இவள் என்னவள் - 6
அன்று காலையில் இருந்தே அனைவரும் பரபரப்பாக வீட்டின் உள்ளேயும்
வெளியேயும் சுற்றிச் சுற்றி வந்தனர். பத்மாவதி அருண் குடும்பத்தினரின்
வரவை ஆவலாய் எதிர்நோக்கிக் காத்திருந்தார்.
சஞ்சனா பாவாடை தாவணி அணிந்து எளிமையுடன் கூடிய
அழகிய நங்கையாக வலம் வந்தாள்.
அதே நேரம் சிவு தயார் ஆகி வெளியே வந்தான். அவனின் அழகை சஞ்சு
கவனிக்கலானாள். அவனின் கேசமோ பறவையின் இறகைப் போல்
பறக்கத் துடித்துக் கொண்டிருக்க, உயரத்திற்கு ஏற்றக் கட்டுக்கோப்பான
தேகமோ உடைக்கு மேலே பளிச்சிட்டு இருந்தது.
“மம்மு, உங்க குர்தா ரொம்ப நல்லாயிருக்கு” என தன் கண்களை சிமிட்டினாள்.
“பின்னே, நீ செலகட் பண்ண டிரஸ் ஆச்சே, நல்லாதான இருக்கும்” என
அவளைப் பாராட்ட
பாராட்டை ஒதுக்கி “அதுக்காக நான் ஒண்ணும் சொல்லல மம்மு.
உண்மையிலேயே இன்னைக்கு ரொம்ப அழகாயிருக்கீங்க”
“ஒ............அழகா இருக்கிறதுக்கு காரணமா? அது வேற விஷயம்”
“அது என்ன மம்மு? புதுசா பேஷியல் பண்ணிங்களா ” சிவு கூறப் போகும்
விஷயத்தை ஆர்வமாய் கேட்டாள்.
“ம்ம்கூம்....... காலையில் என் அறையைத் தேடி ஒரு தேவதை வந்தாள்.
அவளின் பரிசாக அந்தப் பட்டு போன்ற கைகளால் என் கன்னத்தை
வருடி, மறு கன்னத்தில் பூவினை ஒத்த இதழால் முத்தம் வைத்தாள்.
அப்போது இருந்தே என் முகம் தேஜஸ் ஆகிவிட்டது. ஃபேரி டேல் ஸ்டோரில
வருமே அரக்கனின் மேல் தேவதையின் இதழ் பட்டவுடன் இளவரசனாக
மாறுவானே , அது போல் இந்த தேவதையின் முத்தத்தாள் நானும் அழக
தெரியுறேன். இது தான் இன்றைய அழகின் ரகசியம் ” என கண்களைச் சிமிட்டித்
தன் காதலியின் முத்தத்தை நினைவுப்படுத்தினான்.
“மம்மு, இது ரொம்ப ஜாஸ்தி, நான் தேவதையா? அட.... என்னைய
கலாய்க்கிறதே வேலையாப் போச்சு உங்களுக்கு... இன்னும் கொஞ்ச
நேரத்தில் எல்லோரும் வந்துருவாங்க. நான் போறேன்பா......“ சஞ்சு சென்றது
அவளின் வெட்கத்தை மறைப்பதற்காகத் தான் என்பதை கவனிக்கத்
தவறவில்லை சிவு.
அந்த சிறு நொடிகளில் சிவு கண்டான், தேவதை என்றவுடன் சஞ்சுவின்
விரிந்த கண்களும், சிவப்பு ஏறிய முகமும் அவனை பித்தம் கொள்ளச்
செய்தது.
பத்மாவதி தான் சற்று பயத்துடன் இருந்தார். தேவியின் அம்மா
ஏதாவது குறை சொல்லி சஞ்சுவின் மனதைக் காயப்படுத்த நேரிட்டாள்,
அதன் பின் சிவுவைக் கையாளுவது சிரமம், நம்மளையே ஒண்ணும்
சொல்ல விடமாட்டான், அந்த தேவி அம்மா வாய் வேற சும்மா இருக்காது,
சிவு ஏதாவது சொல்லி இதனால் தேவி வருத்தப்பட்டு விடக்கூடாது.
அடுத்தவர்களை குறை கூறும் வாய்க்குப் பொறி உருண்டை தான்
தரணும்.
சற்று நேரத்தில் அருணின் குடும்பம் வந்து சேர்ந்தது. வீட்டின்
அலாங்காரம் அனைவரின் பார்வையில் பதிய தேவின் தாயார் ரூபாவதி
குறை காண ஆயத்தமானார்.
சஞ்சுவை கண்டவுடன், “இவ என்னடி இன்னும் இங்கேயே இருக்கா” என
தேவியின் காதில் கிசுகிசுக்க.
“அம்மா உனக்குப் பல தடவை சொல்லிட்டேன், எங்க வீட்டு ஆளுங்கள
எதுவும் சொல்ற வேலை வச்சுக்கிறாத, முக்கியமா சஞ்சுவ மட்டம் தட்டப்
பார்த்த, அப்புறம் அம்மான்னே பார்க்க மாட்டேன்” இதைக் கூறும் போதே
தேவிக்குத் தெரியும் ரூபாவதியின் வாயை அடைக்க முடியாது என்று.
அவர்கள் வருவதைக் கண்டவுடன் சஞ்சனா ஆரத்தி கரைக்க ஒடினாள்.
பத்மாவதியும், சிவுவும் அவர்களை வரவேற்க, சஞ்சு ஆரத்தி எடுத்தாள்.
அதற்குப் பரிசாக தேவி வைர பென்டன் செயினை பரிசாகக்
கொடுத்தாள். அக்ஷ்ரனை அனைவரும் தூக்கிக் கொஞ்சினார்கள்.
சஞ்சுவிடம் குழந்தை ஒட்டிக் கொண்டான்.
ஆயிரம் பேர் மத்தியில் இருந்தாலும் தன் காதலி மட்டுமே கண்களுக்குத்
தெரிவாள், அக்ஷ்ரனுடன் அவள் விளையாடிதை சிவசந்திரன் ரசித்துப்
பார்த்து கொண்டே இருந்தான். இது தேவின் பார்வையில் இருந்து
தப்பவில்லை.
காதலுக்கு காதலர்களே தான் விரோதி, காதலர்களுக்கு இடையே அன்பு
அதிகமாக இருந்தாலும் சரி, காதல் குறைந்தாலும் சரி, மற்றவர்களுக்கு
எளிதில் காட்டி கொடுத்து விடும்.
“சஞ்சு நீ ரொம்ப அழகாயிருக்க. அதுவும் பாவாடை தாவணி ரொம்ப
எடுப்பாயிருக்கு” தேவி
“அக்கா மறந்துட்டிங்களா இது வெளிநாடு போறதுக்கு முன்னாடி நீங்க
எடுத்துக் கொடுத்தது தான்”
“அட இந்தக் காலத்தில் போய் பாவாடை தாவணியெல்லாம் கட்டிக்கிட்டு,
இந்தக் காலத்துப் பிள்ளைங்க எப்படி எப்படியோ மாடர்ன் டிரஸ்
போட்டுக்கிறாங்க. நீ என்னம்மா, இப்படி பழைய பஞ்சாங்கமா இருக்கியே”
ரூபாவதி கூறியதைக் கேட்ட சிவு கடுப்பாகி, தன் தாயைப் பார்க்க. அட
அந்த அம்மா இப்படி சொல்லும்னு யாருக்குத் தெரியும்!... இவன்
பார்க்குறதப் பார்த்தா என்னய வச்சு செய்வான் போல இருக்கே என
தனக்குள்ளேயே மருங்கினார்.
“டேய் சிவு நீ போய் அண்ணாவுக்கு போன் பண்ணி இவங்க வந்தாச்சுனு
சொல்லிரு, அப்புறம் அண்ணா எப்ப வர்ராங்கன்னும் கேளு” பத்மாவதி
அவனைத் திசை திருப்பினார்.
நீங்க எதுக்கு அனுப்புறிங்கன்னு எனக்குத் தெரியாதா என்ன?? சிவு பார்வை
அவருக்கு கூறியது.
“ஏய் சஞ்சு என்ன அதுக்குள்ள பெரிய மனுஷி மாதிரி தெரியுற,” என
எதேச்சையாக அருண் கேட்டு விட, தேவியின் முறைப்பில் புரிந்தது, தன்
மாமியாரின் முன்பு எதையும் யோசித்துப் பேச வேண்டும் என்ற தேவியின்
அறிவுரையை ஏற்க மறந்ததை.
தேவியின் அம்மா, ”காலாகாலத்தில இவளுக்குக் கல்யாணம் செஞ்சு
வைக்கணும். வீட்டுல வயசு பொண்ண வச்சுக்கிட்டு, சிவு தம்பிக்கு வேற
கல்யாணம் பண்ண முடியாது. சிவு தம்பிக்கும் வயசு போகுதுல்ல. எங்க
சொந்தத்தில் ஒரு பொண்ணு இருக்கு. நல்லா படிச்சவ ரொம்ப அழகான
பொண்ணு வேற. நீங்க சொன்னிங்கன்னா அந்தப் பொண்ண சிவு தம்பிக்கு
பேசி முடிச்சுடலாம் சம்மந்தி”
ஏய் ரூபாவதி சிவு கையால கொட்டு வாங்காம நீ போகமாட்டியா… என
மனதில் நினைத்தாலும், “இல்ல சம்மந்தி, இன்னும் ஒரு வருஷம் போகட்டும்
அப்புறம் பேசிக்கலாம் சம்மந்தி” எனவும் சிவு வரவும் சரியாக இருந்தது .
“சஞ்சு உனக்கு இந்த செயின் பிடிச்சிருக்கா” என தேவி கேட்டாள்.
“தேங்க்ஸ் அக்கா... எனக்கு இந்த செயின் ரொம்ப பிடிச்சிருக்கு” சஞ்சு
சந்தோஷத்தை வெளிப்படுத்த,
“இவளுக்கு எந்த மாதிரி டிசைன் பிடிக்கும்னு தெரிஞ்சு வச்சிருக்கீங்களே
அண்ணி”
“இவளுக்கு சிம்பிளா இருந்தா தான பிடிக்கும், அத மனசுல வச்சு தான்
சஞ்சுக்கு பிடிச்ச மாதிரி இந்த செயின வாங்கினேன்” தேவி .
“எப்படி பிடிக்காமப் போகும்? அந்த செயினோட விலை மூணு லட்சம் ஆச்சே,
ஆரத்தி எடுத்ததுக்கு இது ஜாஸ்தி தான்” ரூபாவதி.
“ அம்மா... நீ கொஞ்சம் சும்மா இருக்கியா... அது ஆரத்திக்கு எடுத்ததுக்காக
மட்டும் இல்ல, என் தங்கச்சிக்காக நான் ஆசையா வாங்கினது, அது
தெரியாம உன் இஷ்டத்துக்கு எதுவும் பேசாத”
“அத்தை இதைவிடப் பெரிய பெரிய வைர மாலை இவளுக்காக எங்க
அம்மாவும், மோகன் மாமாவும் வாங்கி வச்சுருக்காங்க, ஆனா என்
சஞ்சுவுக்கு அதெல்லாம் பிடிக்காது, பார்த்தாலே ஒட்டம் பிடிச்சுருவா”
என் சஞ்சு என்று சிவு கூறியதை யாரும் பொருட்படுத்தவில்லை. ஆனால்
அருணும், தேவியும் கவனித்தார்கள்.
“நகையே பிடிக்காது... எத்தனை நாள் இப்படி? நாளைக்கு கல்யாணத்துக்குப்
போட்டுத் தானே ஆகணும் “ என்றார் தேவின் அம்மா
“யார் கல்யாணத்துக்குப் பெரியம்மா? “
அப்பாவியாய் கேட்ட சஞ்சுவிடம் “இது என்னடீ இப்படி கேக்குற, உன்னோட
கல்யாணத்துக்குப் போட்டுத்தானே ஆகணும்“
“கல்யாணத்துக்குப் போடணுமா மாப்பிள்ளைக்கு போட்டு விடுங்க “
என்றாள் சஞ்சு அனைவரும் சிரிக்க...
“என்னது மாப்பிள்ளைக்கா, அடிப்பாவி என்ன பேச்சுப் பேசுற“ என்று
சஞ்சுவை குறைக் கூற வரும் முன் பத்மாவதி இடையிட்டு
“சரி .....சரி.............. நேரம் ஆகுது எல்லோரும் குளிச்சுட்டு வாங்க
சாப்பிடலாம்" என்றார் பத்மாவதி.
அக்ஷ்ரனை பத்மாவதியும், சஞ்சுவும் சேர்ந்து குளிக்க வைத்துப் பின் முதல்
விமானப் பயணம் என்பதால் அசதியில் இருந்தவனை தூங்க வைக்க முயற்சி
செய்தனர்.
“நம்ம ரூம்ம இன்னும் அப்படியே அம்மா மெயின்டெயின் பண்ணியிருக்காங்க
பார்த்தியா டி”
“ஏங்க சிவு........வ கவனிச்சிங்களா”, தேவி
நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன், இவ சம்மந்தம் இல்லாம என்ன
கேக்குறாப் பாரு... புலம்பியபடியே“ அவன கவனிக்க என்ன இருக்கு?”
“சிவு நம்ம சஞ்சுவ காதலிக்கிற மாதிரி தெரியுதே”
“ஏன்டி, வந்ததும் வராததுமா உங்க அம்மாவோட வேலையை நீ
ஆரம்பிச்சிட்டியா?” எனக் கடிந்து பேசினான்.
“ஐயோ, நான் சொல்ல வர்றத முழுசாக் கேட்கிறீங்களா”
“சொல்லு, ஆனா ரூம்குள்ள பேசுறதோட நிப்பாட்டிக்கோ, நீ போய்
சஞ்சுகிட்டயோ சிவு கிட்டயோ கேக்குற வேலை வச்சுக்காத, கேட்டும்
தொலைச்சிராத”அருண்
“அம்மாகிட்ட பேசுறப்ப சிவு என் சஞ்சு அப்படின்னு சொன்னாரு. அதை
கவனிச்சீங்களா??”
“ஆமா, எனக்கும் அது உருத்தலா இருந்துச்சு. ஆனா காதலா இருக்க வாய்ப்பு
இல்ல”
“அப்படியா சொல்லுறீங்க?”
“சிவுவ நானும் தான் கவனிச்சேனே... ஏதோ வாய் தவறி வந்திருக்கும்,
இல்லாட்டியும் பரவாயில்ல. சிறுவயதில் இருந்து அவன் பார்க்க வளர்ந்த
பொண்ணு, அந்த உரிமையில் சொல்லியிருப்பான்”
“எனக்கு என்னமோ உறுத்தலா இருக்கே எனத் தனது மோவாயைத்
தடவினாள்”
“உனக்கு உறுத்தலா இருக்கிறது சரி, உங்க அம்மா கண்ணுல இந்த விஷயம்
படலையே”
“அவங்க கவனம் முழுவதும் வீட்டு அலங்காரத்தில் இருந்தது. அதில் ஏதும்
குறை சொல்ல முடியுமா அப்படின்னு தான் தேடிட்டு இருந்தாங்க. வீட்டுல
எல்லாரும் பார்த்துப் பார்த்து செஞ்சிருக்காங்க, அதிலையும் குறைக்
கண்டுபிடிச்சாங்க பாரு, வீட்டு அலங்காரத்தில் சாமந்தி பூக்கு பதிலா
ரோஜா இருந்தா நல்லயிருக்கும்னு”
“ எனக்கே கொஞ்சம் கோவம் தான். அந்த இடத்தில் ரோஜாப்பூ
வைத்திருந்தாலும், ஏன் டீயுலிப் பூ வைக்கலயா அப்படின்னு தான் கேட்டு
இருப்பாங்க” தன் தாயின் குணத்தை எண்ணி ஆதங்கப்பட்டாள் தேவி.
“உங்க அம்மா பத்தி தான் எல்லோருக்குமே தெரியுமே, அதனாலதான் யாரும்
மைண்ட் பண்ணிக்கல, அவங்கள நினைச்சு நீ புலம்பாத அதெல்லாம் சரி,
இனி சிவு காதலிக்கிறானா, சஞ்சு காதலிக்கிறாளா? அப்படியெல்லாம்
சொல்லிக்கிட்டு இருக்காதடி” என்றான் அருண்.
“அதான உங்ககிட்ட காதல் பத்தி பேசினா, உங்களுக்கு என்ன தெரியும்?”
“அடிப்பாவி, கல்யாணம் ஆன புதுசுல, ஏங்க இப்படி லவ் பண்றிங்க! அப்படின்னு
கேட்டவ, இப்ப காதல்னா எனக்கு என்னன்னே தெரியாதுனு சொல்ற.. எல்லாம் என்
நேரம் தான்”
“கல்யாணம் ஆன புதுசுல என்மேல இருந்த காதல் என்ன.... அக்கறை என்ன….
பரிசு என்ன…. விழுந்து விழுந்து கவனிச்சீங்க, அதே இப்போ பழசா போயிட்ட
பிறகு எங்க போயிடப் போறா? அப்படின்ற எண்ணம், அதான் இப்போலாம்
ஒரு துளிக்கூட கண்டுக்கிறது இல்ல” தனது ஆதங்கத்தைக் கொட்டினாள்.
“கல்யாணம் ஆன புதுசுல ஆர்வக்கோளாறு, அதான் அதிகமா காதலை
வெளிப்படுத்திட்டேன். அப்புறம் போக போக பக்குவம் ஆயிருச்சு, அதுக்கு
போய் உன்ன கண்டுக்கிறதே இல்லைன்னு சொல்றது கொஞ்சம் ஒவரா
தெரியல”
“சரி.....சரி.....நம்ம விஷயத்தை விடுங்க. சிவு நம்ம சஞ்சுவ பார்த்த விதம்
கண்டிப்பா காதலா தான் இருக்கும்”
“ஆமா, நீயா கற்பனை பண்ணாத, அவன் பார்த்த விதம், பார்க்காத விதம், அது
தப்பு. சின்ன வயசுல இருந்து நம்ம வீட்டுல வளர்ற பொண்ணு, அது எப்படி அந்த
மாதிரி எண்ணம் சிவுக்கு வரும்”
“அதுல என்ன தப்பு? இரண்டு பேருக்கும் உறவுமுறை இருக்கு கல்யாணம்
பண்ணி வச்சா ஜோடிப் பொருத்தம் செம்மையா இருக்கும்”
“அடியே.... நான் செம்ம பசியில இருக்கேன். நீ வேற வாக்குவாதம் பண்ணாத.
எதுவா இருந்தாலும் இரவு பேசிக்கலாம் , போய் முதல்ல குளி”
“சரி.......போறேன் .....” என சத்தமாக சொல்லிவிட்டு, மனதிற்குள் நான்
கண்காணிக்கிறது யாருக்கும் தெரிஞ்சாதான பிரச்சனை, நானே
கண்டுப்பிடிக்கிறேன். நான் சொன்னது கரெக்ட்தான்னு, உங்களுக்கு
நிருப்பிச்சு காட்றேன் .
----------------------------------------------------------------------------------------------------