அத்தியாயம் – 8
சிலுசிலுவென தென்றல் காற்று உடலைத் தழுவிட ஜன்னலை மூடிவிட்டு சீட்டில் சாய்ந்து அமர்ந்தாள் நித்திலா.. அவளுக்கு நேர் பின்னாடி நிரஞ்சன் அமர்ந்து வெளியே வேடிக்கைப் பார்த்தான்..
அவர்களுக்கென தனியாக ஒரு டூரிஸ்ட் பஸ் பிடித்து அதில் ஊட்டி சென்று கொண்டிருந்தனர்..
பஸ் சீரான வேகத்தில் சென்று கொண்டிருக்க யாருக்கும் தூக்கம் வராமல் இருக்க “உங்க யாருக்கும் எந்த ஆசைகளும் இல்லையா..? சுமிம்மா மாதிரி..” அனிதாதான் முதலில் பேச்சைத் தொடங்கினாள்..
அவளின் பேச்சில் எல்லோரின் கவனமும் அவளின் பக்கம் திருப்பிட, “நான் பண்ற செட்டை எல்லாம் உங்களுக்கு லூசுத்தனமாக இருக்கா..?” என்று வருத்ததுடன் கேட்டார் சுமிம்மா..
“நிஜமாவே உங்களைப் பார்த்தால் ரொம்ப பெருமையாக இருக்கும்மா.. இந்த வயதில் யாரும் இப்படி இருக்கவும் மாட்டாங்க.. இனிமேல் இருக்கவும் மாட்டாங்க..” என்றாள் வித்யா..
“இப்பொழுது ஒரு சின்ன இன்டர்வியூ எடுக்கலாம்..” என்று எல்லோருக்கும் நினைவு படுத்திய அனிதா, “என்னோட கேள்விக்கு பதில் சொல்லுங்க..” தன் கையை மைக்காக மாற்றி, “நீ முதலில் பதில் சொல்லு..” என்றாள்..
“எனக்கு மெரிட்டில் பாஸ் பண்ணி நிறைய படிக்கணும்..” என்று புன்னகைக்க, “அதெல்லாம் நல்ல மார்க் எடுப்ப கவலையே படாதே..” என்றாள்..
வித்யாவின் முன்னே அவள் மைக்கை நீட்ட, “எனக்கு கதை புத்தகம் படிக்க பிடிக்கும்.. அதுவும் மழை நாளில் டிராவல் டைமில் ஜன்னலின் அருகே அமர்ந்து படிக்கணும்.. அடுத்து என்னோட பாட்டி மடியில் படுத்து கதை கேட்கணும்.. இது என்னோட ஆசை..” என்றாள்..
“இது கண்டிப்பா நடக்கும்..” என்றவள் மைக்கை இப்பொழுது கார்த்திக்கா முன்னே மைக்கை நீட்ட, “வெளிநாட்டில் ரோஜாபூ தோட்டம் உள்ள இடம் இருக்காம்.. அதை போய் பார்க்கணும்..” என்றாள்..
“இருப்பதிலே நீதான் உருப்படியாக பதில் சொல்லிருக்கா..” என்றவள் சொல்ல மற்றவர்கள் இன்டர்வியூவை கவனிக்க இப்பொழுது அவள் மகேஷ் நோக்கி நீட்டிட, “எனக்கு காதலித்து கல்யாணம் பண்ணனும்..” என்றவன் குறுஞ்சிரிப்புடன்..
“அதெல்லாம் நிறைய நடக்குது.. உனக்கு நடக்காதா..?” என்றவள் அவனை நக்கலடிக்க எல்லோருமே சிரித்தனர்.. சுமிம்மா அனைத்தையும் மெளனமாக கவனித்தார்
“அடுத்து நம்ம கௌசிக்..” என்று அவரின் முன்னே மைக் நீட்டப்பட்ட, “என்னோட கோபத்தை குறைக்கணும்.. இதுதான் என்னோட ஆசை..” என்றவன் சொல்ல, “அது இப்பொழுது நடக்காது.. நெக்ஸ்ட்..” என்றாள்..
“எனக்கு என்னோட கூச்ச சுபாவத்தை விட்டுவிட்டு எல்லோரிடமும் இயல்பாக பேசி சிரிக்கணும்..” என்றான் சசிதரன்..
“அதுதான் அக்கா அருவாளைத் தூக்கியதில் இருந்து நடக்கிறதே..” என்றவள் மைக்கை நிரஞ்சனின் முன்னே நீட்டினாள்..
அவன் நித்திலாவைப் பார்த்துவிட்டு, “எனக்கு வரபோகும் மனைவியை நான் உயிருக்கு உயிராக காதலிக்கணும்.. அவளோட ஆசைகளை நிறைவேற்றி வைக்கணும்..” என்றவன் புன்னகைத்தான்..
நித்திலா வேகமாக திரும்பி நிரஞ்சனைப் பார்க்க, அவனோ இடதுபுருவம் உயர்த்தி, ‘என்ன’ என்பது போல பார்த்தான்.. அவள் மெளனமாக தலையைக்குனிந்தாள்..
அவளின் அந்த மௌனம் கூட அவனின் மனத்தைக் கவர, ‘சோ கியூட்..’ என்று மனதிற்குள் நினைத்தான்.. அனிதா எல்லோரின் ஆசைகளையும் கேட்டு விட்டு திரும்ப அவளின் முன்னே மைக்கை நீட்டினாள் சங்கரி..
“உங்களோட ஆசை சொல்லுங்க..” என்றவள் சிரிப்புடன் கேட்க, “எனக்கு இளையராஜா சாங் கேட்டுகிட்டே லாங் டிராவல் ஒன்னு போகணும்..” என்றவள் தொடர்ந்து,
“அடுத்து மைதா மாவு மாதிரி இருக்கும் ஒருவனைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கணும்..” என்றவள் கண்ணில் கற்பனையுடன்.. அவளின் பேச்சில் மகேஷ் முகத்தில் மின்னல் வெட்டியது..
அதிலிருந்த அனைவரின் ஆசைகளையும் கேட்ட பின்னரும் கூட நித்திலா அமைதியாக வர, “நித்தியிடம் நீ இண்டர்வியூ எடுக்க மறந்துட்ட..” என்றவளை மாட்டிவிட்டு நித்திலாவிடம் முறைப்பை பரிசாக பெற்றுக்கொண்டான் நிரஞ்சன்..
“அட நீங்க மட்டும் சொல்லவே இல்ல..” என்றவள் அவளின் முன்னே மைக்கை நீட்டிட, ‘அவள் என்ன சொல்ல போகிறாள்..’ என்று ஆவலுடன் பார்த்தனர்..
“எனக்கு ஒரு முறை வேடந்தாங்கல் போகணும்.. வரலாற்றில் ரொம்ப பிடித்த இடம் மகாபலிபுரம் கோவில் சிற்பங்கள் அதைப் பார்க்கணும்.. அப்புறம் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை வாங்கணும்..” என்றவள் ரசனையுடன் ஆசைகளைப் பட்டியலிட்டாள்..
“அது ஏன் நித்திக்கா தலையாட்டி பொம்மை வாங்கணும் என்று சொல்றீங்க..” என்று விளக்கம் கேட்டாள் சங்கரி..
“எனோட மனசில் இருப்பதெல்லாம் நான் அதுக்கிட்ட சொல்லிட்டே இருப்பேன்.. அந்த பொம்மையும் நான் சொன்னதுக்கு எல்லாம் தலையாட்டிடே இருக்கும்..” என்றவள் தொடர்ந்து,
“உயிர் இருந்தும் பொம்மையாக இருக்கும் மனிதர்களைவிட உயிரில்லாத அந்த தலையாட்டி பொம்மைகளுடன் பேசுவதில் எந்த தவறும் இல்ல..” என்றவளின் இதழில் புன்னகை அரும்பியது..
அவள் சொன்ன விஷயம் யாருக்கும் புரியாவிட்டாலும் கூட அவளின் மனம் காயப்பட்டு இருக்கிறது என்று உணர்ந்து கொண்டான் நிரஞ்சன்..
“நான் என்ன சொன்னாலும் தலையாட்டும்.. என்னோட ஆசைகள், விருப்பங்கள் எல்லாம் கேட்டு தலையாட்டும்..” என்றவள் சொல்ல,
“நாளைக்கு வருகிற கணவனும் தலையாட்டி பொம்மையாக இருக்கணுமா..?” என்று கேட்டான் நிரஞ்சன்.. அவனின் கேள்வியில் எல்லோரும் திரும்பி அவனைப் பார்க்க அவனோ இயல்பான முகத்துடன் நித்திலாவைப் பார்த்தான்..
“எல்லாவற்றிற்கும் அர்த்தம் புரியாமல் தலையாட்டும் தலையாட்டி பொம்மை போல ஒரு கணவன் எனக்கு வேண்டாம்.. அதுக்கு நான் இப்படியே இருந்துகொள்கிறேன்..” என்றவள் பேச்சிற்கு முற்றுபுள்ளி வைத்தாள்..
சுமிம்மா அவள் பேசுவதை எல்லாம் கேட்டுகொண்டே கண்மூடி அமர்ந்திருக்க அவரின் மனதில் ஆயிரம் நினைவுகள் அணிவகுத்து நின்றது..
மறுநாள் காலைபொழுது அழகாக விடிந்திட குளிர்ந்த காற்று முகத்தில் மோதியது.. வெண்பஞ்சு மேகங்கள் வானில் ஊர்வலம் போக விடியலுக்கான அறிகுறி இல்லாமல் காணப்பட்டது வானம்..!
வழியெங்கும் அணிவகுத்து நின்ற ரம்பர் மரங்களும் பலாபழம் மரங்களும்.. கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்த தேயிலைத் தோட்டங்களும் பார்க்க பார்க்க தெவிட்டாத இயற்கை அழகு..!
மலையின் முகட்டை தொட்டு சென்ற மேகங்களை கையில் பிடித்துவிட தூண்டும் இயற்கைகாட்சி.. திரும்பும் இடமெங்கும் கொட்டிகிட அழகை பார்க்க கண்ணிரண்டும் போதவில்லை..!
எல்லோரும் ஸ்வெட்டருடன் வண்டியைவிட்டு கீழிறங்கி நிற்க நிரஞ்சனும், சசிதரனும் சென்று ரிசார்ட் புக் பண்ணிவிட்டு வந்தனர்.. அங்கே சென்று அலுப்பு தீர குளித்துவிட்டு கிளப்பியவர்கள் முதலில் மலர் கண்காட்சிக்கு சென்றனர்..
சுமிம்மா அங்கிருந்த மலர்களை எல்லாம் பார்த்துவிட்டு குழந்தை போல அந்த மலர்களின் அருகில் சென்று நிற்பது, மலர்களை மெல்ல தீண்டுவதுமாக இருந்தார்..
மலரில் செய்யப்பட்ட பெரிய டேபியரின் அருகில் நின்று எல்லோரும் போட்டோ எடுத்துக் கொண்டனர்.. சுமிம்மா செய்யும் சேட்டையெல்லாம் கவனித்த நித்தி மௌனமாக நின்றிருந்தாள்..
எல்லோரும் ஆளுக்கு ஒரு பக்கம் சென்று இடத்தை சுற்றிப்பார்க்க, நிரஞ்சனின் பார்வை அவளின் மீதே இருந்தது.. நித்தி அதை கவனித்தாலும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை..
அவர்களுடன் வந்தவர்கள் யாரும் இல்லாத நேரத்தை தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்ட நிரஞ்சன் அவளின் அருகில் சென்றான்.. அவளோ அவனைவிட்டு விலகி நடந்தாள்..
“நிதி உன்னோட கொஞ்சம் பேசணும்..” என்றவன் சொல்ல அவளோ நிமிர்ந்து அவனின் முகம் பார்க்க, “எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு.. உன்னைத் திருமணம் செஞ்சிக்க ஆசைபடுகிறேன்..” என்றவன் சொல்லிக் கொண்டிருந்தான்..
அதற்குள் அங்கே வந்தவர், “ஹாய் எல்லோரும் ஊட்டியை சுற்றிப்பார்க்க வந்திருக்கீங்க.. இங்கே கோடை திருவிழாவில் சில போட்டி வைக்கிறோம்..” என்றவர் அறிவித்தார்..
“என்ன போட்டி.. யாருக்கு போட்டி.. என்ன ரூல்ஸ்.. யார் எல்லாம் கலந்துக்கணும்..” முதலாக சுமிம்மா கேட்க, “இதில் இளமை பட்டாளம் கலந்துக்கலாமா..?” என்று கேட்டான் மகேஷ்..
“இல்லங்க.. இந்தமுறை முதுமைக்கு முதலிடம் கொடுக்க நினைக்கிறோம்..” என்றவர் தொடர்ந்தவர், “ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் போட்டியில் கலந்து கொள்ளலாம்.. ஒரு பாட்டு போட்டி ஒரு டான்ஸ் போட்டியில் கலந்துட்டு வின் பண்ணனும்..” என்றார்..
“முதலில் என்ன ரூல்ஸ்..? என்ன பரிசு அதை சொல்லுங்க” என்றார் சுமிம்மா..
“பாட்டு, டான்ஸ் இரண்டிற்கும் நீங்களே பாட்டு செலக்ட் பண்ணிக்கலாம்.. ஆனால் உங்களோட இளமை வயதில் இந்த பாடலுக்கு நீங்க எப்படி ஆடியிருப்பீங்களோ அதே மாதிர் ஆடனும்.. உடை உங்களோட சாய்ஸ்..” என்றவர் சொல்ல,
“இதெல்லாம் எனக்கு கைவந்த கலை.. பரிசு பற்றி சொல்லுங்க..” என்றவர் சொல்ல, “ஒரு லட்சம் பரிசு..” என்றவர் அறிவிக்க அங்கே வந்திருந்த எல்லோரும் பெயர் கொடுக்க சுமிம்மாவும் பெயர் கொடுத்தார்..
எல்லோரும் பாடல் பாடிமுடித்த பின்னர் மேடை ஏறினார் சுமிம்மா.. அவர்கள் எல்லோரும் அவர் என்ன பாடல் பாட போகிறார் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர்..
“பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா
தாலாட்டு பாடுகிறேன் தாயாக வில்லையம்மா
ஐந்து வயதில் வளைந்தால் அறிவு உயரும்
அன்பு மழையில் நனைந்தால் வாழ்வு மலரும்
கண்ணே உன்னை நல்லோர் பிள்ளை என்றே போற்றுவார்
ஆஹ் அஹ் ஆரிரரோ..” என்றவர் பாடிய பாடலைக் கேட்ட எல்லோரின் மனதிலும், ‘இவர் ஏன் இந்த பாடல் பாடினார்..?’ என்ற கேள்வியெழுந்தது.. சுமிம்மா எந்த கவலையும் இல்லாமல் பாடிக்கொண்டிருக்க நித்திலாவின் மனதில் பாரம் ஏறியது..
“வெள்ளி நிலவே உன்னை மேகம் மறைத்தால்
தங்க மலரே உன்னை தரையில் எறிந்தால்
உண்மை என்ற ஒன்றே போதும் நன்மை காணலாம்
ஹும் ஹும் ஆரிரரோ..” என்றவர் பாட நித்திலாவினால் தன்னுடைய அழுகையை கட்டுத்த முடியாமல் யாரின் கவனத்தையும் கலைக்காமல் அங்கிருந்து ஓடிவிட்டாள்.. அவள் ஓடுவதைக் கவனித்த நிரஞ்சனும் அவளின் பின்னோடு ஓடினான்..
இவர்கள் சென்றதை அறியாத எல்லோரும் நின்று சுமிம்மாவின் பாடலைக் கேட்க அவரோ அந்த பாட்டுடன் ஒன்றிப் போயிருந்தார்..
“ராமன் இருப்பான் இங்கே சீதை இருப்பாள்
கண்ணன் இருப்பான் இங்கே ராதை இருப்பாள்
பிள்ளை உள்ளம் கண்டே தெய்வம் கோயில் கொள்ளலாம்
பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா..
தாலாட்டு பாடுகிறேன் தாயாக வில்லயம்மா..” அவர் பாடலைப் பாடிமுடித்து கீழிறங்கி வந்தார்..
அந்த பாடலுக்கும் சுமிம்மாவிற்கும் என்ன தொடர்பு..? நித்திலாவின் மனதில் என்ன இருக்கிறது..?/