"கண்டிப்பா சரி வரும்! நீ என்ன பண்ற! நம்ம வீட்ல இருக்கற எல்லா ஃபோட்டோ ஆல்பத்தையும் எடுத்துகிட்டு வா! சீக்கிரம்!" என்று பேத்தியிடம் கூறிவிட்டு மருமகளைப் பார்த்து,
"சாரதா! எல்லாம் நல்லபடியா நடக்கும்! எனக்கு நம்பிக்கை இருக்கு! நீ தைரியமா இரு!" என்றார்.
மாமியாரின் குரல் கொடுத்த தைரியத்தில் சாரதா எழுந்தாள். மனிஷா தன் பாட்டி கேட்டது போல் வீட்டில் இருந்த பழையது முதல் புதியது வரை இருக்கும் எல்லா ஃபோட்டோ ஆல்பங்களையும் தேடித் தேடி எடுத்து வந்து தன் பாட்டியின் அருகில் வைத்தாள். மணி முற்பகல் பதினொன்றாகியிருந்தது!
"மனு! அவங்க உள்ள வரும்போது நம்ம மூணு பேரும் ஆளுக்கொரு ஆல்பத்த பாத்துகிட்டும் பேசிகிட்டும் முக்கியமா சிரிச்சிகிட்டும் இருக்கணும்! சரியா? அவ கிட்ட எதுவும் பேசக்கூடாது! சாரதா! நல்லா ஞாபகம் வெச்சுக்க! நீ கண்ண கசக்கவே கூடாது! இல்லன்னா உன் ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கையும் அவ்ளோதான்! சொல்லிட்டேன்!"
"சரி அத்த! அவர் வந்ததும் சாப்பாடு ரெடியான்னு குதிப்பார்! நான் போய் கமலம்மாக்கு உதவி பண்ணிட்டிருக்கேன்! மனு! அவங்க வரும்போது என்ன கூப்பிடும்மா!" என்றபடி உள்ளே போனாள் சாரதா!
"சரி சாரும்மா!" என்றாள் மனிஷா!
அனுஷாவும் மனிஷாவும் சாரதா-வெங்கடாசலத்தின் ஆசை மகள்கள்! இருவருக்கும் ஓராண்டு வயது வித்தியாசம்! இவர்களுடைய வீடு சென்னை வேளச்சேரியில் உள்ளது!
வெங்கடாசலம் பெரிய கார்மென்ட் ஃபேக்டரியின் முதலாளி! பல ஆயிரக் கணக்கானவர்கள் இவர்களுடைய ஆயத்த ஆடைத் தொழிற்சாலையில் வேலை பார்க்கிறார்கள்!
அனுஷா கணிணிப் பாடத்தில் பொறியியல் மேற்படிப்பு முடித்துவிட்டு ஓ.எம்.ஆரில் இருக்கும் ஒரு பெரிய கணிணி மென்பொருள் கம்பெனியில் பணிபுரிகிறாள்! கையில் பிடிப்பு போகவே ஒன்றரை லகரம் சம்பளமாக வாங்குகிறாள். அவளுக்கு திருமணமாகி ஆறுமாதங்களாகிறது! தன்னுடன் பணிபுரியும் ப்ரவீணை உருகி உருகி காதலித்து அவனைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று ஒற்றைக்காலில் நின்று திருமணமும் செய்து கொண்டிருக்கிறாள். அனுவுடைய புகுந்தவீடு தரமணியில் உள்ளது!
மனிஷா மருத்துவத்தில் பட்ட மேற்படிப்பு முடித்துவிட்டு அடையாறில் இருக்கும் ஒரு பெரிய மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணிபுரிந்து கொண்டிருக்கிறாள். அவளுக்கும் மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கிவிட்டனர்! அனுஷாவின் புகுந்தவீட்டு சொந்தத்தில் ஒரு பையனை பார்த்து பேச்சு வார்த்தை முடியும் தறுவாயில் உள்ளது!
அநேகமாக நல்ல முடிவு ஏற்படும் என்று அனைவரும் எதிர்பார்த்திருக்கையில், அனுஷா தன் காதல் கணவன் ப்ரவீணிடம் சண்டை போட்டுக் கொண்டு பிறந்தகம் வந்துவிட்டாள். வந்ததோடு நில்லாமல் தனக்கும் தன் கணவனுக்கும் சரிபட்டு வராது! என்று தன் தந்தையிடம் தெரிவித்து விவாகரத்துக்கும் விண்ணப்பிக்க பிடிவாதம் பிடிக்கிறாள்.
இவளுடைய பிடிவாதத்தை மதிக்காமல் புத்தி சொல்லி கணவனுடன் மகளை சேர்த்து வைக்காமல் அவளுடைய தந்தையும் மகள் பேச்சைக் கேட்டு அவளை அழைத்துக் கொண்டு வக்கீலை சந்திக்கச் சென்றுள்ளார்!
அதற்குத்தான் சாரதாவும் வெங்கடாசலத்தின் தாய் நாரயணியும் காலை முதல் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அனுஷா அழகும் அறிவும் நிரம்பப் பெற்ற மங்கை! தலைக்கனமும் அதிகம் உண்டு! பிடிவாதமும் அதிகம் உண்டு!
ப்ரவீணுக்கு தாய் தந்தை, ஒரு தங்கை உண்டு! அளவான அன்பான குடும்பம்! கொஞ்சம் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த குடும்பம்!
அனு வந்த பின்னரும் தன் தாய் தந்தையுடன் கூட்டுக் குடும்பமாக வாழத் தொடங்கினான்! அனுவும் ப்ரவீணும் அன்பாக குடும்பம் நடத்தினார்கள்! அவனுடைய பெற்றோர் பத்மாவும் ஜெகதீசனும் அனுவை தன் மகளாகவேதான் பாவித்தார்கள்!
ப்ரவீண் தன் தங்கை ப்ரீதாவின் பிறந்தநாளுக்கு தன்னுடைய பரிசாக ஒரு தங்க நெக்லெஸ் வாங்கிக் கொடுத்தான்! தன் திருமணத்துக்கு முன்பு எப்படி அன்பாக பரிசளிப்பானோ அதே போல இந்த ஆண்டும் பரிசளித்தான்!
அது அனுவுக்கு பிடிக்கவில்லை! இத்தனைக்கும் ப்ரவீண் தன் தங்கை ப்ரீதாவுக்கு வாங்கும்போது தன் அன்பு மனைவி அனுவுக்கும் அதே போலொரு நெக்லெசை வாங்கியிருந்தான்! தங்கையிடம் பரிசை கொடுப்பதற்கு முன்னரே மனைவியின் கழுத்தில் தன் கையாலேயே அவளுக்கு வாங்கியதை அணிவித்தும் விட்டான்!
ஆனால் அனுவால் இதை ஒப்புக் கொள்ளவே முடியவில்லை! நானும் உன் தங்கையும் ஒன்றா? உனக்கு நான் மட்டும்தான் முக்கியமாக இருக்க வேண்டும்! அவளுக்கு நீ பரிசு வாங்குவது பற்றி ஏன் என்னிடம் கூறவில்லை? அவளுக்கு வாங்கிய பின் எனக்கு வாங்கினாயா? எனக்கு வாங்கும் அளவு அவளுக்கும் வாங்க வேண்டுமா?
நீ இனி இப்படி செய்யக் கூடாது! அதனால் நாம் தனிக் குடித்தனம் போகலாம்! உன் பெற்றோரை, தங்கையை விட்டு என்னுடன் வா! என்று ஒரே பிடிவாதம் பிடித்தாள்.
ப்ரவீணோ, தன்னால் தன் பெற்றோரையும் தங்கையையும் விட்டு வரவே முடியாது என்று கூறி மறுத்துவிட்டான்!
அனுவால் இவனுடைய மறுப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை! தன்னை அவன் அவமானப் படுத்திவிட்டதாக எண்ணினாள்!
அவனிடம் கோபித்துக் கொண்டு பிறந்தவீட்டுக்கு வந்துவிட்டாள். வந்த பின்பும் தன் கணவன் தன்னைக் காண வரவில்லை; சமாதானம் செய்யவில்லை; போன் செய்யவில்லை; என்று பல இல்லைகளை குற்றமாக அடுக்கி விவாகரத்து வரை கொண்டு சென்றுவிட்டாள்!
நாராயணியும் சாரதாவும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவள் தன் பிடிவாதத்தை தளர்த்தினாளில்லை! மனிஷாவும் தன் அக்காவுக்கு எடுத்துச் சொல்ல முயன்றாள்! ஆனால் அனுஷா அவள் சொல்வதை கேட்கத் தயாராக இல்லை!
அவளுடைய பிடிவாதத்தை தளர்த்த அவளுடைய அப்பா வெங்கடாசலமும் இடம் கொடுக்கவில்லை!
ஏதோ தன் மகள் உலகத்துக்கே மகாராணியாகவும் மற்றவர்கள் அவள் அடிபணிந்து நடக்க வேண்டும் என்றும் அப்படிப் பணியாதவர்கள் தேசத் துரோகிகள் என்பது போலவுமே பேசி மகளை ஆதரித்துக் கொண்டிருந்தார்!
வெங்கடாசலமும் அனுஷாவும் வக்கீலைப் பார்த்து ப்ரவீணுக்கு விவாரத்து நோட்டீஸ் அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டு வீடு திரும்பினர்! அவர்கள் வரும்போது மணி பன்னிரெண்டாகிவிட்டது!
அவர்கள் இருவரும் வீட்டுக்குள் வரும்போது நாராயணி, சாரதா மற்றும் மனிஷா மூவரும் திட்டமிட்டபடி ஒன்றாக அமர்ந்து ஆல்பங்களை பார்த்துக் கொண்டும் சிரித்துக் கொண்டுமிருந்தனர்.
இவர்களின் சிரிப்பில் அனுவுக்கு கடுப்பாக இருந்தாலும் அவள் ஒன்றும் பேசாமல் அவர்களினருகே வந்து அமர்ந்தாள்.
வெங்கடாசலம் மனைவியைப் பார்த்து, "ரதி! சாப்பாடு ரெடியா! செம பசி!" என்றார்.
சாரதா இருந்த இடத்தை விட்டு எழாமல், சமையலறையைப் பார்த்து குரல் கொடுத்தாள்.
"கமலம்மா! ஐயா வந்திட்டாரும்மா! சாப்பாடு எடுத்துகிட்டு வாங்க!" என்று கமலம்மாவிடம் கூறிவிட்டு, "இன்னிக்கு நம்ம அனுவுக்கு பிடிச்ச சமையல்! அதுவும் அவளுக்கு பிடிச்ச மாதிரி பஃபே தான்!" என்று கொசுறுத் தகவலை பொதுவாக கூறிவிட்டு தன் கையில் இருக்கும் ஆல்பத்திலிருந்து ஒரு புகைப் படத்தை தன் மாமியாரிடம் காட்டியபடி,
"இத பாரு சாரும்மா! இது அனு டென்த் எக்ஸாம்ல ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்தப்ப எடுத்தது! உனக்கு ஞாபகம் இருக்கா நாநீ! அப்ப அனுக்கு வைரல் ஃபீவர் வந்து எவ்ளோ கஷ்டப்பட்டா? ஆனா அவ்ளோ கஷ்டத்திலயும் செமையா படிச்சி ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்துட்டாளே! அதப் பாத்துதான் நானும் ஒழுங்கா படிக்க ஆரம்பிச்சேன்! அனு யூ ஆர் க்ரேட்! ஐம் ப்ரௌட் ஆஃப் யூ!" என்று மனீஷாவும் தன் பங்குக்கு அனுவைப் பற்றிக் கூறி அனுவை அணைத்து முத்தமிட்டாள்!
ஆரம்பத்தில் கடுப்பாக இருந்த அனுவும் வெங்கடாசலமும் இப்போது ஆர்வமாகி தங்கள் கைகளில் ஆளுக்கொரு ஆல்பத்தை எடுத்து அதில் இருக்கும் புகைப்படங்களைப் பார்த்து பேசத் தொடங்கினார்கள்.
ஒவ்வொரு படமாகப் பார்த்து ஒவ்வொன்றிலும் இருக்கும் அனுவின் படத்தைப் பற்றியும் அவள் ஒவ்வொரு காலகட்டத்திலும் எத்தனை தடங்கல்கள் வந்தாலும் எவ்வளவு போராடி வெற்றிக் கனியை பறித்திருக்கிறாள் என்று பேசி அனுவை புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்தார்கள்.
இப்போது அனுவின் நிச்சயதார்த்த ஆல்பமும் திருமண ஆல்பமும் அவர்கள் கையில் குடியேறியது!
"எம் பேத்தி க்ரேட்தான்! பாரு! தன்னோட லவ்ல கூட எவ்ளோ போரடி ஜெயிச்சிருக்கா!"
"ஆனா அனு! லவ்ல போராடி ஜெய்ச்ச நீ ஏன் லைஃப்ல போராடல!? ஆனா உனக்கு உங்க வீட்ல போராட வேண்டிய அவசியமே இல்லையே! அவங்க எல்லாரும் உன் மேல எவ்ளோ அன்பு வெச்சிருக்காங்க! உனக்கு நெஜமாவே அது புரியலையா?" என்று மனிஷா கேட்டாள்.
இப்போது அனு அமைதியாகிவிட்டாள்.
"ஃபேஸ்புக்ல ஐநூறுக்கும் மேற்பட்ட ஃப்ரண்ட்ஸ் வெச்சிருக்கற உன்னால உன் நாத்தானார் கூட ஃப்ரண்டா நடந்துக்க முடியலையா அனு! அதுவும் அவ குட்டிப் பொண்ணு! இப்பதான் காலேஜ் செகண்ட் இயர் படிக்கறா! அவ கூட போய் நீ சண்டை போட்டுகிட்டு.... உனக்கே இது சில்லியா தெரியல?" என்றுாள் மனு!
"ஷ்! மனு! சும்மா இரு!" என்றார் வெங்கி!
"பாவம் என் பேத்தி அனு! அவளும் என்ன மாதிரி கிழவியானப்றமா தன் பேரன் பேத்தியோட ஆல்பத்த பாத்து இன்னிக்கு நா எப்டி சந்தோஷப்படறேனோ அது மாதிரி அவளால சந்தோஷப்படவே முடியாது! அவ வாழ்க்கைல இதுக்கெல்லாம் குடுப்பினை இல்ல போல! ஹூம்... என்ன செய்ய.... நாந்தான் எஸ்.எஸ்.எல்.ஸி. ஃபெயில்! எனக்கு இந்த கம்ப்யூட்டர் பாடமெல்லாம் பிள்ளைங்களுக்கு சொல்லித்தர தெரியல! ஆனா எம்பேத்தி பெரிய படிப்பெல்லாம் படிச்சவ! அதனால என்னவிட ரொம்ப நல்லா வாழ்ந்து தன்னோட பேரன் பேத்திகளுக்கெல்லாம் பாடம் சொல்லிக் குடுத்து ரொம்ப அறிவாளியான ஜெனரேஷன உருவாக்குவான்னு நெனச்சேன்! எங்க.... நம்ம நெனக்கறதெல்லாம் நடக்குமா என்ன? பாவம்டீ அனு நீ! உனக்கு இன்னும் குழந்தையே வரல! நான் அதுக்குள்ள உன் பேரன் பேத்தி வரைக்கும் கனவு கண்டுட்டேன்! சே! நா ஒரு மக்கு! நீ போம்மா! நாளைக்கு உனக்கு ஸ்டேட்டஸ் கால் இருக்குல்ல! உன் மேரீட்டல் ஸ்டேட்டஸ் பத்தியெல்லாம் யோசிக்க உனக்கு ஏது டைம்? நீ போய் ரெஸ்ட் எடும்மா!" என்று அனுவிடம் நீளமாக பேசிவிட்டு மனிஷாவிடம்,
"மனு! இதெல்லாம் எடுத்துப் போய் உள்ள வெய்! இனிமே அடுத்ததா அனுவோட குழந்தையோட ஆல்பம் வரும்னு நெனச்சேன்! இல்ல... இனி அடுத்தது உன்னோட எங்கேஜ்மென்ட் ஆல்பம்தான்! ஆனா அந்தப் பையன் பரத் வீட்ல உன்ன ஏத்துப்பாங்களா? சரி விடு! வேற மாப்ள பாத்துக்கலாம்! ஆனா உனக்கு அந்தப் பையன் பரத்தை ரொம்ப பிடிச்சிருக்குன்னு நீ சொன்னியே! ... இல்ல வேணாம்..... ரொம்ப பிடிச்சிருக்குன்னு அனுவும்தான் சொன்னா... ஆனா இப்ப அவருக்கும் எனக்கும் சரி வராதுன்னு சொல்லிட்டாளே! அது மாதிரி உனக்கும் எதுனா.... சே! நா ஒருத்தி.... நீ போம்மா அனு.... "
அத்தனையையும் கேட்ட அனுஷாவுக்கு தன்னை தன் பாட்டி பளார் பளார் என்று அறைந்த மாதிரி இருந்தது!
தான் எவ்வளவு முட்டாள்தனமாக நடந்து கொண்டுள்ளோம் என்று புரியத் தொடங்கியது! ஆனாலும் இன்னும் அவள் தன் ஈகோவை விடவில்லை! குழம்பிய மனதுடன் தன்னுடைய அறைக்குச் சென்றாள்.
அவள் அவ்விடம் விட்டு அகன்றதும் வெங்கடாசலம் தன் அம்மாவிடம் பாய்ந்தார்!
"என்னம்மா! ஒரேடியா அனுவ புகழற மாதிரி புகழ்ந்து கடைசில இப்டி கீழ போட்டு மிதிக்கறீங்க?"
தன்னுடைய அறைக்குச் சென்ற அனுவின் காதிலும் சரி, மனிஷாவின் காதிலும் சரி, இவர்கள் பேசுவது தெளிவாக விழுந்தது!
"யாருடா மிதிச்சா? நானா? இல்ல நீயா?"
"நானா?.... அவ இந்த வீட்டு ப்ரின்ஸஸ்ம்மா!"
"ஏண்டா நா தெரியாமதான் கேக்கறேன்! அனு இந்த வீட்டுக்கு ப்ரின்ஸஸ்ன்னா அந்த வீட்டுக்கு குயின்! அது ஏன் உன் மரமண்டைக்கு புரிய மாட்டேங்கிது?"
"அந்த வீட்டு குயின்னு சொல்றீங்க! ஆனா அவள யாரும் மதிக்கலயே!"
"ஏன் மதிக்கல.... மதிக்காமதான் மாப்ள அவளுக்கு நெக்லெஸ் வாங்கி தந்தாரா?"
"அது... அவ லட்ச லட்சமா சம்பாதிக்கறா... அவ காச எடுத்து அவளுக்கே வாங்கி குடுத்தா அவளுக்கு கோவம் வராதா?"
"அவ காசில வாங்கினதுன்னு உனக்குத் தெரியுமா? உம் பொண்ணு சொன்னாளா அது அவ காசில வாங்கினதுன்னு!"
"பின்ன வேற எப்டி வாங்கினானாம் அந்தப்பய..."
"டேய்! வேணாம்! வார்த்தைய விடாத! அவர் நம்ம வீட்டு மாப்பிள்ளை! மரியாதை!"
"சரிம்மா! அவர் அனு காசில வாங்கலன்னே வெச்சுப்போம்! ஆனா தன் தங்கைக்கு வாங்கப் போறேன்னு அனுகிட்ட ஏன் சொல்லல!"
"எதுக்கு சொல்லணும்? இல்ல எதுக்கு சொல்லணும்ங்கறேன்? அவர் தன் தங்கைக்கு தன்னோட சம்பாத்தியத்தில வாங்க யாரோட பர்மிஷன் வேணும் அவருக்கு!? நீ அப்டிதான் உன் தங்கைக்கு வாங்கும் போது உம்பொண்டாட்டிகிட்ட சொல்லிட்டு வாங்கறியா? இல்ல தங்கைக்கு வாங்கும் போதெல்லாம் உன் பொண்டாட்டிக்கும் நகை வாங்கிப் போடறியா?"
"......" பதிலில்லை!
"ஆனா அவர் தன் தங்கைக்கு வாங்கும் போது நம்ம அனுவுக்கும் வாங்கியிருக்கார்!"
"ஏம்மா? நம்ம அனுவும் அவர் தங்கையும் ஒண்ணா?"
"ஆமா! இந்த வீட்டுக்கு அனுவும் மனுவும் ப்ரின்ஸஸ்ன்னா அந்த வீட்டுக்கு அந்தப் பொண்ணு ப்ரீதா தானே ப்ரின்ஸஸ்! அப்ப ரெண்டு பேரும் சமம்தானே! அவர் நம்ம அனுவ உன்னவிட அதிகமா நேசிக்கறார்! உன்னவிட மதிப்பா வெச்சிருக்கார்! புரிஞ்சுக்கோ!"
"இது .... ஒத்துக்க முடியாது!"
"டேய் மாங்கா மடையா! நீ எம்மருமக சாராதாக்கு இத்தன வருஷத்தில மொத்தமா ஒரு இருபது பவுன் நகை பண்ணி போட்டிருப்பியா?"
"ம்... இருக்கலாம்...."
"அவளுக்கு முதல் முதலா எப்ப நகை வாங்கிப் போட்ட... உன் சொந்த சம்பாத்தியத்தில... என் புருஷனும் நானும் என் மருமகளுக்கு போட்டத கணக்கில சேக்காத...."
"அது.... ஞாபகம் இல்லம்மா......"
"நா சொல்றேண்டா.... நம்ம அனுவோட மூணாவது பிறந்த நாளுக்கு அவளுக்கு செயின் வாங்கும் போது சாரதாக்கு நீ முதல் முதலா ஒரு செயின் வாங்கிப் போட்ட! அதுவும் சின்னதா மெல்லிசா..... ரெண்டு பவுன்ல.... அதாவது.... உனக்கு கல்யாணமாகி, குழந்தை பிறந்து அதுக்கு மூணு வயசாகும்போது..... அதாவது கல்யாணமாகி கிட்ட தட்ட நாலு வருஷம் கழிச்சி.... இத்தனைக்கும் நீ பரம்பரை பணக்காரன்! சொத்து சுகம் எக்கசக்கம்! சாரதாவ உனக்கு பிடிச்சுதான் கல்யாணம் பண்ணிகிட்ட.... யாரும் உன்ன கட்டாயப்படுத்தி இவ கழுத்தில தாலி கட்ட வெக்கல.... அப்படியிருந்தும் நீ அவளுக்கு நாலு வருஷம் கழிச்சிதான் நகை பண்ணி போட்டிருக்க! ஆனா உன் மாப்பிள்ளை.... கல்யாணம் பண்ணி ஆறு மாசத்துக்குள்ள தன் சொந்த சம்பாத்தியத்தில உன் மகளுக்கு ஆறு பவுன்ல நெக்லெஸ் பண்ணி போட்டிருக்கார்! அதுவும் அவர் தன் தங்கைக்கும் மனைவிக்கும் நடுல எந்த பாரபட்சமும் பாக்காம இத பண்ணியிருக்கார்! ஒரேயடியா அவர் இவ்ளோ செலவு செய்யற அளவுக்கு பரம்பரை பணக்காரரும் கிடையாது! அப்ப அவர் உன் மகள மதிப்பா பாத்துக்கறாரா இல்லையா? அன்பா நடத்தறாரா இல்லையா? சொல்லுடா? கேணக்கிறுக்கா!?!?"
வெங்கடாசலம் திணறினார்!
"பெத்த பொண்ணு, தன் புருஷனோட சண்டை போட்டுகிட்டு வந்தா நல்ல புத்தி சொல்லி பொண்ணை மாப்ளையோட சேத்து வெக்கறத விட்டுட்டு.... லூசு மாதிரி டைவோர்ஸுக்கு அப்ளை பண்ணிட்டு வந்திருக்கியே! நீயெல்லாம் என்ன அப்பன்?"
"......."
"யாருக்கு டைவோர்ஸ் வாங்கித் தரணும்? பொண்டாட்டிய கொடும படுத்தறவன்... செக்ஸ் டார்ச்சர் குடுக்கறவன்.... அடிமை மாதிரி நடத்தறவன்.... இந்த மாதிரி ஆம்பிளைங்க கிட்டேந்து அந்த பாதிக்கப்பட்ட பொண்ணுங்கள காப்பாத்தறதுக்கு டைவோர்ஸ் யூஸ் பண்ணனும்.... ச்சும்மா... இது மாதிரி சில்லி ரீசன்கெல்லாமா டைவோர்ஸ் யூஸ் பண்றது? அறிவில்ல உனக்கு? படிச்சவன்தானே நீ? பெரிய கம்பெனி நடத்தி என்ன பிரியோஜனம்? பொண்ணு வாழ்க்கைல மண்ணள்ளி போட்டுட்டு வந்து நிக்கற? இனிமே எப்டி அவ நிம்மதியா இருப்பா? இல்ல அடுத்த பொண்ணுக்கு எப்டி கல்யாணம் நடக்கும்?"
"....."
"சரி! சொந்த புத்திதான் இல்ல! எங்க சொல் பேச்சாவது கேட்டியா? மண்டு! மண்டு!"
தன் மனதில் உள்ள ஆற்றாமை யாவற்றையும் தன் மகனின் மீது ஆத்திரமாக கொட்டித் தீர்த்தார் நாராயணி!
வெங்கடாசலம் நிதர்சனத்தை உணர்ந்து பேச்சிழந்து நின்றார்! சாரதாவோ செய்வதறியாது நின்றாள்!
இது எல்லாம் கேட்டிருந்த அனு அழுகையுடன் ஓடிவந்து தன் பாட்டியை கட்டிக் கொண்டு கதறினாள்.
"நாநீ! சாரி நாநீ! நா தப்பு பண்ணிட்டேன்! நா தப்பு பண்ணிட்டேன் நாநீ! இப்ப என்ன பண்றது நாநீ! நா ப்ரவீணோட சேந்து வாழறேன்! அவர்கிட்ட மன்னிப்பு கேக்கறேன் நாநீ! அவர் என்ன மன்னிக்கலன்னா அவர் கால்ல விழுந்தாவது என்ன ஏத்துக்க சொல்றேன் நாநீ! என்ன மன்னிச்சுடு நாநீ" என்று அழுது புலம்பினாள்.
நாராயணி தன் பேத்தியின் கண்களை துடைத்துவிட்டார்.
"கிளம்பு! இப்பவே உன் புருஷன் வீட்டுக்கு கிளம்பு! போ! முகத்த கழுவி பொட்டு வெச்சுகிட்டு வா!" என்று கூறி பேத்தியை அனுப்பிவிட்டு, மகனைப் பார்த்து,
"இங்க பாருடா! அனுவ கூட்டிட்டு போய் அவ புருஷன் வீட்ல விட்டுட்டு வர! அதுவும் மாப்ளை கிட்டயும் சம்பந்திங்க கிட்டயும் அந்தப் பொண்ணு ப்ரீதா கிட்டயும் மன்னிப்பு கேட்டுட்டுதான் வரணும்! புரிஞ்சிதா? சாரதா! கௌம்பும்மா! போகும் போது மஞ்சள், குங்குமம், வெத்தல பாக்கு பழம், தேங்கா, பூ, கொஞ்சம் ஸ்வீட்டு எல்லாம் வாங்கிட்டு போ!" என்றார்!
அனு ஐந்து நிமிடங்களில் தயாராகி ஓடி வந்தாள்! மூவரும் வீட்டின் வெளியே வரவும், ப்ரவீணும் அவன் குடும்பமும் வீட்டு வாசலில் வந்து இறங்கவும் சரியாக இருந்தது!
வாசலில் ப்ரவீணைப் பார்த்த அனு, ஓடிப் போய் அவனை அணைத்துக் கொண்டு அழுதபடி மன்னிப்பு கோரினாள்.
அவளுடைய வக்கீலிடமிருந்து நேரடியாகவே விவாகரத்து நோட்டீஸ் கிடைக்கப் பெற்றவன், அதைக் கண்டு மிகுந்த கோபத்துடன் அதில் கையொப்பமிட்டு அவள் முகத்தில் விட்டெறியவே அங்கு வந்திருந்தான்! ஆனால் தன்னைக் கண்டதும் ஓடி வந்து மன்னிப்பு கேட்கும் அனுவை சத்தியமாக அவன் எதிர்பார்க்கவில்லை! அவளுடைய கோபத்தை விட்டுவிட்டு நடுத்தெரு என்றும் பாராமல் தன்னிடம் அழுது மன்னிப்பு கேட்கும் மனைவியைக் கண்டு அவன் நெகிழ்ந்துதான் போனான்!
"ஹேய்! அனு! இல்லடா! இல்ல! நீ அழாத! என்ன நீ புரிஞ்சிகிட்டாலே போதும்! எனக்கு உன் மேல கோவம்லாம் இல்லம்மா! நானும் சாரி சொல்றேன்! நானும் நகை வாங்கப் போறத பத்தி உன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியாருக்கணும்தான்! மடையன் மாதிரி நடந்துகிட்டேன்! விடுடா! சாரியெல்லாம் வேணாண்டா! நமக்குள்ள என்ன சாரி வேண்டியிருக்கு! விடுடா!" என்று கூறி அவளை அணைத்து ஆறுதல்படுத்தினான்!
இந்த ஒரு விஷயமே ப்ரவீணின் மீது மதிப்பெழச் செய்ய, வெங்கியும் தன் மருமகனிடம் மன்னிப்பு கேட்டார்!
இதைக் கண்டபடியே காரிலிருந்து வெளியே வந்த ஜெகதீசன் தன் கையிலிருந்த விவாகரத்து நோட்டீஸை கிழித்துப் போட்டார்!
அனு ஓடிச்சென்று தன் மாமியார் மாமனார் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க, அவர்கள் அவளை அணைத்து ஆறுதல்படுத்தினர்.
அனைவரையும் வீட்டுக்குள் அழைத்து வந்தனர் நாராயணியும் சாரதாவும்!
"சாரி ப்ரீதா! வெரி சாரிம்மா! நான் ஏதோ .... கோவத்தில.... வெரி சாரி!"
"அண்ணி! விடுங்கண்ணி! நா உங்கள தப்பாவே நெனக்கல! உங்க இடத்தில யார் இருந்தாலும் இப்டிதான் நடந்துகிட்டிருப்பாங்க! நீங்க கோபப்பட்டது நியாயம்தான்! ஏன்னா, உங்ககிட்ட சொல்லியிருந்தா, நீங்க இன்னும் நல்ல ரிச்சான டிசைனா வாங்கியிருந்திருப்பீங்க! அண்ணன், தானே போய் தனியா செலக்ட் செஞ்சிதுல்ல! அதான் சப்ப டிசைனா வாங்கிடுச்சு!" என்று கூறினாள்!
"அடிப்பாவீ!" என்று ப்ரவீண் அங்கலாய்த்தான்.
"அதுக்கென்ன ப்ரீதா! நாம நெக்ஸ்ட் வீக் போய் நல்ல சூப்பர் டிசைனா செலக்ட் செய்யலாம்! இப்ப ஃபெஸ்டிவல் ஆஃபர் வேற வந்திருக்கு! செம்ம கலெக்ஷன்ஸ் இருக்கும்! நம்ம போறோம்! ஒரு கலக்கு கலக்கறோம்! ஓகே!" என்றாள் அனு!
"அனு! என்ன மறந்துட்டியே! எனக்குடீ!" என்று மனு கேட்க,
"கவலப்படாத மனு! நா பரத்துக்கு ஃபோன் பண்றேன்! அவர் வந்து வாங்கித் தருவார்டீ உனக்கு!" என்றாள் அனு!
"ஆமா மனு அண்ணி! பரத்தண்ணா சூப்பரா செலக்ட் செய்வாரு! ப்ரதீப்பண்ணா மாதிரி மொக்கையா செலக்ட் பண்ண மாட்டாரு!" என்று கூறி சிரிக்க,
"ஐயோ! மூணு வாலுங்களும் ஒண்ணு சேந்துட்டீங்களா? இனிமே எனக்கு இங்க வேல இல்ல போல?" என்று ப்ரவீண் கேட்க,
"ப்ரவீண்! உனக்குதாண்டா முக்கியமான வேல இருக்கு! ஏன்னா, நீதானேடா பில் பே பண்ணனும்!" என்று கூறி அனு சிரிக்க, கூடச் சேர்ந்து ப்ரீதாவும் மனிஷாவும் சிரித்தனர்!
"ஆஹா! வாயக் குடுத்து மாட்டிகிட்டியேடா ப்ரவீண்!" என்று அவன் சந்தோஷமாய் குறைபட,
எல்லாரும் சத்தமாகச் சிரித்தனர்!
அதைக் கண்ட நாராயணியும் சாரதாவும் எல்லையில்லாத நிம்மதியடைந்தனர்!
பின்குறிப்பு: கமலம்மா எடுத்து வந்த ஜூஸ் தம்ப்ளர்களை எல்லாருக்கும் கொடுத்து வரும்போது மனு தன் பாட்டியின் காதருகே குனிந்து,
"சூப்பர் நாநீ! உன் ப்ளான் வொர்க் ஔட் ஆயிடுச்சு! சூப்பர்!" என்று சொன்னதையோ அதற்கு நாராயணி இல்லாத காலரை தூக்கிவிட்டுக் கொண்டு கெத்து காட்டியதையோ அனுஷா பார்த்திருக்க வாய்ப்பில்லை!
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.