அத்தியாயம் 13
மிருணாளினியின் மனது பதறித்தான் போனது! எதற்காக என்று அவளுக்கே தெரியவில்லை. கத்திமுனையில் கடத்திவைத்திருப்பவனின் நலனை மனம் நாடுவதன் விந்தையும் புரியவில்லை. ஆனால்! அவன் தன்னைத் தானே வருத்திக்கொள்வதைப் பார்த்துக்கொண்டு இருக்கவோ அவனது துன்பத்தில் இன்பத்தைக் காணவோ அவளது இயல்பு இடம் கொடுக்கவில்லை என்பது தான் உண்மை.
பல திரைப்படங்களில் கண்டு இருக்கின்றாள். பெண்களைக் கடத்தி இருட்டறையில் நான்கு ஐந்து தடியர்களின் பாதுகாப்பில் எவ்வளவு கொடூரமாகக் கையாளுவார்கள். ஆனால் தாயின் நலனைக்காட்டி பயமுறுத்தி தன்னை இந்த வீட்டில் வைத்து இருப்பதைத் தவிர அவளது தேவைகள் எவையுமே இங்கே மறுக்கப்படவில்லை. மரியாதையும் கூட! என்ன அவளைக் காணும்பொழுது விஷ்வஜித்திடம் எழும் கோவம் அதுதான் அவளைத் துன்புறுத்திக்கொண்டு இருக்கின்றது.
கண்ணியமாக எதிரியின் பெண்ணை நடத்தும் பாங்கு அவளை ஏதோ ஒரு மூலையில் இளக்கிக் கொண்டு இருந்தது. அதைவிட மல்லியின் வாழ்க்கையில் அவன் செய்த செயல்கள்?! தன்னைக் கடத்தி வைத்திருப்பது முதல் அவன் செய்யும் அனைத்திற்கும் அவன் பக்கம் ஏதோ ஒரு நேர்மையான விடயம் இருக்கின்றது என்று தோன்றிக்கொண்டே இருந்தது.
மனதில் தோன்றிய சலனம்தான் அவளை அவனது கோவத்தையும் மீறிப் பூஜை அறையைத் திறக்கும் அதிகப்பிரசங்கித் தனத்தை நடத்தச்செய்ததோ? அவன் நினைத்து இருந்தால் இந்த மல்லியைக் கூட அவளுக்கு எதிராக இருக்க செய்து இருக்கலாம் அல்லவா? ஆனால் அவனது கோவத்தை அவனுடன் வைத்துக்கொண்டு மற்றையவர்களை அவளுடன் இயல்பாக நடமாடச் செய்த அவன், அவளுக்கு சம்திங்க் ஸ்பெஷல் தான் இல்லையா?
உள்ளங்கையில் சிக்கரெட்டின் நெருப்பு தந்த எரிச்சலைத் தாங்கிக்கொண்டவன் மீண்டும் கையைச் சுடச்செல்லவும் வளைக்கரம் ஒன்று அவனது கையைப் பற்றியது. அவனைப் பற்றிய கை மிருணாளியினது என்று நன்கு தெரியும் விஷ்வாவிற்கு. அக்கையின் பிடியை அப்படியே உதறியவன் கையை மீண்டும் பற்றிய மிருணாளினி கோவத்தில்
"பைத்தியமா விஷ்வா நீ?" என்று கத்தினாள்.
அவள் குரலில் நிமிர்ந்து பார்த்தவனின் முகத்தை அங்கிருந்த மெல்லிய விளக்கொளியில் கண்டவள் அதிர்ச்சியில் அப்படியே கைப்பிடியை தளரவிட்டாள். முகத்தில் அறைந்ததன் விளைவாக அவனது இலேசாக வளர்த்து சீராக வெட்டப்பட்டு இருந்த தாடியைத் தாண்டி கன்னமும் விழியும் சிவந்து போய் இருந்தது தென்பட்டது.
"அய்யோ!" என்று பதறியவள் "என்ன..என்ன இதெல்லாம்?" என்று தடுமாறியபடி நிறுத்தினாள். அவளை விநோதமாகப் பார்த்தவன்
"உள்ள போ!" என்று அமைதியான குரலில் கூறினான். அந்தக் குரலில் அடிவயிறு சில்லிட்டாலும் அவனைப் பேசச்செய்தால்தான் அவன் பக்கம் இருக்கும் காரணத்தை அறியலாம் என்ற எண்ணம் உந்த
"இல்லை, நான் போக மாட்டேன்! ஏன் உன்னையே காயப்படுத்திக்கிற? பைத்தியமா நீ?" என்று மீண்டும் கேட்டாள்.
"ஹ! ஆடு நனையுதே என்று ஓநாய் அழுற கதையைக் கேள்விப்பட்டு இருக்கேன். இங்க ஓநாய் நனையுது என்று ஆடு அழுது! விந்தையா இருக்குல?" என்று கேட்டுவிட்டு கையில் இருந்த சிகெரெட்டைத் தூரப்போட்டான். போட்டவன் எழுந்து செல்லத்திரும்பவும்
"நில்லு விஷ்வா! எதுக்காக உன்னையே காயப்படுத்திக்கிட்ட என்று சொல்லிட்டு போ!"
அவளின் குரலில் நின்றவன் திரும்பி அவள் பக்கமாக ஒரு அடி எடுத்து வைத்து அணிந்திருந்த நைட் பான்ட்டின் பாக்கெட்டில் கையை விட்டு அழுத்தமாக நின்றுகொண்டு அவளை உற்றுப் பார்த்தான்.
அவளின் விழிகளில் தெரிந்த உணர்வை என்ன என்று அறியமுற்பட்டுத் தோற்றவன் "ஒரு பெண் மேல என்னோட பலத்தைக் காட்டி இருக்கேன் பாரு! அதை நினைச்சு என் மேலே வந்த அருவருப்பால தான் என்னைத் தண்டிச்சுக்கிட்டேன்! அந்த இடத்தில எந்தப்பொண்ணு இருந்தாலும் இதே தான். உனக்காக என்று நினைச்சுக்காத!" எதுக்காக்க விளக்கம் கொடுக்கின்றோம் என்று அவனுக்கே தெரியவில்லை. அவனைப் புரியாத பார்வை பார்த்தவள்
"பொண்ணை அடிக்க கூடாது. ஆனா கடத்தி வைச்சு இருக்கலாமா?" என்று நக்கலாகக் கேட்கவும் இளகியிருந்த அவனது முகம் மீண்டும் இறுக தலை சற்று நிமிர்ந்து விழிகள் குரோதத்தில் ஜொலித்தது.
"பிரகாசம், அருணகிரி விஷயத்தில என்னால சரி தப்புலாம் யோசிக்க முடியாது. அவனுகளுக்கு எதிரா சேர்த்து வைச்சு இருக்கிற துருப்புச்சீட்டுகளில நீயும் ஒன்று அவ்வளோ தான்" அவனது பேச்சில் முகத்தை வினாவாக்கியவள்
"அப்பா அப்பிடி என்ன செய்தார் விஷ்வா? அவர் நல்லவராத் தான் இருந்தார். இப்போ தான் கொஞ்ச நாளா..."
அவள் முடிக்கக் கூட இல்லை. கோவம் கலந்து "ஹா..ஹா" என்று வெறி வந்தவன் போல சிரித்தவனின் சிரிப்பைக் கண்டு பயத்தில் நாக்கு அப்படியே பற்களின் பின்னே பதுங்கிக் கொண்டது.
சிரிக்கும் அவனையே பயத்துடன் நோக்கிக் கொண்டு இருந்தவளை சிரிப்பை நிறுத்திவிட்டு முறைத்தவன்
"அப்பா! அப்பா வா? ஹா..ஹா.. அவனை ஒரு மனுஷனாக் கூட பார்க்கக்கூடாது. அவன் உனக்கு அப்பா! ஹா..ஹா.. இப்போ கேட்டுக்கோ உன் அப்பாவோட அழிவு அவ்வளவு தூரத்துல இல்லை. அவனையும் அருணகிரியையும் துடிக்கத் துடிக்க கொல்லப் போறது நான் தான். இந்த விஷ்வா தான்" இறுதியில் அரச கம்பீரத்துடன் தனது பெயரைக் கூறியவன் "உள்ள போ!" என்று விட்டு செல்ல அவனின் பேச்சின் தாக்கத்தில் அவன் அமர்ந்திருந்த இருக்கையிலேயே தொப்பென்று அமர்ந்தவள் “என்ன செய்வது? எப்படி இவனைத் தடுப்பது?" என்று யோசிக்கத் தொடங்கினாள்.
*******