அவனும் நானும் அனலும் பனியும்..11(2)
காலையில் படகு இறக்கி விட்டதும், நண்பர்கள் குழாம் அவர்களை சூழ்ந்து கொண்டு கிண்டல் செய்தது..
மாறனும் பதிலுக்கு
"வாங்கடா!கல்யாணம் ஆகியும் பேச்சுலர்ஸ்! நீங்க படகில் போட்ட ஆட்டத்தால.. இங்கிருந்த எல்லா படகும் ஆட்டம் கண்டுடுச்சி! என்றான் மகேந்திரன் அண்ட் கோ வினை பார்த்து…
"அடடா! படகு தண்ணியில மிதக்க... நாங்க அதுக்குள்ள தண்ணியில மிதக்க... பாட்டு என்ன? ஆட்டம் என்ன? வருஷத்துக்கு ஒரு தடவை இப்படி ரெண்டு நாள் கூட்டிட்டு வந்தா… பத்து என்னடா… இருபது பிராஜக்ட் கூட செய்வான் இந்த மகி" என மகேந்திரன் தன்னை தானே சிலாகித்து சொன்னான்..
அவனின் பேச்சை ஆமோதித்து சிரித்து மகிழ்ந்தனர் அனைவரும்..
ஆனால் சுபாவின் கண்களோ பாரதியை அளவிட்டு கொண்டிருந்தது! இவள் முகத்தில் எந்த வித சிவப்பும் இல்லை, ஜொலிப்பும் இல்லை! நேற்று எதுவும் நடக்கவில்லையோ.. என குரூரமாய் சந்தோசப்பட்டாள் அவள்..
அடுத்த அவர்கள் பூவர் ஐலன்ட்க்கு சென்றனர், இது கேரளாவின் மிக அழகான நதியும் கடலும் கலக்கும் இடம், பூவாறு வழியே படகில் கூட்டிச் சென்று அங்கு இருக்கும் கோல்டு சாண்ட் பீச்சில் இறக்கி விடுவார்கள், அதன் ஒரு புறம் அமைதியான நதி நீரும் மறுபுறம் ஆக்ரோஷமான கடலும் இருக்கும், படகு செல்லும் வழியில் மிதக்கும் வீடுகளும், மிதக்கும் ஹோட்டலும் இருக்கும் , பணத்தை தண்ணியாக செலவழிக்க முடிந்தவர்கள், அந்தத் தண்ணீரில் மிதக்கும் வீடுகளில் தங்க முடியும், அந்த பீச்சில் ஒரு மணி நேரம் சுற்றிப் பார்க்கவிட்டு, பின் திரும்ப நதி வழியே கூட்டி வந்து இறக்கி விடுவார்கள், அந்த கோல்டு சாண்ட் பீச்சில் உலாவிக் கொண்டிருந்தது அந்த கேங்க்.. அங்கே கடலின் ஆழம் அதிகம் என்பதால் ஒரு எல்லைக்கு மேல் மக்களை அனுமதிக்காதவாறு கயிறு கட்டி சிவப்பு கொடி நட்டு இருந்தனர், கயிற்றுக்கு மறுபுறம் இருந்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர் அனைவரும், அங்கே சில போட்டோகிராஃபர்கள் போட்டோ எடுத்த உடனேயே பிரிண்ட் போட்டு தந்து கொண்டிருந்தனர், என்ன தான் விதவிதமாய் அலைபேசியில் படமெடுத்தாலும், இப்படி போட்டோகிராபர் மூலம் எடுப்பது அலாதியானது தானே! மகேந்திரன் அங்கே இருந்த ஒரு அழகான மலையாள பெண்ணிடம் தனக்கு தெரிந்த மலையாள படங்களின் வசனங்களை எல்லாம் சொல்லி, கடல் முன்னே கடலை போட்டுக் கொண்டிருந்தான்..
உமா, ராதிகா, சுபா மற்றும் அங்கிருந்த எல்லா பெண்களும் சேர்ந்து போட்டோ எடுக்க, பாரதியும் அவர்களோடு சேர்ந்து கொண்டாள், அவர்கள் போட்டோ எடுத்துக் கொண்டிருக்க.. மாறன் அவளுக்கென ஸ்னாக்ஸ் வாங்கிக் கொண்டிருந்தான்..
திடீரென "ஐயோ பாரதி!" என்ற சத்தம் கேட்க, நிமிர்ந்து பார்த்த மாறனின் கண்களுக்கு, போட்டோ எடுத்துக் கொண்டிருந்த பெண்கள் நிலை தடுமாறி விழுந்து கொண்டிருந்தது தெரிந்தது! ஒரு பெரிய அலை, அவர்கள் மீது மோதி சாய்த்து இருந்தது, மாறனின் கண்கள் அவசரமாய் பாரதியை தேட..அலையில் சிக்கி கடலுக்குள் சென்று கொண்டிருந்தாள் அவள்..
மாறனின் இதயம் ஒரு நொடி துடிக்க மறந்து மரத்துப்போனது , கண் பார்க்கும் காட்சி மூளையில் பதிய மறுத்தது, பின் சுதாரித்தவன், பாரதி என கத்திய படி வேகமாய் அவளை நோக்கிச் சென்றான், அவளைப் பிடித்து அவன் இழுக்க.. அடுத்த அலை ஒன்று அவன் மேல் மோதி அவனையும் சேர்த்து இழுத்துச் சென்றது, ஆனால் பிடித்துக்கொண்ட பாரதியின் கையை மட்டும் மாறன் விடவேயில்லை,இருவரும் கரையேரப் போராட , அதற்குள் ஆபத்து என்றால் உதவவென அங்கிருந்த நீச்சல் வீரர்கள் வந்து அவர்களை மீட்டனர், மூச்சுவாங்க நின்ற பாரதியின் தோளைத் தொட்டு ஆதி முதல் அந்தம் ஆராய்ந்தவன், அவளுக்கு ஒன்றும் இல்லை என்று தெரிந்த பின் தான் சீராக மூச்சு விட்டான், அவளை தோளோடு அணைத்துக் கொண்டான், தாறுமாறாய் துடித்த அவன் இதயத்தின் சத்தத்தை அவளால் உணர முடிந்தது, எல்லோரும் அவர்களை சூழ்ந்து கொண்டு ஆறுதல்படுத்த, கொஞ்சம் நிதானத்துக்கு வந்த மாறன் அவர்களிடம் ," கைஸ் எங்களுக்கு ஒண்ணுமில்லை! ப்ளீஸ் நீங்க போய் என்ஜாய் பண்ணுங்க, பத்து நிமிஷத்துல நாங்க வந்து ஜாயின் பண்ணிக்கிறோம்!" எனப் பேசி அவர்களை அனுப்பிவிட்டு, மணலில் தன் மனைவியோடு அமர்ந்து கொண்டான்..
என்ன விக்ரமா? வேதாளம் கடலோடு போகுதுன்னா அப்படியே விட வேண்டியதுதானே? எதுக்கு காப்பாத்தின? இப்ப அது உன் முதுகில் ஏறி உட்கார்ந்துக்குமே, என்ன செய்யப் போற? பாரதி அப்பாவியாய் அவனிடம் கேட்க..
என் முதுகுல உட்கார்ந்தாலும், முருங்கை மரத்தில ஏறினாலும் வேதாளம் இந்த விக்ரமாதித்தன் கூடத்தான் இருக்கணும்!l என்று ஒரு மாதிரியான குரலில் சொன்னான் மாறன், அந்தக் குரலின் தன்மையை அவளால் இனம்காண முடியவில்லை, இருந்தாலும் அந்தக் குரல் அவளைக் கட்டிப் போட்டது..
தாங்கள் வாடி இருந்தால் நண்பர்களும் வாடிப் போவார்கள் என்பதை உணர்ந்தவர்கள், வரவழைக்கப்பட்ட உற்சாகத்துடன் அவர்களோடு இணைந்து கொண்டனர், திரும்ப போட்டில் வரும்போது பாரதியின் கைகளோடு, தன் கைகளை கோர்த்துக் கொண்டான் மாறன்..தன் தோள் மேல் இருந்த லைஃப் ஜாக்கெட்டை விட,தன் விரலோடு கோர்த்து இருந்த அவனின் விரல்களில் விரவிக் கிடக்கும் பாதுகாப்பு உணர்வை பரவசத்தோடு உணர்ந்தாள் பாரதி..
திருச்சூரில் மிருகக்காட்சி சாலையை சுற்றி பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.. கம்பி வேலிக்கு அப்பால் நின்ற புலியை பார்த்துக்கொண்டிருந்த சுபாவை கண்டதும், மாறனை தண்ணீர் பிடிக்க அனுப்பி விட்டு அவளை நோக்கி வந்தாள் பாரதி..
"உனக்கு தெரியுமா சுபா, இதைவிட கொடூரமான மிருகங்கள் கூண்டுக்கு வெளியே இருக்குது! இப்ப கூட அதுல ஒண்ணு கம்பிக்கு வெளிய நிற்கிறது! என்று நக்கலாக சொன்னாள் பாரதி
ஏய் நீ யாரைச் சொல்ற? மிடுக்காக கேட்டாள் சுபா
உன்னைத்தான் சொல்றேன் புரியலையா? காட்டுல இருக்கற மிருகம் கூட தனக்கு தீனி வேண்டும் என்றுதான் இன்னொரு மிருகத்தை கொல்லும், ஆனா இங்க மனிதன் என்கிற பெயரில் இருக்கிற சில மிருகங்கள் தன்னுடைய இகோவுக்கு தீனி போட உயிரை எடுக்குற அளவுக்கு துணிகிறார்கள்"! என்றாள் சுபாவை தீர்க்கமாய் பார்த்தபடி..
ஏய் இதை எதுக்கு என்கிட்ட சொல்ற? என்று கோபமாய் கேட்டாள் சுபா
நீ தானே போட்டோ எடுக்கும்போது, அலை வேகமாய் வருவதைப் பார்த்து என்னைத் தள்ளிவிட்ட... கூட்டமா இருந்தா அது தெரியாதுன்னு நினைச்சியா? அப்படி என்ன வன்மம் உனக்கு? எனக்கு ஏதாவது ஆகி இருந்தா, என் உயிர் போயிருந்தா, உன்னால திருப்பி தர முடியுமா?...கோபமாய் கேட்டாள் பாரதி..
தன் முகத்திரை கிழிந்ததும், குரூரமான தன் நிஜ முகத்தை காட்டினாள் சுபா
நீ மாறனை எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்ட? நான் அவன் மேல அவ்வளவு ஆசை வச்சு இருந்தேன்! ஆனா அவன் என்னை மதிக்கவே இல்லை! ஆனா உன்கிட்ட அப்படி கொஞ்சி குலாவுறான், அதனால்தான் கோபத்துல அப்படி செஞ்சேன்!
பார்த்தியா! நீயே சொல்லிட்ட ஆசைன்னு….ஆசை வேற.. காதல் வேற... ஒண்ணு புரிஞ்சுக்க.. உனக்கு அவர் மேல இருப்பது காதல் இல்லை! ஒரு கிரஷ் அவ்வளவுதான், அவரைவிட ஒரு பெட்டர் ஆப்ஷன் உனக்கு கிடைச்சா அந்த கிரஷ் போயிடும் ,உண்மையான காதலுக்கு யாரையும் காயப்படுத்த தெரியாது! உன்னை நீ மாத்திக்க... தேவையில்லாம எங்க வாழ்க்கையில இனிமே குறுக்க வராதே! என்று குரல் உயர்த்தி சொன்னாள் பாரதி
ஏன் குறுக்கே வந்தால் என்ன பண்ணுவ?..
அவளருகே நெருங்கி வந்த பாரதி," நீ போட்டோ எடுக்கும்போது தானே என்னை தள்ளிவிட்ட... நீ தள்ளி விட்டதும் போட்டோல கவர் ஆகிடுச்சு! அந்த போட்டாவை நான் போட்டோகிராபர் மூலமா பிரிண்ட் போட்டு வாங்கிட்டேன், நீ இதுக்கு மேல ஏதாவது பண்ணினா, நான் அதை வெச்சு போலீசுக்கு போவேன்! போலீஸ் உன்னை சும்மா விடுமா? ஆதி முதல் அந்தம் பிரிச்சு மேஞ்சிடுவாங்க! உனக்கு அது தேவையா? ஹைடெக் சலரி,
ஹை பை லைஃப் வாழ்ந்துட்டு இருக்க நீ, வோய் பை கூட இல்லாத செல்லுல கஷ்டப்படவேண்டும்! யோசிச்சு பாரு! நான் வரட்டா... என தெனாவெட்டாய் சொல்லி விட்டு, மாறன் அவளை நோக்கி வருவதைக் கண்டதும், அவனிடம் போக எத்தனித்தவள், சுபாவிடம் திரும்பி ," நீ பார்க்க சூப்பரா இல்லைனாலும்... கொஞ்சம் சுமாரா இருக்க... இந்த வில்லத்தனத்தை எல்லாம் விட்டுட்டு எவனையாவது கல்யாணம் பண்ணிக்கிற வழியை பாரு... இல்லன்னா கோர்ட்டு! கேசு! ஜெயிலு! ஜெயிலில மயிலு! என இருக்க வேண்டியதுதான் என்று, காசு, பணம் துட்டு மணி, மணி, படப் பாடலின் பாணியில் அதையே பாடிக் கொண்டு போனாள்..
போகும் அவளை ஏதும் செய்ய முடியாத கோபத்தில் ,ஒரு கல்லை சுபா உதைக்க.. அவள் கால் நகம் கிழிந்து ரத்தம் கொட்டியது..
உண்மையான உறவை பிரிக்க சதி செய்தால் ரத்தம் வழியத் தானே செய்யும்…
பனி பொழியும்!!