இவள் என்னவள் - 5
சிவு தன் தாயும், மோகன் மாமாவும் தனது காதலை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், தன் காதலை கிள்ளி எறிவார்கள், எப்படிக் கூறி சமாதனாப்படுத்துவது என்ற தயக்கத்தில் இருந்தான்... அதற்கான காரணமும் இருந்தது.
சிறுவயதிலிருந்தே அருண், சிவுவைக் காட்டிலும் சஞ்சுவை பிரியம் என்பதைவிட உயிராக வளர்த்தார் பத்மாவதி. சொந்த வீட்டில் உடன் வளர்ந்த பெண்ணின் மீதே எப்படிக் காதல் என்ற எண்ணத்துடன் இருந்தாய் என கேள்விகள் பல எழும், பல திட்டுக்கள் விழும்.
அது மட்டும் இல்லாமல் மாமாவை நினைத்து தர்ம சங்கடப்பட்டவன், ஒரு கட்டத்தில் மாமாவையும், தாயையும் எண்ணி சஞ்சுவை விட்டு விலக முடிவு எடுத்திருந்தான், தன் மனதை கட்டுப்படுத்த பெரும் முயற்சிகளும் செய்தான்.
ஆனால் சஞ்சு என்னவள் என்கிற உணர்வு அவளை விடக்கூடாது என்று அவனுள் சொல்லிக் கொண்டே இருந்தது...
இவ்வளவு மனப் போராட்டங்களுக்கு இடையே தன் தாயின் சம்மதத்துடன் மாமாவின் விருப்பத்தையும் அறிந்தவுடன் மனமகிழ்ந்த சிவு தன் காதலை அடுத்த நிலைக்கு கொண்டு போக முடிவெடுத்தான்.
சிவு தனது தொழிலில் புதுமுயற்சிகள் பல செய்து நல்ல வெற்றி கண்டான். தனது காதலை வெளிப்படுத்தவில்லை. ஆனால் ஒவ்வொரு நாளையும் காதலோடு தொடங்குவான், தன் காதலிக்காக.....
அருண் குடும்பம் இந்தியா வர இருப்பதை எண்ணி மொத்தக் குடும்பமும் மகிழ்ச்சியில் திளைத்தது. “நல்லவேளையாக, நான் செமஸ்டர் லீவுல இருக்கிறப்ப அருண் மாமா, தேவி அக்கா, அக்ஷ்ரன் குட்டி எல்லோரும் வர்ராங்க” என குதூகலித்தாள் சஞ்சு.
“என்ன தான் வீடியோ கால்ல தினமும் பார்த்தாலும், நேர்ல பார்க்கிறப்ப இருக்கிற சந்தோஷமே தனி, இதுல என் பேரன் வேற வர்ரான்” குடும்ப வாரிசை காணப்போகும் ஆவலில் இருந்தார் பத்மாவதி.
“அக்ஷ்ரன் குட்டி அண்ணன் மாதிரியா? இல்லை தேவி அண்ணி மாதிரி இருக்கானா?”
“என் பேரன் அப்படியே தேவி மாதிரி தான், பொதுவா ஆண் பிள்ளை அவங்க அம்மா மாதிரி இருந்தால் அதிர்ஷ்டம்னு சொல்வாங்க” பத்மாவதி முகத்தில் மருமகளை நினைத்து பெருமிதப்பட்டார்.
“ஆனா தேவி அண்ணி கூட நான் அவ்வளவா பழகினது இல்லையே” எனக் குறைபட்டான் சிவு.
“அக்கா ரொம்ப நல்லவங்க மம்மூ, நீங்க லண்டன் போன பிறகு எனக்கு அவங்க தான் ரொம்ப ஆதரவாயிருந்தாங்க, ஆனா பெரியம்மா...” என அவள் பேச்சை முடிக்கும் முன்..
“நல்ல வேளை, நீ ஞாபகப்படுத்தின. சம்மந்தி வர்ரப்ப முக்கால் பேண்ட், சர்ட் மாதிரி டிரெஸ்ஸெல்லாம் போடாத, அதுக்குப் பதிலா சுடிதார், பாவாடை தாவணி, இல்ல முடிஞ்சா சேலை கட்டிக்கோ” சஞ்சுவுக்கு முன்னெச்சரிக்கை செய்தார் பத்மாவதி.
“அம்மா சஞ்சு எப்பவும் போலவே இருக்கட்டுமே, எதுக்காக அவ மாறனும்?“ மறுப்பு தெரிவித்தான் சிவு.
“டேய் சும்மா இருடா, சம்மந்தி அம்மா கொஞ்சம் குறை கண்டுபிடிக்கறவங்க. சும்மா... சும்மா... ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பாங்க, ஒரு ரெண்டு நாள் தான, நாம எல்லாருமே கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிருவோமே” என மகனிடம் கொஞ்சம் கண்டிப்புடனேயே சொல்லி வைத்தார்.
“ஆமா மம்மூ, அத்தை சொல்றது சரிதான். நான் நம்ம பாரம்பரிய உடைகளையே போட்டுக்கிறேன்” அவனை சம்மதிக்க வைத்தாள்.
தாயும், தன்னவளும் சொன்ன நிதர்சனத்தை உணர்ந்து “உன்கிட்ட பாவாடை தாவணி இருக்கா சஞ்சு?” யோசனையாகப் பார்த்தான்.
குறுஞ்சிரிப்போடு சிவுவை பார்த்தாள் , “இருக்கு மம்மூ, அத்தை அப்புறம் தேவி அக்கா எடுத்துக் கொடுத்திருக்காங்க, அது போதும்”
“நீ பாவாடை தாவணி போட்டு நான் உன்னைப் பார்த்ததேயில்லையே” கண்களில் ஏக்கத்துடன் கேட்டான்.
“அது நீங்க லண்டன் போய் இருந்தப்ப நான் போட்டது மம்மூ“
“என்ன கலர்ஸ் வச்சுருக்க? எந்த மாதிரி பேட்டர்ன்? மயில் டிசைன் போட்டு இருந்தா உனக்குப் பிடிக்குமே? அது வச்சுருக்கியா ? சில்க் துணியா இல்ல டிசைனர் மெட்டீரியலா? எது வச்சுருக்க???” எனக் கேள்விகளை அடுக்கினான்.
சிவு தன் தாயை சீண்டவே இப்படிப் பேசுவான், எப்பொழுதும் சஞ்சுவிடம் தன் தாயை விட தனக்கே முன்னுரிமை என்பதை நிலைநாட்ட, அவளைத் தாங்கிப் பேசுவான். இல்லையெனில் அவளை வம்பு பேசி அப்போதும் பத்மாவதியை வம்பிழுப்பான். சிறுவயதில் அவனை அறியாமலேயே வெளிப்பட்ட இந்த உணர்வு, இப்போதும் பத்மாவதியை வெறுப்பேற்ற இதைக் கையாண்டான்.
இவர்களின் சீண்டலை உணராமல் இல்லை சஞ்சு, தன்னை எப்படி வம்பு பேசினாலும் சிவுவை எங்கும் விட்டுக் கொடுக்கமாட்டாள்.
“டேய் போதும் நிறுத்து விட்டா ஓவராப் போற” என்று நமட்டுச் சிரிப்பாய் சிரித்தார் பத்மாவதி.
அவனும் சிரித்துக்கொண்டே“ அம்மா எல்லாம் ஒரு ஜெனரல் நாலெட்ஜ்க்கு தான், எங்க உங்கள விட புத்திசாலி ஆயிருவேன்னு, பொறாமை படாதீங்க”
“சஞ்சு அந்த குப்பைத்தொட்டியை எடு? டேய் சிவு அதை தூக்கிப் போடு“
அவரின் குறும்பை அறியாமல் “எதை அம்மா?”
“ம்ம்ம்ம்........ உன்னோட புத்திசாலி மூளையை தான்“ என்று பெருங்குரலில் சிரித்தார் பத்மாவதி உடன் சேர்ந்து சஞ்சுவும் சிரித்தாள் .
“என்ன சஞ்சு, மாமாவ அசிங்கப்படுத்துறாங்க நீயும் கூட சேர்ந்து சிரிக்கிற?” பொய் கோபம் காண்பித்தான்.
“அச்சோ, பாருங்க அத்தை.... மம்மூ வருத்தப்படுறாங்க? வேண்டாம் மம்மூ ஃபீல் பண்ணாதிங்க, வேணா உங்க மூளைய மியூசியம்க்கு கொண்டு போய்ட்டா என்ன?”
“அடிப்பாவி , உனக்காக இந்த மாமா என்னலாம் பண்ணிருக்கேன் மறந்துட்டியா சஞ்சு” அப்பாவியான வார்த்தைகளை உதிர்த்தான்.
அவனின் பாவமான தோற்றத்தைக் கண்டு தானும் நடித்தாள் “சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு இல்ல மம்மூ, மறக்கல ......” சற்று இடைவெளி விட்டு தொடர்ந்தாள்.... ”மறக்கல, அத்தை எனக்கு கொடுக்கிற பாக்கெட் மணிய ஆட்டையப்போட்டு எனக்கு தராம ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டிங்கல்ல அத மறக்கல, அப்புறம் நிறையா தடவை வீட்டுல என்ன தனியா விட்டுட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட தியேட்டர் போனிங்கல்ல அதையும் மறக்கல”
அப்புறம் பூஜா என ஆரம்பித்தவளை........ இடையிட்டு “அம்மா ஏதோ வாங்கணும்னு சொன்னிங்க” இவள கொஞ்சம் விட்டா பூஜா மேட்டர ஒபன் பண்ணிருவா போல இருக்கே என மனதிற்குள் கலவரம் அடைந்தான்.
“அது என்ன பூஜா? சஞ்சு ஏதோ சொன்னாலே “, பத்மாவதி
“அதுவாம்மா கோவில் பூஜைக்கு சொல்லனுமானு சஞ்சு கேட்டா” அவர்களின் பேச்சை திசை திருப்பினான்.
“இல்லேயே சஞ்சு வேற ஏதோ சொல்ல வந்த மாதிரி இருக்கே, “இருவரும் திருதிருவென முளிப்பதை கண்டு ஏதோ பொண்ணு மேட்டர் மாதிரி தெரியுது பத்மாவதி பேச்சை தொடர்ந்தார், ”பூஜா, அந்த பொண்ணு யார் டா?”
“அத்தை வீட்டுல என்ன செய்யலாம்னு சொல்லுங்க, பூஜா மேட்டர இன்னொரு நாள் பார்த்துக்கலாம்”
“அதுவும் சரிதான் இவனப் பத்தி பேசி என்ன ஆகப்போகுது, சிவு நீ ஒரு ரெண்டு நாள் ஆபிஸ்ல லீவ் எடுத்துக்கோ, நீயும் சஞ்சுவும் தான் கொஞ்சம் ஷாப்பிங் பண்ணனும். இந்த மூட்டு வலிய வச்சுக்கிட்டு என்னால கடை கடையா ஏறி இறங்க முடியாது.”
“சரிங்க அம்மா நீங்க லிஸ்ட் மட்டும் போட்டுக் குடுங்க, மத்தத நாங்க பாத்துக்கிறோம். நகை எதும் வாங்கனும்னா சொல்லுங்க, நம்ம ஏரியா பக்கத்தில புதுசா ஒரு நகைக்கடை திறந்திருக்காங்க, புது டிசைன் நிறைய இருக்காம், அங்கேயே எல்லாம் வாங்கிக்கலாம்”
“ஆமா..பா, தேவிக்கு வைர நெக்லஸ், அக்ஷ்ரனுக்கு செயின் வாங்கனும். ஆனால் புதுக்கடைக்குப் போக வேண்டாம், நம்ம எப்பவும் வாங்குற கடையிலயே நகையை வாங்கிக்கலாம்”
“அத்தை, அக்ஷ்ரனுக்கு தொட்டில் வாங்கனுமே”..
“இல்லடா சஞ்சு, நம்ம வீட்டுல பாரம்பரியமா பயன்படுத்தின தொட்டில் இருக்கு, அதைத்தான் நாம உபயோகப்படுத்தனும். நம்ம வீட்டுக் குழந்தைகளை அந்த தொட்டில்லதான் படுக்க வைப்போம். அக்ஷ்ரன் குட்டிக்கு தான் கொஞ்சம் தாமதமா கிடைக்குது”
“ஓகோ.... அப்ப சிவு மம்மூவோட குழந்தைக்கும் அந்தத் தொட்டில்தானா அத்தை?”
“ஆமா, உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சு, உங்க குழந்தையையும் அந்த தொட்டிலில்தான் போடுவேன் என்றவர்” மகனின் முறைப்பிற்கு அடங்கினார்.
என்னது, உங்க இரண்டு பேருக்குமா? என்னமோ எனக்கும், மம்மூக்கும் கல்யாணம் ஆகப்போற மாதிரி பேசுறாங்க. சீ...ச்.....சீ..... அப்படி இருக்காது தனித்தனியா சொல்றதுக்குப் பதிலா சேர்த்து சொல்லி இருப்பாங்க. அதுக்கு போய் மனசு என்னென்ன யோசிக்குது!.. இதனால தான் மனச காற்று கூட ஒப்பிட்டு சொல்லுவாங்களோ?.அவளுக்கு அவளே கொட்டிக் கொண்டாள். அடுத்த இரண்டு நாட்களில் ஷாப்பிங் முடித்து விட்டு வீட்டின் அலங்காரம் அனைத்தையும் அவளே செய்தாள்.
.......................................
இன்னைக்கு மம்மூ, ஆபீஸ்ல இருந்து வந்து அலங்காரத்தைப் பார்த்தால் எவ்வளவு சந்தோஷப்படுவார், என் சஞ்சுக் குட்டி செஞ்சா எப்பவும் சூப்பர் தான் எனப் பாராட்டுவார் என்று எண்ணிக் கொண்டு இருக்கும் போதே, சிவு வீட்டின் உள்ளே நுழைந்தான்.
“மம்மூ, உங்களுக்கு நூறு ஆயுசு. இப்பதான் நினைச்சேன் வந்துட்டீங்க“ என முகம் மின்னக் கேட்டாள்.
“நீ இப்பதான் என்ன நினைக்கிறாயா, நான் எப்பவும் உன்ன மட்டும் தான் நினைக்கிறேன்” அவளின் மீது உள்ள மிகுந்த காதல் வெளிப்பட்டது.
“ஏன் அப்படி?” என அலட்டிக்கொள்ளாமல் கேட்டாள்.
“ஏன் அப்படினா? நீ தான் காரணம்”
“நானா, நான் அப்படி என்ன செஞ்சேன் மம்மூ”
“அவள் காதைப் பிடித்து, இந்த சேட்டைக்காரி வீட்டுல எல்லா வேலையையும் இழுத்துப்போட்டு செய்யுவா, செஞ்சுட்டு சும்மா இருந்தா பரவாயில்லை. கை வலிக்குது, கால் வலிக்குதுனு நைட்டு முழுவதும் அழுவ, அதுக்கு தான் வேகமா வந்தேன், பார்த்தா அதுக்குள்ளயே எல்லா வேலையும் நீ செஞ்சு முடிச்சிட்ட போல”
“என்ன மம்மூ நீங்க வந்து பார்த்திட்டு என் சஞ்சுக்குட்டி செஞ்சா ரொம்ப பிரமாதமா இருக்குனு சொல்வீங்கனு பார்த்தா, இப்படி வசைபாடுறீங்க” அவளின் சலிப்பை சிவுவிடம் காண்பித்தாள்.
“ எப்பவும் நீ எதையும் அழகு உணர்ச்சியோட செய்றவ, இப்ப மட்டும் சொதப்பியா வச்சிடப்போற, இப்பவும் அண்ணிக்கு புடிச்ச பூ வச்சு அலாங்காராம் பண்ணியிருக்க, ரொம்ப நல்லா இருக்கு சஞ்சுமா. வேணப்பாறு அண்ணா, அண்ணிக்கு ரொம்ப பிடிக்கும்” அவளிற்கு உரிய பாராட்டை சொன்னான்.
“ஆமாம் நானா கேட்டதுக்கு அப்புறமாதான் நீங்க சொல்லுறீங்க, என்ன மம்மூ? எவ்வளவு கஷ்டப்பட்டு செஞ்சுருக்கேன் தெரியுமா?” வாயை கோனாலாக வைத்தாள்.
“தெரியுமே, இன்னைக்கு யாருக்கு சிவராத்திரி தெரியல, ஒண்ணு அம்மாவ இல்லைனா என்னைய தூங்கவிடாமா ......... கை வலிக்குது இல்ல கால் வலிக்குதுனு அழு, அப்புறம் பாரு... இந்த சின்னபுள்ள தனத்த இன்னும் விடல நீ.......”. என நகைத்தான்.
”என்ன சின்னபுள்ள தனம் செஞ்சாங்களாம்?“ என சிணுங்கியவளை.
“வேலையை இழுத்துப்போட்டு செஞ்சுட்டு அப்புறமா அழுவுறது சின்னபுள்ளத் தனம் இல்லையா? நம்ம வீட்டுல வேலை செய்ய எவ்வளவு பேரு இருக்காங்க. நீ அவங்கள வேலை செய்ய சொல்லிட்டு மேற்பார்வை பார்த்தா போதாதா? ஏன் நீயே செய்யுறடா” அவளது தலையை வருடியபடி கேட்டான்.
”நம்ம வீட்டு வேலையை நம்மலே செஞ்சா மனசு எவ்வளவு சந்தோஷமா இருக்கும் தெரியுமா மம்மூ. அத அனுபவிச்சு பார்த்தா, விட மனசு வராது”
“அம்மா தாயே வியாக்கானம் பேசாத .....இங்க வந்து உட்காரு நான் வந்துடறேன்” என உள்ளே சென்றான்.
“ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணிர் எடுத்து வந்து வைத்து அதில் கொஞ்சம் உப்புக்கல்லைப் போட்டு, சஞ்சுமா உன் கால இதுல வை” என்றான் வாஞ்சையோடு.
“ஏன் மம்மூ?”
“கல் உப்பு , கலந்த சுடுதண்ணீரில் காலை வைத்தால் வலி குறையும், வந்து வை”
சஞ்சு கால்களை வைத்தபிறகு, அவள் கையை தன் தோளின் மீது வைத்துப் பிடித்து விட்டான்.
“மம்மூ, அப்படியே விரலும்” என்று கைகளை நீட்டினாள் சஞ்சு.
சிரித்துக்கொண்டே இப்ப நீட்டு , என விரல்களை படக்கென சொடுக்கிட்டான்.
வலியில் அவளும் “அ....ஆ... “கத்தினாள், “மம்மு சொன்னப் பேச்சு கேக்காததுக்கு பனிஸ்மென்டா .......!”
“மம்மூ, இன்னைக்கு நல்ல தூங்குவேன், இப்பவே தூக்கம் வந்தாச்சு கொட்டாவி விட்டபடியே, என்னால எந்தத் தொந்தரவும் இருக்காது, நீங்களூம் நல்லா தூங்குங்க. குட் நைட்” என்று உறங்க அவள் அறைக்கு சென்றாள்.
இரவு அடிக்கடி எழுந்து சென்று தூங்குகிறாளா என்று பார்த்து விட்டு வந்து படுத்தான் ,காலை எழுந்தவுடன் சஞ்சனா அவன் அறைக்கு சென்றாள், அவனும் அப்பொழுது தான் எழுந்தான்.
“என்ன பண்றீங்க மம்மு” திரும்பி இருந்தவன் முகத்தை பார்க்காமல் கேட்டாள்.
“ஒண்ணுமில்லடா இன்னைக்கு எந்த டிரஸ் போடம்னு தெரியல, அதை தான் பார்த்துக்கிட்டு இருக்கேன்” அவனின் துணிகளில் கவனம் செலுத்தினான்.
“நான் செலக்ட் பண்ணித் தரவா மம்மு”
“சரி டா” என ஒதுங்கிக்கொண்டான்.
அவனின் வார்ட்ரூப் முழுவதும் அலசி அதில் குர்தாவை தேர்வு செய்து தந்தவள் அப்பொழுது தான் சிவுவின் முகத்தை பார்த்தாள்.
“இரவு என்னைய தூங்க வச்சிட்டு, நீங்க தூங்கல போல, உங்க கண் சோர்வா இருக்கே.” அவன் பதில் சொல்லவில்லை. ஆனால் அவனது பார்வை அவளுக்கு ஏதோ கூறுவது போல் உணர்ந்து கொண்டாள்.
“மம்மூ, என்ன தப்பா நினைக்க மாட்டீங்களே?”
“எதுக்கு தப்பா நினைக்கனும் சஞ்சு?”
“நான் கேட்டதுக்கு சொல்லுங்க மம்மூ ப்ளீஸ்”
என்னவாக இருக்கும்! காலையிலேயே என்னனு சொல்லாம படுத்துறாளே என மனதில் தோன்றினாலும் “தப்பா நினைக்க மாட்டேன் என்ன விஷயம் சொல்லு” அசட்டையாக இருந்தான்.
“அப்ப சரி” என்று அவன் அருகில் வந்தாள், ஓர் கையால் அவன் கன்னத்தை பிடித்து மறு கன்னத்தில் லேசாக உதடு பதித்தவள், நிற்காமல் உடனே ஓடிச் சென்றாள். தன்னை இத்தனை அன்போடு கவனித்துக் கொள்ளும் ஓருவனுக்காக, தனது அன்பின் வெளிப்பாடு ஆகவே இதைக் கருதினாள்.
அவளுக்கே ஆச்சரியம் தான்! மனதில் தோன்றியதைச் செய்தே பழகியவள். இதையும், இந்த முத்தத்தையும் வெளிப்படுத்திவிட்டாள். தான் எப்படி இதை செய்தேன் என நினைக்கும் போதே , அந்த நினைவை ஒதுக்கவும் செய்தாள்.
அவனுக்கோ, வானத்துக்கும் பூமிக்கும் குதிக்காத குறைதான்.
முதல் முத்தம், அதுவும் தன் காதலியிடம் இருந்து கிடைக்கும் போது எந்த ஓர் ஆண் மகனும், தான் முழுமையானதாகவே உணர்வான், சிவசந்திரனும் உணர்ந்தான்.
இந்த முத்தத்தையா தப்பா நினைக்கக்கூடாது என்றாள்? அவள் என்ன அறிவாள்? இந்த முத்தத்தால் தான் நான் மோட்சம் அடைந்தேன் என்று...
சஞ்சுவின் முத்தம் அவனது காதல் விதைக்கு நீர் வார்த்ததாய் எண்ணிக் கொண்டான்.
---------------------------------------