அத்தியாயம் 08
"டேய் விடுடா! விடு"
இடுப்பை வளைத்து மரக்கட்டையைத் தூக்குவது போல கிடைவாக்க்கில் அவளது உடல் இருக்கும் படி வெளியே சென்ற ஆராதனாவை அவள் கத்தக் கத்த உள்ளே தூக்கிவந்த பத்ராவைப் பார்த்துப் பதறித்தான் போயினர் ஹாலில் இருந்த அனைவரும்.
ஹாலினுள் வந்து அவன் அவளை இறக்கி விட்டது தான் தாமதம் பளார் என்று அவனது கன்னத்தில் பதிந்தது ஜனார்த்தனத்தின் விரல்கள். அடித்தாலும் அசையாமல் இருந்தவனைப் பார்த்து
"காட்டு மிராண்டியாடா நீ? ஒரு பொண்ணை இப்பிடித்தான் கையாளுவாங்களா? ச்சே! இப்படியாடா வளர்த்து வைச்சு இருக்கேன் உங்க ரெண்டு பேரையும்? ஒருத்தன் ஒரு பொண்ணைக் கடத்திட்டு போறான். இன்னொருத்தன் என் கண்ணு முன்னாடியே இன்னொரு பொண்ணைத் துன்புறுத்துறான்" என்று கத்தியவரை சலனமே இல்லாமல் பார்த்தவன்
"பாஸ் இவங்களை வெளியில அனுப்பக் கூடாது என்று சொல்லி இருக்கார்" என்று அமர்த்தலாகவே பதிலுறுத்தான்.
அவ்வளவு கத்திய பின்னும் ரோபோ போல பதிலளித்தவனைப் பார்த்து ச்சீ என்று ஆனது அவருக்கு. அவரின் நிலை உணர்ந்து அவரின் தோள்களில் கைகளைப் பதித்து அழுத்திய அஷ்வஜித் மாதவியின் முன்னால் சென்று மண்டியிட்டு அமர்ந்தான்.
"ஆன்டி! நீங்க யார்? என்ன செய்தீங்க?இது எதுவுமே எனக்குத் தெரியல. ஒரு பொண்ணை தவறான கண்ணோட்டத்தில நான் பார்த்ததே இல்லை. அதுக்குக் காரணம் என் அண்ணாவோட வளர்ப்பு!! அப்படிப்பட்டவர் இப்போ உங்க பொண்ணைத் தன்னோட கட்டுப்பாட்டுல வைச்சு இருக்கிறார் என்றப்போ எனக்கே அதிர்ச்சியா தான் இருக்குது."
" நான் பேசுறேன் அண்ணன் கிட்ட. கொஞ்ச நாள் பொறுத்துக்கோங்க. எங்களால ஒருத்தங்க வாழ்ந்தாங்க என்று தான் இருக்கனும். அழிந்து போனாங்க என்று இருக்கக் கூடாது" இறுதி வரிகளைக் கூறும் பொழுது அஷ்வஜித்தின் கண்கள் பத்ராவையே நோக்கியது.
மாதவி தயக்கமாக தலையசைக்கவும் எழுந்து பத்ராவை வெட்டவா குத்தவா என்று முறைத்துக்கொண்டு இருந்த ஆராதனாவின் அருகே சென்றவன்
"மிஸ்?" என்று இழுத்தான்.
"ஆராதனா" பல்லைக் கடித்தவாறு பதில் வந்தது.
"ஆல்ரைட்! மிஸ்.ஆராதனா! உங்க நட்போட வலிமையைப் பார்த்தால் உண்மையிலேயே ஆச்சர்யமா இருக்குது. உங்க பிரெண்ட் என் அண்ணன் கூட இருப்பது யார் யாருக்கெல்லாம் இப்போ தெரியும்?" புருவம் சுருக்கியவள்
"இங்க இருக்கிறவங்களுக்கு.." என்று தயக்கமாக இழுத்தாள்.
"ரைட்! இப்போ பேப்பர்ல உங்க பிரெண்ட் தன்னோட காதலனோட போய் இருக்காங்க என்று போட்டு இருக்குது. இப்போ நீங்க பொலிஸுக்கு போய் விஷ்வா அண்ணா அவங்களைக் கடத்தி வைச்சு இருக்கிறார் என்று சொன்னா அது வேற மாதிரி உங்க பிரெண்டோட வாழ்க்கையைப் பாதிக்கும் என்று உங்களுக்குத் தெரியலயா?"
"என்ன மிரட்டுறீங்களா? இல்ல உங்க அண்ணன காப்பாத்தப்பார்க்கிறீங்களா?"
"ஏங்க?! மிரட்டுறவன் இப்படித்தான் பதமாப் பேசிட்டு இருப்பானா? உங்க ப்ரெண்ட் ஒரு நாள் முழுக்க என் அண்ணனோட கஸ்டடியில இருந்து இருக்காங்க. பிடிச்சவனோட போறது வேற! இது முள் மேல விழுந்த சேலையைப் பதமா எடுக்கா வேண்டிய நேரம். அன்ட் அண்ணனுக்கு போலிஸ் லெவல் இல்லை, மினிஸ்டர் லெவல்ல பவர் இருக்கு! எப்படியும் நீங்க வெளியில போக விடமாட்டாங்க இவங்க."
" அதுக்கு பதிலா எங்களோட கெஸ்ட்டா கொஞ்ச நாள் இருங்க ப்ளீஸ். உங்க பிரெண்டோட சேர்ந்து உங்க ரெண்டு பேரையும் காணல என்றதுமே உங்க மேல சந்தேகம் வந்து இருக்கும்ல எல்லோருக்கும்? இப்போ உங்களையும் தாங்க தேடிட்டு இருப்பாங்க! புரிஞ்சுக்கோங்க..இங்க நீங்க சுதந்திரமா இருக்கலாம். உங்க ப்ரெண்டை உங்க கிட்ட சேர்க்க வேண்டியது என்னோட பொறுப்பு"
அஷ்வஜித்தின் பேச்சின் நியாயம் ஆராதனாவிற்கும் புரியவே செய்தது. அமைதியாக யோசித்தவள் மெல்ல சென்று மாதவியின் அருகில் அமர்ந்து கொண்டாள்.
அமந்ததுமே தன்னருகில் சோர்ந்து போய் இருந்த மாதவியைத்திரும்பிப் பார்த்தவளுக்கு இப்போது அவரது மனநிலை எப்படி இருக்கும் என்று புரிந்தது. அவர் இவர்களைக் கோவமாக பேசாததே ஏதோ ஒரு பழைய கணக்கின் விடைதான் இப்பொழுது நடக்கும் சம்பவங்கள் என்றும் புரிந்தது.
ஆனால் அதற்குப் பலியானது மிருணாளினியின் வாழ்க்கையல்லவா. ஒரு பெருமூச்சுடன் மாதவியின் கைகளை அழுந்தப் பற்றிக்கொண்டாள்! தான் இருக்கின்றேன் என்பது போல.