நீங்க சொல்லும் போது தான் rewind ஆகுது ஶ்ரீ....செம்ம நியாபக சக்தி??வெட்சி படை ஆநிரை கவர்ந்து செல்ல கரந்தை மாலை அணிந்து எதிரி படையிடம் இருந்து ஆநிரையை மீட்க செல்வர் nu school days il padithu irukom . Ethirparatha thakuthal....Ippo adhan enna seiya poraan..Nice epi sis
யார் அந்த பெண்? மாயாவா? எல்லோருமே guess பண்ணிருந்தீங்க. sridevi மட்டும் exact ஆக guess பண்ணிருந்தாங்க. நித்திலக்கோதை இந்தப்பெயர் இதுவரை கதையில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே பயன்படுத்தி இருப்பேன். வெட்சிபடைன்னா, என்னன்னு அடுத்த பதிவில் பார்க்கலாம். இந்த எபி படிச்சிட்டு என்ன பீல் பண்றீங்கன்னு ஷேர் பண்ணுங்க!!!
வெட்சிப்படை
“பார்த்தாயா சந்திரா? தாழை நாட்டின் அரசி நித்திலக்கோதை..” அடிக்குரலில் சொன்ன ஆதன், இருளில் துழாவ, அங்கே சந்திரனைக்காணவில்லை.
மரக்கலங்கள் இரண்டும் எட்ட இருந்தபடியால், அவர்கள் பேசுவது காதில் விழவில்லை. அவர்களின் முகமாறுதலையும், உதட்டசைவையும் கொண்டு ஊகம் செய்ய, ஆதனின் பார்வை கூர்மை உதவியது.
மக்களின் ஆதரவு முற்றும்முழுதாக கன்யாவிற்கு தான் இருக்கிறது. அப்படியிருக்க, இவர்களால் என்ன செய்ய முடியும்? தென்னவனின் நோக்கத்தையும், ஆட்சிக்கட்டிலை அடைய, அவன் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பதையும் ஆதன் அறிந்தே இருந்தான்.
தாழை நாட்டு அரசியையும், வார்த்தைகளால் மயக்கி தன்புறம் இழுத்துக்கொண்டு பலம் சேர்க்கிறான் என்பது புரிய, இகழ்ச்சியாக புன்னகைத்துக்கொண்டான் ஆதன். முழுதாக அவர்கள் திட்டத்தை கிரகிக்க முடியாது ஏமாற்றத்துடன், மாளிகைக்கு திரும்பிய, ஆதனை முழுத் தகவல்களுடன் வரவேற்றான் சந்திரன்.
“உன்னைத் தலைமை ஒற்றனாக்கிவிடலாம் என்று முடிவு செய்து விட்டேன் சந்திரா!!” உள்ளூர வெகுவாக மெச்சிக்கொண்டான்.
“தொழிலாகவே மாற்றி விடுவீர்கள் போலிருக்கிறதே!!” சலித்துக்கொண்டான் சந்திரன்.
“ஹாஹா..வேண்டாமென்றால் விடு. நடந்ததை சொல்.” என்றான் ஆதன், காரியத்தில் கண்ணாக.
“சேரர்களுடனான போர் முடிந்ததும், தீவில் கலகத்தை உண்டு பண்ணி நித்திலக்கோதைக்கு பட்டத்தரசியாக, முடிசூட்டப்போவதாக பேசிக்கொண்டார்கள்.” இப்படித் தொடங்கி முழுதிட்டத்தையும் கூறிமுடித்தான் சந்திரன்.
“நித்திலக்கோதையை அரசியாக்குவேன் என்பதெல்லாம் கண்துடைப்பு.” இகழ்ச்சிக்குரலில் சொன்னான் ஆதன்.
“போர்நெருங்கும் வேளையில், இப்பொழுதே திட்டம் தீட்ட அவசியமென்ன இளவரசே?” என்றான் சந்திரன்.
“புரியவில்லை..” புருவத்தை ஏற்றி, கேள்வியாய் நிறுத்தியவன், சந்திரன் விழித்துக்கொண்டு நிற்கவும், அவனுக்கு புரியும்படி விவரித்தான். “நம் கூட்டுப்படை எப்படியும் சேரர்களை பின் வாங்க செய்து விடும் என்று நம்புகிறான். சேரர்கள், கன்யாவைக் கடத்தி சென்றுவிட்டதாக நம்பசெய்து விட்டு, ரகசியமாக கன்யாவை சிறை செய்யப்போகிறான். அந்த இடைவெளியைப் பயன்படுத்தி நாட்டில் கலகமூட்டி, அவன் அரியணை ஏறப்போகிறான். அதற்கு தான் கோதையின் உதவியை நாடியிருக்கிறான்.” ஆதன் விவரிக்க விவரிக்க சந்திரனின் விழிகளும் பெருவியப்பில் விரிந்தது.
“மிகவும் மோசமானவன் இளவரசே!!” முகம்சுழித்தான் சந்திரன்.
அன்று இரவு முழுதும் உறங்கவிடாது அலைக்கழித்தது ஆதனின் மனம். சம்மந்தமில்லாத விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாம் என்று ஒரு மனம் இடித்துரைக்க, அவளுக்கும் உனக்கும் சம்மந்தம் இல்லையா என்று வேறொரு மனம் துடித்தது.
கண் முன்னே நிகழ்வதை, பார்வையாளன் போல கைகட்டி வேடிக்கை பார்க்க முடியவில்லை அவனால். கன்யாவிற்கு ஒரு சின்ன குறிப்பையாவது கொடுத்து விடவேண்டும், என்று உள்ளம் தத்தளித்தது.
சந்தர்ப்பமும் விரைவாகவே கிட்டியது.
பெருங்கணியர் குறித்த நாளில் வாளும், குடையும், படைவீரர்களின் அணிவகுப்போடு, போருக்கு செல்லும் திசை நோக்கி கோலாகலமாக கொண்டுசெல்லப்பட்டது.
ஆதன், சொன்ன அதே திசையில்.. வடதிசை நோக்கி அணிவகுப்பு பிரம்மாண்டமாக நடந்தது. போரில் கலந்துகொள்ளும்படி மக்களுக்கு, வேந்தன் தூது அனுப்புவான். முரசறைந்து நாட்டில் அறிவுப்பு விடப்பட்டதும், மறக்குடியினர் உற்சாகம் பீறிட, வந்து இணைந்துகொள்வார்கள்.
போரில்லாது சோர்ந்து கிடந்த வீரர்களும், இப்போது கொள்ளை உற்சாகத்துடன் தங்கள் வாள்களுக்கு நீராட்டி, மாலை சூட்டி பலமாக ஆயத்தம் செய்து கொண்டிருந்தனர்.
அன்று கன்யாவும், ஆதனின் மாளிகைக்கு வருகை புரிந்திருந்தாள்.
ஆதன் விசித்திரமாக நடந்துகொள்வது போல இருந்தது.
அவளுக்கும், உள்ளே தவிப்பு இருந்தாலும் அழகாக மறைத்துவிட்டாள். அவளைக் காணும் போதெல்லாம் எம்பி எம்பி குதிக்கும் இதயத்தை அடக்கி இழுத்து பிடிப்பதற்கே, ஆற்றல் மொத்தமும் செலவாகிறது ஆதனுக்கு.
ஒரு நாழிகைக்கும் மேலே போர் ஆயத்தங்களைப் பற்றி விவாதித்து முடித்தனர். அவள் புறப்படும் நேரமும் நெருங்கியது. ஆதனின் கைக்கு மேலே ஆழமான வெட்டு இருப்பதை கவனித்தவள், “இதென்ன??” என்றாள்.
“உங்கள் நாட்டிற்கு, உளவாளியாக சேவகம் செய்யச் சென்ற போது கிடைத்த பரிசு.” என்றான் எள்ளலாக.
“என்ன?”
“உங்களுக்கு எதிரான சூழ்ச்சிகள் இன்னும் ஓயவில்லை.”
“தெரிந்தது தானே?” என்றாள் இலகுவாக.
“நீங்கள் நினைப்பது போல எளிதான விஷயம் இல்லை. உங்கள் உயிருக்கும் ஆபத்து நேரலாம்.” ஆழ்ந்தகுரலில், எச்சரிக்கை செய்தான் ஆதன். அவன் தடுக்க நினைத்தாலும் அந்தக்குரலில் அக்கறையும், நேசமும் கலந்திருந்தது.
“சூழ்ச்சிகள் இருக்கலாம், என் உயிருக்கு ஆபத்து நேரும் அளவிற்கு என்பதை நிச்சயம் ஒரு நாளும் நம்பமாட்டேன்.” என்றாள் திடமாக. மேலும் அவன் சொல்ல முயன்றதை வீண் விவாதம் என்று நினைத்து கையமர்த்தி தடுத்துவிட்டாள் அவள்.
அவள், அவனை நம்பவில்லை என்ற கோபமே அவனுக்குள் நிறைந்தது. வேதனையும் எழுந்தது. “மருந்திட்டுக்கொள்ளவில்லையா?” எழுந்து சென்றவள், திரும்பிப்பார்த்து கனிவான குரலில் கேட்டாள்.
அந்த ஒற்றை சொல் அவன் கோபத்தையெல்லாம் தூள்தூளாக்க, “வீரனுக்கு காயங்கள் தான் அழகு தேவி!! உங்கள் நாட்டிற்கு உளவாளியானதால் உண்டான காயம். நீங்கள் மருந்திட்டால் மறுக்கமாட்டேன்.” என்றான் குறும்புடன்.
சட்டென அகல விரிந்தன அவள் விழிகள். அடக்கிய போதும், மெலிதான வசீகர சிரிப்பு இருவர் இதழ்களிலும் பரவியது.
அடுத்த சில கணங்களுக்கு அவள் மும்முரமாக, அவன் காயத்திற்கு மருந்திடுவதிலேயே கவனம் செலுத்தினாள். இதெல்லாம் மாயை தானோ? அவன் மனம் நம்ப மறுத்தது. கம்பீரமாக தொண்டையை செருமிக்கொண்டு நிமிர்ந்தவன், “என் திட்டத்தை ஏற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி.” என்றான், நெருக்கத்தில் தெரிந்த அவள் முகத்தை விட்டு சிறிதும் பார்வையை விலக்காமல்.
“என் ஆழ் மனதிலும், இதே போன்ற ஒரு திட்டத்தையே வகுத்திருந்தேன். அதனாலே, சில மாற்றங்களுடன் நீங்கள் சொன்னதும் ஏற்க முடிந்தது.” அவன் கரங்களின் மட்டுமே பதிந்திருந்தது அவள் விழிகள்.
“ஹோ!!” என்றவன், “நீங்கள் என் மீது கொண்ட, நம்பிக்கைக்கு அடையாளம் அது.” ஆழமான குரலில் சொல்லி, அவளை உற்றுநோக்கினான்.
“உங்கள் திட்டத்தின் மீது..” அவள் சாதுர்யமாக திருத்தினாள்.
தவிப்பும், ஏமாற்றமும் உள்ளே விரவியது. வெடுக்கென கரங்களை, பின்னுக்கு இழுத்துக்கொண்டான் ஆதன். இருந்தும் அவள் நகராமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
‘நீங்களும் முதலில் எனக்கெதிராக இருந்தவர் தான்.’ என்று குற்றம் சாட்டுவது போல இருந்தது அவள் விழி வீச்சு.
‘இப்போதும் அப்படித்தானே இருக்கிறான். தீவும் வேண்டும். அவள் நேசமும் வேண்டும்.’ தீவை விட்டுக்கொடுத்தால் கடமை தவறியவன் என்ற பழிசொல்லுக்கு ஆளாகிவிடுவான். காதலை விட்டுக்கொடுக்க சக்தியில்லை. அவளைக்காணும் ஒவ்வொரு கணமும் மனம் மயங்கி நிற்கிறது. அவன் தவிப்பு அவளுக்கு எங்கே புரியப்போகிறது.
அவள் வெளியேறியதும், உப்பரிக்கைக்கு சென்று கடற்கரையை வெறித்தான் ஆதன். அலைகளால் அலைப்புண்ட மரக்கலங்கள் இருளில் அசைந்து கொண்டிருந்தது.
யாருடைய நேசத்தை பெறவும் அவன் மெனக்கெட்டதில்லை. இவள் ஒருத்தியின் அன்பை, நேசத்தைப் பெற வேண்டும் என ஏங்கி நிற்பது விந்தையாக இருந்தது. மனம் அடங்கமறுத்தது.
நாட்கள் எல்லாம் கணங்களாக விறுவிறுவென நகர்ந்தது. ஆதன், கன்யாவின் கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கி சேர நாட்டின், வெட்சிப்படை வீரர்கள், குமரி நாட்டிற்குள் புகுந்து, தடுத்தவர்களுடன் போர் புரிந்து, ஆநிரைகளை கவர்ந்து சென்றனர்.
கணிப்புகள் பொய்யாகிப்போனதில், உறுதியின் அடித்தளம் ஆட்டம் கண்டது. ஊகத்தின் மேல் கட்டமைத்த திட்டங்களின் நிலையை நினைத்து கலவரப்பட்டது உள்ளம்.
சந்திரன் வந்து செய்தியை அறிவித்ததும் கிஞ்சித்தும் பதற்றமாகாமல் “வெட்சிபடை தானே?” என வெகுஇலகுவாக கேட்ட ஆதனின் அலட்சியத்தில் சந்திரனுக்கே தாளமுடியாத கோபம் வந்தது. ஆதனின் மன உறுதியைக்கண்டு வியப்பின் எல்லைக்கே சென்றான் சந்திரன்.
நன்றி!!அருமை ?
நன்றி பானுமா!!
மிகவும் அருமையான பதிவு,
கல்பனாஏகாம்பரம் டியர்