஸ்டாண்ட் ல பார்த்ததா சொன்னீங்க... அத கேட்டேன் நான்..” என்று சொல்லவும்,
“அது நான் இன்னொரு இடத்துல வேலைக்கு போவேன்... அங்க போய்ட்டு வீட்டுக்கு போகும் போது தஞ்சாவூர் பஸ் ஸ்டாண்ட் ல வச்சு பார்த்தேன்..”என்று சொல்லி நிறுத்தினார்.
“அப்போ காலைல நீங்க வீட்டுக்கு வந்தப்ப மலர் இங்க தான் இருந்தா..?”
“ஆமாம் தம்பி..”
“அப்போ அவ லெட்டர் ஏதாது கொடுத்தாளா..?” என்று கேட்டான் விக்னேஷ்.
“அவ கொடுக்கல தம்பி..”
“வேற யாராது வீட்டுக்கு வந்தாங்காளா..?”
“இல்ல தம்பி.. நான் உடனே கிளம்பிட்டேன். கிளம்பின உடனே மலரும் பின்னாடியே கிளம்பிட்டு இருந்தது.. வேற யாரும் வந்தது போல தெரியல..”
“அப்பறம் எப்டி இந்த லெட்டர் என்னோட ரூம்ல இருந்துருக்கும்...?” என்று அழகன் குழப்பமாக விக்னேஷிடம் கேட்டான்.
அந்த லெட்டரை பார்த்த கோமதி, “இது நான் தான் அழகா உன்னோட ரூம் ல வச்சேன்..” என்று சொல்லவும், மற்றவர்கள் குழப்பத்தோடு பார்த்தனர்.
“நீங்க வச்சீங்களா..?” என்று விக்னேஷ் சந்தேகமாக கேட்க,
“ஆமாம் தம்பி., நான் வரும் போது ஒரு பையன் வந்தான்., உன் கிட்ட கொடுக்க சொல்லி கொடுத்தான். ஆனா நான் வீட்டுக்கு வந்தப்ப நீ ஸ்கூல்க்கு போய்ட்ட.. அதான் உன்னோட ரூம் ல டேபிள் ல வச்சேன் நான். ஏன், என்னாச்சு..?” என்று கூறி கேட்டார்.
விகேன்ஷ், “போதும் நீங்க கிளம்புங்க.. போய் வேலைய பாருங்க...” என்று சொல்லவும், சிடுசிடுத்து கொண்டே அவர் செல்ல போக,
“ஒரு நிமிஷம்... இங்க நடக்குற விஷயம் எதுவும் வெளில போக கூடாது... நான் ஒரு போலீஸ்., நீங்க நான் சொன்னத கேக்கல அப்டின்னா, அப்பறம் நீங்க ஸ்டேஷன் போக வேண்டி இருக்கும்... என்ன ஓகேவா...?” என்று மிரட்டினான்.
“சரி தம்பி.. இல்ல மன்னிச்சுடுங்க... நான் வெளில சொல்ல மாட்டேன் சார்..” என்று பவ்யமாக சொல்லிவிட்டு சென்று சமையல் அறைக்குள் புகுந்து கொண்டார்.
விக்னேஷ், “வா சுந்தரம் நம்ம போய் ஸ்டேஷன் ல கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு வருவோம்.” என்று அழைத்தான்.
“சரி வா... உடனடியா போவோம்.. ” என்று சுந்தரம் கிளம்பினான். பின் ஆனந்திடம் திரும்பி, “நீயும் வர்றியா ஆனந்த்..?” என்று கேட்டான்.
“இல்லடா.. நீயும் விக்னேஷ் ரெண்டு பேரும் போய் தங்கச்சிய கண்டுபிடிங்க.. நான் இங்க உன்னோட பணத்த யாரு எடுத்தான்னு கண்டுபிடிக்குறேன்.. நான் போய் அந்த கடைல விசாரிக்குறேன்..” என்று அவன் ஒரு கஷ்டத்தை சமாளிக்க நண்பனுக்கு உதவி பண்ண தயாரானான்.
பின்பு சுந்தரம், விக்னேஷ் இருவரும் கிளம்பி ஸ்டேஷன் சென்றனர். கம்ப்ளைன்ட் கொடுத்து விட்டு வந்தனர்.
இங்கு ஆனந்தும் அழகனும் சென்று அந்த கடையில் விசாரிக்கின்றனர்.
கடையில் பொருள் வாங்குவது போல சென்று விசாரிக்கலாம் என்று ஆனந்த் கூறினான். அழகனும் சரி என்று கூறி உடன் சென்றான்.
கடையில் ஆள் சிலர் நின்று இருந்தனர். இருவரும் ஒரு நிமிடம் அமைதியாக நின்று எதுவும் வாங்காமல் வேடிக்கை பார்த்தனர். அங்கு இருந்த மற்றவர்கள் வாங்கி சென்ற பின்னர், அழகன் “அண்ணா ஒரு பேனா கொடுங்க..” என்று கேட்டான்.
அவர் எடுத்து வைத்த பின், “வேறு சில மாடல் இருக்க..? காட்டுங்க...” என்று கூறினான்.
அவர் எடுத்து வரும் போது ஆனந்த் விசாரிக்க தொடங்கினான்.
“நேற்று கடை ஓபன் பண்ணிருந்தீங்களா நீங்க..?” என்று ஆரம்பித்தான்.
“ஆமாம் தம்பி... எப்போவும் திறந்து தான் இருக்கும் கடை... சனி, ஞாயிறு கூட திறந்து தான் இருக்கும் தம்பி..” என்று சொன்னார்.
“நேற்று இந்த தெருல, என்னோட ப்ரெண்டோ பணத்த யாரோ திருடிட்டு போய்ட்டாங்க... அத பற்றி உங்களுக்கு ஏதாது தெரியுமா அண்ணா..?” என்று கேக்கவும், அவர் பதில் பேசாமல் அமைதியாக பார்த்தார்.
“இல்ல அண்ணே...! சும்மா தான் கேட்குறேன்..” என்று சொன்னான் ஆனந்த்.
“தெரியும் தம்பி... அந்த வடிவேலு அண்ணே பையன் சுந்தரம் தான பணத்த தொலைச்சது...? எனக்கு அதுவும் தெரியும், இவன் அவரோட சின்ன பையன், நீங்க அந்த சுந்தரத்தோட ப்ரெண்டு எல்லாம் தெரியும்...” என்று அவர் சொல்லி சிரித்தார்.
“தெரியுமா அண்ணா...” என்று அவன் அசடு வழிவது போல கேட்டான்..
“என்ன கேட்கணுமோ நேரடியா கேளுங்க தம்பி..” என்று அவர் அனுமதி கொடுக்கவும் சற்று நிம்மதி அடைந்தான்.