kalpanaekambaram
அமைச்சர்
காளிக்கோட்டம்
நள்ளிரவு. நிலவு உச்சியைத் தொட்டிருந்தது. இரண்டு வெண்ணிறபுரவிகள் புழுதியைக்கிளப்பிக்கொண்டு பாய்ந்து பறந்துகொண்டிருந்தது. காளிக்கோட்டத்தின் அருகில் வந்ததும், பறந்தோடிக்கொண்டிருந்த குதிரைகள் மெல்ல மெல்ல நடக்கத்துவங்கியது.
“தளபதி!! நீங்கள் இடப்பக்கம் செல்லுங்கள். இரவு நான்காம் ஜாமத்தில் கோட்டையின் தெற்கு வாயிலில் சிந்திப்போம்.” என்றாள் கன்யாதேவி, குமரித்தீவின் முடிசூடா இளவரசி..
“ஊர்க்காப்பாளரின் மேல் தான் நம்பிக்கையில்லை. என் மீதுமா? கள்வர்களை பிடிக்க நீங்களே வரவேண்டுமா என்ன??” என்றான், பேரரையன் கவினயன், குமரித்தீவின் படைத்தளபதி.
“இல்லை தளபதி!! சில நாட்களாகவே நாட்டில் குழப்பங்களும், கலகங்களும் பெருகிக்கொண்டே இருக்கிறது. கள்வர் கூட்டத்தை ஒழித்தால் தான், மக்கள் நிம்மதியாக இருக்க முடியும்.” எப்போதுமே ஒரு மென்னகையை தாங்கியிருக்கும் அந்தப்பொலிவான, வட்டமுகத்தில் கவலை ரேகை படர்ந்து, இருண்டது.
“வெண்ணாட்டுவேந்தன், தென்னவன் தமிழவேளின் சதிசெயல்களில் இதுவும் ஒன்று..” ஆத்திரத்துடன் மொழிந்தான் கவினயன்.
மெலிதாக சிரித்துக்கொண்டவள், திண்ணிய துகிலைக்கொண்டு முகத்தையும், தலையையும் மறைத்துக்கொண்டாள். அந்த மெல்லிய சிரிப்பே, அனைத்தையும் அவள் தூசு போல உதறிவிட தயாராகிவிட்டாள் எனக் காட்டியது. போர்வீரர்களைப் போல மாறுவேடம் தரித்திருந்தாள்.
“சதிசெயல்களால் நம்மை வீழ்த்திட முடியாது தளபதி!! செல்லுங்கள்.” என்றாள் கட்டளையாக.
குமரித்தீவின் படைத்தளபதியும், ‘ஏனாதிப்பட்டம்’ பெற்றவனுமான பேரரையன் கவினயன், இளவரசி கன்யாதேவியின் கட்டளைக்கு பணிந்து இடப்பக்கம் புரவியை திருப்பினான்.
குமரிநாடு.. குமரித்தீவின் நெடுங்களநாடு, புறமலை நாடு, வெண்ணாடு, தாழைநாடு, குரவ நாடு ஆகிய ஐந்து நிலங்களுக்கும் தலைநகர். ஐந்து சிற்றரசுகளும், கீழ் பணிந்து கப்பம் கட்ட, குமரிநாடு யார் வசமிருக்கிறதோ, அவரே தீவின் பேரரசி.. சட்டதிட்டங்களை விதிப்பவரும் அவரே!
கள்வர்கள், ஆய்ச்சியர்களின் சேரிக்குள் நுழைய வேண்டுமானால், இந்த வழியைக் கடந்து தான் செல்ல வேண்டும். இரையை நோட்டமிடும் புலி போல பதுங்கியிருந்தாள் கன்யா தேவி. காளிகோட்டத்தை சுற்றி புதர்களே இருந்தது. வாடைகாற்று அவள் மேனியை தீண்டி சென்றது.
அவள் எண்ணம் மொத்தமும் பேரரையன் கவினயன் சொன்னதிலேயே நின்றது. இன்னும் சில நாட்களில் அவளுக்கு முடிசூட்டு விழா!! நாடே கொண்டாடித் தீர்த்துக்கொண்டிருக்கிறது.
விந்தை என்னவென்றால் அவள் செங்கோல் தாங்கி அரசாட்சி செய்யப்போவதில் சிலருக்கு பிடித்தமில்லை.
ஹ்ம்ம்..நாளை கூடும் மந்திர ஆலோசனை சபையில் அனைத்து குழப்பங்களும் தீர்ந்துவிடும். கலகங்களை தூண்டிவிடுபவன், வெண்ணாட்டு அரசன், தென்னவன் தமிழவேளைத் தவிர வேறு யாராகவும் இருக்க வாய்ப்பில்லை. அவள் அறியாததா என்ன?
நெஞ்சில் உரமும், கையில் வாளும் இருக்குமட்டும் அவளை யாரும் வீழ்த்துவது எளிதல்ல. ஆனால், அவளையும் கலக்கமடைய வைக்கும் செய்தி ஒன்று காலையில் வந்து சேர்ந்தது.
குமரித்தீவை கைப்பற்றும் நோக்கில், சோழநாட்டு அரசனின் உதவியை நாடியிருக்கிறான் தென்னவன், என்பது தான் அது. இப்படிப்பட்டவர்கள், கைகளில் நாடு சிக்கினால்?? முதலை வாயில் சிக்கிய இரை போல நாட்டின் நிலை பரிதாபகரமாகிவிடும்.
திடீரென்று காளிகோட்டத்தின் அருகே யாரோ இருவர் பேசிக்கொண்டிருக்கும் சலசலப்பு..குதிரைகளின் கனைப்பு சத்தம். ஓசைஎழுப்பாமல் முன்னேறினாள் கன்யா.
சலசலப்பு சண்டையாகி சப்தம் பெருகியது. விஷ்..விஷ்... குறுவாள்கள் காற்றை கிழிக்கும் சத்தம் கேட்டது. அவள் கைகள் அனிச்சையாக இடையில் இருந்த குறுவாளை பிடித்துக்கொள்ள, பாதங்களை சர்வ ஜாக்கிரதையுடனும், வேகமாகவும் முன்னெடுத்து வைத்தாள்.
நிலா வெளிச்சத்தில் அவள் கண்ட காட்சியில் திகைத்துப்போனாள். ஒரு குண்டோதரன் கீழே கிடக்க, அவன் வயிற்றின் மேல் ஒரு நெடியவன் அமர்ந்திருந்தான். இவர்களின் சண்டையை பார்த்தவண்ணம், அலைகழிப்புடன் ஒருவனும் அவர்களுக்கு எதிரே நின்றிருந்தான்.
இப்போது அந்த நெடியவனின் குறுவாளோ, குண்டோதரனின் கழுத்தில் இறங்கப்போவதற்கு அறிகுறியாக அந்தரத்தில் நின்றது.
கண்முன்னே ஒரு கொலைசம்பவம் அரங்கேறப்போகிறது. மின்னலாக செயல்பட்டு அவர்களை நோக்கி ஓடியவள், தன் பலமெல்லாம் திரட்டி அந்த நெடியவனை பின்னிருந்து தாக்கி மண்ணில் விழச்செய்தாள்.
அந்த நெடியவன் திகைத்ததெல்லாம், கணநேரம் தான்.. மறுகணமே கண்களில் கோபக்கனலுடன், வெகுண்டு எழுந்து அவளை தன் கைகளுக்குள் சிறை செய்திருந்தான்.. அவள் முயற்சித்த போதும் விடுவித்துக்கொள்ள முடியவில்லை. உடும்பாய் அவளிடையை பற்றியிருந்தான். அவள் கொஞ்சமும் யோசியாமல் தன் இடையை வளைத்திருந்த அவன் வலியகைகளில் குறுவாளால் கிழிக்க, ‘ஆதன்அறனாளனின்’ கைகளில் ரத்தம் பெருக்கெடுத்து வழிந்து, நிலத்தில் சிதறியது.