• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இவள் என்னவள் - 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Rishaba

மண்டலாதிபதி
SM Exclusive
Joined
Jan 8, 2021
Messages
456
Reaction score
665
Location
Theni
இவள் என்னவள் - 3​



சிறுவயதில் இருந்தே சஞ்சு என்ற அழகுப் பதுமையை அக்கறையாகத் தன் கைகளுக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டான் சிவு. டெடிபியர் விரும்பும் குழந்தைகள் எந்த நேரத்திலும் அதைத் தன்னுடனேயே வைத்துக் கொள்வதைப் போல சஞ்சுவை உயிருள்ள டெடிபியரை பார்த்துக் கொள்வது போல பார்த்துக் கொண்டான்.


சஞ்சுவும் அவளது உணர்ச்சிகள் அனைத்தையும் அவனிடத்தில் காண்பித்தாள், அழுதாலும், சிரித்தாலும் ஏன் கோவப்படும் போதுகூட அவள் அருகில் சிவு வேண்டும்.


இந்த மூன்று ஆண்டுகளில் அவனிடம் ஏற்பட்ட மாற்றம் உடம்பில், மனதில் நிறையவே மாற்றங்கள். நல்ல உயரம், பரந்து விரிந்த தோள்கள் பார்க்கும் பெண்களை தன் பக்கம் ஈர்க்கும் வல்லவன். தன் இயல்பால் எவரையும் தன் பக்கம் கவரும் சக்தி கொண்டவன்.


அவனிடம் நெருங்கும் பெண்களை ஏனோ சஞ்சுவோடு ஒப்பிட்டு பார்த்தான், அதன் அர்த்தம் அவனுக்கு விளங்கவில்லை.


ஒன்றாக வளர்ந்த போது அவர்கள் மனதில் ஆசை வரவில்லை, பிரிந்து வாழ்ந்த போது அந்த உண்மையான நேசம் மனதில் பதியத் தொடங்கியது. நெருக்கமாக இருந்த காலத்தில் புரிதல் இல்லை, இப்பொழுது புரிதல் இருக்கிறது நெருக்கம் இல்லை. இரண்டும் இணைந்தால் காதல் தோன்றிவிடுமோ...! லண்டனிலிருந்து திரும்பியதில் இருந்து சிவு தனக்குள் ஏற்பட்ட மாற்றங்களை உணரத் தொடங்கினான். இனங்காணாமால் சுழன்ற மனதை தன் வசமாக்கி மனதின் குரலுக்கு திரையிட்டு தொழிலை கையில் எடுத்தவன். அவளின் காதல் விருப்பத்தை தெரிந்த நொடி அவன் உள்ளம் பல கேள்விகளைத் தனக்குள் எழுப்பியது, அதில் தெளிவு பெறாத அவனின் உணர்வு ஆட்டம் கண்டு துவண்டு போனான். சஞ்சுவின் காதல் ஃபார்முலாவை நினைத்து அன்று இரவு முழுவதும் சிவுக்கு தூக்கம் தொலைந்தது.


அடுத்த நாள் காலை சஞ்சு எழுந்திருக்கும் முன்பாக சிவு அலுவலகம் சென்று விட்டான், காலை நேரம் தான் பார்க்க முடியவில்லை என்றால் இரவும் தாமதமாக வந்தான், இதுவே சில நாட்கள் தொடர்ந்தது. சஞ்சு அவனைப் பார்க்க முடியாமல் தவித்தாள். வார இறுதியில் இன்று மம்மூவை எப்படியாவது பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதிகாலையிலேயே எழுந்து அவன் அறையை நோக்கி சென்றாள்.


“குட்மார்னிங் மம்மூ...”


“குட்மார்னிங் சஞ்சு” என்று மீண்டும் செய்தித்தாளில் நுழைந்தான்.


தன்னை தவிர்ப்பதாக எண்ணி கடுப்பானவள் செய்தித்தாளைப் பிடுங்கி ஓரமாக வைத்தாள்.


என்ன..... என்பது போல பார்வை பார்த்தான்


பார்த்தவனை.... “அப்ப... இப்படி பார்த்தா பயந்திருவோமா?” என்று துடுக்குடன் அவன் அருகில் அமர்ந்தாள்.


“நீ எதுக்கு என்னப் பார்த்து பயப்படுற?”


“அப்ப நீங்க என்னப் பார்த்து பயப்படுறீங்க... அப்படியா?”


“ஏன்டா அப்படி கேக்குற?” என்று வாஞ்சையாக வினவினான்.


“அப்புறம் ஒரு வாரமா உங்கள கையில பிடிக்க முடியல, அதான் இன்னைக்கும் கிளம்பிருவீங்கனு லீவுன்னு கூட பார்க்காம சீக்கிரமா எழுந்து வந்தேன்.”


“அச்சோ, என்ன பார்க்கிறதுக்காக உன்னோட தூக்கத்தையே தியாகம் பண்ணிட்டியா?” என நக்கலாய் சிரித்தான்.


மம்மூ,” இப்போ கூட தூக்கம் வருது”, கொட்டாவி விட்டபடியே அவன் தோளில் சாய்ந்தாள்.


அவள் அருகாமையை ரசித்து மனம் நிறைந்தான்


அவள் தலையை மெல்ல வருடிவிட்டு,” நீ போய் தூங்கு, இன்னைக்கு நான் எங்கும் போகல... போ”


“மம்மூ, தூங்கல கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணிக்கிறேன் ப்ளீஸ், உங்க கூடவே இருக்கேன்” அவன் தோள்களை தலையணையாக்கி கண்களை மூடினாள்.


அவள் தலையை வருடியபடி... சீ... என்ன முட்டாள்தனம் பண்ணியிருக்கேன். தன்னுடைய உணர்வுக்கு கடிவாளம் இடாமல், அவளை விட்டு விலகிய தன்னை நொந்துக்கொண்டான். தாயை இழந்து தந்தையும் அருகில் இல்லாமல் மனம் வீட்டு பேசிப்பழக அருகில் யாரும் இல்லாம எவ்வளவு கஷ்டம். தன் அம்மாவிடம் அதிகம் எதையும் பகிர மாட்டாள், கடினமான நேரங்களில் ஓருவருக்கு ஓருவர் ஆறுதல் தேவைப்படும் போது மனதிற்கு நெருக்கமானவர்கள் அருகில் இல்லாமல் பாவம் சஞ்சு எவ்வளவு ஏங்கியிருப்பா....


நேரம் கடக்க, நிசப்தத்தை கலைத்தாள்......... “மம்மூ நீங்களும் தூங்கிட்டீங்களா?”


“இல்லடா, யோசிச்சுட்டு இருக்கேன்”


“என்னை எப்படி கழட்டி விடலாம்னு யோசிக்குறீங்களா மம்மூ?”


“ஏய் வாலு, கழட்டி விட நீ என்ன நாய் குட்டியா?” என தலையில் ஒரு கொட்டு வைத்து “இன்னைக்கு உன்ன எங்க கூட்டிட்டு போகலாம்னு யோசிச்சேன்..”


“வாவ்... ஜாலி... அப்ப இன்னைக்கு முழுவதும் என் கூடதான் இருப்பீங்களா?” வெண்முகம் பிரதிபலிக்க கேட்டாள்.


“ம்ம்ம்….”என்ற சத்தத்தை மட்டும் தந்தவன்…


இன்னைக்கு மட்டுமில்ல எப்பவும் உன் கூடதான் இருப்பேன் என மனதில் சங்கல்பம் எடுத்துக் கொண்டான்


அன்று முழுவதும் ஊர் சுற்றிவிட்டு மாலையில் இருவரும் வீடு திரும்பினர். இவளின்பால் ஒட்டுமொத்தமாக தன்னை இழக்கப்போகிறோம் என்பதை அறியாமல் இரவை தனது ஆக்கினான்.




*******************



அவசர கதியில் அம்மா சாப்பாடு ரெடியா.. சீக்கிரமா வைங்க.. லேட் ஆகுது என பரபரத்தான் சிவு..


“டேய் சிவு இன்னைக்கு நீயே சஞ்சுவை காலேஜ்ல இறக்கி விட்டுட்டு போ” என சொல்லிக் கொண்டே சமையலறையிலிருந்து வெளியே வந்தாள் பத்மாவதி


“சஞ்சு எப்ப வர, நான் எப்ப ஆபிஸ் போக? ஆமா அவளோட ஸ்கூட்டி என்ன ஆச்சு மா?”


“இன்னைக்கு சஞ்சு காலேஜ்ல ஃப்ரெஸர்ஸ்டே, அதான் சேலை கட்டிட்டு இருக்கா, சேலை கட்டி ஸ்கூட்டி எப்படி ஓட்டுவாளோ தெரியல, நீயே கொஞ்சம் கொண்டு போய் விட்டுட்டு போயிரு..” என சொல்லிக் கொண்டே உணவுப் பொருட்களை மேசை மீது பரப்பத் தொடங்கினாள்.


“ஏன் அம்மா, பொண்ணுங்க சேலை செலக்ட் பண்ணதான நேரம் ஆகும், நம்ம சஞ்சு சேலை கட்டவே இவ்வளவு நேரம் ஆகுது...”


“ஒரு வாரமா புடவை கட்டி பழகுறாடா, இப்ப குளிச்சிட்டு வந்து ஒரு மணி நேரம் ஆகுது இன்னும் இவள காணாம்”


சாப்பிடுவதற்கு அமர்ந்தவனை டேய் சஞ்சு வரட்டும், அதுக்குள்ள என்ன அவசரம் என கையில் ஒரு போடுப்போட்டு,” போ நீயே போய் கூட்டிட்டு வா....போ”


இந்த அம்மாக்கு இதே வேலையா போச்சு, தன் தாயை முறைத்துக் கொண்டே சஞ்சு அறை நோக்கி சென்றான்.


சேலை கட்டிய சஞ்சு அவன் மனக்கண்ணில் வர, ஆவலாய் மாடிக்கு சென்று சஞ்சுவின் அறைக் கதவை தட்டினான் “சஞ்சு வேகமா வா, உன்னை காலேஜ்ல விட்டுட்டு நான் ஆபிஸ் போகணும்”


“மம்மூ ப்ளீஸ் ரெண்டு நிமிஷம் இதோ வரேன்” என்றவள் புடவை கட்ட ஒரு வாரப் பயிற்சி போதாது போல என தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்


“என்ன தான் பண்ற சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பனும், நேரம் ஆச்சு மா..” என அவசர கதியில் இருந்தான்


“நீங்கதான கம்பெனி எம்.டி “இன்னைக்கு ஒரு நாள் கொஞ்சம் லேட்டாதான் போலாமே? என கொஞ்சினாள்”


சிவுவை சிறிது காக்க வைத்தபின் கதவை திறந்தாள். கதவை திறந்து வெளியே வந்த சஞ்சனா வசிகரிக்கும் அழகுடன் தோன்றினாள்


இதுவரை இயல்பாக இருந்தவன், சஞ்சுவைப் புடவையில் பார்த்தவுடன், தனது மனப் போராட்டத்திற்கு விடை கொடுத்து தனக்கானவளை அறிந்து கொண்டான். அந்த நொடி திக்குமுக்காடி தான் போனான்.


இளமஞ்சள் நிற புடவையில் கருப்பு நிற பார்டர் அலங்கரிக்க பேரழகு என்ற வார்த்தைக்கு உருவம் கொடுத்து இருந்தவளை பிரிய மனம் வராமல் சிவுவின் கண்கள் தவித்தது.


“ஹாய் மம்மூ புடவை எப்படியிருக்கு?” என்று அவனைப் பார்த்து கேட்டவாறே வாயிலைத் தாண்ட, புடவை தடுக்கி விழப்போனவளை நொடிப் பொழிதில் அவளை இடையோடு சேர்த்துத் தாங்கிப் பிடித்தான். அவன் விரல் இடுப்பில் பட்டவுடன் உடம்பு எங்கும் ஒரு மின்னல் பாய்ந்தது. பெண்ணவள் உடல் கூசி அவனைப் பார்க்கையில் அவனின் ஏந்திழை ஆனாள்.


அவளை இடையில் தாங்கியவனின் விரல்கள் அவளை விட்டு நீங்க மறுத்து அவனோடு தர்க்கம் செய்ய.. சஞ்சு கூச்சத்தோடு அவனை விட்டு விலகிச் சென்று “மம்மூ வாங்க சாப்பிடப் போகலாம் என்றாள்”


அவள் பின்னாடியே சென்றவனுக்கு, அவளின் வளர்ச்சி, அழகு ஏதோ செய்தது...


“இவள் என்னவள்” என்கிற எண்ணம் அவன் மனதில் ஆழமாக பதியத் தொடங்கியது...


மேலே போகும் போது தன்னை முறைத்துக் கொண்டு போனவன் பார்வைக்கும், இப்பொழுது சஞ்சுவுடன் வரும்போது இருப்பவன் பார்வைக்கும் உள்ள மாறுதல்களை தாயானவள் கண்டாள்.

இருவரும் சேர்ந்து சாப்பிட சிவு அவளுக்கு வேண்டியதை பார்த்துப் பார்த்து எடுத்து வைத்தான்.

அத்தை நீங்களும் சாப்பட வாங்க என்று கூப்பிட

இல்லம்மா இப்பதான் மாத்திரை போட்டுருக்கேன், ஒரு அரைமணி நேரம் போகட்டும் நீங்க சாப்பிட்டு கிளம்புங்க என்றவள்.

சமையல்க்கார லட்சுமி அம்மாவை அழைத்து, “சஞ்சு சாப்பிட்டு முடிக்கவும் அவளுக்கு திருஷ்டி சுத்திப் போடணும், இன்னைக்கு ஊர் கண்ணு எல்லாம் நம்ம சஞ்சு மேல தான் விழப்போகுது“

“ஆமா அம்மா, சஞ்சு புடவையில் ரொம்ப பெரிய மனுசி மாதிரி இருக்கா...”

லட்சுமி ஆச்சி, “ஆமா நம்ம சஞ்சு குட்டிக்கு கல்யாண வயசு வந்திருச்சுல்ல”

“ஏய்... எல்லோரும் சேர்ந்து என்னை கலாய்க்குறீங்களா?” என பொய் கோபத்துடன் அனைவரையும் முறைத்துப் பார்த்தாள் சஞ்சு

“இல்லடா சஞ்சு நீ எப்பவுமே அழகு தான்... ஆனால் இன்னைக்கு இன்னும் ரொம்ப அழகா இருக்க, அவ்வளவு அழகு என் செல்லக்குட்டி” என்று கொஞ்சினாள் பத்மாவதி

உடனே சிவுவும் தன் பங்கிற்கு “ஆமாம்மா இன்னைக்கு சஞ்சு கொஞ்சம்..... கொஞ்சம் அழகாதான் இருக்குறா” ன ஆச்சர்யத்தோடு கேட்பது போல நக்கலாக கேட்டான்

டேய், ”என் சஞ்சு செல்லம் எப்பவும் பேரழகுடா”, என சஞ்சுக்கு திருஷ்டி கழித்தாள்

“நான் எப்பவும் ரெண்டு பேருக்கும் செல்லம் தான்“ என்று இருவர் கழுத்தையும் கட்டி அணைத்தாள்

“மம்மு சும்மா கிண்டலுக்கு சொல்றாரு அத்தை… மம்மு போய் என்ன நல்லா இல்லணு சொல்வாரா?”

“அவன ஒண்ணு சொன்னா போதுமே பாஞ்சுக்கிட்டு வந்துருவியே” என பத்மாவதி மகனின் முகத்தைப் பார்த்தாள், அந்த தாயின் முகத்தில் வெற்றிப் புன்னகை! சஞ்சுவை தன் ஃபோன் கேமராவில் பதிவு செய்தான், அப்படியே அவன் மனதிலும்... இருவரும் காரில் புறப்பட்டனர், வழியில் பேசிக்கொண்டே சென்றனர்.

கல்லூரியில் அவளை இறக்கி விட்டு, “ ஈவ்னிங் நானே வந்து பிக் அப் பண்றேன் சஞ்சு. அதுவரைக்கும் புடவையை ஒழுங்கா பிடிச்சு நட, மறுபடியும் புதையல் எடுத்திறாத.."

"ஆ.. ங்.. நான் எங்க புதையல் எடுத்தேன், அதான் நீங்க காப்பாத்திட்டிங்களே" என்று சொல்லிக் கொண்டே இருக்க காலையில் அவளது இடுப்பை அவன் விரலால் தாங்கியது இருவரின் நினைவுக்கும் வர...

சிறு வயதில் இருந்தே மனதை கட்டுப்படுத்தி பழகியவள், அந்த நினைவில் இருந்து தன்னை மீட்டு பேச்சை வேறு திசையில் மாற்றினாள். "மம்மூ ஈவ்னிங் கொஞ்சம் சீக்கிரமே வந்திருங்க, இன்னைக்கு ஃப்ரெஸர்ஸ்டே பங்சன் இருக்கிறதால காலேஜ் சீக்கிரமே முடிஞ்சிரும்"

"ஓகே டா... ஆபிஸ்ல இன்னைக்கு கான்பரன்ஸ் இருக்கு, நீ கால் பண்ணு நான் வந்திருவேன்"

"சரி..சரி.. முதல்ல கிளம்புங்க... ஈவ்னிங் பார்க்கலாம்" பையை எடுத்துக் கொண்டு கிளம்ப எத்தனிக்க..

அவளின் கடுப்பான முகத்தைக் கண்டவன் "ஏன் சஞ்சு திடீர்னு இவ்வளவு அவசரப்படுற?" எதாவது பிரச்சனையா?

"அது..து.. மம்மூ திரும்பி பார்க்காதீங்க. ”அவன் தலையை திருப்ப எண்ணும்போதே, “ப்ளிஸ் திரும்பாதிங்க சீனியர்ஸ் வராங்க அவங்க பக்கத்தில வர்ரதுக்கு முன்னாடி நீங்க கிளம்புங்க” என பதைபதைத்தாள்

"ஏய் லூசு, உனக்குதான சீனியர்ஸ்... எனக்கு இல்ல, ஆமா சீனியர்ஸ்னா அவ்வளவு பயமா?"

ஐயோ, வர்ரவங்க சீனியர் கேர்ள்ஸ், உங்கள ரொம்ப நாளா அறிமுகப்படுத்த சொல்லிக் கேட்டுக்கிட்டே இருக்காங்க"

"வாவ்... அப்படினா ஒரு இன்ட்ரோ கொடு சஞ்சு.." என கண் சிமிட்டினான்..

"இது சரியில்ல மம்மூ, நீங்க முதல்ல கிளம்புங்க.. பை..பை.. விரட்டிவிடாத அளவுக்கு அவனை அங்கு இருந்து கிளப்பினாள்.

"ஓகேடா.. பை.. என சொல்லி அவன் காரை கிளப்பவும் சீனியர்ஸ் வரவும் சரியாக இருந்தது"

"குட்மார்னிங் சீனியர்ஸ்"

"குட்மார்னிங் இருக்கட்டும் சஞ்சு, எங்கள பார்க்கவும் உங்க மாமாவ வேகவேகமா அனுப்புன மாதிரி இருக்கு, அவர எங்களுக்கு ஒரு தடவை இன்ட்ரோ தரச் சொல்லி எத்தனை தடவை சொல்லிருக்கோம் உன்கிட்ட..." அருகில் இருந்த மற்ற சீனியர்ஸ், ஒ... இன்னைக்கு சேலைல ஆளு அழகாதான் இருக்கா.. அதில் தலைமையாக இருந்தவள், உங்க மாமாவ இன்ட்ரோ தரச் சொல்லி ரொம்ப நாளா ஆச்சு... இப்படியே எங்கள ஏமாத்தி எஸ்கேப் ஆயிடலாம்னு நினைக்காத..

அச்சோ அப்படி இல்லை சீனியர்ஸ், அவருக்கு ஒரு அவசர வேலை அதான் வேகமா கிளம்பிட்டார். அடுத்த தடவை கண்டிப்பா இன்ட்ரோ பண்ணி வைக்கிறேன் சீனியர்ஸ்"

"சரி... அடுத்த தடவை கண்டிப்பா இன்ட்ரோ கொடுக்கிற"

சரிங்க சீனியர்ஸ் என புன்னகையோடு வாய் சொன்னாலும், வகுப்பறைக்குள்ளே போகும் வரையிலும் என்னோட மம்மூவ இந்தக் கழுதைகளுக்கு ஏன் அறிமுகப்படுத்தனும் என மனதிற்குள் திட்டித் தீர்த்தாள்.



சிவுக்கு வந்த காதல் சஞ்சுவுக்கு வருமா....................?​
 




Shruthi subbu

இணை அமைச்சர்
Joined
Jul 5, 2021
Messages
938
Reaction score
887
Location
Bangalore
கண்டிப்பா சஞ்சுக்கு வரும்....அது எப்போ வருக்குறத நீங்க பா சொல்லனும்🤩
 




Rishaba

மண்டலாதிபதி
SM Exclusive
Joined
Jan 8, 2021
Messages
456
Reaction score
665
Location
Theni
கண்டிப்பா சஞ்சுக்கு வரும்....அது எப்போ வருக்குறத நீங்க பா சொல்லனும்🤩
சொல்லமே........🤩🤩
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top