அவன் சொன்னது போல இன்சமாம் அவன் நிஜ பெயரில்லை போலும், அவன் அம்மா நம்பியா .. உள்ள இருக்கான் போங்க என்று அவன் உண்மையான பெயரை கூறி அனுப்பி வைக்கவும் , அந்த சைக்கிள் தான் பார்வையில் பட்டது, பழைய ஹீரோ சைக்கிள் தான் என்றாலும் கோபு கொடுத்த பில்டப்பில் பென்ஸ் கார் போல மினுக்கியது. அர்ஜுன் லேசாக தூட்டதும் தன் டைனமோ தலையை வெடுக்கென திருப்பி கொண்டது. அதன் கைப்பிடியை பற்றி இறுக்கும் பொழுது ஏதோ புது நம்பிக்கை பிறந்ததும் உண்மை தான்,
" என்னடா இந்த பக்கம்.. இவன் யாரு.. " என்று சொன்னவாறே ஒரு கருப்பு உருவம் தொப்பையும் டவுசருமாக வந்தது. பாத்ததுமே இன்சமாமுக்கான பெயர்காரணம் விளங்கிற்று.
" இவன் நம்ம மிலிட்டரிகாரர் பேரன், முன்னாடி கிரிக்கெட் விளையாட வருவானே.. நீங்க கூட பாத்திருப்பீங்க.. "
" ஓ.. ஆமா ஆமா எப்படிப்பா இருக்க " என நலம் விசாரித்த இன்சு, அர்ஜுன் பதில் சொல்வதற்குள் மணியை ஏறிட்டான்.
" நீ மணி தானே.. "
தலையை சோர்வாக ஆட்டினான் மணி.
ஒரு நிமிடம் தன் தாய் இருக்கிறாளா என எட்டி பார்த்த இன்சு மணியை நெருங்கி.. " நானே உன்ட்ட கேக்கணும்னு நினைச்சேன்.. அந்த மில்லுகாரசாமி மவ. அதான் பேரு கூட ஜனனி.. உன் கூட தானே படிச்சா.. "
கேட்டதும் அர்ஜுனுக்கு சட்டென ரத்தம் உச்சந்தலை வரை ஏறியது, அவள் பெயர் கண்டவன் வாயில் விழுவது கூட இவனால் பொறுக்க முடியவில்லை என்பதை அந்த கணம் தான் உணர்ந்தான்.
" அவளை தான் இப்ப நான் ரூட்டு விட்டுட்டு இருக்கேன்.. அதுவும் நம்மள தான் பாக்குது.. அதுட்ட பேசுவியா.. பேசுனா நம்மள பத்தி சொல்லேன்" என அவனை இடித்தான் இன்சு.
அர்ஜுன் கையை பிடித்துக் கொண்டான் மணி..
" இல்லண்ணே.. அதுலாம் என்ட்ட பேசாது.. "
" ஹும்.. சரி விடு நான் பாத்துக்கறேன்.. நீங்க ஏதோ சொல்ல வந்திங்களே.. " என்றான் கோபுவை பார்த்து.
" அது தான் முடிஞ்சே போச்சே.. " என முடித்தான் கோபு.
மீண்டும் அதே குட்டி சுவர்.. அதே பார்க்.. சென்ற முறை இருந்த துள்ளல் மட்டும் துடைத்தெறிய பட்டிருந்தது.
" இப்போ எதுக்கு தலைல கை வச்சிட்டு உக்காந்திருக்க.. " அர்ஜுன் தோளில் தட்டினான் மணி.
" ஒரு வாரம் தானே ஆச்சு அப்படியே விட்ரு.. இன்சு கூடலாம் நாம போட்டி போட முடியாது. அது வேற அவனை பாக்குதுன்னு சொன்னான்ல.. "
" ஆமா பாக்குது.. நீ பாத்தியா.. " சீறினான் அர்ஜுன்.
" இப்போ எதுக்கு ரொம்ப அலட்டிக்குற.. நீ தானே லவ்லாம் இல்ல டயம் பாசுக்குனு சொன்ன.. விட்டுற வேண்டி தானே.. அடுத்த வாரம் பெட் மேட்ச் இருக்கு பேசாம அதுக்கு ப்ராக்டிஸ் பண்ணுவோம் ஜாலியா.. "
" பெரிய இந்தியா பாகிஸ்தான் மேட்ச் .. கொஞ்சமாச்சும் அவனுக்குலாம் மனசாட்சி இருக்கா.. அவ எப்படி இருக்கா இவன் எப்படி இருக்கான். செந்தில் மாதிரி இருந்துட்டு.. இதெல்லாம்.. "
" ஆமா இவரு பெரிய அஜித்து .. " சீண்டினான் மணி.
" எனக்கு அப்படி தாண்டா .. டைம் பாசுலாம் இல்ல.. இப்போ சொல்றேன் நான் அவள தான் லவ் பண்றேன் அவளும் என்ன தான் லவ் பண்ணுவா.. பண்றா.. எனக்கு என் மேல நம்பிக்கை இருக்கு.. நீங்க கூட இருக்குறதுனா இருங்க.. இல்லைனா அந்த இன்சுக்கே போய் சிங்கி அடிங்க. " என பொரிந்து தள்ளி விட்டு கிளம்பியவன் ஒரு நொடி திரும்பி,.. " என்ன சொன்ன அஜித்தானா.. அஜித் சாலினி, அர்ஜுன் ஜனனி பேர் பொருத்தம் கூட எங்களுக்கு தான் இருக்கு. அவளை காதலிக்க வச்சு காட்றேன்.. " என சொடுக்கிட்டு விறு விறுவென நடந்தான்,
நடக்கும் வழியெல்லாம் அவளை காதலிக்கிறோம் என்று மனதில் கூட சொல்ல தயங்கிய சொற்கள் இன்று காற்றை கிழித்து சவாலாய் மாறியது அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது, ஒரே பார்வையில் தன்னை இப்படி பித்தனாக்கி விட்டாளே இவள் என்று கூட தோன்றியது.
" ஏப்பா அஜித்து .. பொசுக்குனு கோவ படுதீகளே.. " ஓடி வந்து இவன் தோளை இழுத்தான் மணி, பின்னாடியே கோபுவும் வந்தான்.
" உன்னை விட அவன் யாருல எங்களுக்கு.. மச்சான் ஆச பட்டுட்ட.. என்னனாலும் தட்டி பாத்துருவோம்.. " மூச்சிரைக்க சொன்னான் கோபு. இழந்த புன்னைகை லேசாக இதழுக்குள் புகுந்தது அர்ஜுனுக்கு.
" இப்படி பண்ணுனா என்ன.. நீ வேற பொண்ண பாக்குறன்னு சொல்லி அவன்கிட்டயே ஐடியா கேட்டு.. உஷார் பண்ணிட்டா.. " கோபு சொன்னதும் முதலில் வேண்டாம் என்று தான் சொல்ல தோன்றியது அர்ஜுனுக்கு. இருந்தும் அவர்கள் சொல்வதும் சரி தான். நல்ல வழியோ குறுக்கு வழியோ அவனுக்கு அவள் கிடைத்தே தீர வேண்டுமென்று இருந்தது, சம்மதித்தான்.. காதல் தேடலும் தொடங்கியது.
தொடரும்.
ஹாய் நண்பர்களே.. நீண்ட நாட்களுக்கு பிறகு அன்றிலின் மூன்றாம் அத்தியாயத்தை பதிவிட்டுள்ளேன். உங்கள் கருத்துகளையும் விமர்சனகளையும் பதிவிடுமாறு கேட்டு கொள்கிறேன். மிக்க நன்றி .. !