என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ
அத்தியாயம் 17
"சந்தோஷமே நம் உறவு
சங்கமிக்கும் இடத்தில்
சாமி சிலையாய் நீயிருந்தால்..."
எத்தனை வருடங்கள் கடந்தாலும்... எவ்வளவு காலம் வசித்தாலும்.. பூக்களின் தேனை உறிஞ்ச ஓடோடி வரும் தேனீக்கு வாடகை கேட்பதில்லையே பூக்கள். அதன் நிறங்களின் எண்ணிக்கையை அறிய முற்பட்டால் பிரமிக்க வைக்கும் எந்தவொரு அறிஞனையும். ஆளை மயக்கும் மணத்தை எத்தனை பொருத்தமாய் செயற்கை முறையில் மனிதன் தயாரித்தாலும் இயற்கையாய் மலர்ந்த மலரின் மணத்திற்கு ஈடு உண்டோ...?! பூக்களை பிடிக்காத ஜீவன் தான் உலகில் உண்டோ...?! எத்தனை அழகாய் இருந்தாலும் அவ்வழகையே அலங்கரிக்க பூக்களை தானே நாடி வருகின்றனர். அப்படி இருக்கையில் பூக்களுக்கு இறுமாப்பு இருக்க கூடாதா...? கர்வம் பிறக்க கூடாதா...?! என்று பூக்களுக்குள் சொற்பொழிவு விறுவிறுப்பாய் நடக்க... இவை எதுவும் அறியாமல் அப்பூக்களுக்கு நீர் கொடுத்து உபசரித்து கொண்டிருந்தார் ஆரதனாவின் அன்னை கீர்த்தனா. தன் வீட்டில் வளர்க்கும் எல்லா செடிகளுடன் காலையில் வேலைக்கு செல்லும் முன் கொஞ்ச நேரம் செலவழித்து விட்டு போவது தான் அவரது வழக்கம். இன்றும் அதே போல செய்து கொண்டிருக்கும் சமயத்தில் வீட்டு வாசலிலிருந்து யாரோ அழைக்கும் சத்தம் கேட்டது.
"கீர்த்தனா அக்கா... கீர்த்தனா அக்கா..."
கையிலிருந்த தண்ணீர் பைப்பை கீழே போட்டு பைப்பை அடைத்து விட்டு வாசலிற்கு விரைந்தார் அவர்.
அங்கே பக்கத்து வீட்டு மாலதி நின்றிருந்தார்.
"என்னம்மா.. என்ன விஷயம்?"
"அக்கா. இன்றைக்கு என்னோட பொண்ணு 'மகி'யோட ஸ்கூல இருந்து அவளோட கிளாஸ் மிஸ் வர சொல்லி கூப்பிட்டு இருக்கிறாங்க. என்னோட துணைக்கு நீங்களும் வந்தா எனக்கு உதவியா இருக்கும்".
"அப்படியா மாலதி. எனக்கு பத்து மணிக்கு ரெஸ்டாரண்ட்ல இருக்கணுமே".
"இல்லக்கா. நாம போய்ட்டு உடனே வந்திரலாம். இப்போ மணி இன்னும் ஒன்பது கூட ஆகல. அதுவும் இல்லமா இவள்ட்ட மட்டும் தான் அவளோட மிஸ் வர சொல்லியிருக்கிறாங்க. மத்த பசங்க பேரெண்ட்ஸ் அல்ரெடி மீட் பண்ணி ஆச்சாம். சோ நீங்க பத்து மணிக்கு எல்லாம் வேலைக்கு போயிறலாம்".
"அப்போ சரி மாலதி. இதோ வந்துர்றேன்". சொன்னவர் வீட்டை பூட்டி விட்டு அவருடன் பள்ளியை நோக்கி செல்லலானார்.
##############
மேகத்தை தொட்டு விடும் நோக்கில் உடலை குறுக்கி சிறகை விரித்து பறக்க தயாரானது போல ஒரு வித ஆயத்ததுடன் இருக்கும் பறவையை போல இருந்தது அந்த அறையில் குழுமியிருந்தவர்களின் நிலை. எந்த நேரம் வேண்டுமானாலும் அவர்கள் உழைப்பிற்கான பதில் வரலாம். தத்தம் இடத்தில் அமர்ந்திருந்தாலும் எல்லோர் மனமும் ஒரு சேர அந்த தொலைபேசியிலேயே கவனம் செலுத்திய படி இருந்தது. ஆனால் எதை பற்றிய அக்கறையும் சிந்தனையும் இன்றி ஆராதனாவிடம் தன் காதலை சொல்லிவிட்ட நிம்மதியில் நாற்காலியில் தலை சாய்த்து உதட்டிலே இளநகை மின்ன கனவுலகில் சஞ்சரித்து கொண்டிருந்தான் வர்மா குரூப்பின் சக்கரவர்த்தி ரவி வர்ம குலோத்துங்கன்.
சில சமயம் என்றோ நடந்த உரையாடல்கள் நினைவலையில் எழும்பி இதழ்களை மலர செய்யும் அன்பின் ஆதிக்கம் அதிகமிருந்தால். அதேபோல காதல் சொல்லியதும் அவள் முகத்தில் வந்து போன மாற்றங்களை எண்ணி ரசித்து கொண்டிருந்தான். என்னை பிடிக்கும் அவளுக்கும் அது இவன் மனதுக்கும் தெரியும். ஆனால் ஏனோ ஒத்துக்கொள்ள மறுக்கிறாள். மனதில் என்ன நினைத்து கொண்டிருக்கிறாளோ. அவள் மனம் அறிந்து கொள்ளாமல் இவன் மேற்கொள்ளும் இந்த வாழ்க்கை பயணம் பற்றி எப்படி சொல்வது அவளிடத்தில். முதலில் அவள் இவனை நம்ப வேண்டுமே.
விஷயத்தை சொன்னால் "அட போடா பைத்தியகாரா என்று சொல்லிவிட்டால்..?! உண்மையை சொல்லி அவள் காதலை பெறுவதை விட அவள் எனக்காக... என் ஒருவனுக்காக.. என் மனம் புரிந்து... என்னை ஏற்று கொள்ள வேண்டும். அவள் முழு காதலும் எனக்கு மட்டும் வேண்டும். இந்த ரவியை தான் அவள் நேசிக்க வேண்டும். அடைமொழி கொண்ட ரவியை அல்ல. அவளறிந்த அந்த சாதாரண மனிதன் ரவிக்காக மட்டும். அப்படி ஒரு காதல் தான் எனக்கு வேண்டும். வேறு எந்த காரணத்திற்க்காகவும் அவள் என் காதலை ஏற்று கொள்ள கூடாது". அவனது கருத்தில் உறுதியாய் இருந்தான்.
"கண்டிப்பாக அவளே வருவாள். வந்து என் மீதான காதலை மூச்சு முட்ட கொடுப்பாள். நடந்தே தீரும் என் காதல் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது". அடித்து சொல்லியது அவனது காதல் கொண்ட மனது.
"எக்ஸ்குயுஸ் மீ சார்" கதவை தட்டியபடி தலையை நீட்டி அனுமதி கேட்டாள் ஆராதனா. அவன் மனம் கவர்ந்த தேவதை. கண்களை திறக்காமலே வந்தது அவள் தான் என்று குரலை வைத்தே அறிந்து கொண்டவன் அமர்ந்திருந்த நாற்காலியை அவள் புறமாக சுழற்றியவாறே "யெஸ் கம் இன்" சொல்லியபடி கண்களை திறந்து விழி முழுதும் பெண்ணவளை நிரப்பி கொண்டான்.
ஒரு நொடி அவனது பார்வையில் தடுமாறியவள் எதையும் முகத்தில் காட்டாமல் புன்னகை முகமாக உள்ளே வந்தாள். "குட் மார்னிங் சார். இப்போ நீங்க பிரீயா இருந்தா நாம் ரெஸ்டாரண்ட் சம்மந்தமா சில டிடைல்ஸ் பேசலாமா..?"
" ஓ..பேச..லா..மே.. ஆனால் இப்போ இல்ல. கொஞ்ச நேரம் கழிச்சு. என்னோட காபின்ல. எனக்காக கொஞ்சம் காத்திருக்க முடியுமா மிஸ்.ஆராதனா...??!" கண்கள் வேறு பாஷை பேச இதழ்கள் வேறு சொன்னது. அவன் காதலை புரிந்து கொண்ட மங்கைக்கு இது என்ன புரியாமலா இருக்கும். மெதுவாக உதடுகளை கடித்து கொண்டாள் பெண். தன்னுள் எழும் அந்த பெயர் அறியா உணர்வை அடக்க வழி தேடியது உள்ளம். அவள் தவிப்பை அதிகப்படுத்தாமல் அவனே அதற்கு முற்றுப்புள்ளி வைத்தான் "பிளீஸ் டேக் யுவர் சீட் மிஸ்".
எதுவும் பேசாமல் அமைதியாக அவன் சுட்டி காட்டிய நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். கையில் இருந்த பையில்லில் அவள் கவனம் செலுத்துவது போல குனிந்திருந்தாலும் அவனது பார்வை அவளை கூறு போட்டதை பெண்ணவளால் உணர முடிந்தது. கன்னங்கள் சிவப்பதை அவளால் தடுக்க முடியவில்லை. அந்த கள்வன் அதையும் தான் கண்டு கொண்டானே. மீண்டும் அவன் முகத்தில் புன்னகை மலர்ந்தது. அந்த ஏகாந்த நிலையை கலைத்தது போன்று குரல் எழுப்பியது மேசையில் இருந்த தொலைபேசி.
"ட்ரிங்... ட்ரிங்... ட்ரிங்..."
ரவி கண்ணசைக்கவும் அவனது செக்கரட்டி அதை எடுத்து காதில் வைத்து பேசலானான்.
சுற்றி இருந்தவர்கள் முகத்தில் ஆர்வம் குடி கொண்டது. செக்கரட்டியின் பேச்சை கூர்ந்து கவனிக்கலானார்கள். இவர்களது ஆர்வம் கண்டு ஆருவும் அதில் கவனம் செலுத்தினாள். அவர்கள் பேசிய அந்த குறுகிய வார்த்தைகள் கொண்டு அவளால் எதையும் அனுமானிக்க முடியவில்லை. வெறுமனே பார்த்து கொண்டு இருந்தாள். செக்கரட்டி போன் பேசி முடித்ததும் அவன் வெற்றி குறியை காண்பிக்கும் வகையில் மற்ற நான்கு விரல்களை உள்நோக்கி மடக்கி பெருவிரலை உயர்த்தி காட்டவும் அங்கிருந்தவரகள் "ஓ ஓ" வென ஆர்ப்பரித்தனர். ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்லி கை குலுக்கி கொண்டனர்.
"ஓ. எதுவும் நல்ல செய்தி போல". எல்லோரும் சந்தோஷத்தில் ஆர்பரிப்பதை பார்த்து புரிந்து கொண்டாள் ஆராதனா.
அனைவரையும் கை உயர்த்தி அமர சொன்னவன் தன் ஆறடி உயரத்திற்கும் முழுதாய் எழுந்து நிமிர்ந்து நின்றான் ரவி. முறுக்கேறிய புஜங்கள் உருண்டு திரண்டு அந்த மூடிய ஆடைக்குள்ளும் காட்சியளிக்க ஆணழகனாய் தெரிய அழகாய் புன்னகைத்தான். அனைவரையும் வீழ்த்த இந்த இவனது ஒற்றை புன்னகை போதுமே. அங்கியிருந்த ஆண்கள் உட்பட கொஞ்சம் என்ன அதிகமே அதில் கவர பட்டனர். ஆரதனாவின் மனமும் அவனில் மயங்கி போனதில் ஆச்சரியம் இல்லையே.
"காங்கிராட்ஸ் கைஸ். நூறு கோடி பெறுமானம் மிக்க இந்த ப்ரொஜெக்ட் வின் பண்ணுனதை விட உங்க எல்லோராட சந்தோஷத்தையும் பார்க்கும் போது தான் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இது உங்க எல்லோராட உழைப்பு. இந்த வெற்றிக்கு நீங்க எல்லோரும் தான் காரணம். ஆனால் இது மட்டும் போதாது. இன்னும் இன்னும். உங்களுக்குள்ள இருக்கிற எல்லா திறமையும் வெளியே கொண்டு வாங்க. எனக்கு நம்பிக்கை இருக்கு என்னோட டீம் இதுக்கு மேலயும் டலேண்ட் ஆனவங்க. நான் உங்க எல்லோரையும் நம்புறேன். தாங்க் யு கைஸ்" எல்லோருக்கும் பொதுவாக வாழ்த்தினை சொன்னவன் கண்ணசைவில் ஆருவையும் வெளியே வருமாறு சொல்லி விட்டு வெளியேறினான்.
###########