மூக்கில் உள்ள சொரசொரப்பான கரும்புள்ளியைப் போக்க டிப்ஸ்
கரும்புள்ளிகள் எண்ணெய் பசை சருமத்தினருக்கு அதிகம் இருக்கும். இம்மாதிரியான புள்ளிகள் வருவதற்கு காரணம், சருமத்துளைகளில் அழுக்குகளின் தேக்கம் அதிகம் இருப்பது தான். இந்த கரும்புள்ளிகளைப் போக்க சில நம்பத்தகுந்த வீட்டு வைத்தியங்களை கீழே பார்க்கலாம்.
ஒரு டேபிள் ஸ்பூன் பட்டை பொடியுடன் தேன் கலந்து ஃபேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் இரவில் படுக்கும் முன் தடவி, மறுநாள் காலையில் தேய்த்துக் கழுவி, சுத்தமான காட்டன் துணியால் துடைத்து எடுக்க கரும்புள்ளிகள் நீங்கும்.
ஒரு டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன் சரிசம அளவில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து ஃபேஸ்ட் செய்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, இருபது நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
கிரீன் டீ பொடி அல்லது இலையை நீரில் கலந்து, கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வந்தால், சருமத்தின் மென்மைத்தன்மை அதிகரிக்கும்.
ஒரு டேபிள் ஸ்பூன் உப்பை அரை கப் நீரில் கலந்து நன்கு கரைந்த பின், கடலை மாவு சேர்த்து ஃபேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி நன்கு உலர்ந்த பின், வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
முல்தானி மெட்டி பொடியுடன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து ஃபேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, நன்கு உலர்ந்த பின் நீரில் கழுவ வேண்டும்.
பாத வெடிப்பை மறைய வைக்கும் குறிப்புகள்
வெறும் கால்களில் நடந்து கொண்டேயிருப்பவர்களுக்கு பாதத்தில் பிளவு அதிகமாகி வலியை தரும். அதனை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் தொடர்ந்து பராமரிப்பு செய்தால் பாதத்தில் வெடிப்பின்றி அழகாய் கவனித்துக் கொள்ள முடியும்.
கையளவு வேப்பிலையை எடுத்து அதனுடன் சுண்ணாம்பு சிறிது சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். ஓய்வு நேரத்தில் சூடா நீரில் கால்களை ஐந்து நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் சுண்ணாம்பும் வேப்பிலையும் கலந்த ஃபேஸ்ட்டை தடவவும். இருபது நிமிடங்கள் கழித்து பாதத்தை ஸ்க்ரப் செய்து கழுவுங்கள். வாரம் இருமுறை செய்தால் போதும். பாதம் மிருதுவாக வெடிப்பின்றி காணப்படும்.
நன்கு மசித்து வைத்த பப்பாளிப்பழத்தை குதிகால்களில் தடவி பத்து நிமிடங்கள் கழித்து காய்ந்தவுடன் ஸ்க்ரப் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பிளவு ஏற்பட்ட பகுதியில் தோல்கள் ஒன்று சேர்ந்து புதிய தோல்கள் போல தோற்றமளிக்கும்.
தொடர்ந்து ஒருநாள் விட்டு ஒருநாள் கடுகு எண்ணெயை பாதங்களில் தேய்க்க வேண்டும். இது உங்கள் பாதங்களை மென்மையாக்கும். மேலும் மசித்த வெந்தய கீரையில் கடுகு எண்ணெய் கலந்து பாதங்களில் தேய்த்து வாருங்கள். வெடிப்பு மறைந்து பாதங்கள் அழகாகும்.
மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விடவேண்டும். பின்னர் தண்ணீரில் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.
நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, பாதங்களில் தடவி பத்து நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி அல்லது தினமும் செய்து வந்தால், பாதங்களில் ஈரப்பசை தக்க வைக்கப்பட்டு, வறட்சி நீங்கி, குதிகால் வெடிப்பு மறைய ஆரம்பிக்கும்.
வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அக்கலவையில் பாதங்களை பத்து நிமிடம் ஊற வைத்து, பிரஷ் கொண்டு தேய்த்துக் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வர, பாதங்களில் உள்ள இறந்த தோல் வெளியேற்றப்பட்டு, பாதங்கள் மென்மையுடன் இருக்கும்.
குறிப்பாக இச்செயலை செய்த பின்னர், பாதங்கள் உலர்ந்ததும், நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை பாதங்களுக்கு தடவுங்கள். இல்லாவிட்டால் வறட்சி இன்னும் அதிகமாகும்.
குதிகால் வெடிப்பை விரைவில் நீக்குவதற்கான எளிய வழிகளில் ஒன்று தான் இது. தினமும் இரவில் படுக்கும் முன் வெதுவெதுப்பான சோப்பு நீரில் பாதங்களை பதினைந்து நிமிடம் ஊற வைத்து, பின் பிரஷ் கொண்டு தேய்த்து கழுவ வேண்டும்.
இப்படி செய்து கால்களை நீரில் கழுவிய பின் உலர வைக்க வேண்டும். பின்பு ஒரு டீஸ்பூன் வேஸ்லின் மற்றும் ஒரு எலுமிச்சையின் சாற்றினை ஒன்றாக கலந்து, பாதங்களில் தடவி வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், குதிகால் வெடிப்பை ஒரே வாரத்தில் மறையச் செய்யலாம்.
தினமும் இரவில் வெதுவெதுப்பான நீரில் ஐந்து நிமிடம், குளிர்ந்த நீரில் ஐந்து நிமிடம் என பாதங்களை ஊற வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கால்களில் உள்ள சோர்வு நீங்கும். மேலும் இரண்டு டீஸ்பூன் கிளிசரின், இரண்டு டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து, பாதங்களில் தடவி வர வேண்டும்.
இப்படி தினமும் தொடர்ந்து செய்வதால், பாதங்கள் மென்மையாவதோடு, நல்ல நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்.