kalpanaekambaram
அமைச்சர்
அன்றைய இரவு, நீண்ட நேரம் கவினிடம் பேசிக்கொண்டிருந்தவள் அவன் கழுத்தை வளைத்தபடி உறங்கியும் விட்டிருந்தாள். என்ன தான் துணிச்சலாக தன்னை காட்டிகொண்டாலுமே, தாத்தாவின் காலத்திற்கு பிறகான தன் வாழ்க்கையை கற்பனை கூட செய்து பார்க்க விரும்பமாட்டான் கவின். அவன் விரும்பவில்லை என்றாலும், நிதர்சனத்தை உணர்ந்திருந்தான். தாத்தாவும் இல்லாது போனால், அவனுக்கென்று ஒரு வாழ்க்கையே இல்லை என்ற உண்மை பாரமாக அழுத்தும். வெறுமையும், மிதமான பயஉணர்வும் தோண்டிப்பார்க்க முடியாத, அவன் ஆழ்மனதின் அந்தரங்கத்தில் புதைந்தே கிடக்கும்.
மாயா!! அவனுக்காகவே பிறந்து, அவனிடம் வந்து சேர்ந்திருக்கும் தேவதைப்பெண் என்று தான் சொல்ல வேண்டும். கேள்வியாக தொக்கி நின்ற அவன் வாழ்க்கைக்கு, விடையாக வந்து அர்த்தம் கொடுத்தவள்.
‘லவ் யூ அம்மு!!’ அவளிதழ்களை மென்மையாக தீண்டியவன், அரணாக அவளை ஒரு கையால் வளைத்துக்கொண்டான்.
உறக்கம் வராது போக, மாயாவின் மொபைலை எடுத்து துருவிக்கொண்டிருந்தான். குமரித்தீவு என்ற பெயரில் ஒரு போல்டர் விரிய, ‘என்ன தான் எழுதி வச்சிருக்கான்னு பார்க்கலாம்.’ என்ற ஆர்வத்தோடு பைலை திறக்க, ‘இந்திரவிழா’ என்கிற தலைப்பில், விரிந்திருந்த நீளமான எழுத்துக்களை சுவாரஸ்யமாக பார்வையிட தொடங்கினான், கவின்.
**********************************************************************************************
மூதூர் என்று மக்களால் சிறப்பிக்கப்பட்டதும், வணிகத்திற்கு பெயர் போனதுமான, புகார் நகரமே கண்களைகூசும் விதமாக விழாக்கோலம் பூண்டு ஜொலி ஜொலித்துக் கொண்டிருந்தது அன்று. புகாரைக்காணும் ஆவலில், கதிரவனும் கூட வழக்கத்திற்கு முன்கூட்டியே அடர்ந்தமரக்கிளைகளை ஊடுருவிக் கிழித்தபடி நகருக்குள் விரைந்துகொண்டிருந்தான். புள்ளினங்களும் இன்னிசைபாடி புகார் மக்களின், இந்திரவிழா கொண்டாட்டத்தில் தாங்களும் பங்கெடுத்துக்கொண்டது. சித்திரை திங்களில், சித்திரை நட்சத்திரத்தில் தொடங்கி 28 நாட்கள் இந்திரனுக்காக எடுக்கப்படும் விழா. விழா முடிவில் நகரமாந்தர்கள் கடலில் நீராடி இன்பமாக பொழுதுபோக்குவர்.
“வச்சிரக்கோட்டத்து மணம்கெழு முரசம்
கச்சை யானை பிடர்த்தலை ஏற்றி”
கைகளில் வாளேந்திய காலாட்படை, குதிரைப்படை, தேர்ப்படை மற்றும் யானைப்படைகள் புடைசூழ, மூத்த குடியில் பிறந்த ஒருவன், வச்சிரகோட்டத்தில் இருந்த விழா முரசை அலங்கரிக்கப்பட்ட வலிய யானையின் மீதேற்றிவிட்டு, தானும் அமர்ந்து கொண்டான்.
“திருமகள் உறைகின்ற தொன்னகர் வாழ்க!! மழைவளம் சிறக்க!! மன்னனும் ஓங்குக!!” என்று கணீர் குரலில், குறுந்தடியால் முரசைக்கொட்டி அவன் எழுப்பிய வாழ்த்தொலியோடு, மக்களின் ஜெயகோஷமும் சேர்ந்து விண்ணைப்பிளந்தது.
“வீதியெங்கும் தோரணங்களை நாட்டுங்கள்!!”
“பூரண குடங்களும், பொற்பாலிகைகளும், பாவைவிளக்குகளையும் ஒருங்கே பரப்புங்கள்!!”
“ஊர்மன்றங்களில் பழையமணலை மாற்றி புது மணலை பரப்புங்கள்!!”
“தங்கத்தூண்களிலே முத்துமாலைகளை தொங்கவிடுங்கள்!!”
“பாக்குமரங்களையும், வாழைமரங்களையும், கரும்பையும் நட்டு வையுங்கள்!!”
இவ்வாறாக இடைவிடாது முரசை கொட்டி கணீர் ஒலியில், அறிவிப்பு செய்தான். ஐராவதம் கோட்டத்தில் விழாவின் தொடக்கமும், முடிவும் அறிவிக்கப்பட்டது.
Last edited: