• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இரண்டாம் பாகம் : மழை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yazhini1

Moderator
Staff member
Joined
Nov 8, 2019
Messages
228
Reaction score
23
"மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ?

காற்றுஞ் சிலரை நீக்கி வீசுமோ?" - கபிலர்


2.1. வெள்ளம் '


சாவித்திரிக்கும் ஸ்ரீதரனுக்கும் கல்யாணம் நடந்த வருஷத்தில், அந்தப் பிரதேசத்தில் வெகு நாள் வரையில் மழை பெய்யவில்லை.

புரட்டாசிக் காய்ச்சல் அந்த வருஷத்தைப் போல் கொடுமையாக எப்போதும் இருந்ததில்லையென்று ஜனங்கள் சொன்னார்கள். ஐப்பசி பிறந்து பத்துத் தேதி ஆயிற்று. அப்படியும் மழை இருக்கிற இடமே தெரியவில்லை.

குடமுருட்டியிலும் ஜலம் குறைந்துவிட்டபடியால், தண்ணீர் மடைச் சண்டைகள் அதிகமாயின.

"சாமி! இந்த மாதிரி இன்னும் நாலு நாள் காய்ஞ்சால் இந்த வருஷம் பஞ்சந்தான். இப்பவே, விளைச்சல் ஒண்ணுக்குப் பாதிதான் எதிர்பார்க்கலாம்" என்றான் நல்லான்.

"இப்படியே இருந்துவிடாதப்பா! பகவான் கிருபை பண்ணுவர். மழை சீக்கிரம் வரும்" என்றார் சம்பு சாஸ்திரியார்.

"மழை எங்கே வரப் போறதுங்க, இந்த ஐயமாரு பண்ணுகிற அக்கிரமத்திலே!" என்றான் நல்லான். ஊரில் அந்த வருஷம் மிராசுதார்களுக்கும், குடியானவர்களுக்கும் மனைக்கட்டுச் சண்டை ஏற்பட்டு, கோர்ட்டில் கேஸ் நடந்து கொண்டிருந்தது. இந்தக் கோபத்தைத்தான் நல்லான் அப்படி வெளியிட்டான்.

"அப்படிச் சொல்லாதே, நல்லான்! ஔவையார் என்ன சொல்லியிருக்கா? 'நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை' அந்த மாதிரி, நீதான் நல்லானாச்சே, உனக்காகத்தான் மழை பெய்யட்டுமே?"

நல்லான் சிரித்துவிட்டு, "என் பேர்தானுங்க நல்லான். உண்மையிலே நான் ரொம்பப் பொல்லாதவனுங்க. ஒரு வேளை, உங்க தர்ம குணத்துக்காக மழை பேஞ்சால்தான் பேஞ்சது. ஏங்க! மகா பாரதத்திலே விராட பர்வம் வாசிச்சா, மழை வரும் என்கிறார்களே!" என்றான்.

"ஆமாமப்பா, நல்லான்! நம் தேசத்துப் பெரியவர்கள் அப்படி நம்பிக்கை வைத்திருந்தார்கள். இந்த நாளில் அதையெல்லாம் யார் நம்புகிறார்கள்? இருந்தாலும், நான் கூட இன்னிக்கு ராத்திரி விராட பர்வம் வாசிக்கலாம்னு நினைச்சுண்டிருக்கேன்" என்றார் சாஸ்திரியார்.

சம்பு சாஸ்திரியார் அன்றிரவு விராட பர்வம் வாசித்ததனால் தானோ என்னவோ, நமக்குத்தெரியாது; மறுநாள் மாலை கீழ்த் திசையில் இருண்ட மேகங்கள் திரண்டு எழுந்தன. மத்தியானத்திலிருந்தே கம்மென்று மிகவும் இறுக்க மாயிருந்தது. "ஒரு வேளை மழை வந்தாலும் வரும்" என்று ஜனங்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். கிழக்கே மேகம் திரளுகிறது என்று அறிந்ததும் எல்லோரும் வீதியில் வந்து பார்க்க ஆரம்பித்தார்கள். அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, மேகங்கள் அதிவேகமாகப் பரவி நாலு திசைகளையும் மூடிக்கொண்டன. காது செவிடுபடும்படியாக இடி இடித்தது. மின்னல் ஒரு திசையின் அடிவாரத்தில் கிளம்பி, கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் வானத்தைக் குறுக்கே கடந்து சென்று, இன்னொரு திசையின் அடிவரையில் சென்று மறைந்தது.

பிறகு மழை பெய்யத் தொடங்கியது. மழை என்றால் எப்பேர்ப்பட்ட மழை! பிரளய காலத்து மழை என்று தான் சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் படபடவென்று பெரிய பெரிய மழைத்துளிகள் விழுந்தன. சில நிமிஷத்துக்கெல்லாம் வானத்துக்கும் பூமிக்கும் ஒரே தாரையாகிவிட்டது. பாபநாசம் சிவசமுத்திரம் முதலிய இடங்களில் மலையிலிருந்து அருவி விழுவதைப் பார்த்திருக்கிறீர்களா? அந்த மாதிரியாக, மேகமாகிய மலை முகட்டிலிருந்து ஒரு பெரிய - பிரம்மாண்டமான - கண்ணுக்கெட்டிய தூரம் பரவிய அருவி விழுவது போலவே தோன்றியது. அன்றிரவெல்லாம் இடைவிடாமல் அப்படிப் பெய்து கொண்டிருந்தது. தாலுகா கச்சேரியில் வைத்திருந்த மழை அளக்கும் கருவி, அன்று ராத்திரி எட்டங்குல மழை காட்டியதாகப் பிற்பாடு தெரிய வந்தது.
 




Yazhini1

Moderator
Staff member
Joined
Nov 8, 2019
Messages
228
Reaction score
23
2.2. பஜனை


அக்கிரகாரத்தின் மேலண்டைப்புறத்தில், பெரிய தெருவையும் சின்னத் தெருவையும் சேர்க்கும் பாதை ஒன்று இருந்தது. அந்தப் பாதைக்கு மேற்கே விசாலமான படித்துறைக்குளம் காணப்பட்டது. குளத்தின் வட கரையில் பாதையை யொட்டி பஜனை மடம் இருந்தது.

இந்தப் பஜனை மடத்தில் அன்று இரவு ஏழு மணிக்கு ஜனங்கள் வந்து கூட ஆரம்பித்தார்கள். சங்கரநாராயண தீக்ஷிதர், சாமா ஐயர், ரமணி ஐயர், ராமய்யா வாத்தியார், முத்துசாமி ஐயர் எல்லாரும் வந்தார்கள். குழந்தைகளும், ஸ்திரீகளுங்கூடச் சிலர் வந்து சேர்ந்தார்கள்.

சங்கர தீக்ஷிதர் வந்ததும், கையில் ஓர் ஓட்டை விசிறியுடன் சம்பு சாஸ்திரியிடம் வந்து, "எங்கணும், சாஸ்திரி! ரொம்ப இறுக்கமாயிருக்கே! வேர்க்கிறதோ இல்லையோ?" என்று கிறுதக்காகச் சொல்லிக்கொண்டு, சாஸ்திரியின் மேல் விசிறினார். இந்த மாதிரி விளையாட்டுக்கெல்லாம் சாஸ்திரியின் பதில் புன்னகைதான். அந்தப் பதிலையே இப்போதும் அளித்தார். உடனே தீக்ஷிதர், "ஓய், இன்னிக்குத் திவ்ய நாம சங்கீர்த்தனம் எல்லாம் வைத்துக் கொள்ள வேண்டாம். சீக்கிரமாய் உட்கார்ந்தபடியே நாலு பாட்டுச் சொல்லிப் பஜனையை முடிச்சுடும். மழை பலமாய்ப் பிடிச்சுக்கறதுக்கு முன்னாலே, அவாவாள் வீட்டுக்குப் போய்ச் சேரலாம்" என்றார்.

"அப்படித்தான் உத்தேசம் பண்ணியிருக்கேன். இந்த மழையிலே நீங்கள்ளாம் வந்தேளே, அதுவே பெரிய காரியம்!" என்றார் சாஸ்திரியார்.

ஆனால், சங்கர தீக்ஷிதரின் எண்ணம் பலிக்காமற் போவதற்கே தானோ என்னவோ, பஜனை ஆரம்பித்த சற்று நேரத்துக்கெல்லாம் மறுபடியும் மழை பலமாய்ப் பிடித்துக் கொண்டது.

பஜனை மடத்தின் சுவர்களின் மீதும் கதவுகளின் மீதும் மழையும் புயலும் தாக்கியபோது உண்டான சப்தம் பஜனையின் சப்தத்தையும் மூழ்க அடிப்பதாயிருந்தது. இடையிடையே கதவுகள் படீர் படீர் என்ற சப்தத்துடன் திறப்பதும் மூடுவதுமாயிருந்தன.

அதே சமயத்தில் சம்பு சாஸ்திரியின் வீடும் அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. அடிக்கடி திறந்து கொண்ட ஜன்னல் கதவுகளின் வழியாகக் காற்றும் மழையும் புகுந்து அடித்தன. அந்த வருஷம், கல்யாணச் சந்தடி காரணமாக சாஸ்திரியாரின் வீடு ஓடு மாற்றப்படவில்லை. இதனால் சில இடங்களில் ஏற்கெனவே சொட்டுச் சொட்டென்று சொட்டிக் கொண்டிருந்தது. இப்போது அடித்த பெருங்காற்றிலும் மழையிலும் ஓடுகள் இடம் பெயர்ந்தபடியால், சில இடங்களில் தண்ணீர் தாரையாகக் கொட்டிற்று.

பாவம்! சாவித்திரி, சுண்டல் எடுத்துக்கொண்டு போவதற்காக வந்தவள், வீட்டுச் சாமான்கள் நனையாமல் காப்பாற்றுவதற்குப் பெருமுயற்சி செய்தாள். முகத்தில் வந்து அடித்த மழையைப் பொருட்படுத்தாமல் ஜன்னல் கதவுகளைச் சாத்தினாள். அப்பாவின் புஸ்தகங்கள், கணக்கு நோட்டுகள் முதலியவற்றை எடுத்துப் பத்திரப்படுத்தினாள். ஜலம் தாரையாகக் கொட்டிய இடங்களில் அண்டா, தவலை முதலிய பெரிய பாத்திரங்களைக் கொண்டு வைத்தாள். தரையில் தேங்கியிருந்த ஜலத்தை விளக்குமாற்றால் பெருக்கித் தள்ள முயன்றாள்.

அந்தச் சமயத்தில் அவளுடைய மனம், 'தீவாளிக்கு இவாள் வர்றபோது இப்படியே மழை கொட்டிண்டிருந்தா என்ன பண்றது? இந்த வீட்டைப் பார்த்துட்டுப் பரிகாசம் பண்ணுவாளே? அதற்குள்ளே மழை நின்று போகணுமே, ஸ்வாமி!' என்று வேண்டிக் கொண்டிருந்தது.

அந்தச் சமயம், மங்களம் சமையலறையிலிருந்து கையில் ஒரு கிழிசல் குடையுடன் வந்து, 'ஏண்டி, சாவித்திரி! உங்க அப்பாகிட்டச் சொல்லி இந்தக் குடையை ரிப்பேர் பண்ணி வைக்கறதற்குக்கூட விதியில்லையா? பாக்கிக்கெல்லாம் மட்டும் வாய் கிழியறதே!" என்று சொல்லிக் குடையைத் தொப்பென்று கீழே எறிந்தாள்.

பகவானுடைய பக்தியில் ஈடுபட்டவர்கள் தங்களுடைய குடும்ப காரியங்களைச் சரியாகக் கவனிப்பதில்லையென்பது நமது நாட்டில் தொன்றுதொட்ட சம்பிரதாயமாயிருந்து வந்திருக்கிறது. அந்தப் பரம்பரையில் வந்த சம்பு சாஸ்திரி மட்டும் இந்த வழக்கத்துக்கு விரோதமாயிருக்க முடியுமா? ஆகவே, மங்களம் அவர்மேல் எரிந்து விழுவதற்குக் காரணம் இல்லாமற் போகவில்லை.
 




Yazhini1

Moderator
Staff member
Joined
Nov 8, 2019
Messages
228
Reaction score
23
2.3. உடைப்பு


இரவு சுமார் எட்டு மணிக்கு, நல்லான் தன்னுடைய வீட்டில் கோரைப் பாயை விரித்து அதில் படுத்துக் கொண்டான். தூக்கம் என்னவோ வரவில்லை. பஜனை மடத்துக்குப் போய்ப் பஜனை கேட்கலாமாவென்று ஒரு கணம் நினைத்தான். அப்புறம், 'இந்த மழையிலே யார் போறது?' என்று எண்ணினான். இரவு பூராவும் இப்படியே மழை பெய்தால், வயல்களில் எல்லாம் ரொம்ப ஜலம் கட்டி நிற்கும், அதிகாலையில் எழுந்து போய் வடிய விட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான். ஆனால், வாய்க்கால்களில் ஜலம் ததும்பப் போய்க் கொண்டிருந்தால், எப்படி வடிய விடுகிறது என்று யோசனை உண்டாயிற்று. விராட பர்வம் படித்தால் மழை வரும் என்பது போல், மழையை நிறுத்துவதற்கும் ஏதாவது வழி இருக்கிறதா என்று சாஸ்திரியாரைக் கேட்க வேண்டுமென எண்ணினான்.

அப்போது நல்லானுடைய பாம்புச் செவியில் மழையின் 'சோ' என்ற சத்தத்தையும், காற்றின் 'விர்' என்ற சப்தத்தையும் தவிர, வேறு ஏதோ ஒரு சப்தம் கேட்டது.

அது, ஜலம் கரையை உடைத்துக் கொண்டு பாயும் சப்தம் என்று அவனுக்குத் தெரிந்து போயிற்று. உடனே குடமுருட்டியின் குத்தல் ஞாபகம் வந்தது. அவ்வளவுதான்; போர்த்திக் கொண்டிருந்த துப்பட்டியை எடுத்து விசிறி விட்டு, அவசரமாக எழுந்தான். ஓலைக் குடலையை எடுத்துத் தலையில் மாட்டிக் கொண்டு அந்தக் கொட்டுகிற மழையில் மின்னல் வெளிச்சத்தின் உதவியினால் சேரியை நோக்கி விரைந்து சென்றான்.

நல்லான் தட்டுத் தடுமாறி, இரண்டு மூன்று இடத்தில் தடுக்கி விழுந்து எழுந்திருந்து கடைசியாக சேரியை அடைந்தபோது, சேரி அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. காலையில் மண்ணை வெட்டி வரப்புப் போட்டுக் கொண்டிருந்தார்களல்லவா? அந்த வரப்பெல்லாம் போய்விட்டது. ஒரே வெள்ளமாக ஜலம் சேரியில் புகுந்து கொண்டிருந்தது. மழை, காற்று, பாய்கின்ற ஜலம் இவற்றின் 'ஹோ' என்ற இரைச்சலுக்கு இடையிடையே, "ஐயோ! கொழந்தையைக் காணமே!" "ஏ குட்டி! எங்கடி போய்ட்டே!" "ஆயா! ஆயா! ஐயோ! ஆயா போய்ட்டாளே!" "அடே கருப்பா! மாட்டை அவிழ்த்துவிடுறா!" "ஐயோ! என் ஆடு போயிடுச்சே!" என்று இந்த மாதிரி பரிதாபமான அலறும் குரல்கள் தீன ஸ்வரத்தில் கேட்டன.

மின்னல் வெளிச்சத்தில் நல்லானைப் பார்த்ததும், சேரி ஜனங்கள் வந்து, அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். "ஐயோ! சாமி! குடிமுழுகிப் போச்சுங்களே! குடமுருட்டி உடைப்பு எடுத்துக்கிட்டதே! நாங்க என்ன செய்வோம்? எப்படிப் பிழைப்போம்?" என்று கத்தினார்கள்.

நல்லான் உரத்த குரலில், "அடே! நீங்கள் எல்லாரும் ஆம்புளைகள் தானாடா! உடைப்பு எடுத்தா, ஓடிப்போய் மண்ணைக் கிண்ணைக் கொட்டி அடைக்கிறதுக்குப் பார்க்காமே, பொம்புளை மாதிரி அழுதுகிட்டு நிக்கறீங்களேடா?" என்றான்.

"உடைப்பையாவது, அடைக்கவாவதுங்க! கிட்ட ஆள் அண்ட முடியாதுங்க. அவ்வளவு பெரிய உடைப்பு சாமி!" என்றான் தலையாரி வீரன்.

"குடிசையெல்லாம் விழுந்து எல்லாம் பாழாய்ப் போச்சுங்க. இனிமே உடைப்பை அடைச்சுத்தான் என்ன பிரயோஜனம்? புள்ளை குட்டிங்களைக் காப்பாத்தறதுக்கு ஒரு வழி சொல்லுங்க!" என்றான் இன்னொருவன்.

"புள்ளை குட்டி போனாலும் பரவாயில்லை. ஆடு மாடெல்லாம் இருந்த இடந்தெரியலைங்களே!" என்றான் மூன்றாவது ஆள்.

அப்போது இடி முழக்கத்துடன் பளீரென்று மின்னிய மின்னலின் வெளிச்சத்தில் நல்லானுக்கு முன்னால் ஒரு கணப் பொழுது தோன்றிய காட்சி அவனுடைய நெஞ்சைப் பிளப்பதாயிருந்தது. கொஞ்ச தூரத்தில் குடமுருட்டியின் கரை உடைத்துக்கொண்டு, ஜலம் ஒரே நுரை மயமாகப் பாய்ந்து கொண்டிருப்பதையும், சேரியெல்லாம் ஜலம் புகுந்திருப்பதையும், குடிசைகள் இடிந்து விழுந்து கொண்டிருப்பதையும், பெண் பிள்ளைகளும், பிள்ளை குட்டிகளும் அலறுவதையும் அவன் அந்த ஒரு க்ஷண நேரக் காட்சியில் கண்டான்.

உடனே, அவன் ஆவேசம் வந்தவனைப் போல், "அட பாவிகளா! தடிப்பசங்கள் மாதிரி சும்மா நிக்கறீங்களேடா? இன்னும் கொஞ்சம் நாழி போனா அத்தனை பேரும் வெள்ளத்திலே போயிடுவாங்களே! ஓடுங்க! ஓடுங்க! பொம்புளைகளை யெல்லாம் சேர்த்து, பிள்ளை குட்டிகளோடு அக்கிரகாரத்துக்கு ஓடச் சொல்லுங்க!" என்றான்.
 




Yazhini1

Moderator
Staff member
Joined
Nov 8, 2019
Messages
228
Reaction score
23
2.4. அடைக்கலம்


அன்றிரவு சுமார் நடுநிசிக்கு, சம்பு சாஸ்திரியாரின் மாட்டுக் கொட்டகையில் ஒரே கலகலப்பாயிருந்தது. அந்தக் கொட்டகை நாலு பக்கமும் தாழ்வாரமும், நடுவில் பெரிய முற்றமுமாக அமைந்தது. ஒரு தாழ்வாரத்தில் நெல் குதிர்கள் வைத்திருந்தன. மற்ற மூன்று தாழ்வாரங்களில் எப்போதும் மாடு கட்டியிருப்பது வழக்கம். இன்று மேலண்டைத் தாழ்வாரத்திலேயே கொண்டு வந்து நெருக்கியடித்துக் கட்டியிருந்தார்கள். மாடுகளுக்கும் பாஷை உண்டு, அவை ஒன்றோடுடொன்று பேசிக்கொள்ளும் என்று சொல்வது உண்மையானால், சம்பு சாஸ்திரியாரின் மாடுகள் அப்போது பின்வருமாறுதான் பேசிக் கொண்டிருந்திருக்க வேண்டும்.

"ஹம்மா! இந்த மனுஷப் பிராணிகளைப் போலச் சுயநலம் பிடித்த பிராணிகளை நான் பார்த்ததேயில்லை."

"ஏற்கெனவே மழையிலும் குளிரிலும் அவஸ்தைப்படுகிறோம். பாதி நிசிக்கு வந்து நம்மைத் தூக்கத்திலிருந்து எழுப்பித் தொந்தரவு செய்கிறார்களே?"

"முற்றத்தின் வழியாக வந்தபோது மேலே மழை பெய்ததில் சொட்ட நனைந்து போனேன்."

"உனக்கென்ன கேடு! என் குழந்தைக்கு உடம்பு குளிரினால் நடுங்குகிறது, பார்!"

"உங்கள் கஷ்டத்தையே நீங்கள் சொல்கிறீர்களே தவிர, அந்த மனுஷர்களின் அவஸ்தையைப் பார்க்கவில்லை. முற்றத்தில் சற்று நனைந்ததற்கு இப்படிப் புகார் செய்கிறீர்களே? இவர்கள் ஆற்றங்கரை மேட்டிலிருந்து நனைந்து கொண்டே வந்திருக்கிறார்களே?"

"ஹாமாம்! இவர்கள் எதற்காக அங்கிருந்து ஓடி வந்திருக்கிறார்கள்?"

"இது தெரியாதா? இவர்கள் இருந்த கூரைக் குச்செல்லாம் மழையிலே விழுந்திருக்கும். நம்மைப் போல இந்த ஜனங்களுக்கு ஓடு போட்ட வீடு இருக்கிறதா, என்ன?"

"அதற்காக, பிச்சைக்காரன் குடிசையிலே சனீசுவரன் புகுந்தாற் போல், இவர்கள் நம்முடைய இடத்தைப் பங்கு போட்டுக் கொள்ள வந்து விட்டார்களாக்கும்?"

"காலையிலே எஜமான் வரட்டும். அவரிடம் நான் புகார் சொல்கிறேனா இல்லையா, பார்!"

"இவர்களாக ஒன்றும் வந்திருக்க மாட்டார்கள். எஜமான் சொல்லித்தான் வந்திருப்பார்கள்."

"போகட்டும்; இவர்கள் வந்ததுதான் வந்தார்கள். நம்முடைய இடத்தையும் பிடுங்கிக் கொண்டார்கள். எதற்காக இப்படிக் கூச்சல் போடுகிறார்கள்? இரையாமலிருந்து தொலைந்தால் நாம் தூங்கலாமல்லவா?"

"ஹொஹ்ஹோ! உனக்கு அது தெரியாதா? மனுஷ ஜாதியினிடத்தில் அதுதான் பெரிய குறை. அவர்களுக்குச் சத்தம் போடாமல் பேசவே தெரியாது. அவர்கள் மேல் குற்றம் இல்லை. சுவாமி அப்படி அவர்களைப் படைத்துவிட்டார்!"

மேற்கண்டவாறு மாடுகள் நிஜமாகவே பேசிக் கொண்டனவா என்று நமக்குத் தெரியாது. ஆனால் அப்போது உண்மையில் கீழண்டைத் தாழ்வாரத்தில் மட்டும் கூச்சல் பலமாகத்தான் இருந்தது. சேரி ஜனங்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் - அவ்வளவு பேரும் அங்கே இருந்தார்கள். சிலர் துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தார்கள். சிலர் பசியினால் கத்திய குழந்தைகளைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

பட்டிக்கார நல்லானும் அங்கே காணப்பட்டான். அவன் ஒரு குதிரின் இடுக்கிலிருந்து பெரிய சாக்குச் சுருள் ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து, "ஏ பிள்ளைகளா! கொழந்தைகளைக் கொன்னுடாதீங்க. தலைக்கு ஒரு சாக்கை விரிச்சுப் போடுங்க!" என்றான்.
 




Yazhini1

Moderator
Staff member
Joined
Nov 8, 2019
Messages
228
Reaction score
23
2.5. தீக்ஷிதர் சபதம்


நல்லான் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. மறுநாள் காலையில் சுமார் பத்து மணிக்கு, கொஞ்சம் தூற்றல் நின்று வானம் வெளி வாங்கியிருந்த போது வம்பும் தும்பும் கும்பலாகச் சேர்ந்து சம்பு சாஸ்திரியின் வீட்டு வாசலைத் தேடிக் கொண்டு வந்தன. சங்கர நாராயண தீக்ஷிதரை முன்னிட்டுக்கொண்டு, முத்துசாமி அய்யர், சாமாவய்யர், ரமணி அய்யர், பஞ்சவய்யர், ராமய்யா வாத்தியார், பென்ஷன் ஸப் ரிஜிஸ்ட்ரார் சினிவாச அய்யங்கார், பஞ்சாங்கம் பசுபதி ஜோசியர், குமாரசாமி குருக்கள், நாராயண கனபாடிகள், அர்ச்சகர் வரதய்யங்கார் எல்லாரும் வந்து சேர்ந்தார்கள்.

அப்போது வாசலில் நின்ற செவிட்டு வைத்தியைப் பார்த்து, தீக்ஷிதர், "அடே! உன் அத்திம்பேரைக் கூப்பிடு!" என்று வாயாலும் கத்தி, கையாலும் ஜாடை காட்டினார். செவிட்டு வைத்தி, அவ்வளவு பேரும் கும்பலாய் வருவதைப் பார்த்து ஏற்கெனவே மிரண்டு போயிருந்தான். இப்போது, நெஞ்சு படக் படக்கென்று அடித்துக் கொள்ள உள்ளே சென்று, பூஜை அறையில் இருந்த சாஸ்திரியிடம், "எல்லாரும் வந்திருக்கா; உங்களைக் கூப்பிடறா!" என்றான். பிறகு, சமையலறைப் பக்கம் சென்று, "அக்கா! அக்கா! ஊரிலே எல்லாருமாகச் சேர்ந்து அத்திம்பேரை அடிக்க வரா! நாம் இங்கே இருக்க வேண்டாம், ஊருக்குப் போய்விடுவோம், வா!" என்றான். ஆனால் மங்களம் அப்போது கொல்லையில் குளித்துக் கொண்டிருந்தபடியால், அவள் காதில் அவன் சொன்னது விழவில்லை. அதற்குப் பதிலாக அம்மியில் ஏதோ அரைத்துக் கொண்டிருந்த சாவித்திரியின் காதில் விழுந்தது. அவள் உடனே எழுந்து பரபரப்புடன் கையை அலம்பினாள்.

இதற்குள் சாஸ்திரி வாசற்பக்கம் வந்து, கும்பலாக வந்திருப்பவர்களைப் பார்த்து, "என்ன விசேஷம்? எல்லாருமா வந்திருக்கயளே! பூஜை பண்ணுகிறதற்கு உட்கார்ந்தேன்" என்றார்.

"உம்ம பூஜையைக் கொண்டு போய்க் குடமுருட்டி உடைப்பிலே போடுங்காணும்; உமக்குப் பூஜை வேறே வேண்டியிருக்கா, பூஜை!" என்றார் தீக்ஷிதர்.

"என்ன தீக்ஷிதர்வாள், கோவிச்சுக்கறயளே? நான் என்ன தப்பு செய்துட்டேன், தெரியலையே?"

"என்ன தப்பு செய்துட்டீரா? நீர் ஒரு தப்பும் செய்யலைங்காணும்! தப்பு எங்க பேரிலேதான்!" என்றார் சாமாவய்யர்.

"அவ்வளவு நெஞ்சு ஆண்மையாங்காணும் உமக்கு? அந்த நெஞ்சிலே உப்பை வச்சு நெரடினா என்னன்னு கேக்கறேன்?" என்றார் முத்துசாமி அய்யர்.

"இதென்ன பாவமான்னா இருக்கு!" என்றார் சாஸ்திரி.

"ஆமாம், பாவந்தான்! பாவத்தையும் புண்ணியத்தையும் ரொம்பக் கண்டவரோல்லியோ, நீர்?"

சம்பு சாஸ்திரி வாயை மூடிக்கொண்டு மௌனமாயிருந்தார்.

"என்னங்காணும் ஊமைக் கோட்டான் மாதிரி சும்மா இருக்கீர்? சொல்லுமேங்காணும்?"

"என்ன சொல்லச் சொல்றயள்; அதுதான் தெரியலை?"

"தெரியலையா? உமக்கு ஏன் தெரியப் போறது? பாவம்! பச்சைக் குழந்தை! வாயிலே விரலை வைச்சாக் கடிக்கக் கூடத் தெரியாது."

"போருங்காணும், வேஷம்! பதில் சொல்லுங்காணும்! தீண்டாதவங்களை எப்படிங்காணும் அக்கிரகாரத்திற்குள் விட்டீர்?"
 




Yazhini1

Moderator
Staff member
Joined
Nov 8, 2019
Messages
228
Reaction score
23
2.6. ஸ்ரீதரன் சங்கடம்


நெடுங்கரையில் சாவித்திரி, 'தீபாவளி சமயத்தில் தானா இப்படியெல்லாம் வரவேணும்?' என்று சங்கடப்பட்டுக் கொண்டிருக்கையில், கல்கத்தாவில் ஸ்ரீதரனும் தீபாவளியை நினைத்துப் பெரிதும் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தான்.

கல்யாணம் ஆன இரண்டு மாதத்துக்கெல்லாம் ஸ்ரீதரனுக்குக் கல்கத்தாவில் பெரிய உத்தியோகம் ஆனபோது, தன்னுடைய அபாரமான புத்திசாலித்தனத்துக்காகத்தான் மேற்படி வேலை தனக்குக் கிடைத்தது என்று அவன் நினைத்தான்.

சாவித்திரியைக் கல்யாணம் பண்ணின முகூர்த்தந்தான் ஸ்ரீதரனுக்கு வேலை கிடைத்தது என்றும், அவளுடைய அதிர்ஷ்டந்தான் காரணமென்றும் தங்கம்மாள் சொன்னாள்.

ராஜாராமய்யர் ஒன்றும் நினைக்கவும் இல்லை, சொல்லவும் இல்லை. ஏனெனில், உத்தியோகம் எப்படிக் கிடைத்ததென்பது அவருக்கு நன்றாய்த் தெரியும். கல்கத்தாவில் ராஜாராமய்யர் உத்தியோகம் பார்த்தபோது அவருக்கு மேலதிகாரியாயிருந்த ஆங்கில துரை அவரிடம் மிகவும் விசுவாசம் வைத்திருந்தார். ஆனால், அவருடைய மனோதத்துவ சோதனைகள், ஆவி உலக ஆராய்ச்சிகள் இவற்றைப் பரிகாசம் செய்து வந்தார். ராஜாராமய்யர் உத்தியோகத்திலிருந்து விலகி ஊருக்கு வந்த பிறகு, மேற்படி துரையின் அருமை மனைவி இறந்து போனாள். இதன் காரணமாக, துரைக்கும் ஆவி உலக ஆராய்ச்சிகளில் சிரத்தை உண்டாயிற்று. ஒரு வேளை ராஜாராமய்யரின் நம்பிக்கையில் உண்மையிருக்குமோ, சாத்தியமாயிருக்குமோ என்றெல்லாம் அவருக்குச் சபலம் உண்டாயிற்று. ராஜாராமய்யருடன் கடிதப் போக்குவரவு தொடங்கினார். பிறகு, ராஜாராமய்யர் கல்கத்தாவுக்கே வந்துவிட்டால் தான் அந்த ஆராய்ச்சிகளை நன்கு நடத்த முடியுமென்று தோன்றியது. எனவே, ராஜாராமய்யரைக் கல்கத்தாவுக்கு வரப் பண்ணுவதற்காக, துரை அவருடைய பிள்ளை ஸ்ரீதரனுக்கு கே அண்டு ஓ பாங்க் என்னும் பிரசித்திபெற்ற இங்கிலீஷ் பாங்கின் கல்கத்தா கிளை ஆபீஸில் உதவி மானேஜர் வேலை செய்து வைத்தார்.

ஆகவே, ஆனி மாதத்திலேயே ராஜாராமய்யருடைய குடும்பம் கல்கத்தாவுக்குப் போக வேண்டியதாயிற்று. கல்கத்தாவில் தென்னிந்தியர் வசித்த பகுதியில் ஒரு தனி வீடு எடுத்துக் கொண்டு குடித்தனம் தொடங்கினார்கள். ஸ்ரீதரன் அப்படி ஒன்றும் அசடு இல்லையாதலால், உத்தியோகத்தைத் திறமையாகப் பார்த்து, துரைக்குத் திருப்தியளித்து வந்தான்.

தங்கம்மாளுக்கு மட்டும் ஒரு மனக்குறை இருந்து கொண்டுதான் இருந்தது. ஆடி, ஆறாம் மாதம், ஆவணியவிட்டம் இவற்றுக்கெல்லாம் நெடுங்கரைக்குப் போய் அதிகாரம் பண்ணிச் சீர்செனத்தி கொண்டு வரவில்லையே யென்பது தான் அந்தக் குறை. ஆனால், எல்லாவற்றுக்கும் சேர்த்து வைத்து, தலை தீபாவளிக்குப் போய்க் கொண்டு வந்துவிடலாமென்று அவள் ஆசைப்பட்டுக் கொண்டிருந்தாள். தீபாவளிக்கு ஒரு மாதத்துக்கு முன்னாலிருந்தே பிள்ளைக்கு அவள் உரையேற்ற ஆரம்பித்து விட்டாள்.

ஸ்ரீதரனுக்கோ இது கொஞ்சங்கூட இஷ்டமில்லை. ஏற்கனவே, அவனுக்கு இந்தக் கல்யாணம் பிடிக்கவில்லை; சாவித்திரியை நினைத்தால் அவனுக்கு அருவருப்பாயிருந்தது; நெடுங்கரையையும், சம்பு சாஸ்திரியையும் எண்ணினால் அவனுடைய உடல் குன்றியது. இவ்வளவுடன் இப்போது ஒரு புதிய காரணமும் சேர்ந்திருந்தது.

ஸ்ரீதரன் உத்தியோகம் பார்த்த பாங்கில் டைப் அடிக்கும் வேலைக்கு ஆங்கிலோ-இந்தியப் பெண்கள் அமர்த்தப்பட்டிருந்தார்கள். ஸ்ரீதரன் வேலைக்குப் போன அன்று, அவர்களில் ஒருத்தி அவனுடைய அறைக்குள் வந்தாள். "ஆர் யூ மிஸ்டர் ஸ்ரீதர்?" என்று கேட்டாள். அந்தக் குரல் ஸ்ரீதரனுக்கு தேவகானம் போல் இருந்தது. கண்கொட்டாமல் அவளைப் பார்த்தபடி, ஆம் என்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தான் ஸ்ரீதரன். "வாட் எ லவ்லி நேம்!" என்றாள் அந்தப் பெண். ஸ்ரீதரனுக்கு அப்போது தன் பெற்றோர்கள் மீது மிகவும் நன்றி உண்டாயிற்று. தனக்கு எத்தனையோ விதத்தில் அவர்கள் கெடுதல் செய்திருந்தாலும், இவ்வளவு அழகான பெயரைக் கொடுத்தார்களே என்று எண்ணினான். பிறகு, அந்தப் பெண், ஸ்ரீதரனுடைய கடிதங்களை டைப் அடிப்பதற்குத் தன்னை நியமித்திருப்பதாகவும், அவன் கூப்பிடும்போது வருவதாகவும் சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.
 




Yazhini1

Moderator
Staff member
Joined
Nov 8, 2019
Messages
228
Reaction score
23
2.7. சாதிப் பிரஷ்டம்


நெடுங்கரையில் பெருமழை நின்றது. ஆனால் மழை அடியோடு நிற்கவில்லை. சில நாள் காலையிலும் சில நாள் மாலையிலும், இன்னும் சில நாள் இரவிலுமாக விட்டு விட்டுப் பெய்து கொண்டிருந்தது.

குடமுருட்டியில் வெள்ளமும் குறைந்து, அதிகாரிகளும் பெரு முயற்சி செய்ததன் பேரில் ஒரு வாரத்தில் அடைப்பு அடைபட்டது.

சம்பு சாஸ்திரியின் மாட்டுக் கொட்டகையில் அடைக்கலம் பெற்ற சேரி ஜனங்கள் இரண்டு நாளைக்குள் களத்துத் திடலில் கொட்டகை போட்டுக் கொண்டு அங்கே போய்விட்டார்கள். உடைப்பு அடைபட்டதும், சேரியில் மறுபடியும் குடிசைகள் போடத் தொடங்கினார்கள். இதற்கு வேண்டிய மூங்கிற் கழி, கீத்து எல்லாம் பெரும்பாலும் சாஸ்திரியார்தான் அவர்களுக்குக் கொடுத்தார்.

உடைப்பினால் சேரி ஜனங்களுக்கு மிகவும் துன்பம் ஏற்பட்டதாயினும், அந்தத் துன்பத்தின் மூலமாகக் கடவுள் அவர்களுக்கு ஒரு நன்மையையும் அளித்தார். சேரியின் ஒரு பக்கத்தில் உடைப்பு வெள்ளம் பாய்ந்த வேகத்தினால், ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டு அதில் ஜலம் தேங்கி நின்றது. அந்தப் பள்ளம் ஒரு பெரிய மூங்கில் கழி ஆழம் இருந்தபடியால், சேரி ஜனங்களுக்கு என்றும் ஜலம் வற்றாத ஒரு குளம் ஏற்பட்டது.

இதனாலும், பழைய குடிசைகளுக்குப் பதில் புதிய குடிசைகள் கிடைத்தபடியாலும் சேரி ஜனங்களுக்கு மொத்தத்தில் உடைப்பினால் நன்மை ஏற்பட்டதென்றே சொல்லலாம். இரண்டு மூன்று நாள் பட்ட கஷ்டங்களையெல்லாம் அவர்கள் அடியோடு மறந்து, வாழ்க்கையைப் புதிய குதூகலத்துடன் தொடங்கினார்கள்.

குடமுருட்டி உடைப்பு சேரி ஜனங்களுக்குக் குளம் பறித்துத் தந்ததல்லவா? அப்படிப் பறித்தெடுத்த மண்ணையெல்லாம் வெள்ளம் என்ன செய்தது என்று கேட்டால், சேரிக்கு அருகிலிருந்த சம்பு சாஸ்திரியின் வயல்களில் கொண்டு போய்த் தள்ளிற்று. சாஸ்திரியின் நன்செய் நிலத்தில் ரொம்பவும் உயர்தரமான இரண்டு வேலி நிலம் இதனால் பாழாய்ப் போயிற்று!

ஊரிலே வேறு யாருக்கும் இவ்வளவு அதிக சேதம் கிடையாது. சாஸ்திரிக்கு மட்டும் இம்மாதிரி நேரவே ஊரார், "பார்! இவன் செய்த காரியம் பகவானுக்கே பொறுக்கவில்லை. வாயிலே மண்ணைப் போட்டு விட்டார்!" என்றார்கள்.

இந்த உலகத்தில் பகவான் தம்முடைய அத்தியந்த பக்தர்களைத்தான் அதிகமாய்ச் சோதிப்பதைக் காண்கிறோம். இது ஓர் அதிசயம் என்றால், இதைவிடப் பெரிய அதிசயம் இன்னொன்று இருக்கிறது. உலகில் ரொம்பவும் நல்ல மனிதர்களுக்கே கொடுமையான விரோதிகள் ஏற்படுகிறார்கள்! சம்பு சாஸ்திரியின் நிலைமை இப்படித்தான் இருந்தது. அந்தப் பரம பக்தரைப் பகவான் பலவிதத்திலும் சோதனை செய்தார். அந்த நல்ல மனுஷருக்குத்தான் ஊரில் விரோதிகளும் அதிகமாயிருந்தார்கள். அவருடைய நல்ல குணமும், தயாள சுபாவமுமே அக்கிரகாரத்தில் ரொம்பப் பேரை அவருக்கு விரோதிகள் ஆக்கியிருந்தன. இந்த வருஷத்தில் குடியானவர்கள் தகராறு காரணமாக அந்த விரோதம் முற்றிப் போயிருந்தது. ஆகவே, வெள்ளத்தின்போது சேரி ஜனங்களுக்கு மாட்டுக் கொட்டகையில் இடங்கொடுத்ததை வியாஜமாக வைத்துக் கொண்டு, ஊரார் அவரைச் சாதிப் பிரஷ்டம் செய்தார்கள். அவர் வீட்டுக்கு நீர் நெருப்புக் கொடுக்கக் கூடாதென்றும், அவர் வீட்டில் நடக்கும் சுபாசுப காரியங்களுக்குப் போகக் கூடாதென்றும் கட்டுப்பாடு செய்தார்கள்.

அக்கிரகாரத்தில் எல்லாருமே இந்த நடவடிக்கைகளை விரும்பினார்கள் என்பதில்லை. பாதிப்பேருக்கு மனத்திற்குள் சம்பு சாஸ்திரியின் பேரில் அன்பும் அநுதாபமும் உண்டு. ஆனால் அப்படிப்பட்டவர்கள் சாதுக்களாயும், பயந்த சுபாவமுடையவர்களாயும் இருந்தார்கள். தீக்ஷிதர், சாமாவய்யர், முத்துசாமி அய்யர் முதலியவர்களை எதிர்த்து நின்று சண்டை போட அவர்களுக்குத் தைரியமில்லை. "ஊரோடு ஒக்க" என்று அவர்கள் வாயை மூடிக் கொண்டு பேசாதிருந்தார்கள்.
 




Yazhini1

Moderator
Staff member
Joined
Nov 8, 2019
Messages
228
Reaction score
23
2.8. பிரயாணம் நின்றது


ராஜாராமய்யரின் ஆவி உலகச் சோதனைகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவரும், மிஸ்டர் பீடர்ஸன் துரையும், "ஸ்பிரிட் ஒர்ல்ட்" பத்திரிகாசிரியர் சியாம் பாபுவும், இன்னும் நாலைந்து பேரும் வாரத்தில் ஒரு நாள் இரவில் சந்தித்து, இறந்தவர்களுடைய ஆவிகளை வரவழைத்துப் பேச முயன்று கொண்டிருந்தார்கள். ஒரு நீளமான மேஜையை சுற்றி இவர்கள் உட்காருவார்கள். விளக்கை அணைத்து விடுவார்கள். பிறகு, ஒவ்வொருவரும் தமது இறந்து போன உறவினர் யாரையேனும் மனத்தில் நினைத்து, 'அவருடைய ஆவி வரவேண்டும்' என்று தியானிப்பார்கள்.

ஆவி உலகம் சம்பந்தமாக அப்போது வெளியாகியிருந்த புத்தகங்களில் மேற்கண்ட முறைதான் கூறப்பட்டிருந்தது. இந்த மாதிரி தொடர்ந்து செய்து வந்தால், சில நாளைக்கெல்லாம் குறிப்பிட்ட ஆவி, அல்லது ஆவிகள் அருவமாக அந்த அறைக்குள் வரும். வந்து, தியானம் செய்பவர்கள் தொட்டுக் கொண்டிருக்கும் மேஜையை மெள்ள மெள்ள உயரத் தூக்கும். அப்புறம் சில விசேஷ சப்தங்கள் எல்லாம் உண்டாகும். நாளடைவில், ஆவி, புகை போன்ற உருவம் எடுத்துக் கண்ணுக்குப் புலனாகத் தொடங்கும். கடைசியாக, அது பேசத் தொடங்கி, கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லும் - இம்மாதிரி மேற்படி புஸ்தகங்களில் சொல்லப்பட்டிருந்தது.

இப்போது ராஜாராமய்யரும், அவருடைய சகாக்களும் செய்த சோதனையில், மேஜையானது உயரக் கிளம்ப ஆரம்பித்திருந்தது. முதலில் ஓர் அங்குலம், அப்புறம் இரண்டு அங்குலம் - இப்படியாக அபிவிருத்தியடைந்து இப்போது ஒரு முழ உயரம் வரை கிளம்பிக் கொண்டிருந்தது. உண்மையில், அங்கே தியானத்தில் அமர்ந்தவர்கள் ஒவ்வொருவரும், ஆவிகளுக்கு ஒத்தாசை செய்யும் நோக்கத்துடன் கொஞ்சம் கொஞ்சம் இலேசாக மேஜையைத் தூக்கிவிட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஒருவருக்காவது மற்றவர்களும் அப்படிச் செய்கிறார்கள் என்பது தெரியாதாகையால், அருவமான ஆவிகள் தான் வந்து மேஜையைத் தூக்குகின்றன என்று மனப்பூர்வமாக நம்பினார்கள்.

அம்மாதிரி பரிபூரண நம்பிக்கை கொண்டிருந்தவர்களில் ராஜாராமய்யரும் ஒருவர். தமது வாழ்நாளெல்லாம் கனவு கண்டு கொண்டிருந்த காரியம் இப்போது உண்மையிலேயே நிறைவேறப் போகிறதென்று எண்ணி அவர் அளவிலாத உற்சாகத்தில் ஆழ்ந்திருந்தார். உலக விஷயங்கள் ஒன்றுமே அவருக்கு இலட்சியமாயில்லை. தீபாவளிக்குத் தம் மனைவியும் பிள்ளையும் நெடுங்கரைக்குப் போகும் விஷயம் அவருக்கு மிகவும் திருப்தியளித்தது. 'அப்பா! ஒரு பத்து நாளைக்காவது இவர்களுடைய தொல்லையில்லாமல் இருக்கலாம்' என்று அவர் எண்ணினார். அத்துடன், இப்போது அவர்கள் சோதனை நடத்திக்கொண்டிருந்த இடம் அவ்வளவு வசதியில்லாமலிருந்தபடியால், தங்கம்மாளும் ஸ்ரீதரனும் ஊருக்குப் போனால் தமது வீட்டிலேயே ஒரு நாள் நடத்திப் பார்க்கலாம் என்ற எண்ணமும் அவருக்கு இருந்தது. சோதனை நடக்கும் போது நம்பிக்கையற்றவர்கள் யாரும் அருகில் இருக்கக் கூடாதாதலால், தங்கம்மாளும் ஸ்ரீதரனும் இருக்கும்போது வீட்டில் அந்தச் சோதனை நடத்த அவர் விரும்பவில்லை.

இப்படியாக ராஜாராமய்யர் தம் மனைவியும் புதல்வனும் தீபாவளிக்கு ஊருக்குப் போவதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில், நெடுங்கரையிலிருந்து அவர் பேருக்கு ஒரு தபால் வந்தது. அதைப் பிரித்துப் படித்துப் பார்த்ததும் அவர் ஒரே கலவரமடைந்து போனார். அப்போது அவர் 'ஸ்பிரிட் ஒர்ல்ட்' பத்திரிகைக்குத் தமது ஆவி உலக அநுபவங்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதிக் கொண்டிருந்தாராயினும், அதை அப்படியே விட்டு விட்டுத் தங்கம்மாளைத் தேடிக் கொண்டு போனார்.


அன்று இரவுதான் நெடுங்கரைக்குப் பயணப்படுவதாக உத்தேசித்திருந்தபடியால், தங்கம்மாள் பெட்டியில் சாமான்களை எடுத்து வைத்துக் கொண்டும், வேலைக்காரனைப் படுக்கை கட்டச் சொல்லிக் கொண்டும் இருந்தாள். அப்போது, ராஜாராமய்யர், கையில் பிரித்த கடிதத்துடன், "தங்கம்! தங்கம்! கேட்டாயா சமாசாரம்?" என்று கேட்டுக் கொண்டு வந்தார்.

"என்ன பிரமாதமான சமாசாரம்? எள்ளுக்குள் எண்ணெய் இருக்குன்னு எனக்குத் தெரியுமே?" என்றாள் தங்கம்.

"இல்லேடி! உன் பிள்ளையாண்டான், தீபாவளிக்கு மாமனார் ஆத்துக்குப் போக மாட்டேன்னு மூக்கால் அழுதுண்டிருந்தானோல்லியோ? அங்கேயும் அதுக்குத் தகுந்தாப்பலே ஒரே ரகளையா இருக்கு. சம்பு சாஸ்திரிக்குத் திடீர்னு பைத்தியம் புடிச்சுடுத்தாம்..."

"இது என்ன கூத்து?"

"பைத்தியம்னா, நிஜப் பைத்தியமில்லை! ஒரு நாளைக்குத் தீண்டாதவன்களையெல்லாம் அக்கிரகாரத்துக்குள்ளே அழைச்சுண்டு வந்துட்டாராம். அதுக்காக, ஊரார் அவரை 'பாய்காட்' பண்ணி வச்சிருக்காளாம்..."

"அடபாவிப் பிரமாணா! இப்படிப் பெரிய கல்லாத் தூக்கிப் போட்டுட்டாரே! ஆடி, ஆறாம் மாதம் ஒண்ணுக்குந்தான் போகலை - தீபாவளிக்காவது போய்த் துணிமணி, பாத்திரம் பண்டம் வாங்கி நகத்திண்டு வரலாம்னு ஆசைப்பட்டுண்டு இருந்தேனே? - ஏன்னா? நெஜமாத்தான் அப்படி எழுதியிருக்கா? நீங்களா வெறுமனைக்கோசரம் சொல்றயளா?"

"சரியாப் போச்சு! எனக்கு வேறே வேலை கிடையாதாக்கும்! தீக்ஷிதரும், இன்னும் நாலைஞ்சு பேரும் கையெழுத்துப் போட்டுக் கடுதாசி எழுதியிருக்கா. ஒரு நாளைக்குப் பலமா மழை பேஞ்சபோது, சேரியிலே வெள்ளம் புகுந்துடுத்துன்னு, சேரி ஜனங்கள் எல்லாரையும் அக்கிரகாரத்துக்கு அழைச்சுண்டு வந்து இரண்டு நாள் வச்சிருந்தாராம். ஊரார், வேண்டாம்னு எவ்வளவோ சொல்லியும் கேக்கலையாம். ரொம்ப ரஸாபாஸமாய்ப் போச்சாம். அதுக்கு மேலேதான் அவாத்துக்கு யாரும் போகக்கூடாது; நீர் நெருப்புக் கொடுக்கக் கூடாதுன்னு கட்டுப்பாடு பண்ணியிருக்காளாம். இந்தச் சமயத்தில் நாம் அங்கே தீபாவளிக்கு வரக்கூடாதுன்னு ஊரார் கேட்டுக்கறாளாம். 'அப்புறம் உங்க இஷ்டம்; நாங்க இதுக்கு மேலே சொல்றதுக்கில்லை'ன்னு லெட்டர் முடியறது. நீ என்ன சொல்றே!"

"நான் என்னத்தைச் சொல்றது? பார்த்தா, வைதிகமா, விபூதியும் துளசி மாலையுமா இருக்காரேன்னு நினைச்சேன். உங்களைப் போலேயெல்லாம் கிராப்புத் தலையும், பாழும் நெத்தியுமா இல்லையேன்னு சந்தோஷப்பட்டுண்டு இருந்தேன். இப்படிப் பைத்தியம் பிடிச்சுப் பாயைப் புரண்டப் போறார்னு நான் கண்டேனா?"

"அதைக் கேக்கலை, நான் இப்போ! தீபாவளிக்கு போறயா, இல்லையான்னுதான் கேக்கறேன்."

"அது எப்படிப் போறது? நன்னாயிருக்கே! இன்னிக்கு நாம்ப புடவைக்கும் வேஷ்டிக்கும் ஆசைப்பட்டுண்டு போய்ட்டா, நாளைக்கு நம்ப பொண்களைக் கொடுத்திருக்கிற இடத்திலே சும்மா இருப்பாளா? - அதெல்லாம் யோசனை பண்ணித்தான் செய்யணும்."

ராஜாராமய்யரும் தங்கம்மாளும் இப்படிப் பேசிக் கொண்டிருந்த போது, வாசலில் வண்டி நின்ற சத்தமும், ஸ்ரீதரனும் அவனுடைய 'தோழ'னும், இறங்கி உள்ளே வந்த சத்தமும் அவர்கள் காதில் விழவில்லை. அடுத்த அறையில் வாசற்படிக்கு அருகில் நின்றபடி ஸ்ரீதரன் அவர்களுடைய சம்பாஷணையைச் சற்று நேரம் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான். 'பெரிய சங்கடத்தில் மாட்டிக் கொண்டு விட்டோ மே? எப்படியாவது இந்தப் பிரயாணம் தடைப்பட்டு விடக்கூடாதா?' என்று எண்ணிக் கொண்டிருந்தவனுக்கு, "அது எப்படிப் போறது?" என்று தங்கம்மாள் சொன்னதைக் கேட்டதும் அளவிலாத குதூகலம் உண்டாயிற்று. ஆனால், அதைச் சிறிதும் வெளியில் காட்டிக் கொள்ளாமல், முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக் கொண்டே அப்பாவும் அம்மாவும் இருந்த அறைக்குள் வந்தான். ஒரு வார்த்தையும் பேசாமல், அப்பாவையும் அம்மாவையும் வெறிக்கப் பார்த்துவிட்டு, "ஒரு பிள்ளைக்கு அவன் தாயார் தகப்பனாரே சத்துருக்களாயிருந்தால், என்னதான் செய்கிறது?" என்றான்.

ராஜாராமய்யர், "என்னடா உளர்றே? நான் என்னடா பண்ணினேன் உனக்கு?" என்றார்.

"ஆமாம், அப்பா! நீங்க ஒண்ணும் பண்ணலை! இந்தக் கல்யாணமே வேண்டாம்னு நான் அப்பவே அடிச்சுண்டேனா, இல்லையா? கல்யாணத்தன்னிக்குக் காலம்பரக்கூட, இந்தப் பட்டிக்காட்டுச் சம்பந்தம் வேண்டாம், புறப்பட்டுப் போயிடுவோம்னு முட்டிண்டேன். இரண்டு பேருமாச் சேர்ந்து பணத்துக்கு ஆசை பட்டுண்டு பலவந்தமாப் பண்ணி வச்சயள்."

"அடே, என்னைப் பார்த்துச் சொல்லு! கல்யாண விஷயமாய் ஒரு வார்த்தையாவது உங்கிட்ட நான் சொன்னேனாடா? அம்மாவாச்சு பிள்ளையாச்சு, எப்படியாவது செய்துக்குங்கோன்னு நான் தான் பேசாமலிருந்துட்டேனே?"

"அம்மாதான் இருக்காளே, அம்மா! என்னைக் கெடுக்கறதுக்குன்னு பிறந்திருக்காளே!" என்றான் ஸ்ரீதரன்.

ஏற்கனவே, தங்கம்மாளுக்குத் தீபாவளிக்குப் போக முடியவில்லையேயென்று துக்கம் அடைத்துக் கொண்டு வந்தது. இப்போது, பிள்ளையாண்டான் மனம் வெறுத்துப் பேசினதைக் கேட்டதும், அவள் விசித்துக் கொண்டே, "அப்படி ஏண்டா சொல்றே, குழந்தை! உனக்கு என்னடா இப்போ வந்துடுத்து? நாளைக்கே நினைச்சா இன்னொரு கல்யாணம் என் குழந்தைக்கு நான் பண்ணிவைக்க மாட்டேனா? எத்தனையோ பேர் 'நான் நீ' என்று பெண் கொடுக்கக் காத்துண்டிருப்பாளே?" என்றாள்.

அதற்கு, ஸ்ரீதரன், "என்ன? இன்னொரு கல்யாணமா? சபாஷ்! ஒரு தடவை மரப்பாச்சியைக் கல்யாணம் பண்ணி வச்சாச்சு! இன்னொரு புதுச்சேரிப் பொம்மையையும் கல்யாணம் பண்ணி வச்சுட்டா, ரொம்ப பேஷாய்ப் போய்விடும். அது வேறே நினைச்சுண்டிருக்கயா, நீ" என்றான்.

ராஜாராமய்யர், "சரிதாண்டா, சரிதான். வேறே வேலை இருந்தாப் பாரு! ஊருக்குப் போகலை, லீவு வேண்டாம்னு துரைக்கு உடனே எழுதிப் போட்டுடு" என்று சொல்லிவிட்டு, தமது அறைக்குச் சென்றார்.

"அப்பாவுக்கு என்ன, சுலபமாய்ச் சொல்லிவிட்டுப் போயிடறார். என் சிநேகிதனை அழைச்சுண்டு வந்திருக்கேனே, அதுக்கு என்ன பண்ணறது? அவா வீட்டிலே போய் ஏன் போகலேன்னு 'எக்ஸ்ப்ளெயின்' பண்ணியாகணும்" என்றான் ஸ்ரீதரன்.

அதே சமயத்தில், அவனுடைய 'சிநேகிதன்' உள்ளே வரவே, தங்கம்மாள் அவனை ஏற இறங்கப் பார்த்து விட்டு, "ஏண்டாப்பா? இவன் என்ன சாதிப் பையன்? முகத்தைப் பார்த்தால் களையாயிருக்கு. தமிழ் பேசத் தெரியுமா?" என்றாள்.

"அவனுக்குத் தமிழ் பேசத் தெரியாது. இங்கிலீஷும் பெங்காலியுந்தான் தெரியும். இந்த ஊர்க்காரன் தான். ஆத்திலேயெல்லாம் சொல்லிண்டு வந்துட்டான். இப்போ எப்படிம்மா அவனைத் திரும்பிப் போகச் சொல்றது?"

"போகச் சொல்வானேன்? தீபாவளிக்கு நம்ம ஆத்திலேயே வேணா இருந்திட்டுப் போகட்டுமே? உனக்கும் துணை வேணுமோல்லியோ?" என்றாள் தங்கம்மாள்.

"ரைட்டோ , அம்மா! ரொம்ப தாங்க்ஸ்!" என்று சொல்லிவிட்டு, அவனுடைய சிநேகிதனைக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு மேல் மாடிக்குப் போனான். அங்கே, ஸுஸிக்கு நல்ல வார்த்தைச் சொல்லிச் சமாதானப்படுத்துவதற்குள் அவன் ரொம்பவும் சிரமப்பட்டுப் போனான் என்று சொல்ல வேண்டுமா?
 




Yazhini1

Moderator
Staff member
Joined
Nov 8, 2019
Messages
228
Reaction score
23
2.9. நாளை தீபாவளி


தீபாவளிக்கு முதல் நாள் காலையில் சாவித்திரி தூக்கத்திலிருந்து எழுந்திருக்கும்போதே, 'நாளைப் பொழுது விடிந்தால் தீபாவளி' என்று எண்ணிக்கொண்டு எழுந்தாள். 'இன்னிக்கு ராத்திரி இவாள் வரப்போறா!' என்ற எண்ணமும் கூட வந்து, அவளுக்கு என்றும் இல்லாத உற்சாகத்தையும் சுறுசுறுப்பையும் அளித்தது. இரண்டு நாளாகக் கடும் மழை விட்டுச் சற்று நேரம் இளம் வெயில் எரிப்பதும் சற்று நேரம் சிறு தூற்றல் போடுவதுமாக இருந்தது. தீபாவளிக்கு மாப்பிள்ளை வரப் போவதை உத்தேசித்துத்தான் இப்படி இருப்பதாகச் சாவித்திரி எண்ணிக் கொண்டாள். ஆனால், மழை பலமாகப் பெய்தாலும் அவளுக்கு இப்போது பயம் கிடையாது. ஏனென்றால் அப்பாவினிடம் அடிக்கடி சொல்லி, பெருமழையின் போது ஒழுகிய இடத்தையெல்லாம் ஓடுமாற்றிச் செப்பனிடும்படி செய்துவிட்டாள்.

அன்று காலை நேரமெல்லாம் சாவித்திரி, வீட்டின் மூலை முடுக்குகளையெல்லாம் சுத்தம் செய்வதிலும், அழகுபடுத்துவதிலும் ஈடுபட்டிருந்தாள். சுவரில் மாட்டியிருந்த படங்களை இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்குமாக மாற்றிக் கொண்டிருந்தாள். இன்னும், கோட் ஸ்டாண்டுகள், நிலைக் கண்ணாடிகள் - இவையெல்லாம் எங்கெங்கேயிருந்தால் நன்றாயிருக்குமென்று பார்த்துப் பார்த்து மாட்டினாள். சுவர் மூலையில் எங்கேயாவது கொஞ்சம் ஒட்டடை காணப்பட்டால், உடனே அதை எடுத்துக் கொல்லையில் தூரக் கொண்டுபோய்ப் போட்டுவிட்டு வந்தாள். அலமாரியில் புத்தகங்களை ஒழுங்காக எடுத்துத் தட்டி அடுக்கி வைத்தாள். இடையிடையே, முற்றத்தில் காக்காய் கத்தும் சத்தம் கேட்டால், ஓடிப் போய்க் காக்காயைப் பார்த்து, "ஓகோ! இன்னிக்கு மாப்பிள்ளை வரப்போறார்னு உனக்குத்தான் அதிசயமாய்த் தெரியுமோ? எனக்குத் தெரியாதோ?" என்று அதனுடன் பேசிவிட்டு வந்தாள். குறுக்கே நெடுக்கே செவிட்டு வைத்தி போனால், அவனைப் பார்த்து, "அடே! இரண்டு நாளைக்கு கண்ட இடத்தில் எல்லாம் மூக்கைச் சிந்திப் போடாமலிரு! உனக்குப் புண்ணியமாய்ப் போகட்டும்!" என்றாள்.

ஆயிற்று; சூரியன் உச்சி வானத்தைக் கடந்து மேற்புறம் சாயத் தொடங்கிற்றோ, இல்லையோ, சாவித்திரியின் பரபரப்பும் பதின்மடங்கு அதிகமாயிற்று. சம்பு சாஸ்திரியிடம் போய், "அப்பா! ஸ்டேஷனுக்கு வண்டி அனுப்ப வேண்டாமா?" என்று கேட்டாள். அவர், "நீ கவலைப்படாதே, அம்மா! எனக்குத் தெரியாதா? நானே ஸ்டேஷனுக்குப் போய் மாப்பிள்ளையை அழைச்சுண்டு வர்றேன்!" என்றார். ஆனாலும் இன்னும் அரை மணி ஆனதும், சாவித்திரி மறுபடியும் அவரிடம் வந்து, "ஏனப்பா! வண்டி ஓட்டிண்டு போறதுக்கு நல்லான் இன்னும் வர்றலையே?" என்று கேட்டாள்.

"வந்தாச்சு, அம்மா! வண்டி பூட்டிண்டு வர்றதுக்குத் தான் போயிருக்கான்" என்றார் சாஸ்திரியார்.

சுமார் மூன்று மணிக்குச் சம்பு சாஸ்திரியார் வண்டியில் ஏறிக்கொண்டு புதுச்சத்திரம் ஸ்டேஷனுக்குக் கிளம்பிய பிறகுதான் சாவித்திரியின் மனம் கொஞ்சம் நிம்மதி அடைந்தது. வண்டி தெருக்கோடி வரையில் சென்று மறைந்த பிறகு சாவித்திரி உள்ளே வந்து, அவசர அவசரமாகத் தன்னை அழகுபடுத்திக் கொள்ளத் தொடங்கினாள்.

கல்யாணத்தின்போது, "பெண் ரொம்பப் பட்டிக்காடு; அதனால் மாப்பிள்ளைக்குப் பிடிக்கவில்லை" என்ற பேச்சு சாவித்திரியின் காதில் விழுந்ததென்று சொன்னோமல்லவா? "அதெல்லாம் ஒன்றுமில்லை" என்று அப்போது சாஸ்திரி சொன்னதை அவள் பூரணமாய் நம்பினாள். ஆனால், கல்யாணத்திற்குப் பிறகும் ஊரில் சிலர் இம்மாதிரி பேசிக் கொண்டுதான் இருந்தார்கள். ஆகையால், இந்த ஞாபகம் அடிக்கடி சாவித்திரிக்கு வந்து கொண்டிருந்தது. நினைத்துப் பார்க்கப் பார்க்க, ஊரார் சொல்வது வாஸ்தவந்தானே என்றும் தோன்றிற்று. மாப்பிள்ளையின் நாகரிகத்தையும், தன்னுடைய பட்டிக்காட்டு நடை உடை பாவனைகளையும் அவள் ஒப்பிட்டுப் பார்த்துப் பார்த்து வெட்கம் அடைந்தாள். கல்யாணமாகி நாலாம் நாள் அன்று ஸ்ரீதரன் 'புல் ஸுட்' அணிந்திருந்த போது எடுத்த போட்டோ படம் ஒன்று வீட்டில் இருந்தது. அதை எடுத்து வைத்துக் கொண்டு சாவித்திரி அடிக்கடி பார்ப்பாள். கல்யாணத்தின்போது தனக்குச் செய்திருந்த கர்நாடக அலங்காரத்தை நினைத்தால் அவளுக்குக் கோபம் கோபமாய் வந்தது. 'அவாளுடைய நாகரிகம் எங்கே? இந்தப் பட்டிக்காட்டுக் கர்நாடகம் எங்கே? என்னைப் பட்டிக்காடு என்பதாக அவாள் வெறுத்தால்தான் எப்படிப் பிசகு ஆகும்?' என்று எண்ணுவாள். அதே புருஷனுக்குத் தகுந்த மனைவியாக வேண்டுமென்றும் தீர்மானித்துக் கொள்வாள்.
 




Yazhini1

Moderator
Staff member
Joined
Nov 8, 2019
Messages
228
Reaction score
23
2.10. வண்டி வந்தது!


சமையலறையில் மங்களமும், சொர்ணம்மாளும் குஞ்சாலாடு பிடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பக்கத்தில் செவிட்டு வைத்தி, புதுவேஷ்டி - புதுப்புடவைப் பொட்டணங்களைப் பிரித்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். புது வேஷ்டி - புதுப்புடவைகளை அவன் கையால் தடவித் தடவிப் பார்த்து அவற்றின் மிருதுத் தன்மையை அநுபவித்துக் கொண்டிருந்தான்.

சொர்ணம்மாள், "நான் சொன்னபடியே ஆச்சா, இல்லையா, பார்த்துக்கோ! பொண்ணுக்கு அறுபது ரூபாய்க்குப் புடவை, உனக்குப் பன்னிரண்டு ரூபாயிலே புடவை, மாப்பிள்ளைக்கு முப்பத்தைந்து ரூபாயிலே வேஷ்டி; மச்சினனுக்கு ஒண்ணரை ரூபாயிலே வேஷ்டி. இதென்னடி வெட்கக் கேடு! உடம்புக்குப் பால் குடிக்காட்டாலும், ஊருக்காவது குடிக்க வேண்டாமா? நீயும் பேசாம இருக்கயே?" என்றாள்.

அதற்கு மங்களம், எரிச்சலாக, "என்னை என்னடி அம்மா பண்ணச்சொல்றே! அப்பவே கிணத்துலே குளத்திலே என்னைப் பிடிச்சுத் தள்ளி விடறதுதானே? இந்த அழகான மாப்பிள்ளையைப் பார்த்து நீதானே என்னைக் கொண்டு வந்து கொடுத்தே?" என்றாள்.

"நான் எல்லாம் சரியாத்தான் பார்த்துக் கொடுத்தேன். எதிலே குறைவாய்ப் போச்சு? சொத்தில்லையா, பணமில்லையா, வயது தான் அப்படி ரொம்ப ஜாஸ்தியா? உன்னைப் போலே இளையவளா வாழ்க்கைப்பட்டவாளெல்லாம் ராஜாத்தி மாதிரி இருக்கலையா? நீ எல்லாத்துக்கும் வாயை மூடிண்டு இருந்து இருந்துதான் இப்படி இடங்கொடுத்துப் போச்சு. இல்லாட்டா, ஒரு பொண் கல்யாணத்துக்கு யாராவது பத்தாயிரம் ரூபாய் செலவழிப்பாளோ?"

"அதோடே போனாத் தேவலையே? இப்போ, அவா கல்கத்தாவிலேயிருந்து தீபாவளிக்கு வந்துட்டுப் போற செலவெல்லாம் உன் மாப்பிள்ளைதான் கொடுக்கப் போறாராம்!"

"ஐயையோ! நெஜந்தானாடி? இதென்ன அநியாயம்? இந்தக் குடித்தனம் உருப்படறதா, இல்லையா, தெரியலையே? இன்னும், திரட்சி, வளைகாப்பு, சீமந்தம்னு நெடுக வந்துண்டே யிருக்குமே?"

"கல்யாணத்திலே பத்தாயிரம் ரூபாய் கடன். நிலத்திலே இரண்டு வேலி மண்ணடிச்சுப் போயிடுத்து. ஐயாயிரம் ரூபாய் செலவழிச்சாத்தான் மறுபடி நிலமாகுமாம். எப்படிக் கடனடைக்கப் போகிறாரோ, பாக்கி என்ன மிஞ்சப் போறதே, ஸ்வாமிக்குத்தான் தெரியும்"

"நான் சொல்றேன் கேளு, மங்களம்! இத்தனை நாளும் போனதெல்லாம் போகட்டும். இனிமே, பொட்டிச் சாவியை நீ வாங்கி வைச்சுக்கோ. ஒரு காலணாச் செலவழிக்கிறதாயிருந்தாலும், உன்னைக் கேட்டுண்டுதான் செலவழிக்கணும்னு சொல்லிடு. இல்லாட்டா எல்லாருமாச் சந்தியிலே நிக்க வேண்டியதுதான்"

இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கையில், செவிட்டு வைத்தி புடவைகளையும், வேஷ்டிகளையும் ஒவ்வொன்றாய்ப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். நடுவில் நடுவில், "அக்கா! இது யாருக்கு? இது உனக்கா? இதுதான் மாப்பிள்ளைக்கா?" என்று கேட்டுக் கொண்டிருந்தான். மாப்பிள்ளைக்கு வாங்கியிருந்த சேலம் மயில்கண் வேஷ்டியைப் பார்க்கப் பார்க்க, அதைத் தான் உடுத்திக்கொண்டால் எப்படியிருக்குமென்று அவனுக்கு யோசனை தோன்றி விட்டது. வேஷ்டியை ஒவ்வொரு மடிப்பாகப் பிரித்து, கடைசியில் இரட்டை மடிப்புக்கு வந்ததும், எழுந்து நின்று அதைக் கட்டிக் கொள்ள முயன்றான்.

இந்தச் சமயத்தில், ஆலாத்திக்கு மஞ்சள் நீர் கரைத்து வைத்திருக்கிறதா என்று விசாரிப்பதற்காகச் சாவித்திரி அங்கே வந்து சேர்ந்தாள். "ஏன், சித்தி! வண்டி வரலாச்சே..." என்று சொல்லிக் கொண்டே வந்தவள் மாப்பிள்ளைக்கு வாங்கியிருந்த வேஷ்டியைச் செவிட்டு வைத்தி கட்டிக்கொள்வதைப் பார்த்ததும், மற்றதையெல்லாம் மறந்துவிட்டாள்; இரண்டே எட்டில் செவிட்டு வைத்தி அருகில் சென்று, "சீ" என்று ஓர் அதட்டல் போட்டு, அவன் உடுத்திக்கொள்ள முயன்ற வேஷ்டியைப் பிடுங்கினாள்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சொர்ணம்மாளுக்கு வயிற்றெரிச்சல் பொங்கிக்கொண்டு வந்தது. "ஏண்டி சாவித்திரி! உனக்கு என்னடி வந்துடுத்து இவ்வளவு ராங்கி! அந்த வேஷ்டியை அவன் பார்த்தா ஊசியா போயிடும்? இல்லாட்டா, அவன் தொட்டாத் தீட்டுப்பட்டுப் போயிடுமா? அவனைச் சாதியை விட்டுத் தள்ளி வச்சிருக்கா?" என்றாள்.

அத்தியாயங்கள் 1, 2 முடிந்தது​
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top