காதல் கடன் - 16க்கு லைக்ஸ் கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி. இதோ நான் சொன்னதுபோலவே உங்களுக்காக அடுத்த அத்தியாயத்தோட வந்துட்டேன். இதுக்கும் உங்களோட ஆதரவையும் அன்பையும் ஆவலோட எதிர்பார்க்கிறேன். படிச்சுட்டு லைக்ஸ் கமெண்ட்ஸ் குடுக்க மறந்துடாதேள்...நான் ரொம்ப ஆவலோட காத்துண்டு இருக்கேன்.
காதல் கடன்
(17)
காதல் கடன்
(17)
தனது அலுவலக அறைக்குச் சென்று சிறிது நேரம் ஏதாவது வேலையைப் பார்க்கலாம் என்று மடிக்கணினியைத் திறந்து வைத்துக்கொண்டு உட்கார்ந்த பரத்தின் மனம் எதிலும் லயிக்காமல் அலையில் அகப்பட்ட துரும்பாய் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தது.
ஆறுதலடையும் வகை தெரியாமல் மடிக்கணினியை மூடிவிட்டு எழுந்து சென்று ஃப்ரெஞ்ச் ஜன்னலைத் திறந்து பால்கனியில் சென்று நின்றுகொண்டான். எப்போதும் ஆறுதலளிக்கும் குளிர்ச்சியான கடல்காற்றும் கூட இன்று வேதனையையே அளித்தது.
ஆயிரம் எரிமலைகள் மனதுக்குள் குமுறி வெடித்துச் சிதறிக்கொண்டிருக்க அவற்றின் லாவாவாக வெளிப்படத் துடிக்கும் கோபத்தையும் ஆற்றாமையையும் கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் அலுவலக அறைக்குள் வந்து அடைந்துவிட்டிருந்தான்.
தன்னுடைய இந்த இயலாமையையும் கோபத்தையும் யாரிடமும் அவ்வளவு எளிதாகக் காட்டிவிட முடியாது அவனால். ஏனென்றால் இந்த வீட்டில் யாருடைய மனம் புண்பட்டாலும் அது நெருஞ்சி முள்ளாய் அவன் மனதைத்தான் தைத்துக் கிழிக்கும் என்பதை அறியாதவனல்லவே அவன்...
இப்படி யார் மனமும் புண்பட்டுவிடக்கூடாது என்று அவன் நினைத்ததால்தானே இன்று அவிழ்க்கமுடியாத முடிச்சொன்றைப் போட்டுவிட்டு சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறான். மீளவே முடியாத ஆழிச்சூழலில் அவனைத் திணறத் திணற மூழ்கடித்துவிட்டு எல்லோரும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது போலிருந்தது அவனுக்கு.
எவ்வளவு நேரம் இப்படியே நின்றிருந்தாலும் இந்தச் சிக்கலிலிருந்து விடுபடமுடியாது என்று உணர்ந்தவன், ஒரு முடிவுக்கு வந்தவனாய் அறையை விட்டு வெளியேறி ஸ்டோர் ரூமை நோக்கி நடந்தான். அறை வாசலில் லேசாகத் தயங்கியவன் கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்று விளக்கை உயிர்ப்பித்தான். வேண்டாத பொருட்களை போட்டுவைக்கும் அறையாக இருந்தாலும் அதையும் நேர்த்தியாகவே பராமரித்திருந்தார் பர்வதம் மாமி. எல்லா பொருட்களும் சீராக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
அறையைக் கண்களால் துளாவிய பரத்தின் பார்வையில் அவன் தேடிய பொருள் தென்பட்டது. அங்கே ஒரு மூலையில் தேவையில்லாத சாமான்களில் ஒன்றாக அவனுடைய உயிர்த்துடிப்பான அந்த பொருள் சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. அது...பரத்தின் அறையில் இருந்து பர்வதம் மாமியால் அகற்றப்பட்ட லக்ஷ்மியின் புகைப்படம்.
அந்தப் புகைப்படத்தைக் கண்ணால் கண்டபின்புதான் இதுவரையில் சூறாவளியாய்ச் சுழன்றடித்துக்கொண்டிருந்த எண்ணங்கள் அனைத்தும் ஒரு மையத்தில் வந்து அமைதியடைந்தது போலிருந்தது அவனுக்கு. இது புயலுக்கு முந்தைய அமைதியா அல்லது பிந்தைய அமைதியா என்று கேள்வி கேட்ட மனதைச் சட்டை செய்யாமல், ஒரு பூங்கொத்தை ஏந்துவது போல் அந்தப் புகைப்படத்தைத் ஏந்திக்கொண்டு தன்னறை நோக்கி நடந்தான்.
சாதாரணமாக ஒருவரால் தூக்கிவிட முடியாத அந்தப் புகைப்படம் இன்று அவனுடைய மனதின் பாரத்தை விடவும் எடை குறைவாகவே இருப்பதாகத் தோன்றியது. அதை ஒருவழியாக தன்னுடைய அறைக்குக் கொண்டு சென்று அதனிடத்தில் மாட்டியபிறகே அவனது மனம் சிறிது சமன்பட்டது போலிருந்தது.
ஏணியிலிருந்து இறங்கி லக்ஷ்மியின் புகைப்படத்தைப் பார்த்தபடி அப்படியே நின்றுவிட்டான் பரத்...
பரத் அப்படி நின்றிருந்த காட்சியைத்தான் குளியலறையில் இருந்து உடை மாற்றிக்கொண்டு வந்த ராதிகாவும் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து நின்றாள். மறுபடியும் வேறொருவரின் அந்தரங்கத்திற்குள் அத்துமீறி எட்டிப்பார்க்கும் உணர்வு வந்து அவளைச் சூழ்ந்துகொண்டது. கடந்த நான்கு நாட்களாக மனதில் நிறைந்திருந்த மகிழ்ச்சி, நெருப்பில் கரையும் மெழுகாக உருகிக் கரைந்து விலகுவது போன்ற உணர்வில் பரத்தையும் மீண்டும் சிம்மாசனம் ஏறியிருந்த லக்ஷ்மியின் புகைப்படத்தையும் மாறி மாறி பார்த்தபடி நின்றிருந்தவளைத் திரும்பி ஒரு வெறுமையான பார்வை பார்த்துவிட்டு மெளனமாக அறையை விட்டு வெளியேறினான் பரத்.
பரத்தின் பார்வையில் தெரிந்த வெறுமை இப்போது ராதிகாவின் மனதிலும் குடியேறியது. விலகிச் சென்றுவிட்டது என்று நினைத்த நிழல் காரிருளாய் தன் மீது வந்து கவிந்தது போன்ற உணர்வு வந்து சூழ்ந்துகொண்டது அவளை.
அன்று போலவே இன்றும் மூச்சு முட்டுவதுபோல் இருக்க, அதற்கு மேலும் அந்த அறையில் இருக்கமுடியாமல் வெளியே விரைந்தாள். வேகமாக மாடிப்படி இறங்கியவள் ஹாலில் அமர்ந்திருந்த பர்வதம் மாமியைப் பார்த்து, தன்னை சிறிது சுதாரித்துக்கொண்டு அவரருகில் சென்று அமர்ந்துகொண்டாள்.
“வா ராதும்மா, கொஞ்ச நாழியாவது ரெஸ்ட் எடுத்துண்டியா? காஃபி சாப்பிடறியா?” என்று கேட்டவரிடம் வேண்டாமென்று தலையசைத்துவிட்டு, “மணி ஆறாகப் போறதேம்மா, நான் ஸ்வாமி நமஸ்காரம் பண்ணிட்டு வரட்டுமா?” என்று கேட்க, “இதெல்லாம் கேக்கணுமா கண்ணம்மா, பேஷா பண்ணு, இன்னும் ஸ்வாமி விளக்கேத்தலை, நீ ஏத்திடு,” என்று அவளுடைய தலையை ஆதுரமாகத் தடவிவிட்டு எழுந்து சென்றார் அவர்.
ஏனோ மாமியாரிடம் எதையுமே சொல்லத் தோன்றவில்லை ராதிகாவிற்கு. அவரிடம் லக்ஷ்மியின் புகைப்படம் மீண்டும் சுவறேரியதைச் சொல்லியிருந்தால் அது உடனே அங்கிருந்து அகற்றப்பட்டிருக்கும், ஆனால் அந்தப் புகைப்படத்தை வலுக்கட்டாயமாகச் சுவற்றிலிருந்து மட்டுமே அகற்றுவது அவளுடைய வாழ்க்கைக்கு எந்தவிதத்திலும் பிரயோஜனப்படாது என்று நன்றாகவே புரிந்தது அவளுக்கு.
தன் மனதில் நீர்க்குமிழிகளாய் எழும் கேள்விகளுக்கு எப்படி விடை கிடைக்கப் போகிறதோ என்ற குழப்பத்துடனேயே ஸ்வாமி விளக்கேற்றியவள், பகவானின் சான்னித்தியமாவது நிம்மதியை அளிக்காதா என்ற வேண்டுதலுடன் சிறிதுநேரம் கண் மூடி பூஜையறையிலே உட்கார்ந்துகொண்டாள். மனிதர்கள்தான் என் கேள்விகளுக்கு விடை கொடுக்க மாட்டார்கள், நீயாவது எனக்கொரு பதிலைச் சொல்ல மாட்டாயா என்று அம்பிகையிடம் இறைஞ்சியது அவள் மனம். அந்த இறைஞ்சல் பாடலாக வெளிப்பட்டது. இதுநேரம் வரை விழுந்துவிடவா என்று அச்சுறுத்திக் கொண்டிருந்த கண்ணீர் இமையென்னும் கரை தாண்டி வழியத் தொடங்கியது. யாரிடம் வேண்டுமானாலும் மனதை, மனக்கவலையை மறைக்கலாம், ஆனால் உலகாளும் உமையன்னையிடம் மறைக்கமுடியுமா...மனக்குமுறல் மொத்தத்தையும் கொட்டிவிட்டாள் ராதிகா...