- Joined
- Apr 7, 2019
- Messages
- 154
- Reaction score
- 950
பகுதி 1
சலனமற்ற நிலை மட்டுமல்ல
அமைதி
கோபமான மனநிலையின் பிரதிபலிப்பும்
அமைதி
இதைச் செய்யலாமா? அல்லது அதைச் செய்யலாமா ?
எனும் சங்கடத்தின் மனநிலையும்
அமைதி தான்
அடுத்து என்ன செய்வது என்று
ஆழ்ந்து சிந்திக்கும் மனநிலையும்
அமைதி தான்
என்ன பேசுவது என்று தெரியாத போதும்
அமைதி தான் கைகொடுக்கும்
என்ன நடந்தது என்று புரியாத போதும்
அமைதி தான் கைகொடுக்கும்
சென்னை
அழகான மாலைப் பொழுது…
மாலைப் பொழுது இதம் தரும் பொழுதாகும், வேலைக்குச் சென்று திரும்புபவர்களுக்கு சுகம் தரும் பொழுது (ஏனெனில் ரிலாக்ஸ் செய்வதற்கு...), பள்ளி விட்டு வரும் குழந்தைகளுக்கு குதுகலமான பொழுது (ஏனெனில் தம் நண்பர்களுடன் விளையாடும் பொழுதல்லவா?), பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் பொழுது (ஏனெனில் தன் கணவனும், குழந்தைகளும் திரும்பி வரும் பொழுதல்லவா?). இவ்வாறு இதமான இந்த மாலை பொழுதில், ஒரு வீட்டில் மட்டும் அமைதியே ஆட்சி செய்தது.
பணக்காரர்கள் மட்டும் வசிக்கக் கூடிய பகுதியில் இருந்தது அந்தப் பங்களா.
இள ரோஸ் (கிட்டதட்ட பேபி பிங்க்) நிறத்தில் அழகாய், அம்சமாய் அமைந்திருந்தது அந்த பங்களா. பார்ப்பவர்கள் அனைவருக்கும் மாளிகை போன்ற தோற்றத்தை தரும். ஒன்றுக்கு பதிலாக இரண்டு வாயில் காப்பாளர்கள் வாசல் கதவில் நின்று காவல் காத்தனர்.
உள்ளே சென்றால், ஒரு இன்னோவா, ஒரு டவேரா, ஒரு ஆடி நிறுத்தப்பட்டிருந்தது, அவ்வாறு நிறுத்தப்பட்டிருந்தால், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உள்ளே இருக்கிறார்கள் என்று அர்த்தம். இது எப்பொழுதேனும் அரிதாக நடப்பது, ஏனென்றால் முக்கால்வாசி நேரம் யாரேனும் ஒருவர், தொழில் தொடர்பாக விடுப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.
இப்போது அனைவரும் ஆஜாராகி இருப்பதால்? ஏதேனும் விசேஷமோ? அல்லது எதுவும் பிரச்சனையாக கூட இருக்கலாம். இன்னும் சற்று நேரத்தில் தெரிந்து விடும். அந்த மாளிகைக்குள் நுழைந்தால் இடது புறம், ஒரு மெத்திருக்கையுடன் கூடிய வரவேற்பறையும், வலது புறம் திரும்பினால், அங்கேயும் வரவேற்பறை போன்ற தோற்றத்துடன் மெத்திருக்கை மற்றும் டீபாய் போடப்பட்டிருந்தது.
நடுவில் நேராக சென்றால், மாடிப்படிகள் வரும். அங்கும், பாதி படிக்கட்டிற்கு பின் இரண்டாக பிரியும். வலது புறம் தான் வீட்டு உறுப்பினர்கள் அமர்வார்கள், இடது புறம் விருந்தினர்களின் பக்கமாம். பணக்காரர்கள் என்றால், இப்படி தான் போலும். அதனால் நாம், வலது புறம் திரும்பி, குடும்ப உறுப்பினர்களை காணலாம்.
அங்கு முதலில், நாம் பார்க்கப்போவது அஞ்சலி பாட்டி, எல்லோரும் அஞ்சுமா என்று சொல்வார்கள். அவரும் அமைதியாய் உட்கார்ந்திருக்கிறார். ஆனால், ஏதோ கோபத்தில் அமைதியாய் அமர்ந்திருப்பது போல் தெரிகிறது.
அதன் பின் அவர் பக்கத்தில், சரஸ்வதி (சுருக்கமாய் நமக்கு சரஸ்) நமது அஞ்சுமாவின் மருமகள், அவரும் அமைதியாய் தான் அமர்ந்திருக்கிறார், ஆனால் சங்கடப்பட்டு இருப்பது போல் தெரிகிறது. மனதுக்குள், கோபம் கொள்வதா அல்லது சந்தோசப்படுவதா? என தெரியாமல் அமர்ந்திருக்கிறார்.
அதன் பின், சரஸின் கணவர் சாரங்கபாணி (நாம் ரங்கா என்று அழைக்கலாம்) அவரும் அமைதியாய் தான் இருக்கின்றார், ஆனால் அவரின் அமைதிக்கு அர்த்தம் இப்போது அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று அர்த்தம்.
அடுத்ததாய், சரஸ் மற்றும் ரங்கனின் மூத்த மகன் அவினாஷ் மற்றும் அவன் மனைவி ஆனந்தி. அவர்களும் அமைதியாய் தான் அமர்ந்திருக்கிறார்கள்.
ஆனந்தி தன் மாமியாரும், மாமியாருக்கு மாமியாரும் அமைதியாய் இருக்கின்றப்படியால், அவளும் அதையே பின்பற்றுகிறாள்.
அவினாஷ் இப்போது தான் வீட்டிற்குள் நுழைந்தான். அதனால், அவனுக்கு விஷயம் ஆனந்தி மூலமாக தெரிவிக்கப்பட்டு, பெரியவர்களே அமைதியாய் இருக்கும் போது, நாம் அதை கலைக்க வேண்டாம், அவர்களே முதலில் ஆரம்பிக்கட்டும் என்று அமைதி காத்தான்.
நம் ரங்கனுக்கே, அவரின் தாய், அஞ்சுமா மூலமாக தான் விஷயம் தெரியும். ஆனாலும் அமைதியாய் யோசித்து முடித்தவர், "அம்மா அந்தப் பொண்ணு எங்க இருக்கா?" என தன் தாயிடம் கேட்டார்.
ஏற்கனவே கொதிப்பில் இருந்தவர், மகன் அவளைப் பற்றி கேட்கவும், அஞ்சுமா "மேல தான் இருக்கா, அவன் ரூம்ல, அதான் உன் பையன் பிடிச்ச கைய விடாம கூட்டிக்கிட்டுப் போனானே" என சிடு சிடுத்தார்.
யார் அந்த பெண்? இப்படி அனைவரின் அமைதிக்கும் காரணமாய் இருக்கும் அவளைப் பற்றி அறிய நமக்கெல்லாம் ஆர்வமாய் இருக்கின்றது. ஆனால், அதே சமயம் மேலே இருந்து யாரோ படிகளில் இறங்கி வரும் ஓசை கேட்டது. அனைவரும் நிமிர்ந்து பார்க்க, அவர்கள் வீட்டின் இளைய வாரிசு தான் இறங்கி வந்து கொண்டிருந்தான். அவன் பெயர் ஆகாஷ்.
அவனும் அமைதியாக தன் ஆறடி உயரத்துக்கு நிமிர்ந்து வந்து கொண்டிருந்தான். அதுநாள் வரை சாதுவாய் வலம் வந்தவன், இன்று செய்த காரியத்தினால், எல்லோரின் முறைப்புக்கும், கண்டிப்பான பார்வைக்கும் ஆளானான். எனினும், தன் கம்பீரத்தை விடாமல், அவர்களை எல்லாம் ஒரு பார்வை பார்த்தான்.
பின் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவன், இடது புறம் திரும்பி, தன் குடும்பத்தினரை பார்த்து, "ப்ளீஸ், யாரும் எதுவும் கேட்காதீர்கள். நாம் நாளை பேசலாம். அவளிடமும் தான்..." என்று அழுத்தமாக சொல்லிவிட்டு தனது இன்னோவாவை எடுத்து கொண்டு, சென்று விட்டான்.
அங்கு ஆகாஷின் அறைக்குள், ஒரு சிலை என கட்டிலின் அருகில் அமர்ந்து கால் முட்டியில் தன் முகத்தை தாங்கி இருந்தாள் இருபத்து நான்கு வயது சஜ்னா.
இவளும் அமைதியாய் சோகமாய் தான் அமர்ந்திருந்தாள். சஜ்னா தன் மனதில் நினைத்து கொண்டிருந்தாள், ‘தன் வாழ்க்கையில் இன்று ஒரே நாளில் தான் எத்தனை திருப்பம்? வாழ்கையை விட ஒரு சிறந்த மர்ம நாவல் இல்லை, என்று எங்கோ, எப்போதோ படித்தது, நினைவில் இப்பொழுது தோன்றியது. எப்பொழுதும் போல் தான், தன் நாளின் துவக்கம் இன்று காலை வரை இருந்தது.’
வழக்கம் போல் காலை எழுந்து காலை கடன்களை முடித்து, குளித்து, வாசலில் கோலமிட்டு, தன் அம்மா கீதாவிற்கு உதவி விட்டு, தான் அலுவலகம் செல்வாள். அங்கு தன் வேலையை, முடித்து விட்டு, பேருந்தோ அல்லது ஆட்டோ பிடித்து, தன் வீட்டிற்கு வந்து விடுவாள். இது தான் அவள் தினசரி வழக்கம்.
இன்று காலை எழும் போது கூட தனக்கு, இன்று, இப்படி நிகழும் என்று தெரியாது. “நிகழ்ந்து விட்டதே சஜ்னா! அதற்கு சாட்சியாக தான் உன் கழுத்தில் தழைய தழைய தொங்குகிறதே” என்று மூளை சொன்னது.
அதன் பின், மூளையின் கட்டளைப்படி, அவள் கண்கள் குனிந்து தன் கழுத்தில் தொங்கிய திருமாங்கல்யத்தை பார்த்தது. மஞ்சளான சரடில். நடுவில் பொன்னினால் செய்த மாங்கல்யம், ஜொலித்தது. அதை பார்த்த சஜ்னாவுக்கு, அது தன்னை பார்த்து சிரிப்பது போல் தோன்றியது