இவள் என்னவள்-13
நான் வந்து இவ்வளவு நேரம் ஆச்சு, எங்க போனான்னு தெரியலயே என்னோட சஞ்சு? என அவன் இதயம் சஞ்சுவைத் தேடினாலும், வர வர இவ போக்கே சரியில்லயே, கொஞ்சம் கூட கண்டுக்கிற மாதிரி தெரியல, ‘மயிலே மயிலேன்னு சொன்னா இறகு போடாது போல இருக்கே... முதல்ல இதுக்கு ஏதாவது ஒரு வழி பண்ணணும்’ என்ன பண்ணலாம் என யோசித்தவாறே இருக்க சஞ்சு அவனுக்கு மசாஜ் செய்ய தேவையான பொருட்களுடன் வந்தாள்.
நான் வந்து எவ்வளவு நேரம் ஆச்சு இவ ஆடி அசைந்து வர்ரதப்பாரு “ஏன் சஞ்சு? உங்க சீனியர் கேர்ள்ஸ் நம்பர் வேணுமே” சஞ்சுவை சீண்டிவிட்டு வேடிக்கை பார்க்க அவ்வளவு ஆசை கொண்டான்
“எங்க சீனியர்ஸ் நம்பர் உங்களுக்கு எதுக்கு மம்மு?” தன் இடுப்பில் கையை வைத்து கண்டிக்கும் பாவனையில் கேட்டாள்.
“எவ்வளவு நாள்தான் நான் நல்ல பிள்ளை மாதிரியே இருக்கிறது, கொஞ்சம் பேசி பழகலாம்னு பார்த்தேன், லைப் கலர் புல்லாவே இல்ல தெரியுமா? ரொம்ப போரிங்கா போற மாதிரி இருக்கு” என புலம்புவது போல தன் முகத்தை மாற்றினான்.
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம், நல்ல பிள்ளையாவே இருக்க பாருங்க” கலர் வேணுமா...ம் கல..ர்..... வாய் விட்டே முனங்கினாள். “ஏன்தான் உங்களுக்கு இப்படியெல்லாம் தோணுதோ...” அவளின் எதிர்ப்பை மென்மையாய் பதிவு செய்தாள் அவனிடம்.
மென்மையாக முறுவலித்தவன், இப்போது குரலில் எதார்த்தம் மட்டுமே இருக்க “உங்க காலேஜ்லயே யாரு ரொம்ப அழகான பொண்ணு சஞ்சு?”
கிண்டல் பண்ணாம சீரியஸா தான் கேக்குறார் போல என அவளுக்குத் தோன்ற, ”சீனியர்ஸ் நம்பர் இருக்கு, ஆனா அந்த சீனியர்ஸ் இருக்காங்கள்ல மம்மு”, சிவு முகத்தை காண அதில் கேலி தெரியவில்லை என்பதை உணர்ந்து “அவங்க கையில எப்பவும் புத்தகமோ, பேனாவோ இருக்காது, அதற்கு மாறாக காம்பேக்ட், பவுன்டேஷன், லிப் கிளாஸ் இப்படி ஏதாவது மேக்கப் ஐடம்ஸ் இருக்கும், சரியான மேக்கப் பைத்தியம்” சீனியரின் அருமை பெருமைகளை கூறினாள்.
“ஐயோ மேக்கப் பேஸா? வேண்டாம், மேக்கப் இல்லாத சிம்பிளான பொண்ணு தான் வேணும்” யாரை நினைச்சு சொல்றானோ?
தெரியுமே! மம்முக்கு மேக்கப் பேஸ் பிடிக்காது என சிந்தித்தவளின் மனம் துள்ளிற்று. “எங்க காலேஜ்ல மேக்கப் இல்லாத முகம் என் முகம் மட்டும் தான், அப்போ என்னோட நம்பர் வேணா தரவா மம்மு”
“உன்னோட நம்பர் தான் என்கிட்டயே இருக்கே, உன் கூட பேச வேண்டியதை வீட்டுலயே பேசிக்கலாமே, பின்ன போன்ல பேச என்ன இருக்கு?”
“அவ்வளவு தான மம்மு, நாளைக்குப் பாருங்க. உங்க கவலையை நான் போக்குறேன், ஒகேவா” அவனின் மகிழ்ச்சிக்காக திட்டம் போட்டாள்
சிவு எண்ணியதோ, சஞ்சுவை சீண்டியதால் இனி அடிக்கடி அவள் தன்னுடன் பேசுவாள், பேச.... பேச.... காதல் உணர்வுகள் மலரும் என்று, ஆனால் நடந்ததோ இருவரும் எதிர்பார்க்காதவை, இருவரும் தானாகவே பிரச்சனையை இழுத்துக் கொண்டார்கள்.
மறுநாள் மதியமே சிவுவின் கைப்பேசி சத்தம் எழுப்பியது, சிரித்துக்கொண்டே... ”ஹாய் சஞ்சு...ம்மா என்ன விஷயம்? பேசிப் பழகலாம் என போன் பண்ணியா?” அவன் சீண்டலை கண்டுகொண்டாள்
“கண்டிப்பா மம்மு, பேசிப்பழகலாம்..... சாப்பிட்டீங்களா?” என தொடங்கினாள்
“இதைக் கேக்கவா போன் பண்ண? சாப்பிட்டாச்சு....... நீ என்ன பண்ற? காரணம் இல்லாம நீ இந்த டைம் கூப்பிட மாட்டியே?”
“சும்மா தான் மம்மு, இப்ப ஃப்ரீ ஹவர். இன்னைக்கு சாயங்காலம் நீங்க ப்ரீயா?“………………. சற்று பேச்சை நிறுத்தி “மாலை எங்க கல்லூரி அருகில் இருக்கும் காபி ஷாப் வர்றிங்களா மம்மு?”
“வேலை இருக்கே சஞ்சு, எப்படிம்...மா வரமுடியும்?” அவனது நிலைமையைத் தவித்துக் கூறினான்
“ப்ளிஸ்... ப்ளிஸ்.... மம்மு... எனக்காக வாங்க” தனக்கே விருப்பம் இல்லாத ஒர் செயலை சிவுவின் விருப்பத்திற்காக செயல்படுத்துவதாக எண்ணினாள்.
“சரி.... நீ ஆசைப்பட்டுக் கூப்பிட்டதால என்னோட வேலைகள் எல்லாத்தையுமே ஒதுக்கி வச்சிட்டு உனக்காக வர்ரேன் போதுமா” இந்த வார்த்தையே சஞ்சுவுக்கு வினையாகப் போவது தெரியாம போச்சு.
.............................................
அந்திமாலை தன்னவளின் விருப்பத்திற்கு இணங்கித் தன் பணிகளை விரைந்து முடித்தும் முடிக்காமலும் விட்டபடி காபி ஷாப்பிற்குள் நுழைந்தான் சிவு. அந்த வட்ட வடிவ மேஜையை சுற்றிலும் சஞ்சுவும் அவளது தோழிகளுமான திவ்யா, அர்ச்சனாவுடன், அன்று கல்லூரியில் கண்ட சீனியர் பெண்களும் அமர்ந்து இருந்தனர்.
இவர்களைக் கண்டவுடன் சிவுவின் முகத்தில் கடினத்தன்மை கூடியது, சிவுவின் கண் பார்வை ஏதோ உணர்த்த சஞ்சு அவனை நோக்கி சென்றாள்.
“என்ன சஞ்சு? இவங்கள பார்க்கவா என்னோட முக்கியமான வேலையை எல்லாம் விட்டுட்டு வரச்சொன்ன?” சற்றே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினான்
“நீங்க தான மம்மு சீனியர்ஸ அறிமுகப்படுத்த சொன்னிங்க, இப்ப எதுக்கு என் மேல கோபப்படுறீங்க?” அவளின் சோர்ந்த முகத்தைக் கண்டவன்
“சரி நீ போ, நான் ஒரு போன் பேசிட்டு வர்ரேன்” என்றவனிடம் “ம்ம்...ம்.....ம்” என்றவள் சிவுவை திரும்பிப் பார்த்தவாறே சென்றாள்.
சிவு தனியாக வந்து தனது அண்ணிக்கு போன் செய்தான். “எப்படி இருக்க சிவு?” தேவி கேட்டு முடிக்கும் முன்னரே பொரிந்து தள்ளினான்
“குசலம் அப்புறமா விசாரிக்கலாம் அண்ணி, சஞ்சு ஏன் இப்படி பண்றா? ஐயோ எனக்கு செம்ம கடுப்பாகுது” செய்வது அறியாது புலம்பினான்
“அப்படி என்ன பண்ணிட்டா? உங்க சஞ்சு செல்லம், என செல்லத்தில் அழுத்தம் கொடுத்து கேட்டாள், ஏன் சிவு இப்படி கோவப்பட மாட்டீங்களே என்னாச்சு”
“எதையோ இழுத்து பனியனுக்குள்ள போட்ட மாதிரின்னு சொல்லுவாங்களே அண்ணி, அந்த மாதிரி நானே இழுத்து வச்சுக்கிட்டேன். சஞ்சுவ என்ன சொல்ல முடியும் கண்டிப்பா இதக்கூட எனக்காக தான் செஞ்சிருப்பா” அவளின் மனதை அறிந்தவனாகக் கூறினான்.
“என்ன பிரச்சினை புரியற மாதிரி சொல்லுங்க தம்பி?, சும்மா சஞ்சு புராணத்தை பாடாம” அநாயாசமாக கேட்டாள் தேவி
“நீங்க சொன்ன மாதிரி காலேஜ் பெண்கள் பற்றி கேட்டு, கொஞ்சம் வெறுப்பேத்துற மாதிரி சீனியர்ஸ் நம்பர் கேட்டு அறிமுகப்படுத்த சொன்னேன், அவ என்னடான்னா உண்மையிலே எல்லோரையும் கூப்பிட்டு வந்துட்டா காபி ஷாப்புக்கு. எனக்கு நல்லா தெரியும் அவளுக்கு இதெல்லாம் பிடிக்காட்டியும் நான் சந்தோசப்படுவேன்னு நினைச்சு இதெல்லாம் பண்றா அண்ணி ”
“சஞ்சு இப்படிதான் செய்வான்னு நினைச்சேன், அதேமாதிரி செஞ்சுட்டா... நல்லதா போச்சு சிவு, இது மாதிரி வாய்ப்பு இனிமே கிடைக்குமான்னு தெரியல, கிடைச்ச வாய்ப்ப நழுவ விட்றாத சிவு”
“நீங்க வேற புதுசா குழப்பாதீங்க அண்ணி, நான் என்ன பண்ணனும்னு தெளிவா சொல்லுங்க”
“ரொம்ப சிம்பிள், நீ பண்ண வேண்டியதெல்லாம், எவ்வளவு பேர் இருந்தாலும் இன்னைக்கு சஞ்சுவுக்கு முக்கியத்துவம் கொடுக்காம, அவளை தூக்கி வச்சுப் பேசாம மற்ற பொண்ணுங்களோட சகஜமா பழகு, அவங்கள பத்தி பெருமையா பேசு, இது போதும், அப்புறம் பாரு அவளாவே உன் வழிக்கு வந்துருவா ”
“சரிங்க அண்ணி, ஆனா இந்த யோசனை சொதப்பிருச்சுனா என்ன பண்றது” என்று கேட்டவனின் குரலில் ஏகத்துக்கும் கவலை எட்டிப் பார்க்க
“நான் சொன்னத சரியா செஞ்சா, எந்தப் பிரச்சனையும் வராது. நீங்க மட்டும் சஞ்சுவ தலையில தூக்கி வச்சு ஆடாம இருங்க போதும்” தனது திட்டத்தை தெளிவுடன் சொன்னாள்
சிவு சஞ்சுவின் தோழிகளின் இருப்பை நோக்கிச் செல்ல, சீனியர் பெண்களில் ஒருத்தி, இங்க வந்து உட்காருங்க என்று அவளின் அருகில் இருக்கும் நாற்காலியை நகர்த்தி அமர செய்தாள். சிவு அமர்ந்தவுடன் மற்ற பெண்களும் அவனைச் சுற்றி ஆரவாரத்துடன் அமர்ந்து கொண்டனர்.
“மம்மு, உங்களுக்கு கேப்போசீனா சொல்லவா” என ஆர்வத்துடன் கேட்டாள் சஞ்சு.
“இல்ல சஞ்சு, நம்மளோட விருந்தாளி இவங்க, அதனால இவங்க ஆர்டர் கொடுக்கட்டும்” என மெனு கார்ட்டை அவர்கள் பக்கம் நகர்த்தினான்.
சிவுவிற்கும் சேர்த்து விலை உயர்வான வொயிட்காபி ஆர்டர் செய்தனர் அந்த சீனியர் பெண்கள்.
‘நம்மளோட எண்ணம் சரியானதாகவும், அடுத்தவங்களுக்கு கெடுதல் நினைக்காமலும் இருந்தாபோதும் நீ நீயாகவே இருக்கலாம். உனக்கு எந்த உடை பிடிக்குமோ அதையே உடுத்திக்கொள், உனக்குப் பிடிச்ச உணவையே நீ சாப்பிடு, அப்படின்னு எப்பவும் என்கிட்ட சொல்ற மம்மு, இப்ப மட்டும் எதற்காக இவருக்குப் பிடித்த காபியை மற்றவர்களுக்காக விட்டுக் கொடுக்கணும்’.
‘மம்முவோட சுவையை எப்பவும் மாற்றிக்கொள்ள மாட்டார். ஆனா இப்ப ஏதோ மற்ற பொண்ணுங்களுக்காக சுவையை மாற்றிக்கிட்டார், எதுக்கு இப்படி எல்லாம் பண்றார் ஒருவேளை சீனியர்ஸ இம்ப்ரெஸ் பண்ண முயற்சி பண்றாரா? போயும் போயும் இவங்கள இம்ப்ரெஸ் பண்ண ட்ரை பண்றாருன்னா அவ்வளவா காஞ்சு போயா இருக்கார்?’.
ஆனால் சிவு சீனியர்ஸ் உடன் ஆர்வமாய் பேசிக்கொண்டு இருப்பது போல இருந்தானே தவிர சஞ்சுவின் மனதை ஆராய்ச்சி செய்பவன் போல பார்த்துக் கொண்டே இருந்தான். சீனியர்ஸ் உடன் சஞ்சுவின் தோழி திவ்யா சென்று அமர்ந்து இருந்தாள், அர்ச்சனா சென்று திவ்யாவின் காதருகே ஏதோ கூற அவளும் சஞ்சுவுடன் வந்து அமர்ந்து கொண்டாள், அர்ச்சனா தனது தோழியின் மனதை அறிந்தவள் ஆயிற்றே.
சீனியர்ஸ்ல ஒருத்தி, “சார் உங்க உடை மிகவும் நேர்த்தியாக இருக்கு” என்றாள், அடுத்தவள் “ஒவ்வொரு உடைக்கும் பொருத்தமா இருக்க உங்க ஷு”, உங்க சிகை அலங்காரம் என புகழ ஆரம்பித்தார்கள். அவர்களின் பேச்சு காதில் விழுந்ததே தவிர அவனின் மனம் முழுவதையும் சஞ்சுவே ஆட்கொண்டிருந்தாள்.
“மம்மு, உங்களுக்கு இந்த நிறம் தான் அழகா இருக்கும்”, இந்த ஷர்ட்டுக்கு இது தான் பொருத்தமா இருக்கும் என பேன்ட்டை எடுப்பாள், புது விதமான ஷுவை தேர்ந்தெடுப்பாள், முடி திருத்தும் இடத்திற்கு தானும் உடன் சென்று அங்கு உள்ள சிகை அலங்கார டிசைன்ஸ் அனைத்தையும் பார்வையிட்டு அதில் அவனுக்கு பொருத்தமானதை தேர்வுசெய்து அதை செய்ய சொல்வாள். இதை அனைத்தையும் தனக்காக செய்யும் தன்னவளை இப்போது நினைத்து நெகிழ்ந்து போனான் சிவு.
சீனியர் பெண்கள் அனைவரும் சிவுவுடன் செல்ஃபி எடுக்க காபி ஷாப்பை சுற்றிச் சுற்றி வந்தார்கள். இந்த மீன் தொட்டியின் அருகில் ஒரு போட்டோ, இந்த பெட்டூனியா செடியின் முன்பாக ஒர் ஸ்நாப் என்று அவனை சுற்றிக் கொண்டே இருந்தனர். இதை பார்த்தவளுக்கு, 'வா சஞ்சு நாம் மட்டும் போய் தனியா போட்டோ எடுக்கலாம்' என்று சிவு அழைப்பான் என்று எண்ணினாள். ஆனால் சிவு கடைசிவரை சஞ்சுவை அழைக்கவில்லை. அதில் அவளின் பெண் மனம் கலங்கிப்போனது, பெண்களுக்கே உரிய குணம் அவளுக்குள்ளும் தலைதூக்க துவங்கி இருந்தது.
கடைசியாக அனைவரிடமும் விடைபெற்று வீட்டிற்குக் கிளம்பினார்கள். சிவுவிடம் எதுவும் பேசாமல் காரின் பீன்சீட்டில் ஏறி அமர்ந்தாள். எப்போதும் சஞ்சு முன்சீட்டில் அமர்வது வழக்கம், ஆனால் வழக்கத்திற்கு மாறாக பீன்சீட்டில் அமர்ந்தாள்.
“ஏன் பின் சீட்டுக்கு போன சஞ்சு, முன்னாடி வா” அவளின் முகம் வாடிப் போய் இருந்தது
“வேற யாராவது வந்து என்னய பின்னாடி போக சொல்றதுக்கு முன்னாடி நானா பின்சீட்டுக்கு வந்துட்டா எனக்கு நல்லதுதான மம்மு” என்ற அவளது பேச்சில் வெறுமை கலந்திருந்ததைக் கண்டவன், அவனின் சஞ்சுவை தனது காதலியாக மாற்ற எண்ணி மேலும் அவளை சீண்டிப் பார்த்தான்.
“ஏன் சீனியர்ஸ் நம்ம கூட வர்றாங்களா?” அவனது வார்த்தையில் பரிகாசம் தெரிந்தது, அவனின் கேளி பேச்சு சஞ்சுவை மேலும் சீண்டியது.
“ஒ....ஹோ...... இது வேற ஆசையா?“ என கோப நிலையை எட்டியிருந்தாள்.
“ஆசையா.... யாரு மேல..... சஞ்சு?”
“ம்ம்ம்.... அந்த சீனியர்ஸ் மேல”
“சி.... சீ... சீ... அவங்க மேலயா? இல்லவே இல்ல...... நீயாதான் கூட்டிட்டு வந்த, இப்போ நீயாவேதான் கோவப்படுற. நீ முன்னாடி வரலனா நான் கார் ஸ்டார்ட் பண்ண மாட்டேன், அப்புறம் உன் இஷ்டம்” தோரணையாக தோள்களைத் தூக்கி காண்பித்து அமர்ந்தான்
நிமிடங்கள் கரைய கார் நகராமல் இருக்க, கோபத்துடன் முன் சீட்டுக்கு சென்று அமர்ந்தாள் சஞ்சு. காரைக் கிளப்பினான் சிவு.
மென்மையான காதல் பாடல் வரிகள் காரில் ஒலித்துக் கொண்டே வர... தன் இதயம் நிறைந்தவளை பார்த்துக் கொண்டே வந்தான் சிவு.
ஆனால் வீட்டிற்கு வரும் வரை இருவரும் ஒருவரோடு ஒருவர் பேசாமாலே வந்தனர்.
விட்டுப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அமைதியாகவே இருந்தான் சிவு. தன்னை பொருட்படுத்தாமல் விடுத்த சிவு மற்ற பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததை எண்ணி வருந்தினாள் சஞ்சு.
‘காதல் விசித்திரமானது, காதலில் அனைத்து உணர்ச்சிகளுக்கும் ஒன்றோடொன்று தொடர்பு உள்ளது. இந்த பொறாமைக்கு மட்டும் முரண்பாடு உண்டு’
அவளின் பொறாமை சிவுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது, ஆனால் அவளோ அவனின் நேசம் தனக்கு இல்லையோ என்பதாக எண்ணி மனக்குமுறலுக்கு உள்ளானாள்.
-----------------------------------------------------------------------------
Last edited: